வியாழன், மார்ச் 24, 2011

ஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கோரிக்கை



ஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம்
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கோரிக்கை


மதுரை, மார்ச்.24-

மதுரை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பொய் வழக்கு

மதுரை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதியன்று மாட்டுத்தலை வீசியதாக கூறப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களை சேர்ந்த ஜமாத்தார்களும் 15 முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து போலீசாருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாட்டுத்தலை வீசப்பட்ட சம்பவம் குறித்து மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்க பேராசிரியர் மார்க்ஸ், வக்கீல் ரஜினி, சிவகுருநாதன், பழனிச்சாமி, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு வக்கீல்கள் அப்பாஸ், ஜஹாங்கீர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அவர்களின் பரிந்துரையை அரசுக்கும் அனுப்பி உள்ளனர். இது குறித்து பேராசிரியர் மார்க்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் காஜிமார் தெரு பள்ளிவாசலில் பன்றி மாமிசம் வீசப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டுள்ளது. ஆனால் மதக்கலவரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

விடுதலை செய்ய...

எனவே பள்ளிவாசல் இழிவுபடுத்தப்பட்ட வழக்கு மறுவிசாரணை செய்யப்பட வேண்டும். அப்பாவி கிருஷ்ணனை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். அதேபோல, ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட வேண்டும்.

கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 8 முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.




நன்றி:- தின தந்தி- மதுரை 24.03.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக