திங்கள், நவம்பர் 28, 2011

கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்?

 கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்?

                                                                                                       -மு.சிவகுருநாதன்

            2 G  அலைக்கற்றை  வழக்கில்  கனிமொழிக்கு தில்லி   உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கனிமொழிக்கு மட்டுமின்றி 2G  அலைக்கற்றை வழக்கில் தொடர்புடைய  கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரீம் மொரானி, ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பால்வா, குசேகான் புருட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர்க்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.  முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு பிணை  வழங்க சிபிஐ தரப்பு எதிர்ப்புத் தெரிவித்ததாலும் ,அவரது பிணை மனு மீதான விசாரணை நாளையும் தொடர்வதாலும் இன்று  பிணை கிடைக்கவில்லை. அவருக்கு பிணை கிடைக்குமா என்பது நாளைதான் தெரியவரும்.


       2 G  அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்ட யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா உட்பட 5 பேருக்கு உச்ச நீதிமன்றம்  பிணை  வழங்கி உத்தரவிட்டது. இதையெடுத்து  கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பிணை மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்டு  ஐந்து பேருக்கு பிணை வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

       நீண்ட சங்கிலித் தொடரான இவ்வழக்கில் ஒரு துரும்பைத்தான் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. நான் ஏற்கனவே இந்த பகுதியில் குறிப்பிட்டதைப் போன்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள், இந்திய -பன்னாட்டுப் பெருமுதலாளிகள்,நீரா ராடியா போன்ற அரசியல் -கார்பொரேட் தரகர்கள் போன்ற பெரும்கூட்டம் இவ்வழக்கு விசாரணை வளையத்திற்குள் வராமல் இது முழுமையடையாது.   
                  2ஜி அலைக்கற்றை ஊழல் :  நடப்பது என்ன?                  http://musivagurunathan.blogspot.com/2010/12/2.html

   
       ஒரு   சிலரை காப்பாற்றுவதற்காக அரசும் சிபிஅய். யும் முயன்று வருகின்றன என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலில்லை என்பது சிபிஅய் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்கின்றது. பிணை மனுக்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க தயாநிதிமாறன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை காப்பாற்ற பிரதமர் பெருமுயற்சி செய்வதும் அதற்கு சிபிஅய் ஒத்துழைப்பு வழங்குவதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.


       இவ்வாறு பிணை பெறுவதும் வழங்குவதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்றபோதும் நமது நாட்டில் நடைபெற்ற பல முன்னுதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது இவ்வழக்கின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. என்னதான் உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றாலும் புலன்விசாரணை,முதல் தகவல் அறிக்கை பதிவு போன்ற பல்வேறு விஷயங்களில் சிபிஅய் கோட்டை விடும்போது உச்சநீதிமன்றம் ஒன்றும் செய்யப்போவதில்லை.

         நம் கண்ணுக்கு தெரிந்தே நமது கனிம வளங்கள் அரசியல்வாதிகள், உள்ளூர் - வெளியூர் கார்பரேட்கள் போன்றவர்களால் கொள்ளை போகின்றன. இதைத் தடுப்பதற்கு இந்த ஜனநாயக அமைப்பில் உள்ள எந்த நிறுவனத்திற்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. நம் கண்ணுக்கு தெரியாத இந்த அலைக்கற்றை வளம் பல்லாண்டுகளாக ஆளும்கட்சி,எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி கொள்ளையடிக்கப்பட்டதை நாமும் சில ஆண்டுகளில் மறந்து போயிருப்போம். 

       இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் கேத்தன்  தேசாய்  வீடுகளில் 
1800 கோடி ரூபாய் ரொக்கப்பணம்,1500 கிலோ தங்கம் ஆகியன கைப்பற்றப்பட்டதே மறந்துபோன நமக்கு சுக்ராம் வீட்டில் எடுக்கப்பட்ட சில கொடிகள் எப்படி நினைவிருக்கும்? இன்னும் சில ஆண்டுகளில் கனிமொழி, ஆ.ராசா மட்டுமல்ல இதில் தொடர்புடைய அனைவரும் அதிகாரங்களை மீண்டும் சுவைப்பதை நாம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக