வெள்ளி, ஜூன் 17, 2022

மிகை மதிப்பீடு!

 

மிகை மதிப்பீடு!

 

மு.சிவகுருநாதன்

 

         இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு முடிவுதள்ளி வைக்கப்பட்டுவிட்டது.) இவ்வளவு பாராட்டிற்குப் பள்ளிக்கல்வித் துறை தகுதியானதுதானா என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

 

            தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் பெரும்பாலும் 2 அல்லது 4 ஆசிரியர்களைக் கொண்டு இயங்குகின்றன. 'இல்லம் தேடிக் கல்வி'த்திட்டத்திற்காக பல ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 'எண்ணும் எழுத்தும்' போன்ற திட்டங்களின் பயன்கள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்க பெருமுயற்சியெல்லாம் தேவையில்லை.

 

       தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படும் 'இல்லம் தேடிக் கல்வி'த்திட்டத்தை மேற்பார்வையிட ஏன் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்? முழுநேரப் பணிவிடுவிப்பில் பலர் இருப்பதால் பள்ளிகள் எப்படி இயங்கும்?

 

          இந்த மேற்பார்வைப் பணிகளை வட்டார வளமைய ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்வி அலுவலர்கள் செய்ய இயலாதா? 4 பேர் பணியாற்றும் நடுநிலைப் பள்ளியிலிருந்து ஒருவர் மாற்றுப்பணியில் சென்றால் கற்றல் பாதிக்காதா?

 

          இத்திட்டத்தை முறைசாராக் கல்வியுடன் இணைத்து நடத்தலாமே! நடக்கின்ற பள்ளிகளை ஏன் சீரழிக்க வேண்டும்?

 

          பழங்குடியினர் மலைப்பகுதிகளுக்கு இன்னும் கல்வி ஏன் சென்று சேரவில்லை? இத்தனை ஆண்டுகாலம் இவ்வாறு இருந்ததற்காக நாம் வருந்தவேண்டும். இல்லம் தேடிக் கல்விதான் அவர்களுக்கு வாய்ப்பு என்றால் பள்ளிகள் இதுவரை என்ன செய்கின்றன? தொடர்புடைய துறைகள் என்ன செய்துகொண்டுள்ளன?

 

           மழலையர் வகுப்புகளுக்கு ஏன் ஆசிரியர் நியமனம் இல்லை. உள்ளூர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றுவோர் பற்றிய விவரங்கள் அரசிடமும் இருக்காது. ஊடகங்களும் கண்டுகொள்ளாது. வெறும் பாராட்டு மழை பொழிவதா ஊடக அறம்! கவுரவ விரிவுரையாளர்களைவிட எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி பல்லாயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளிலும் உள்ளனர்.

 

             மழலையர் வகுப்புகள் இனி இல்லை என்று சொல்லி, உடனே பின்வாங்கி உள்ளனர். கொரோனா காலத்திலும் மாணவர் சேர்க்கை நடந்தபோது இவ்வாண்டு மாணவர் சேர்க்கை நடத்தாமல் தனியாருக்குச் சாதகமாகத் தமிழகக் கல்வித்துறை செயல்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் கூடுதலாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனங்கள் இல்லை.

 

          பள்ளிக் கல்வித்துறையும் உயர்கல்வித்துறை இன்று முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. ஒன்றிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று சொல்லிக் கொண்டே, மறைமுகமாக அவற்றைச் செயல்படுத்தும் துறைகளாக உருமாறியுள்ளன.

        தமிழக கல்விக்கொள்கை உருவாக்கும் குழுகூட ஒன்றியக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் பரிசீலிக்கப்படும் என்கின்றனர். கல்வியில் தன்னார்வலர்கள், 9,10 வகுப்புகளில் தொழிற்கல்வி எனும் குலக்கல்வி, கலவைக் கற்றல் முறை என்று பல்வேறு நல்ல அம்சங்களைக் கண்டெடுத்துதான் செயல்படுத்துகிறார்கள் போலும்!

 

        இருமொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே தனியார் சுயநிதிப்பள்ளிகளில் இந்தி கற்பிக்க அனுமதிக்கிறார்கள். பிற பாடவேளைகளை இந்தி விழுங்கிக் கொள்கிறது. இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்டதுண்டா? இதன்மீது ஊடக வெளிச்சம் பட்டிருக்கிறதா? பள்ளி நேரம் அல்லாத பிற நேரங்களிலா அங்கு இந்தி வகுப்புகள் நடக்கின்றன?

 

        கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ஊடகங்கள் மோடியைப் பாராட்டுவதைத் தொழிலாகச் செய்துவருகின்றன. அதைப்போல தமிழகத்திலும் ஆள்வோரைப் பகைத்துகொள்ளாமலிருக்கும் குயுக்திகள் இதழியல் அறமாகாது. மக்களாட்சியின் நாலாவது தூண் இவ்வாறு செயல்படுவது அவற்றை வலுப்படுத்தாது.

 

(இன்றைய 'இந்து தமிழ் திசை' (16/06/2022) தலையங்கத்திற்கான எதிர்வினை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக