ஞாயிறு, மார்ச் 06, 2011

ஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.

ஆதித்யா - ஆருஷி  கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.
- மு. சிவகுருநாதன்
 




          நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் கொலை செய்த வழக்கில் பூவரசிக்கு சென்னை கூடுதல் செ­ன்ஸ் நீதிமன்ற நீதிபதி சேதுமாதவன், சிறுவன் ஆதித்யாவைக் கடத்தியதற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 50000/- அபராதமும் கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனை, ரூ.50000/- அபராதமும் விதித்து இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையில் ரூ. 90000/-ஐ சிறுவனின் தாயார் ஆனந்தலெட்சுமிக்கு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளார்.   இத்தீர்ப்பை எதிர்த்து பூவரசி சார்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக வழக்குரைஞர் ஆனந்தகுமார் கூறியுள்ளார்.   விசாரணை சரிவர நடைபெறவில்லை என்றும் சி.பி.அய். அல்லது சி.பி.சி.அய்.டி. விசாரிக்க வேண்டும் என்றும் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அக்பர் அலி இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


            உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் தம்பதியின் 14 வயது பெண் குழந்தை ஆருஷி, அவர்களது வீட்டு வேலைக்காரர் நேப்பாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் பஞ்சாடே ஆகிய இருவரும் மர்மமான முறையில் 2008 மே 16இல் கொலை செய்யப்பட்டனர்.  மாநில சி.அய்.டி. விசாரணையிலிருந்து இவ்வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றப்பட்டு, இரண்டரை ஆண்டாகியும் எவ்வித துப்பும் துலங்காத நிலையில் டிசம்பர் 29, 2010இல் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துக் கொள்வதாக சி.பி.அய். மனு செய்ய அதை நீதிமன்றமே ஏற்க மறுத்துள்ளது.  மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.அய்.க்கு உத்தரவிட்டுள்ளார்.   தற்போது ஆருஷியின் பெற்றோருக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302 (கொலை), 201 (சாட்சியங்களை அழித்தல்), 34 (சில காரியத்திற்காக சிலருக்கு எதிராக முறையிடுவது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


            இவ்விரண்டு வழக்குகளிலும் நிரம்ப வேறுபாடுகள் உண்டெனினும் ஒரு சில ஒற்றுமையான அம்சங்களும் உண்டு.   இரண்டிலும் கொலை செய்யப்பட்டது குழந்தைகள்.  இக்கொலைகளுக்குப் பெற்றோர் உடந்தையாகவோ அல்லது காரணமாகவோ இருந்துள்ளனர்.   இவை மேல்தட்டு வர்க்கத்தில் நடைபெற்ற கொலைகள்.  இந்த வழக்குகளின் விசாரணை, கைதுகள், தீர்ப்பு இவற்றை ஊடகங்கள், பொதுமக்கள் எதிர்கொண்ட விதம் பற்றி ஆயிரக்கணக்கான கேள்விகள் எழும்புகின்றன. 

 
            2008 மே 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் காலை 6 மணிக்கும் இடையில் ஆருஷியும் ஹேமராஜும் கொலை செய்யப்படுகிறார்கள்.  இருவரையும் கனமான கட்டை கொண்டு தாக்கியதோடு கழுத்தையும் கூரிய கத்தி கொண்டு அறுத்திருக்கிறார்கள்.   ஆருஷியின் உடல் கைப்பற்றப்பட்ட பிறகு பூட்டியிருந்த மாடிப்பகுதியை யாரும் திறக்க முயற்சிக்கவில்லை.   தடவியல் சோதனைகள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக அவ்வீட்டை பூட்டி   சீலிடவுமில்லை.  எனவே அந்த வீட்டிலிருக்கும் சாட்சியங்கள் முழுவதுமாக அழிக்கப்படுகின்றன. மறுநாள் மே 17 ஆம் தேதிதான் ஹேம்ராஜுவின் உடல் மாடியிலிருந்து கைப்பற்றப்படுகிறது.   இது ஏன் நடந்தது என்று யாரும் விளக்கம் சொல்ல முடியாத புதிராக உள்ளது.


            டாக்டர் ராஜேஷ் தல்வாரே இவ்விரு கொலைகளையும் செய்திருப்பதாக கைதானதும் அக்குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென்பதால் விடுவிக்கப்படுகிறார்.   ஆருஷியின் வீட்டுப் பணியாளர்கள் ராஜ்குமார், கிருஷ்ணா, விஜய் மண்டல் போன்றோரும் கைதாகி விசாரிக்கப்பட்டு நிரபராதிகள் என்பதால் விடுதலை செய்யப்படுகிறார்கள்.


            ஆருஷியின் பிரதேசப் பரிசோதனை அறிக்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை என்கிறது.  ஆனால் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், சி.பி.அய். விசாரணையில் ஆருஷியின் பெண்ணுறுப்பு வழக்கத்திற்கு மாறாக விரிவடைந்து, கருப்பையின் வாய்ப்பகுதியை காணக் கூடிய வகையிலும் இருந்ததாகக் கூறுகிறார்.   வேறிடத்தில் கொலை செய்து படுக்கையில் கொண்டு வந்து கிடந்திருப்பது ஆதாரங்களிலிருந்து தெளிவாகிறது.   ஹேம்ராஜுவையும் கீழே கொலை செய்து உடலை ஒரு விரிப்பில் போட்டு மாடிக்கு இழுத்துச்சென்று பூட்டியிருக்கிறார்கள். 


            இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் தல்வாரின்  வீட்டில் மது அருந்திவிட்டு பின்னர் வெளியே பூட்டிவிட்டு சென்றதாகச் சொல்கிறார்கள்.     அந்த வீட்டின் வேறொரு அறையிலிருந்த தல்வார் தம்பதிக்குத் தெரியாமல் இந்த கொலைகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.  அவர்கள் செய்திருக்க வேண்டும் அல்லது உடந்தையாக இருந்திருக்க வேண்டும்.


            வேலைக்காரன் ஹேம்ராஜ்தான் இக்கொலையைச் செய்திருக்கிறாரன் என்று கூறிய தல்வார் தம்பதியினர், அவனைத் தேட நேப்பாளம் செல்வதற்கு ரூ. 25000/- பணமளிக்க முன்வந்தனர்.  வீட்டிற்கு வந்த தடயவியல் வல்லுநர்கள் மாடிக்குச் செல்லும் பூட்டப்பட்ட கதவிலிருக்கும் ரத்தக்கறையைப் பார்த்து மேலே செல்வதற்கு சாவியைக் கேட்டும் அவர்கள் தரவேயில்லை.   போலீசும் உடைத்த சோதனையிடவில்லை.   எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச தடயங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதை மாநில போலீஸ் வேடிக்கை பார்த்திருக்கிறது.


            பிரேதப் பரிசோதனை அறிக்கை எழுதப்படுவதற்கு முன்னதாக ராஜேஷ் தல்வாரின் சகோதரர் தினேஷ் தல்வாருக்கும் குடும்ப நண்பர் டாக்டர் சுஷில் செளத்ரிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே.கே. கெளதமுக்கும் இடையே பலமுறை தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன.  இந்த கே.கே. கெளதம்தான் காவல்துறையை அழைத்து பூட்டை உடைத்து பத்திரிகையாளர்களுக்கு சுவராசியமான கண்டுபிடிப்பு நிகழப்போவதாக கூறுகிறார்.  அதன் பிறகு ஹேம்ராஜுவின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.


                        ஆருஷி கொலை பற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் இருநபர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.   அவர்கள் நொய்டாவிலுள்ள ராஜேஷ் தல்வாரின் இல்லத்தில் விசாரணை நடத்தச் சென்ற போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாஸ் 5 முறை போனில் தொடர்பு கொண்டு “விசாரணை நடத்தாமல் உடன் திரும்புங்கள்” என்று உத்தரவிட்டதாக மகளிர் ஆணைய  முன்னாள் உறுப்பினர் நிர்மலா வெங்கடேஷ் கூறியுள்ளார்.  குழு அமைக்கப்படவில்லை, விசாரணை நடைபெறவில்லை என்று முதலில் பொய் சொன்ன கிரிஜா வியாஸ் சி.பி.அய். விசாரணை நடத்தப் போவதால் இக்குழுவின் அறிக்கையை வெளியிடவில்லை என்று மழுப்பினார். 


            மொத்தத்தில் ஆருஷி கொலை வழக்கில் மாநில காவல்துறை; தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட மத்திய, மாநில அதிகார வர்க்கம் ராஜேஷ் தல்வார் தம்பதிகளைக் காப்பாற்றவும் உண்மை மற்றும் தடயங்களை மூடி மறைக்கவும் பெரும் முயற்சி செய்துள்ளது உறுதியாகிறது.


            சி.பி.அய். வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.அய். வழக்குரைஞர் ஆர்.கே. சைனி சொன்ன போது காசியாபாத் நீதிமன்ற நீதிபதி பிரித்திசிங் வழக்கு தொடர்பான இணைப்புத் தகவல்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.   இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டிய அவசியமென்ன என தல்வார் தரப்பு வினவியது.   அதற்கு சி.பி.அய். வழக்குரைஞர் நாமனைவரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர் என்றார்.   உங்களைப் பற்றி பின்னால் பேசும் பேச்சுக்களிலிருந்து நீங்கள் தப்ப முடியாது என்று சி.பி.அய். அதிகாரிகளைப் பார்த்து நுபுர் தல்வார் கூறியதாகவும் செய்தி வெளியானது.  எல்லாம் ஒரே புதிர் மயமாக உள்ளது.


            ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடைபெற்ற சில மணிநேரங்களில் அனைத்துத் தடயங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களை மட்டும் வைத்துக் கொண்டு வழக்காட முடியும் என்று தோன்றவில்லை.  மேல்தட்டு வர்க்கத்தில் நிகழ்த்தப்பட்ட இக்கொலை வழக்கு அவர்களாலேயே கேள்விக்குறியாகி நிற்கிறது.தற்போது தல்வார் தம்பதிகளுக்கு கைது ஆணை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


            அடுத்து ஆதித்யா கொலை வழக்கிற்கு வருவோம்.   கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியாக பணிபுரிபவர்.   வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள கம்பராஜபுரத்தைச் சேர்ந்த பூவரசி (26) எம்.எஸ்.சி. பட்டதாரி.  ஜெயக்குமார் பூவரசியை காதலிப்பதாகச் சொல்லியும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி பலமுறை உறவு கொண்டு இருமுறை கருக்கலைப்பு செய்யவும் காரணமாக உள்ளார்.   பின்னர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது சாதியைச் சேர்ந்த ஆனந்தலெட்சுமியைக் காதலித்து (!?) திருமணம் செய்து கொள்கிறார்.  தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பூவரசியை வேலையை விட்டு துரத்தவும் செய்கிறார்.  பின்னர் ஏதோ சமாதானமாகி அவருக்கு மதுரையில் வேலை ஏற்பாடு செய்கிறார்.   ஜெயக்குமார் ஆனந்த லெட்சுமியை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் பூவரசியுடன் பாலியல் உறவை தொடர்ந்தே வந்துள்ளார்.   இது தெரிந்தோ அல்லது தெரியாமலோ தனது மனைவி குழந்தைகளுடன் பூவரசியை நெருக்கமாக பழகுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளார்.


            ஒரு கட்டத்தில் பூவரசி தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த, ஜெயக்குமார் மறுத்து தொடர்ந்து பாலியல் உறவை மட்டும் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய, ஜெயக்குமாரை பழிவாங்க நினைத்த பூவரசிக்கு 4 வயது சிறுவன் ஆதித்யாவை கொலை செய்வது கூட அவர்கள் குடும்பப் பழக்கம் மூலம் எளிதாகிவிடுகிறது.


            நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆதித்யாவின் சடலம் இருந்த பை கைப்பற்றப்பட்டது.  பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா இயங்காததால் அந்தப் பையை அங்கு வைத்தவர் யாரென்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.    ஒரு வழியாக ஆதித்யாவின் உடல் அடையாளம் காணப்பட்டு, பூவரசி கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.


            இக்கொலை வழக்கு குறித்து விலாவாரியாக எழுதாத இதழ்களும் பேசாத தொலைக்காட்சி ஊடகங்களும் இல்லை எனலாம்.  பூவரசியை காமுகி, வேசி, கொலைகாரி என்றெல்லாம் முடிந்தவரையில் திட்டித் தீர்த்தன.   ஆனால் ஜெயக்குமார் மற்றும் அவர் வைத்திருந்த கள்ள உறவு பற்றி இந்த ஆண் மைய ஊடகங்கள் வாய்திறக்கவே இல்லை.


            இந்த கொலை வழக்கில் A1 பூவரசி என்றால் A2 ஜெயக்குமார் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.   இங்கு சட்டம் கூட ஆண்களுக்கானதாகவே இருக்கிறது.   எனவேதான் ஜெயக்குமார்கள் எவ்வித தண்டனையிலிருந்தும் தப்பிக்க முடிகிறது. 


            இவ்வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சிகளாக ஜெயக்குமார், ஆனந்தலெட்சுமி, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் சங்கர்குமார், ஹவுஸ் கீப்பிங் பணியாளர் சந்திரா, டாக்டர் செந்தில்குமார், விடுதிக் காப்பாளர் சகாயமேரி, இரவுக் காப்பாளர் ஸ்டாலின் போஸ், விடுதியில் தங்கியிருந்த மற்றொரு பெண் ஆகிய 8 பேர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.  கொலைக்கு காரணமானவரும் சாட்சியாக மாறிவிடும் அதிசயம் நடந்தேறியது.   முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஜெயக்குமார் உத்தமராக மட்டுமல்லாது அரசுத் தரப்பு சாட்சியாகவும் மாறிவிடுகிற நிலைதான் இவ்வழக்கின் மிகப்பெரிய அவலம்.


            மூன்றே மாதத்தில் இந்த கொலை இந்த கொலை வழக்கை முடித்து குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை பெற்றுத் தந்துள்ள அரசு வழக்குரைஞர் பெருமை பொங்க தொலைக்காட்சியில் பேசுகிறார்.   மேல்முறையீட்டிலும் கூட பூவரசிக்கு தண்டனை உறுதி செய்யப்படலாம்.  கொலையாளிக்குத் தண்டனை வழங்க வேண்டியதுதான்.  ஆனால் ஜெயக்குமாருக்கு யார் தண்டனை வழங்குவது?  வழக்கு பதிந்த தமிழக காவல்துறையும் தண்டனை வழங்கிய நீதிமன்றமும் இதைக் கண்டு கொள்ளவில்லை.   குழந்தையை இழந்ததுதான் தண்டனையென்று நினைத்து சமாதானமடைய முடியாது.  இழப்பின் வலி ஜெயக்குமாரை விட ஆனந்தலெட்சுமியைத் தான் அதிகம் பாதித்திருக்கும்.


            ஜெயக்குமாருக்கு சட்டத்தைவிட உரிய தண்டனை கொடுக்கத் தகுதியானவர் ஆனந்தலெட்சுமி மட்டுமே.   ஆனால் அதுவும் நடக்கவில்லை.  ஜெயக்குமார் இன்னொரு ஆதித்யாவைப் பெற்றுக் கொள்ள தயாராகி விட்டார்.   ஆதித்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அன்று கருவுற்றது உறுதி செய்யப்பட்டது.  அவருக்கு கடவுள் அருள் மட்டுமல்ல; miracle-ம் கூட.  (விஜய் டி.வி. பேட்டி).   இனி வருங்காலங்களில் பூவரசிக்குப் பதிலாக அவருக்கு வேறொரு பெண் கூட கிடைக்கக்கூடும்.  அப்படி கிடைத்தால் அதுவும் கூட கடவுளின் வரமாக இருக்கும்.


            பூவரசி ஒரு முறை தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அது முடியாமல் போகவே தனது குழந்தையை க் கொன்று விட்டதாகவும் ஆனந்த லெட்சுமி கூறுகிறார்.   அப்படியிருக்க குடும்பம் முழுவதும் பூவரசியுடன் நெருக்கமாக இருந்த காரணந்தான் யாருக்கும் விளங்கவில்லை.   பூவரசியுடனான தனது கணவனின் உறவை அத்துடன் மட்டும் முடித்துக் கொள்ளாமல் வீடு, குழந்தைகள் வரை அனுமதித்தது யார் குற்றம்? அடுத்த குழந்தையைப் பெற வாய்ப்பிருப்பதால் ஆனந்த லெட்சுமி ஜெயக்குமாரை மன்னிக்கலாம்.   சட்டம் ஏன் மன்னிக்க வேண்டும்?


            தீர்ப்புக்குப் பிறகு பூவரசி தான் ஆதித்யாவைக் கொலை செய்யவில்லை என்றும் ஜெயக்குமாரின் பிசினஸ் பார்ட்னரான ராஜேஷ் கும்பல்தான் ஆதித்யாவைக் கடத்திக் கொலை செய்ததாகச் சொல்கிறார்.   அவர் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்திற்கு இது முரணாக உள்ளது.   இது வழக்கை திசை திருப்பச் சொல்லும் பொய்யாகக் கூட இருக்கலாம்.   ஜெயக்குமார்தான் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள இந்தக் குழந்தையை கொலை செய்யச் சொன்னார் என்றும் சொல்ல வாய்ப்பிருந்தும் ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை?   அவர் இன்னும் ஜெயக்குமாரை கண்மூடித்தனமாக காதலிக்கிறாரோ என்னவோ!


            இந்த வழக்கை எதிர்கொண்ட ஊடகங்கள் பூவரசியை மட்டும் தனியாகப் பிரித்து திட்டுவதோடு மட்டும் நின்று கொண்டன.   மேலும் சமூகம் எதிர்கொண்ட முறை மிகவும் கேவலமானது.  பூவரசியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் போதெல்லாம் செருப்பு, விளக்குமாறுடன் பெருங்கூட்டம் காத்திருந்தது.  சென்னை புழல் சிறையிலும் சக கைதிகளின் தாக்குதல்களை பூவரசி எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  கூட்டம் அதிகமாக திரண்ட காரணத்தால் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத காவல்துறையினர் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி சாந்தினியின் வீட்டில் இரவு ஆஜர் செய்ய வேண்டி வந்தது.
       

            ஒரு உயிரைக் கொலை செய்வது கொடூரமானது.  குழந்தைகளைக் கொலை செய்வது மிகக் கொடூரமானது என்று சொல்லும் சமூக மனச்சாட்சி வரவேற்கப்பட வேண்டியதுதான்.   ஏதேனும் ஒரு கொலை செய்த சிறைக் கைதிகள் கூட பூவரசிக்கு எதிராக நின்றது வியப்பான ஒன்று.  இந்த சமூக கூட்டு மனச்சாட்சி ஏன் ஜெயக்குமாருக்கு எதிராக செருப்பு, துடைப்பத்துடன் திரளவில்லை எனும் போது நமக்கு இவற்றின் மீது அய்யம் எழுகிறது.  ஊடகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட இந்த போலியானதொரு சமூக அக்கறை முற்றிலும்  ஆண்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று.  இதுவே சமூகத்தின் பொதுப்புத்தியில் (common sense) தீவிரமாக பதிக்கப்பட்டுள்ளது. கோவை மோகன்ராஜ் என்கவுன்டரைக் கொண்டாடும் சமூகம் / அரசுகள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்வதில்லை.


            நிறைய கள்ள உறவுக் கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.   ஒரு பெண்ணின் கள்ளக்காதலன் அவளுடைய குழந்தையைக் கொன்ற நிகழ்வுகள் கூட உண்டு.  அப்படி நடந்திருந்தால் அக் குழந்தையின் தாயும் கைது செய்யப்படுவாள். தங்களது கள்ள உறவுக்கு இடைஞ்சலாக இருந்த இக்குழந்தையை இருவரும் திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கலாக்கி இருவரையும் காவல்துறை சிறையில் தள்ளியிருக்கும்.


            இளம் டென்னிஸ் வீராங்கனை ருசிகா மானபங்கப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வெறும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் அரியானா மாநில டி.ஜி.பி. ரத்தோர் இவ்வழக்கு விசாரணைக்காக பன்ச்குலா செ­ன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்த போது (பிப்ரவரி 2010) உத்தவ் சர்மா என்ற இளைஞர் ரத்தோரின் முகத்தில் மூன்று முறை குத்தி  காயமேற்படுத்தினார்.  உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த உத்தவ் சர்மா, சண்டிகர் தேசிய வடிவமைப்புக் கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்தவர் என்ற செய்தியும் வெளியானது.


            இதே உத்தவ் சர்மா ஜனவரி 2011-ல் ராஜேஷ் தல்வார் தில்லி சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வந்த போது இரும்பு லீவரால் தலையில் பலமாக தாக்கினார்.   அப்போது இவர் ஒரு மனநோயாளி என்றும் ஊடகத்தின் கவனத்தைக் கவர்வதற்காக இத்தகைய பணிகளில் ஈடுபடுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   பூவரசிக்கு எதிராக இங்கு கிளம்பும் சமூக மனச்சாட்சியையும் மன நோய்க் கூறாக ஊடகத்தின் கவனத்தைக் கவரும் நிகழ்வாகவும் ஏன் கணிக்கத் தவறுகிறோம்?   அல்லது இங்கு ஏதேனும் ஒரு உத்தவ் சர்மாக்கள் ஜெயக்குமாருக்கு எதிரான தாக்குதலில் ஏன் ஈடுபடவில்லை?


            மக்களின் பொதுப்புத்தியில் படிய வைக்கப்பட்டுள்ள இத்தகைய எண்ணங்கள் சமூகத்தில் ஜெயக்குமார்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன.   மேலும் இவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவது சமூகத்தில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.  அத்துடன் நீதியில் படிந்த கரு நிழலாக தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

exactly after one yaer now.
befor when I was in India I closely watch this case. still i had a doubt, some politician may involved in this case.
just for your information.

aaruchi not stayed with her parents.
the day of murder & the next day also they didn't stay there.

the parents already seperated & they had a own life.
the only contact with the girl was the house maid.
sure, In this case somebody wants to save somebody.

In poovarasi case u r almost right. a police may see through socity's emotional window. but judicial can't do like this (afzal guru's case ).

கருத்துரையிடுக