ஞாயிறு, மே 31, 2015

இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!



இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!
                            - மு.சிவகுருநாதன்

     முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு  அரசியல் நாகரீக விரும்பிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் அய்யமில்லை. தமிழ்நாட்டுக்காரர்களே தில்லியைப் பாருங்கள்! இன்னுமா நீங்கள் திருந்தவில்லை? என்று அடிக்கடி கூப்பாடு போடும் கும்பல் ஒன்று இருக்கத்தானே செய்கிறது? இவர்கள் சந்திப்பதிலும் கூடிக் கும்பியடிப்பதிலும் நமக்கொன்றும் வருத்தமில்லை. இவர்கள் இருவருக்குமான இடைவெளி மயிரிழையை விட குறைவாகத்தான் இருக்கும். 

    மோடி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு ஆனபிறகுதான் மன்மோகனுக்கு சந்திக்கத் தோன்றியிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தலைவர் (TRAI) முன்னாள் தலைவர் பிரதீப் பைசால் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது நேரடியான குற்றச்சாட்டு தெரிவித்த பிறகு நடக்கும் இந்தச் சந்திப்ப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுவது இயற்கையானது. 

   இச்சந்திப்பில் என்ன நடந்தது என சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவருவதாகச் சொல்லும் மோடிக்கு உண்டு. சி.பி.அய். இயக்குநர் நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்தித்தது இன்று உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் பிரதமருக்கு மட்டும் தனியுரிமையா என்று நாம் கேட்கவேண்டியுள்ளது. 

   ஓராண்டு சாதனையாக ஊழலின்மை எனக்கூறி மோடி சர்க்கார் பரப்புரை செய்கிறது. ரூ 1,76,000, 1,86,000. 2,00,000 கோடிகள் இருந்தால் மட்டுந்தான் அது ஊழலா? இவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எதில் சேர்த்தி என்று நமக்கு விளங்கவில்லை. 2014 பொதுத்தேர்தலின்போது கருப்பு பணம் குறித்த வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இன்று வரை இருக்கும்  மோடி சர்க்காரின் செயலின்மை நமக்கு எதை உணர்த்துகிறது? 

   பல்வேறு ஊழல்வழக்குகளில் மெத்தனமாகச் செயல்படும் சி.பி.அய். இயக்குநரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் ஏன் தீர்மானம் கொண்டுவரமுடிவவில்லை? அப்பாவி ஏழைகளின் நிலப்பறிப்பிற்கு மசோதாவும் மூன்று முறை அவசரச்சட்டமும் கொண்டுவரும் சங் பரிவார் கும்பல் ஊழலுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் வலிமை இல்லாத நிலை நமது ஜனநாயகத்தை கேலிகூத்தாக மாற்றியிருக்கிறது. 

    இங்கும் (தமிழகம்) ஊழலுக்கு அளவில்லை. ஆனால் அரசியல் நாகரீகந்தான் இன்னும் தில்லி அளவிற்கு முதிர்ச்சியடையவில்லை என்று வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் ஊழல் ஆதரவிற்கு எத்தகைய விளக்கம் வைத்திருக்கிறார்களோ? தெரியவில்லை.

   இதற்கு திருமண அழைப்பு  அரசியல் நாகரீகம் கொஞ்சம் பரவாயில்லை என்றாவது தோன்றுகிறதா? ஜெயலலிதா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்ய தி.மு.க. வும் அழகிரி மீதான கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய அ.இ.அதி.மு.க. வும் இருக்கிறதே! இருக்கட்டும். இதெல்லாம் அரசியல் பழிவாங்கும் நோக்கிற்காக செய்யப்பட்டவை என தீர்ப்பெழுத நிறைய குமாரசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக