செவ்வாய், பிப்ரவரி 12, 2013

கொலைவெறி தேசமாகும் இந்தியா


கொலைவெறி தேசமாகும் இந்தியா  - மு.சிவகுருநாதன்

    முகமது கசாப்பைப் போலவே அப்சல் குருவிற்கும் ரகசியமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாவீரர், புத்தர், அசோகர், வள்ளலார், காந்தி போன்றோர் பிறந்து வாழ்ந்த நாட்டிற்கும் அவர்களுக்கும் இதைவிட பெருத்த அவமரியாதை இருக்கமுடியாது

   உலகத்தில் எண்ணற்ற நாடுகள் மரணதண்டனையை ஒழித்துவிட்ட நிலையில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தியா உரியவர்களுக்குக்கூட தெரிவிக்காமல் கமுக்கமாக மரணதண்டனையை நிறைவேற்றுவதும் உடலையும் ஒப்படைக்காமல் அடக்கம் செய்வதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியதாகும். இம்மாதிரியான அப்பட்டமான மனித உரிமை மீறல்களை மீண்டும் மீண்டும் அனுமதிப்பது மிகவும் அபாயகரமானதாகும்

   அப்சல் குருவிற்கு அளிக்கப்பட்ட சமூக மனச்சாட்சி மரணதண்டனை சர்ச்சைக்குள்ளான ஒன்று. அருந்ததி ராய், எஸ்.வி. ராஜதுரை, .மார்க்ஸ் போன்ற மனித உரிமைப் போராளிகளால் ஆதாரங்களுடன் விவாதிக்கப்பட்ட விடயம். மரணதண்டனைகளுக்கு எதிராக நாடெங்கும் இயக்கம் நடைபெற்றுவரும் வேளையில் மத்திய அரசு இத்தகைய கமுக்க நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது

   டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் அப்சலை தூக்கிலிடாதே என எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய் எழுப்பிய 13 வினாக்களை எழுத்தாளர் .முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் அவரது இணையதளத்திலிருந்து கேள்விகளை எடுத்துத் தருகிறேன். .முத்துகிருஷ்ணனுக்கு எனது நன்றிகள்.
இணைப்பு இதோ.

http://amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259:-13-13-&catid=22:-1&Itemid=52

கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசம்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துள் நுழைந்தது?


கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துல்லியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிருபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள்  இருந்த?

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்காணிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.என்றார். தாஸ் முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்காணிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்ப்பட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியங்கள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணைக் கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?

கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?

கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தம் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்?  தொடர் ராணுவ வாகங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டது?

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இணைத்தது?

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?

கேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொடர்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்துஇவரை நீ தில்லிக்கு அழைத்து செல்என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர்.  தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 12 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்‌ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார்.  இவரை மும்பையில் நவம்பர் 2000 -ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரணைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?

நன்றி: அ.முத்துகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக