வெள்ளி, நவம்பர் 26, 2021

விமர்சனங்களுக்கு அப்பால்...

 

விமர்சனங்களுக்கு  அப்பால்...

 

 

மு.சிவகுருநாதன்

 


 

 

 

          எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் (நமது மாணவர்கள் – நவ. 23/2021) வாசகி ஒருவரின் மடலுக்குப் பதிலாக எழுதிய குறிப்பொன்றில் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் (பொறுக்கிகள்) என்று விமர்சித்தது இன்று விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்த மூன்று எதிர்வினைகளை மூத்த தோழர் வே.மு. பொதியவெற்பனார் எனும் திருவாளர் பொதிகைச் சித்தர் முகநூலில் பதிவிட்டு என்னையும் அதில் இணைத்திருந்தார். அதில் எனது கருத்தாக கீழ்க்கண்ட எதிர்வினையாற்றியிருந்தேன். 

 

        "ஜெமோவின் அரசியல் எல்லாரும் அறிந்ததுதான். பெரும்பாலான ஆசிரியர்கள் அவரை படைப்பாளியாகவோ  அல்லது வலது சாரியாகவோ  அறிந்திருக்கவில்லை என்றே கருதுகிறேன்.

 

        ஜெமோவின் கருத்துகளில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கண்ணியமற்ற எதிர்வினைகள் நமக்கும் அவருக்குமான இடைவெளிகளைக் குறைக்கின்றன என்று கருதுகிறேன். 

 

  ஜெமோ காலந்தோறும் இம்மாதிரியான வசைகளை உற்பத்தி செய்யும் படைப்பாளி என்பதை நாம் உணரும் மற்றொரு தருணம் இது. அவ்வளவே!

 

          இதே ஜெமோ தனது மகன் +1 வகுப்பில் அரசுப்பள்ளியை விரும்பித் தேர்வு செய்தபோது, அரசுப்பள்ளிகளைப் பாராட்டி எழுதியதும் உண்டு".

 

(மு.சிவகுருநாதன்)

 

      இதன் பொருட்டு சினங்கொண்ட தோழர் திருவாளர்  பொதிகைச்சித்தர் அவர்களது எதிர்வினையாகவும், பின்னர் தனிப் பதிவாகவும்  கீழ்க்காணும் பத்தி வெளியானது. 

 

      "கல்வியாளர் சிவகுருநாதர் முனியப்பர் அகராதியில் வலது சாரிப் படைப்பாளி   திரு. ஜெயமோகனார் அவர்கள்; மாபெரும் மனித குலப் பேராசான்களை இழிவுபடுத்தி அவதூறு தூற்றினாலும்  அதற்குப் பெயர் வசை, அவ்வளவுதான். ஆனால் அதற்கு நாம்  உடனடியாக எதிர்வினை புரிந்திட நேர்கையில் ஒருமையில் பேசவோ 'அவையல் கிளவி'களையோ பாவிக்க நேர்ந்தால் அதற்குப்பெயர் 'கண்ணியக்குறைவு'. சரிங்க அப்படியே இருந்துட்டுப் போறோம். தாங்களே அவருடன் தங்கள் கண்ணியம் மீதூர்ந்த மாபெரும் உரையாடல்களை நட்பு முரண்பாட்டோடு நடாத்தி அவரை வென்றெடுப்பீர்களாக!

 

பார்வை:

 

 

சிவகுருநாதன் முனியப்பன் 

 

       மன்னிக்கணும் இங்கு அர் விகுதியைப் பாவிக்க இயலாமைக்காக. அவ்வாறு பாவித்தால் தங்கள் பெயரைக் 'கொளுவி' விட முகநூலார் இடந்தாரார்". (பொதிகைச் சித்தர்)

 

       நான் ஒன்றும் கல்வியாளர் இல்லை. கல்விப்புலத்தில் பணி செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

 

   'ஜெய்பீம்' படத்தின் எதிர்வினைகள் அதன்  மையப்புள்ளியை விட்டு எங்கோ நகர்ந்துவிட்டதுபோலவே இங்கும் நடக்கிறது. இதுதான் நம் சூழலின் அவலம் போலும்! 

 

       இதன் மறுதலை ஜெயமோகனை ஆதரித்துக் கொண்டாடுதல் என்பதல்ல. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எதையும் புனிதப்படுத்துவதும் விமர்சனத்திற்கு ஆட்பட்டதாக மாற்றுவதும் மிக மோசமானச் சூழலாகும். 

 

  அரசுப்பள்ளிகளும் ஆசிரியர்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ‘குரு’வை விமர்சிக்கக்கூடாது என்பது வலதுசாரி சித்தாந்தமே. முன்பொருமுறை 'ஆனந்தவிகடன்'  இதழில் தோழர் பாரதிதம்பி எழுதிய கட்டுரைத் தொடர் ஆசிரியச் சமூகத்தால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஆனால் சமஸ் எழுதுபவை கொண்டாடப்படுகின்றன. இந்த இடைவெளியை, உள் அரசியலை, நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளும் நிலையில் தமிழ் அறிவுலகம் இல்லை.  

 

     இன்று  ஜெயமோகனது பதிவு கடும் எதிர்ப்பை ஆசிரியர்கள் மத்தில் உண்டாக்கியிருக்கிறது. ஆசிரியர்கள் பெருமளவுப் பயன்படுத்தும் சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் பல ஆசிரியர்கள பொங்கி எழுந்ததைப் பார்க்க முடிந்தது. இதை  திரு பொதிகைச்சித்தர் தனது பார்வையில்,  "பகை முரண்பாட்டை பூனை குட்டியைக் கவ்வுவது போலக் கையாளக் கூடாது, எலியைக் கவ்வுவது போலவே கையாளவேண்டும்", என்கிறார். மேலும் அவர், "முகநூற் பதிவுகளும் பின்னூட்டங்களும் அவ்வப்போதைய

மன அவசங்களின் 'ரேண்டம்' எதிரீடுகளே",  என்று இலக்கணமும் வகுக்கிறார். இதே வரையறைகளைப் பின்பற்றி ஜெயமோகன்கள் தப்பிவிடும் அபாயமும் இருக்கிறது.

 

    'பென்னம்பெரிய'  சிந்தனையாளரும் விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் (மன்னிக்க: சித்தரின் வாக்குப்படி ராஜேந்திரர் என்று குறிப்பிடாமைக்கு.) அவர்களது  வசைச் சொற்களையும் கடந்துவிடலாம் என்றால் ஜெயமோகனை விமர்சிக்க வேண்டிய தேவையே இல்லையே.  பிறகு ஜெயமோகனுக்கும் நமக்குமான வேறுபாடுகள்தான்  என்ன?  இதுதான் எனது எதிர்வினையின் மையமாகும்.

 

      ஜெயமோகன் பேராசான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற உலகம் போற்றும் ஆளுமைகளை அவதூறு செய்தே தனது பிம்பத்தைப் பெரிதாக்கிக் கொண்டவர். மார்க்சிய அறிஞர்கள் எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றோரையும் வசைபாடுவதும் அவதூறு செய்வதையும் தனது படைப்பிலக்கிய பணிகளில் ஒன்றாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர். சிறுபான்மையினர், அடித்தட்டு மக்கள் மீது வன்மம் கொண்டவர். நம்மிடம் ஜெயமோகனைக் கொண்டாட ஏதுமில்லை. நமக்கு அவரது படைப்பில் கூட கடும் விமர்சனமே எஞ்சியுள்ளது.

 

       திரு பொதிகைச்சித்தர் வெளியிட்ட பதிவின் (உமா மகேஸ்வரி) முதல் விமர்சனம், ஜெயமோகன் அரசுப்பள்ளிகளைச் சென்று பார்த்திருக்கிறாரா? அவரது குழந்தைகளை அங்குப் படிக்க வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளை எழுப்புகிறது. இது ரொம்ப அபத்தம். அவரது மகன் +1, +2 வகுப்புகளை அரசுப்பள்ளியில் முடித்தவர்.

இதுகுறித்தும் அரசுப்பள்ளிகள் குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளார்.  அரசுப்பள்ளி மாணவர்கள் ‘பொறுக்கிகள்’ என்றால் அது அவரது மகனையும் சேர்த்தே பொருள் கொள்ள வேண்டும்.

 

      இவரைவிடவும்  சமகாலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரும் படைப்பாளியுமான ஒருவரது மகளை மேனிலை வகுப்பில் சேர்த்தது ஊடகங்களில் பெருத்த விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. இங்கு பிரச்சினை அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது பற்றியல்ல. மாவட்ட ஆட்சியர், முதன்மைக்கல்வி அலுவலர்கள் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது இங்கு தலைப்புச் செய்தி. மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  குழந்தை பெறுதலும் அவ்வாறே. இவர்கள் பெறும்  கவனிப்புகளைச்  சாமான்ய மக்கள் பெற இயலுமா என்பதே நாம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி.

 

      இரண்டாவது விமர்சனம் யமுனா ராஜேந்திரனுடையது. எலியைக் கவ்வும் இந்த விமர்சனத்திற்கு அவர் ஏற்கனவே பதில் அளித்துவிட்டராம். எனவே அதுபற்றி மீண்டும் கதைக்கக்கூடாது என்பது திருவாளர் சித்தரின் நிலைப்பாடு. நான் அந்தப் பதிலைப் பார்க்கவில்லை. ஒரு பதிவை  திருவாளர் சித்தர் மீளப் பதிவிடும்போது மீண்டும் எதிர்வினைகள், பதில்கள் தொடரத்தானே செய்யும்?

 

        மூன்றாவது பதிவு 'இல்லம் தேடிக் கல்வி'த் திட்டத்தை சந்தடி சாக்கில் புகழ்ந்து வைக்கிறது. ஜெயமோகன் மீதான விமர்சனம் இந்தப் போற்றிப் பாடுதலில் நிறைவது நல்ல முரண் நகை.  இத்திட்டத்திற்கு முதல்  எதிர்க்குரலாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கும் இந்நாள் மார்க்சிஸ்ட்கள் (சி.பி.எம்.) ஆதரிக்கும் 'இல்லம் தேடிக் கல்வி'யை முன்னாள் மார்க்சிஸ்ட் (சி.பி.எம்.) திருவாளர் சித்தர் வழிமொழிய இதைப் பயன்படுத்துகிறார் போலும்!

 

      தமிழகத்தை ஆண்ட, ஆளும்  என இரு கட்சிகளும் கல்வியை பல வழிகளில் சீரழித்துள்ளன. பொதுக்கல்வி மிக மோசமாக உள்ளது. ஒன்றிய அரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களது செயல்திட்டங்களை மறைமுகமாக அமல்படுத்துகின்றனர். இவர்கள் சொல்லும் சமூக நீதி பல சமூகங்களுக்கு அநீதியாக உள்ளது. (எ.கா.) 10.5% உள் ஒதுக்கீடு)

 

     மது, கஞ்சா, குட்கா போன்றவை இன்று கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புழங்கும் ஒன்றாக மாறியுள்ளது. கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை என்கின்றனர். ஆயினும் கள்ளச்சாராயம் ஒழிந்தபாடில்லை. கள்ளப்பணத்தையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்றாரே மோடி. அதைப்போலத்தான் இதுவும்!

 

       கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் அதன் வலைப்பின்னலை அழிக்க  தமிழக காவல்துறையால் முடியாதா?  பள்ளி மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்தும் அளவிற்கு போனதெப்படி?  கொரோனாவிற்கு முன்பே இவை தொடங்கிவிட்டது. இன்று இது மிகவும் அதிகரித்துள்ளது. 

 

     சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வசிக்கும் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் ஒருவன் அருகிலுள்ள அரசு டாஸ்மாக்கில் மதிய உணவு இடைவேளையில் பள்ளிச் சீருடையுடன் சென்று பீர் பாட்டில் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டு சைக்களில் செல்லும்போது பீர் பாட்டில் வெடித்துச் சிதறி உயிரிழந்தார்.  இவ்வளவிற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இவ்வளவும்  நடந்தது.  யார் மீதும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.

 

      சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் குற்றங்களில் பதின் பருவத்தினர் ஈடுபடுவது உயர்ந்துள்ளது. பெண் குழந்தைகள் மட்டுமல்லாது ஆசிரியைகளும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக நேரிடுகிறது.  இத்தகைய சூழல்கள் அரசு, உதவிபெறும், சுயநிதிப் பள்ளிகள் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. விழுக்காடு அளவில் மட்டும் வேறுபாடு இருக்கலாம். 

 

     பணியிடங்களில் பெண்களுக்கான ‘விசாகா’க் குழுவின் நிலை எவ்வாறு உள்ளது? பள்ளிகளில் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாம் ஏட்டளவில்தான்.

 

     தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு ஆதரவாகவே இங்கு அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைகின்றன. சுமார் 30 மாவட்டங்கள் கனமழைக்காக விடுமுறை விடப்படும் சூழலில் பள்ளிகளை விரைவாகத் திறந்தது தனியார் பள்ளிகளின் பொருளாதார நலம் சார்ந்த நடவடிக்கையாகும். அரசு வகுத்த கட்டணங்களை வசூலிப்பதை கண்காணிக்க விரும்பாத அரசும் கல்வித்துறையும் கொரோனா காலத்திலும் எதையும் கண்டுகொள்வதில்லை. இன்றும் வசூல் வேட்டைகள் தொடர்கின்றன.

 

      பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. 45 நாள்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்பது போன்ற உத்தரவுகள் அரசுப்பள்ளிகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. தனியார் பள்ளிகள் அவர்களது விருப்பப்படி செய்துகொள்ளலாம். இதற்கேற்ற உத்தரவுகளையும் கல்வித்துறையே பிறப்பிக்கிறது.

 

       வருகைப்பதிவு கட்டாயமில்லை. ஆனால் அரசுப் பொதுத்தேர்வுகள் உண்டு. இதன் விளைவு என்னவாக இருக்கும்? பள்ளி மூடிக்கிடந்தபோது வேலைக்குச் சென்ற குழந்தைத் தொழிலாளர்கள் அப்பணியைத் தொடர்கின்றனர். இதைத் தடுக்க ஏன் முடியவில்லை?

 

       குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்கு அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? பெண் குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் ‘போக்சோ’ சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அரசும் கல்வித்துறையும் எடுத்த முயற்சிகள் என்ன?

 

       கல்வித்துறையை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்தான் பள்ளிக்கல்வித் துறையைக் கட்டிக்காக்க முடியும் என்கிற ஒன்றிய அரசின் முடிவுக்கு மாநில அரசும் வந்துள்ளது. கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். இதுவரையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் நலப்பள்ளிகள் அந்தந்த துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என  இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் நிர்வாகத்தில் இவ்வளவு ஊழல்களுடன் ஒப்பீட்டளவில் அரசுப்பள்ளிகளை விட மிக மோசமான நிலையில் சீரழிந்து கிடக்கிறதே, இதற்கு யார் காரணம்? சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த விளிம்பு நிலைச் சமூகங்களுக்குக் கல்வி கிடைக்க யார் தடையாக இருக்கிறார்கள் என்பது அரசுக்கும் ஆள்வோருக்கும் தெரியாதா? இதுவும் ஒரு ஒருவகையான் ‘குலக்கல்வி’ அணுகுமுறைதானே! இந்நிலை என்று மாறும்?  

 

     ஜெயமோகன் மிக மோசமான ஆள் என்பதில் அய்யமில்லை. அவரது கருத்தியலும் அவற்றை நியாயப்படுத்தும் சொற்பயன்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை. இதற்கென நாம் அவரது வசைமொழியைக் கைக்கொள்ளத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.  அதற்கு மாறாக தமிழகப் பள்ளிக்கல்வியின் சீரழிவுகளையும் ஊழல்களையும் அமபலப்படுத்தி உண்மையில் அனைவருக்குமான கல்வி கிடைக்கவும், அது அரசின் பணியாக இருக்கவும்  இந்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இயக்கவாதிகள் செயல்படுவதே சரியாக இருக்க முடியும்.

 

 

(எழுத்தாளர் ஜெயமோகன் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் விமர்சித்தது குறித்த எதிர்வினைக்கான பதில்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக