வெள்ளி, மே 09, 2025

தமிழ் சூஃபி இசைப் பாணர்: இசைமுரசு நாகூர் ஹனிபா

 

தமிழ் சூஃபி இசைப் பாணர்: இசைமுரசு நாகூர் ஹனிபா

 

மு.சிவகுருநாதன்

 


 

         நாகூர் ஹனிபா எனும் இஸ்மாயில் முகம்மது ஹனிபா 1925  டிசம்பர் 25இல் ராமநாதபுரம்            மாவட்டம், வெளிப்பட்டினத்தில் முகம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் குடும்பம் பூர்வீக ஊரான நாகூர் திரும்பியது. 1935இல் இவரது தந்தையார் முகம்மது இஸ்மாயில் கோலாம்பூரில் ரயில்வே பணிக்குச் சென்றார். சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈடுபாடுள்ள இவருக்கு தாருல் இஸ்லாம், சைபுல் இஸ்லாம் போன்ற இஸ்லாமிய இதழ்களையும் சுயமரியாதை இயக்ககுடி அரசுஇதழையும் வாங்கி அனுப்பும் முன்பு அவற்றை முழுமையாகப் படிக்கும் பழக்கத்தை நாகூர் ஹனிபா கொண்டிருந்தார். இதன் வாயிலாக திராவிட இயக்கத்தின் ஆதரவாளராக மாறினார்.

         நாகூர் ஹனிபா இளம் வயதிலேயே கௌதியா சபையினருடன் சேர்ந்து பக்கத்து ஊர்களில் திருமண விழாக்களில் பாடத் தொடங்கிவிட்டதால் ஏழாம் வகுப்பைத் தாண்டி படிப்பைத் தொடர இயலாத நிலையில், இவற்றிலிருந்து திசை திருப்பும் பொருட்டு  ஹனிபாவின் சிறிய தந்தையார் திருவாரூர் அபுபக்கர் ராவுத்தர் வைத்திருக்கும்  பலசரக்குக் கடைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கும் பாடல்கள் பாடுவதைத் தொடர்ந்தார்.

        அன்றைய நாள்களில் திருவாரூர் ஓடம்போக்கி  ஆற்று மணல்வெளியில் நடக்கும் சிறு கூட்டங்களில் தொடங்கிய அவரது இசைப்பயணம் திராவிட இயக்க மேடைகள் தோறும் ஒலித்து உலகமெங்கும் பரவியது. அன்று நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கக் கூட்டங்களை சிங்கராயர், ரெங்கராஜ், ராமன், மு.கருணாநிதி போன்றோர் ஏற்பாடு செய்தனர், இவர்களுடன் இணைந்தார் நாகூர் ஹனிபா. ஹனிபாவின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கும். மு.கருணாநிதி அரைக்கால் சட்டையுடன் இக்கூட்டங்களுக்கு தலைமையேற்ற காலம் அது. இளம் வயதிலேயே இந்தி எதிர்ப்புப் போரில் ராஜாஜிக்குக் கருப்புக்கொடி காட்டிய ஹனிபா சிறுவன் என்பதால் வலுக்கட்டாயமாக விடுவிக்கப்பட்டார். 1949இல் தி.மு.க. உதயமானபோது அக்கட்சியில் இணைந்து பரப்புரைப் பாடகராய் இறுதிவரை பணியாற்றினார்.

          1950களில் கலைஞர் மு.கருணாநிதி  ஹனி என்றால் தேன்; பா என்றால் பாட்டு; ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது. ஹனிபா என்று பெயர் வைத்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொன்னார். 1955இல் சென்னை வானொலி நிலையம் ஆகாஷ் வாணி என்று மாறியபோது கி..பெ.விசுவநாதம் வானொலியில் பேசுவதில்லை என்று அறிவித்தார். இசைமுரசும் இனி வானொலியில் பாடமாட்டேன் என்றார். அறிஞர் அண்ணா கலைஞர்களின் பணி பாதிக்கப்படும் என்பதால் போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்திருந்தார். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் நாகூர் ஹனிபா பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

         1956 மே 17-20 இல் தி.மு..வின் இரண்டாவது மாநில மாநாடு கூடியது. இம்மாநாட்டில்தான் தி.மு.. தேர்தலில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. திருவாவடுதுறை டி.என்.ராஜரெத்தினம் அவர்களின் நாதசுரத்துடன் அம்மாநாடு தொடங்கியது. அடுத்து  இசைமுரசு பாடினார். அதை ரசித்துக் கேட்ட நாதசுர மேதை, இவர் பாடினால் உங்கள் இயக்கம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்று கலைஞரிடம் கூறினார். திராவிட இயக்க மாநாடுகள் அனைத்தும் இவருடைய இசைக் கச்சேரியுடன் தொடங்கும்; மக்களை ஈர்க்க இவரது காந்தக்குரல் பெரிதும் பயன்பட்டது.

      1957இல் நாகப்பட்டினம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பெரியாரின் அன்பு இவருக்கு இருந்தாலும் அந்தத் தேர்தலில் பச்சைத் தமிழர் காமராஜருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார் பெரியார். காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கம் (24852) வென்றார். கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் (13847) இரண்டாம் இடத்திலும் ஹனிபா 6527 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும் வந்தார். இதன் பின்னர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலில் (2002) போட்டியிட்டுத் தோற்றார். தன்னுடைய குரல் வளத்தால் லட்சக்கணக்காணவர்களை கொள்ளைகொண்ட இசைமுரசு தேர்தல் அரசியலில் பின்தங்கியது ஒரு முரண்நகையாகும். இவர் வக்ஃப் போர்டு தலைவராகவும் இருந்தார்.  ஹனிபா எனும் அரபிச் சொல்லுக்கு நேர்மை என்று பொருள். தாம் வாழ்நாளில் எங்கும் எதிலும் நேர்மையை மார்க்கமாக கடைப்பிடித்து ஒழுகியவர் இசைமுரசு ஹனிபா.


 

           நாம் (1953), அம்மையப்பன் (1954), குலேபாகாவலி (1955), பாவமன்னிப்பு (1961), தர்மசீலன் (1993), ராமன் அப்துல்லா (1997), என்றென்றும் காதல் (1999), காமராசு (2002) போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். ‘பாவ மன்னிப்பு’ (1965) படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடிய எல்லோரும் கொண்டாடுவோம்”, ‘செம்பருத்திபடத்தில் நட்ட நடுக் கடல் மீது நான் பாடும் பாட்டு”, ‘தர்மசீலன்படத்தில் எங்குமுள்ள அல்லா பேர சொல்லு நல்லா”, ‘ராமன் அப்துல்லாபடத்தில், “உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்போன்ற தமிழ் திரையிசைப் பாடல்கள் பெரிதும் பாராட்டப்பட்டவை.

        திரைப்படங்களில் நாகூர் ஹனீபாவின் பங்களிப்பு குறைவாக இருந்தற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஹனிபா என்ற பெயரை மாற்ற வலியுறுத்திய  அன்றைய தமிழ்த் திரையிலகில் இருந்த இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையையும் ஒரு காரணமாக அமைந்தது. 1945 ஆம் ஆண்டு நாகூரில் மாணவர் சங்கம் நடத்திய விழாவில் தமிழறிஞர் சண்முக தேசிகர் இவருக்கு இசைமுரசுபட்டத்தை வழங்கினார். 1989இல் கலைஞர் மு.கருணாநிதி இசைமாமணி விருதளித்துச் சிறப்பித்தார். 2002இல் கத்தார் தலைநகர் தோகா தமிழ்ச் சங்கம் எழில் இசைவேந்தர்என்றம் பட்டமளித்தது.

       இசை முரசுநாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரைச் சிறப்பிக்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியில் அவர் இல்லம் இருக்கும் தைக்கால் தெருவிற்கு இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா தெருஎன்றும், சில்லடி கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு  இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்காஎன்று  பெயர் சூட்டி தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

         இசைமுரசு பாடிய சிறப்புமிக்க பாடல்கள் கவிஞர் அபிவை டி.எம்.எம். தாஜுத்தீன்,  கவிஞர் ஆபிதீன், கவிஞர் நாகூர் சலீம், கவிஞர் கா. அப்துல் கபூர் போன்றோர் இயற்றியவை. இப்பாடல்களில் வெற்றியில் கவிஞர்களுக்கும் பங்குண்டு. கவிமுரசின் தேன்குரல் இவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. காயல் ஷேக் முகம்மது, முகவை சீனி முகம்மது, புதுக்கோட்டை இ.எம். பாஷா, இ.எம். ஜக்கரியா, தேரழந்தூர் தாஜூத்தீன், அடவங்குடி அப்துல்ரகுமான் போன்ற பலர் இஸ்லாமிய மார்க்கத் தேனிசைப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

      இந்திய மற்றும் தமிழ் இசைக்கு இஸ்லாமியர்கள் பாரிய பங்களிப்பை நல்கி வந்துள்ளனர். பாணர், சித்தர் மரபுகள், சூஃபி இசை வடிவத்தின் தொடர்ச்சியை இதில் காணலாம்.  தமிழிசையின் கூறுகளைக் கொண்டே கர்நாடக இசை கட்டமைக்கப்பட்ட வரலாற்றை நாமறிவோம். வாய்ப்பாட்டு, மெல்லிசை, பக்தியிசை போன்ற அமைப்பில் தக்கலை பீரப்பா, குணங்குடி மஸ்தான், நாவலர் குலாம் காதிரு, செய்கு தம்பி பாவலர்  போன்றோரின் பாடல்கள் உருவாகிப் புகழ் பெற்றன. 

       சூஃபி இசைப் பாடல்கள் இஸ்லாத்தை மையங்கொண்டவை எனினும்  அதன் தாக்கம் அன்பையும்  மதம் கடந்த பக்தி அனுபவத்தையும் சமத்துவத்தையும் வழங்கக்கூடியவை. கர்நாடக இசை, இந்துஸ்தானி ஆகியவற்றின் கலவையாலும்  சூஃபி இயக்கத் தொடர்ச்சியாகவும் இங்கு தமிழ் இஸ்லாமிய இசை மரபு உருக்கொள்கிறது. இப்பாடல்களில் பக்தி மட்டுமின்றி  சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மனிதநேயம், சமத்துவம் போன்றவை உள்ளீடாக அமைந்தன. இசைமணி யூசுப், உசைன் பாகவதர், வாஹித், காரைக்கால் தாவூத் போன்ற பலர்  பலர் கர்நாடக இசையை முறையாகக் கற்று இஸ்லாமிய பக்தி இயக்க இசையை உருவாக்கினர்.

       நாகூர் ஹனீபா முறைப்படி கர்நாடக இசையைப் பயின்றவரில்லை. நாகூர் தர்கா எஸ்.எம்.ஏ. காதிரிடமிருந்து கர்நாடக இசை குறித்த குறிப்புகளைப் பின்னாளில் கற்றுக்கொண்டார். சுயமரியாதை, மற்றும் திராவிட இயக்க அரசியல் தாக்கத்தால் பொதுவெளிக்கு வந்த இவரது குரல் பலரது பாராட்டைப் பெற்றது.

       தந்தை பெரியார், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், சர் ஏ.ட்டி.பன்னீர்செல்வம், அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, கலைஞர் மு.கருணாநிதி,  பேரா..அன்பழகன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், நாவலர் இரா.நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களுடன் நேரில் பழகியும் தனது பாட்டுத்திறத்தால் அவர்களின் அன்பைப் பெற்றவராகவும் இசைமுரசு திகழ்ந்தார். கலைஞர் கருணாநிதியுடனான இளமைக்கால நட்பு இறுதிமூச்சு வரை தொடர்ந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் இவரது நண்பர் எனினும், அவர் திமுகவிலிருந்து பிரிந்த பின்னர், தன்னோடு வரச்சொல்லி அழைத்தபோது, எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி என்றுகூறி மறுத்தார். சர் ஏ.ட்டி.பன்னீர்செல்வம் அவர்களை திருவாரூர் விற்குடி ரயில் நிலையத்தில் வழியனுப்பிய நாகூர் ஹனிபா, அவர் விமான விபத்தில் மரணமடைய (1940) அஞ்சலிக் கீதமிசைத்தார். 

       நாகூர் ஹனிபா பெரியாரை நாகூருக்கு அழைத்து நடத்திய கூட்டங்களில் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த, பெரியார். அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லைஎன்று சொன்னதையும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது ஹனிபாவை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்ந்தும் ஒரு ரூபாய் பரிசு கொடுத்த செய்திகளையும்  நேர்காணல் ஒன்றில்  நாகூர் ஹனிபா குறிப்பிட்டுள்ளார். திராவிட இயக்கப் பற்றாளரும் பெரியார் மீது ஈடுபாடு கொண்ட கவிஞர் ஆபிதீன் எழுதிய பேரறிவாளர் அவர் பெரியார்என்ற பெரியாரின் புகழ்பாடும் பாடலையும் பாடியுள்ளார்.

           1955 இல் இவர் பாடிய அழைக்கிறார் அண்ணாஎன்ற பாடலைப் பதிவு செய்ய HMV நிறுவனம் தொடக்கத்தில் முரண்டு பிடித்தாலும் இந்த இசைத்தட்டு அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. இப்பாடலைப் போன்றுஓடிவருகிறான் உதயசூரியன்”, “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவேபோன்ற பாடல்கள் கட்சி அமைப்பிலும் வெகுமக்களிடமும்  செலுத்திய இசைத்தாக்கம் அளப்பரியது.

         நாகூர் ஹனீபாவின் இஸ்லாமியப் பாடல்கள் மதம் என்ற எல்லையைத் தாண்டி அனைவரிடமும் சென்றவை. “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லைஎன்ற பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. “மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லா”, “உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரான்”, “பாத்திமா வாழ்ந்த கதை”, “கண்கள் குளம் ஆகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே”, “அருள் மழை பொழிவாய் ரஹுமானே”, “லாயில்லா ஹா இல்லல்லா ஹூ”, “தீன்குலப்பெண்ணு எங்கள் திருமறைக் கண்ணுபோன்ற இவரது பாடல்கள் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை.

       இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக செழித்திருந்த தமிழின் இசை களவாடப்பட்டு கர்நாடக இசையாக உருவெடுக்கிறது. மொழியும் இசையும் மதத்தோடு இணைக்கப்பட்டன. சமஸ்கிருதம் தேவபாஷையாகவும் தமிழ் நீசபாஷையாகவும் மாற்றப்பட்டதைப் போல தமிழ்ப்பாடல்கள் இசைக்கக் கூடாது என ஒதுக்கப்பட்டன. சமஸ்கிருதம், தெலுங்கில் பாடுவது உயர்வானதாக கற்பிதம் செய்யப்பட்டது. தமிழ் மொழியும் தமிழிசையும் தீண்டாமைக்கு உள்ளானது. தமிழ்நாட்டில் தமிழில் பாட இயக்கம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ராஜா அண்ணாமலைச் செட்டியார் 1941இல் தமிழிசை மாநாடு நடத்துகிறார்.

        இந்தப் பின்னணியில் திராவிட இயக்கம் முத்தமிழையும் தமது பரப்புரை வாகனமாக்கியது. திராவிட எழுத்துகள் பரவலாயின; ஊரெங்கும் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாடகத்தின் தொடர்ச்சியாக திரைப்படத்தை ஆக்கப்பூர்வமான கருவியாக திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. திரையிசை வெகுமக்கள் இசையாக மலர்ந்தது. சபாக்கள், கச்சேரிகளில் தமிழை ஒதுக்கியவர்களை தமிழக மக்கள் ஓரங்கட்டினர்.

          வைதீகப் புரட்டுகளை எதிர்கொண்ட திராவிட இயக்கம் பவுத்தம், இஸ்லாம் போன்ற சமத்துவ மார்க்கங்களை ஆரத்தழுவி வரவேற்றது. “இன இழிவு நீங்க இஸ்லாம் நன்மருந்து”, என்று பெரியார் பேசினார், எழுதினார். இசைமுரசு நாகூர் ஹனிபா திராவிட இயக்கத்தையும் இஸ்லாம் மார்க்கத்தையும் இரு கண்களாகப் போற்றினர். இவ்விரண்டு கொள்கைகளுக்கும் பெரிய  இணைப்பை ஏற்படுத்தினார். திராவிட இயக்கத்தில் இதற்கான வாய்ப்புகள் இருந்தன. அரசியல் காரணங்களுக்காக இவரது இசை சரியான தகுதியிடத்தைப் பெறாமல் போனாலும், தமிழ்ப் பாணர், சித்தர், சூஃபி மரபின் பிரதிநிதியாக என்றும் நிலைத்திருப்பார்.

 

நன்றி: தி சிராங்கூன் டைம்ஸ் - மார்ச் 2025

(நாகூர் ஹனிபா நூற்றாண்டுச் சிறப்பிதழ் - இதழ்108 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக