வெள்ளி, ஜூன் 17, 2022

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

 

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

 

மு.சிவகுருநாதன்

 

        இந்தியாவை சனாதன தர்மமே ஆட்சி செய்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருவகையில் இது உண்மைதானே! கடந்த எட்டாண்டுகளாக பல நேர்வுகளில் அரசியல் சட்டமும் நீதிமன்றமும் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.

 

      சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சிலரும் சில அமைப்புகளும் மாற்றப்பட்டுருக்கின்றவே! இதைத்தான் மநுதர்மத்தின் ஆட்சி என்று புரிந்துகொள்ள வேண்டும் போலும்!

 

         தமிழகத்தில் எழுந்த இத்தகைய எதிர்ப்புணர்வை வேறு மாநிலத்தில் கண்டிருக்க முடியாது. இனி இவ்வாறு உளறும் முன் இந்த எதிர்க்குரல்கள் அவரைத் தடுக்கும் என நம்பலாம்.

 

       நமது பாடநூல்கள் ஆளுநர் சொல்வதை வேறுமொழியில் சொல்கின்றனவே! ஸ்மிருதிகளைக் கொண்டாடுகின்றன. மநு தர்மத்தை சமூகக் கடமையாக கட்டமைக்கின்றன. இன்றைய நீதி வழங்கல் முறையுடன் மநு நீதியை ஒப்பிட்டு விதந்தோதுகின்றன. மநு நீதிச்சோழன் கதை வழியே அறத்தைப் (!?) போதிக்கின்றன. இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு ஆளுநர் பேச்சை மட்டும் எதிர்ப்பது அறமாகுமா?

 

         நேற்று (15/06/2022) தமிழகக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்ட முடிவில் தமிழக வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

 

          இதைப்போன்ற வாசகங்களை பாடநூல்கள் உருவாக்கத்தின்போதும் கேள்விப்பட்டோம். தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றை மையப்படுத்தி பாடநூல்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

 

          வெளிவந்த புதிய பாடநூல்கள் பிற்காலச் சோழப்பெருமை, சைவ-வைணவப் பெருமைகள், குடவோலை முறை மக்களாட்சி, மநுதர்மப் புகழ்பாடுதல் என்பதாக பாடநூல்கள் அமைந்தன.

 

     தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றிற்கான வரையறைகள் என்ன என்பது முக்கியமானது. பொதுவாக தமிழக வரலாறு இடைக்காலத்துடன் அப்படியே உறைந்துபோயுள்ளது. எனவேதான் சோழ, சைவ, குடவோலைப் பெருமையுடன் தமிழக வரலாறு நின்றுபோகிறது. களப்பிரர்களை அதே எள்ளலுடன் அணுகும் போக்கு தொடர்கிறது.

 

      கல்விக்கொள்கை என்பது தொலைநோக்குச் செயல்திட்டம். ஒன்றிய அரசு தனது கொள்கையில் சமஸ்கிருத இந்துத்துவப் பெருமை பேசுவதைப்போல தமிழ், சைவப் பெருமைகளை மட்டும் பேசிவிட்டால் போதுமா?

 

       பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, தாய்மொழிக் கல்வி, சமத்துவ, சமூகநீதிக் கல்வி, கல்வியில் அரசின் நிதி ஒதுக்கீடு உயர்வு, அனைவருக்குமான கல்வி, சுய சிந்தனை, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் கல்வி, மனித மனத்தின் ஆழ்மனக் கசடுகளை வெளியேற்றும் கல்வி, ஆதிக்கமற்ற, மனித நேய, குழந்தை நேயக் கல்வி, தேர்வுகளை மையப்படுத்தாத கல்வி, தனியார் ஆதிக்கத்தை, கட்டணக் கொள்ளைகளை தடுக்கும் கல்வி என்று பல தளங்களில் கல்விக் கொள்கை விரிவடைய வேண்டும். மாறாக சுயபெருமைகள் மூலம் சமூகத்தைக் கீழ்நோக்கி நகர்த்துவதல்ல.

 

         சனாதன, வர்ண எதிர்ப்பு இம்மண்ணின் குணம். அதற்கு மாற்றான வாழ்வியல் நமக்கு உண்டு. மீண்டும் அந்நிலை வர முயற்சிக்க வேண்டுமே ஒழிய பழம்பெருமைகளில் சமூகத்தை மூழ்கடிக்கும் தவற்றைச் செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக