ஞாயிறு, ஜூன் 20, 2010

"வெடிகுண்டு வழக்கு விசாரணையில் மனித உரிமை மீறல்'

சென்னை

"வெடிகுண்டு வழக்கு விசாரணையில்
மனித உரிமை மீறல்'




விழுப்புரம், ஜூன் 19:

விழுப்புரம் வெடிகுண்டு வழக்கு விசாரணையில் க்யூ பிரிவு போலீஸôர் மனித உரிமை மீறலுடன் நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் மீது சிபிசிஐடி போலீஸôர் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று உண்மை அறியும் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


விழுப்புரம் அருகே சித்தணியில் கடந்த 12-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், காவல்துறையின் விசாரணையில் நடந்த மனித உரிமைமீறல் குறித்து உண்மையை கண்டறிய பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட உண்மை அறியும் குழு பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் வந்தனர்.


கோ. சுகுமாரன், பேராசிரியர் சே. கோச்சடை, பி.வி. ரமேஷ், எம். பர்க்கத்துல்லா, மு. சிவகுருநாதன், இரா. முருகப்பன், பாஸ்கர், லூசியானா, அ.ராஜகணபதி, க. காளிதாஸ், ரஸ்கின்ஜோசப், ஜெயராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


இரண்டு நாள்களாக அவர்கள் சம்பவம் நடந்த இடம், அப்பகுதி மக்கள், ரயில்நிலைய அலுவலர், காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆகியோரிடம் கருத்தறிந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

ரயில் தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பான புலனாய்வில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும், கையால் எழுதப்பட்ட தாளை வைத்து ஒரு கோணத்தில் மட்டுமே புலனாய்வு மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து ஈழத் தமிழர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடி வந்த இந்த இளைஞர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், எழில்இளங்கோ ஆகியோரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துப் பழித் தீர்க்க காவல்துறை முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

எந்த நேரமும் விசாரணைக்கு வருவதற்கு இந்த 11 இளைஞர்களும் தயாராக இருந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று 3 முதல் 4 நாள்கள் வரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததோடு அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னர் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது போல அவர்களை வற்புறுத்தி பொய் ஆவணங்கள் தயாரிக்க முற்பட்ட க்யூ பிரிவு காவல்துறையினர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வழக்கை க்யூ பிரிவிலிருந்து மாற்றி ஒரு டிஐஜி தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

வெறும் சுவரொட்டி ஒட்டிய ஒரு காரணத்துக்காக இந்த 11 பேரில் நால்வர் உள்ளிட்ட 6 பேரை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் காவலில் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :தினமணி -20.06.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக