வரலாறும் தொன்மமும் - தொடர்
05. பிருதிவிராஜ் சௌஹான் - சம்யுக்தா கதைகள்
மு.சிவகுருநாதன்
எப்போதும் வரலாற்றைவிட புனைவுகளுக்கு மிகைமதிப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு. வரலாற்றைத் திரிக்கவும் வெறுப்பரசியலைப் பரப்புவும்கூட இத்தகைய புனைவுகள் பயன்படுகின்றன. அம்பிகாவதி – அமராவதி, ரோமியோ – ஜூலியட் கதை வரிசையில் இடம்பெறக் கூடியது பிருதிவிராஜ் சௌஹான் - சம்யுக்தா கதை ஆகும். இந்தக் கதைகள் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு பரவலான மக்களைச் சென்றடைந்தன. இதன்மூலம் புனைவிற்கு மதிப்புக் கூட்டப்பட்டது. கல்கியின் கதைகளையும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களை நாம் இவ்வாறே அணுக வேண்டும்.
“பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் ‘‘பிருதிவிராஜ ராசோ’’ எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். காவியம் கூறும் கதை பின்வருமாறு: கன்னோஜின் அரசனுடைய மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். அவள் தனது கணவனைத் தேர்வு செய்வதற்கெனச் சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கெனவே பிருதிவிராஜனிடம் காதல் வயப்பட்டிருந்த இளவரசி அவரையே மணந்துகொள்ள விரும்பினாள். ஆனால் பிருதிவிராஜ் அவள் தந்தையின் எதிரியாவார். பிருதிவிராஜை அவமானப்படுத்தும் நோக்கத்தில் கன்னோஜின் அரசர் அவருக்கு அழைப்பு அனுப்பவில்லை. மேலும் பிருதிவிராஜ் சௌகானைப் போன்று ஒரு சிலை செய்து தனது அரச சபையின் வாயிலில் வாயிற்காப்போனைப் போல நிறுத்தி வைத்தார். கூடியிருந்தோரெல்லாம் அதிர்ச்சி அடையும் வண்ணம் இளவரசி அங்கிருந்த இளவரசர்களை மறுத்து பிருதிவிராஜின் சிலைக்கு மாலையிட்டுத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். சற்று தொலைவில் மறைந்திருந்த பிருதிவிராஜ் இளவரசியை அழைத்துக்கொண்டு குதிரையில் தப்பினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்”, என்று இலக்கியப் புனைவுகளை வரலாறாக நமது பாடநூல்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகின்றன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.12 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கம் வரை வட இந்தியப் பகுதிகளை ஆண்ட சிறிய குழுக்கள் ராஜபுத்திரர்கள் எனப்பட்ட சிற்றரசுகளாகும். ராமாயண, மகாபாரத இதிகாச அடிப்படையில் தங்களை தங்களை சூரிய, சந்திர, அக்னி குலம் என்று கற்பிதம் செய்துகொண்டனர். இவற்றில் உயர்வு தாழ்வுகளையும் கட்டமைத்து வழக்கம்போல பிராமண சமூகத்திற்கு சேவை செய்யும் மனுதர்மவாதிகளாகவே இவர்கள் அரசாண்டனர். ஜேம்ஸ் டோட் (James Tod) எனும் ஆய்வாளர் 36 குலங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இவர்களில் கூர்ஜர பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள், பரமாரர்கள் போன்ற அக்னி குல பிரிவுகள் சிறப்புத்தகுதி கொண்டவையாகப் போற்றப்படுகின்றனர். சில குறிப்பிட்ட உயர்த்தப்பட்ட சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் வீரதீரக் கதைகள் மூலமும் போர்வெற்றிகள் மூலமும் புகழப்படுகின்றனர். இவர்களது போர்வெற்றிகளுக்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் படையணிகள் செயல்பட்டதை வரலாற்றில் மறுக்க இயலாது.
குறைவான மக்கள் தொகை கொண்ட ராஜபுத்திரர்களுக்கு பெரும்படை எவ்வாறு சாத்தியமாயிற்று என்கிற கேள்வி எழுவது இயல்பானது. ராஜபுத்திரர்கள் அல்லாத ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் (Kuvarna) இவர்களது படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் இவர்கள் பிராமணர்களுக்கு சலுகைகள் அளித்தும் வருண அமைப்பைக் கட்டிக் காத்தனர் என்பதும் உண்மையே. இவர்களது வெற்றிகள் வெறும் இனக்குழு வீரதீரத்தால் மட்டும் பெற்றதல்ல; இவற்றுக்குப் பின்னால் பெரும் அடித்தட்டு மக்களின் உழைப்பும் தியாகங்களும் இருந்தன.
இவர்களுடைய வீரதீரக்கதைகளுக்குப் பின்னால் சண்டை மற்றும் போர்வெறி காரணமாக அமைந்திருப்பதை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றார். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் அளவிடற்கரியவை. குலப்பெருமை பேசிய இக்கூட்டம் தங்களுக்குள் எவ்வித ஒற்றுமையையும் பேணவில்லை. இறுதிக்காலத்தில் ஏற்பட்ட ஒருங்கிணைப்பும் தோல்வியில் முடிந்தது. தங்கள் ஆட்சியின் கீழுள்ள மக்கள் மீது அக்கறை துளியுமற்று வருண தர்மத்தை நிலைநாட்டுவதையும் சதி (உடன்கட்டை ஏற்றுதல்) போன்ற கொடிய பழக்கவழக்கங்களைப் போற்றுபவர்களாகவும் இவர்கள் இருந்தனர்.
“பதினொன்று மற்றும் பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கூட ஒட்டு மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, ராஜபுத்திரர்கள் ஒன்றும் மிக அதிகமாக இருக்கவில்லை. ராஜபுத்திரர்கள் போரை ஒரு விளையாட்டுப் போட்டி போலக் கருதினார்கள். இதற்காகவும் மற்றும் நிலத்திற்காகவும் கால்நடைகளுக்காகவும் நடத்திய போராட்டம் பல்வேறு ராஜபுத்திர அரசுகளுக்கிடையே தொடர்ச்சியான போர்களுக்கு இட்டுச் சென்றது. தசராத் திருவிழாவைக் கொண்டாடி முடித்த கையோடு அண்மை நாட்டின் எல்லை மீது படை எடுப்பவரே இலட்சிய முறையான ஆட்சியாளராகக் கருதப்பட்டார். இக்கொள்கையால் கிராம மற்றும் நகர மக்கள் அனைவருமே துன்பப்பட்டனர்”. (பக்.86, மத்திய கால இந்திய வரலாறு) என்று சதீஷ் சந்திரா எழுதுகிறார்.
“ஜெயச்சந்திர மன்னரின் மகள் சன்யோகிதா (Sanyogita) என்ற சம்யுக்தாவின் மீது கொண்ட காதலால் அவளைச் சிறை எடுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படும் கர்ணபரம்பரைக் கதை பல வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கவிஞர் சந்த்பர்தாயினால் (Chand Bardai) ஒரு காதல் கதையாக, வெகுகாலத்துக்கு பின்னால் எழுதப்பட்டதால், கவிஞர் சரியற்ற பல நிகழ்ச்சிகளை உட்படுத்தி எழுதியுள்ளார். நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இந்த இரண்டு அரசுகளுக்கும் இடையே, நீண்ட காலப் பகை பாக்கியிருந்ததால், ஜெயச்சந்திரர் தள்ளி நின்றது ஒன்றும் வியப்பில்லை”. (பக். 92, மத்திய கால இந்திய வரலாறு) இக்கதை பிருதிவிராஜ் செளகானை திருவுருவாக மாற்றப் புனையப்பட்ட கற்பனைக் கதையாகும். இதற்கு இடையூறாக இருக்கும் தோல்விக்குப் பிந்தைய அவரது நிலை, வரலாற்றின் பக்கங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுவதிலிருந்து உணரலாம்.
ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட பல்வேறு இந்துப் பிரிவினரும் தில்லி சுல்தானிய அரசிலும் பின்னால் வந்த முகலாய அரசில் பங்கேற்று இணைந்தே செயல்பட்டனர் என்பதே வரலாற்று உண்மை. ‘இஸ்லாமிய அரசு’களின் பின்னணியிலும் இவர்கள் இருந்தனர் என்பதே உண்மை. ‘ரக்ஷா பந்தன்’ நிகழ்வுகளுக்குப் பின்னால் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. இதை ராஜபுத்திரர்களுக்கு மட்டும் உரிய பண்பாட்டு மரபாகக் கருதமுடியும் என்பதில் சிக்கல் உள்ளது. போருக்குச் செல்லும் சகோதரன் திரும்பி வருவதற்குக் கட்டப்படும் கயிறு ‘ராக்கி’ என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய அவர்களது போர்க் களத்திற்கு ராஜபுத்திரர்கள் மட்டுமே சென்றதாகவோ அவர்கள் மட்டும் படைப்பிரிவுகளில் இருந்ததாகவும் கூறமுடியாது.
இறுதிக்காலத்தில் ராஜபுத்திரர்கள் பிருதிவிராஜ் செளகான் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி இணைந்தனர். அவர்களால் 1191இல் தில்லிக்கு அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடிக்க முடிந்தது. இப்போர் முதலாம் தரெய்ன் போர் எனப்படுகிறது. இத்தோல்விக்குப் பிறகு பெரும்படையைத் திரட்டி, பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்த முகமது கோரி, தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறும் பிருதிவிராஜ் சௌகானுக்கு தூதனுப்பினார். அதனை மறுத்த பிருதிவிராஜ் போரில் இறங்கினார். பல இந்து ராஜபுத்திரக் குறுநில அரசர்களும் அவர் பின்னால் திரண்டனர். இருப்பினும் சிலர் பழைய பகையால் ஒதுங்கியிருந்தனர். 1192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமது கோரி அவரைச் சிறைப்படுத்தினார்.
இப்போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அதுவரையில் கட்டமைத்திருந்த வீரதீரக் கற்பனைகளுக்குப் பெரும் பின்னடைவு உண்டானது. இந்தியாவில் புதிதாக உருவான இஸ்லாமிய அரசின் கீழ் அவர்களது மேலாதிக்கத்தை ஏற்றுச் செயல்படவேண்டிய நிலைக்கு பிருதிவிராஜ் சௌகான் தள்ளப்பட்டார். இத்தோல்விக்குப் பிறகு போரில் வென்ற முகமது கோரியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களது மேலாதிக்கத்தை ஏற்று, சிலகாலம் ஆஜ்மீரை பிரிதிவிராஜ் ஆண்டார். பின்னாளில் சதிக் குற்றஞ்சாட்டி கொன்றதையும் சதீஷ் சந்திராவின் கீழ்க்கண்ட வரிகள் வெளிப்படுத்துகின்றன.
இரண்டாம் தரெய்ன் போரில் “இந்திய வீரர்கள் ஏராளமாக உயிர்விட்டனர். பிரிதிவிராஜர் தப்பினாலும் சரஸ்வதிக்கு அருகே (Sirasa) பிடிக்கப்பட்டார். துருக்கிப் படைகள். ஹன்சி (Hansi) சரஸ்வதி மற்றும் சமனா (Samana) கோட்டைகளைக் கைப்பற்றின. அடுத்து அவர்கள் ஆஜ்மீரைத் தாக்கிக் கைப்பற்றினர். இறுதியில் பிரிதிவிராஜர் ஆஜ்மீரைச் சில காலம் ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதை அக்காலத்தில் வெளியிடப் பட்ட நாணயங்களில் ஆண்டு என்ன என்பதைக் காட்டுவதோடு, ஒரு பக்கத்தில் ‘பிரிதிவிராஜ தேவா’ (Prithivirajadeva) என்றும், மறுபக்கத்தில் ஶ்ரீ முகமது சாம் (Sri Muhammad Sam) என்றும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (பக். 93, மத்திய கால இந்திய வரலாறு)
சோமநாதர் – வரலாற்றின் பல குரல்கள், சோமநாதபுரம்: கதையும் வரலாறும் போன்ற ரொமிலா தாப்பரின் நூல்கள் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த விரிவான ஆய்வை நமக்குத் தருகின்றன. அந்நியப் படையெடுப்பு குறித்த தெளிவான சூழலையும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் சதீஷ் சந்திராவின் மத்திய கால இந்திய வரலாறு மிகவும் குறிப்பிடந்தகுந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. மத்திய கால வரலாற்றை புதிய ஆதாரங்கள் மற்றும் நடுநிலைக் கண்ணோட்டத்துடன் அணுகும் ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான புதிய ஆய்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் முகம் கொடுக்காமல் ‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு வரலாறு எழுதுவதும் இதன்மூலமாக போலிப் பெருமிதங்களைக் கட்டமைப்பதும் குழந்தைகளின் இளம் உள்ளங்களில் வெறுப்பை விதைப்பதும் அபாயகரமானதாகும்.
- வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மே 2025





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக