சனி, மார்ச் 05, 2011

யாருக்கும் சொரணை இல்லை!

யாருக்கும் சொரணை இல்லை!     -மு.சிவகுருநாதன் 


        நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற மூவர் பெஞ்ச் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இது மிகவும் வரவேற்கபடவேண்டிய தீர்ப்பு.

       தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்ற அரசியலமைப்பு உயர் பதவி நியமனம் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவால் முடிவு செய்யபடுகிறது. எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் -ன்  எதிர்ப்பை மீறி இந்த நியமனம் செய்யப்படுகிறது. பி.ஜே. தாமஸின் நியமனத்திற்கு காரணமாக இருந்த மன்மோகன்சிங், ப,சிதம்பரம் ஆகியோர் என்ன சொல்ல போகிறார்கள்? இதை விட பெரிய கொடுமைகளுக்கெல்லாம் காரணமாக இருந்தவர்கள் இப்போது மட்டும் பதவி விலகிவிட போவதில்லை.

     பி.ஜே.தாமஸ் தேர்வு செய்யப்பட்டது அமைப்பின் நடைமுறை தோல்விதானே தவிர பிரதமர் உள்ளிட்ட குழுவின் தவறல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சப்பைக்கட்டு கட்ட தொடங்கிவிட்டார். (இன்னொரு கபில் சிபல்?)

      உச்சநீதிமன்ற  நீதிபதிகள் தங்களது 71 பக்கத்தீர்ப்பில் இந்த நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கவோ தலையிடவோ முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை மறுத்து உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை  நிலைநாட்டி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தை அடிக்கடி மிரட்டும் பிரதமர் இதற்கு பின்னாலும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஒரு மிரட்டல் அறிக்கை வெளியிடக்கூடும். அரசின் கொள்கையே ஊழலாக இருக்கும்போது பாவம் உச்சநீதிமன்றம் மட்டும் என்ன செய்து விட முடியும்!

        பாமாயில் இறக்குமதி ஊழல்  வழக்கு அப்போது உணவுத்துறை செயலராக இருந்த பி.ஜே.தாமஸ் மீது 1991 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொடர்புத் துறை செயலராக இருந்தபோது, 2 ஜி அலைக்கற்றை ஊழல்  பற்றி விசாரிக்க தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்று கூறியவர்.(கபில் சிபலுக்கு பதிலாக இவரையே தகவல் தொடர்பு அமைச்சராக கூட ஆக்கிருக்கலாம் மன்மோகன்சிங்கிற்கு இன்னொரு வழக்குரைஞர் கிடைத்திருப்பார்!)

     இந்த மாதிரியான பின்னணியுடைய பி.ஜே.தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராக செப்டம்பர் 03 ,2010 இல் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் குழு நியமனம் செய்கிறது. இவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தது இக்குழுவிற்கு தெரியவில்லை என்று கைவிரிக்கிறார்கள் . மன்மோகன்சிங்கும், ப, சிதம்பரமும்    அன்றாடச் செய்திதாள்கள் கூட படிப்பதில்லை என்று இதன் மூலம் ஒத்துக்கொள்கிறார்களா! (திருடன் கையில் சாவி என்று எனது முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.)

ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின்  பங்கு 

      இந்த சர்ச்சை எழுந்த பிறகு பதவி விலக மாட்டேன் என்று தீவிரமாக மறுத்து வந்த பி.ஜே .தாமஸ் ஒரு கட்டத்தில் பதவி விலக முன்வந்ததாகவும் ஆனால் அரசு வேண்டாம் என்று மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.இவர்கள் அனைவரும் இவ்வளவு திமிராக இருந்ததற்கு காரணம் பி.ஜே. தாமஸை பதவி நீக்குவதென்றால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுத் தீர்மானம் (impeachment) கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும். அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால்  இது நடைபெற வாய்ப்பு இல்லை.அரசே நீக்குவதாக இருந்தால் குடியரசுத் தலைவர் மூலம் ஆணையிட வேண்டும். மேலும் இத்தீர்ப்பு உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்ற போலியான வாதத்தின் மூலம் இறுமாந்திருந்தவர்களை  அடித்து நொறுக்கி விட்டது.
       பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள  இந்த அரசு நீதிமன்றங்கள் இவ்வாறு சொல்வதெல்லாம் அடிக்கடி நிகழ்வதுதான் என்று வழியத் தொடங்கியிருக்கிறார்கள்  .2 ஜி அலைக்கற்றை  ஊழல் விசாரணையை சி.பி.அய்.விரைவு படுத்தியிருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளே காரணம்.

       இத்தீர்ப்பு வெளியான பிறகும் பி.ஜே .தாமஸ் பதவி விலகவில்லை. தீர்ப்பை முழுமையாக படித்த பிறகு மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினால் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பணியிடம் தற்போது காலியாக உள்ளதென சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி   கூறியுள்ளார். நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டபடியால் இனி பதவிவிலகல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. ஊழல் செய்யும், உடந்தையாக  இருக்கும், சட்டங்களை மீறும், நீதிமன்றங்களை அவமதிக்கும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், கபில் சிபல்  போன்ற அரசியல்வதிகளுக்கும் பி.ஜே.தாமஸ், சித்தார்த் பெஹுரா, லில்லி போன்ற அதிகாரிகளுக்கும் சொரணை இல்லை என்பதே உண்மை. குடிமக்கள்தான் சொரணையுடன்   எதிர்வினையாற்ற வேண்டும்.

ஒரு பின் குறிப்பு:-

           பி.ஜே.தாமஸ் நியமனத்திற்கு  தாம் பொறுப்பேற்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.பொறுப்பேற்பது என்றால் என்ன? உடன் பதவி விலகாமல் பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் என்ன? எனக்குத் தெரியாது,அமைச்சர்களை முடிவு செய்வது என் கையில் இல்லை, தனது துறையின் கீழ் வரும் இஸ்ரோவின் S -பாண்ட்   ஒப்பந்தம் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவரும்  பிரதமர் இதற்கு மட்டும் பொறுப்பேற்பதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கக்கூடும். சில மாநிலங்களில் தேர்தல்கள் வருகிறதல்லவா! 2 ஜி அலைக்கற்றை ஊழல்,ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல்,காமன்வெல்த் போட்டிகள் ஊழல்,இஸ்ரோவின் S -பாண்ட் ஊழல் ஆகியவற்றுக்கும் பொறுப்பேற்றுகொண்டாலும் வியப்படைய ஒன்றுமில்லை.ஆனால் பதவி விலக மட்டும் சொல்லாதீர்கள்! அதிகாரம் முழுக்க சோனியாவிடமிருக்க இந்த பதவியை விட்டு விலகினால் என்ன விலகாவிட்டால் என்ன என்று கூட மன்மோகன் நினைக்கிறார் போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக