செவ்வாய், நவம்பர் 22, 2011

ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை

ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை
- மு. சிவகுருநாதன்
 
 
 
அனைவரும் கற்பதை இந்தியாவில் வைதீகப் பார்ப்பனியம் ஏற்றுக் கொண்டதேயில்லை.  சமணமும் பவுத்தமும் கல்வியை வெகுசனமயப்படுத்தியதால் அவையிரண்டும் இந்திய மண்ணில் அழித்தொழிக்கப்பட்டன.   பிற்காலத்தில் ஐரோப்பிய கிருத்தவர்களால் இந்தியர்களுக்கு கல்வி வசப்பட்டது.  மெக்காலே கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைகள் இருந்தபோதும் சாமான்ய அடித்தட்டு மக்களுக்கு கல்வி என்ற வகையில் இவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

மனு, புஷ்யமித்திர சுங்கன் போன்ற வைதீகப் பார்ப்பனிய மற்றும் அருவடிக் கும்பல்களுக்கு இன்றைய அரசியலிலும் வாரிசுகள் உண்டு.   அத்தகைய வாரிசுதான் தான் என்பதை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பலமுறை நிருபித்து வந்திருக்கிறார்.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கை இதற்கோர் உதாரணமாகும்.

ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் அவர் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகள் அவரது பாசிச மனநிலையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன.  பல கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார்.  பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் இயங்கி வந்த செம்மொழி நூலகம் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டது.  இங்குள்ள ஆயிரக்கணக்கான நூற்கள் பராமரிக்காமல் அழியப் போகின்றன.
சமச்சீர் கல்வியின் ஓரங்கமாக ரூ. 214 கோடி செலவில் அச்சிடப்பட்ட புத்தகங்களை முடிக்க அவசர சட்டம் இயற்றினார்.  சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என நீண்ட போராட்டம் நடத்தித்தான் சமச்சீர் கல்வி பாடநூற்களை பாதுகாக்க வேண்டி இருந்தது.  அப்போது நீதிமன்றங்கள் ஜெயலலிதாவிற்கு அறிவுரை வழங்கின.   இதில் எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

சுமார் ரூ. 200 கோடி செலவில் சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக நவம்பர் 01, 2011-ல் நடந்த 11வது தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.   இந்நூலகம் சென்னை பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் (DPI) அமைக்கப்படும் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவிற்கு இடம் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அண்ணா நூலக இடமாற்றத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரடங்கிய முதன்மை அமர்வு தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து நவம்பர் 03, 2011ல் உத்தரவிட்டது.                                                         
தரைத்தளத்துடன் சேர்த்து 9 தளங்களைக் கொண்ட அண்ணா நூலகக் கட்டிடத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூற்களுடன் 1000 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் நூலகத்தைப் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.  மிகவும் பரந்த அளவில் அதிக வசதிகளுடன் இருக்கும் இந்நூலகம் சீரழிக்கப்படுவது குறித்து வேதனையடையும் உள்ளங்களுக்கு உயர்நீதி மன்றத் தடை மூலம் தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது.  

தனது அரசியல் எதிரி மு. கருணாநிதியால் கட்டப்பட்டது என்ற காழ்ப்புணர்ச்சி மட்டுமல்லாது அடித்தட்டு மக்களுக்கு கல்வி, படிப்பு வாய்ப்புக்களை பறிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனது வைதீகப் பாசிசப் பண்பை வெளிப்படுத்துவதாகவே இதை எடுத்துக் கொள்ள முடிகிறது.  ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பொறியியல் படிப்பிற்கு ஊரகப் பகுதி இட ஒதுக்கீட்டை 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டாக உயர்த்தி இடஒதுக்கீட்டை காலி செய்தார்.  இது திட்டமிட்ட சதி.  

நூலகத்திற்கென்று தனிப்பட்ட வடிவமைப்பு கொண்ட ஒரு கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது மக்கள் பணத்தை விரயமாக்கி கொள்ளையடிக்கும் முயற்சி என்பதில் அய்யமில்லை.  மருத்துவமனை அதுவும் குழந்தைகள் நல மருத்துவமனையை யாரும் கட்ட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.  அதற்கு தமிழகத்தில் இடமே இல்லை என்பது போல அராஜகமாக செயல்படுவது வன்மையா கண்டிக்கத்தக்கது.   ஏற்கனவே ஒரு பயன்பாட்டிற்கென வடிவமைத்து கட்டப்பட்ட கட்டிடத்தை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்துவது பல்வேறு இடையூறுகளுக்கும் செலவீனத்திற்கும் மட்டுமே வாய்ப்பாக அமையும்.

இவர்களுக்கு குழந்தைகள் மீது உண்மையான அக்கறை உண்டா என்பது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.  எழும்பூர் மருத்துவமனை உள்ளிட்ட எந்த அரசு மருத்துவமனைகளின் நிலையும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இங்கு அடிப்படை வசதிகள், உரிய ஆய்வு உபகரணங்கள், போதிய மருத்துவர்கள், பணியாளர்கள், மருந்துகள் என எதுவும் இல்லாத நிலை புதிதாக ஒரு மருத்துவமனையை சென்னையில் மட்டும் நிறுவி குழந்தைகளை காக்கிறோம் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.தமிழகமெங்கும் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனைகளை வைத்துக்கொண்டு இம்மாதிரியான மையப்படுத்தப்பட்ட  மருத்துவமனைகளை உருவாக்குவது மிகவும் அநியாயமான செயலாகும்.
 
உண்மையில் இவர்களுக்கு அடித்தட்டு மக்கள் மற்றும் குழந்தைகள் மீது அக்கறை இருந்தால் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து அவற்றை முழு நேர மருத்துவமனையாக இயங்க நடவடிக்கை எடுக்கலாமே!  அதை விடுத்து வானுயர்ந்த கட்டிடம் மட்டும் எழுப்பி ISO 2000, ISO 2010 என்றெல்லாம் தரச்சான்று மட்டும் பெற்று உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யாமல் உலகத்தரம் வாய்ந்த கட்டிடமாக மட்டுமே வைத்துக் கொள்ளலாமே தவிர உலகத்தரமான மருத்துவமனையாக ஒரு போதும் செயல்பட முடியாது.  முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய வசதிகளும், பணியாளர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் போலியாக இடமாற்றம் செய்து கணக்கு காட்டிய நிகழ்வுகள் இவர்களால் செய்யப்பட்டது நாம் எளிதில் மறந்து விடக் கூடியதல்ல.
 
மேலும் மருத்துவமனை என்று சொன்னால்தான் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்ற மொண்ணையான புரிதல் மிகவும் அபத்தமானது.  அடுத்த குழந்தை பிறந்தால் முதல் குழந்தையே அக்குழந்தை பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஆடு, மாடுகள் வழங்கப்படும் போது அது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் என்ற எளிய அம்சம் இவர்களுக்கு தெரியாததல்ல.   அடித்தட்டு மக்கள் எந்நாளும் கல்வி பெற்று விடக்கூடாது என்ற கேவலமான எண்ணமே இதற்குக் காரணமாகும்.

சமச்சீர் கல்வி பாடநூற்கள் உயர் / உச்சநீதி மன்றங்களின் மூலம் உறுதியானதைப் போல அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.  இருப்பினும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், பொது நன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு நீதிமன்றத்தை மட்டும் நம்பியிருப்பது சரியாக இருக்காது.  ஏற்கனவே பெற்ற பல படிப்பினைகளிலிருந்து இவர்கள் ஒரு போதும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் மக்கள் எழுச்சியே நிரந்தரத் தீர்வாக அமையும்.  அதன் மூலமே இவர்களின் அத்துமீறிய அதிகாரங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக