ஞாயிறு, பிப்ரவரி 15, 2015

ராணிப்பேட்டை கழிவு நீர்த் தொட்டி வெடித்து 10 தொழிலாளிகள் மரணம் - உண்மை அறியும் குழு அறிக்கை


ராணிப்பேட்டை கழிவு நீர்த் தொட்டி வெடித்து 10 தொழிலாளிகள் மரணம் - உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை,
                                                                             பிப்ரவரி 11, 2015

       சென்ற ஜனவரி 31, 2015 அன்று வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, SIDCO தொழிற்பேட்டையில் உள்ள தோல் சுத்திகரிப்புக் கழிவு நீர்த் தொட்டி ஒன்று வெடித்து, அதிலிருந்து வெளிவந்த கடும் விஷத் தன்மை மிக்க கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளிகள் அந்த இடத்திலேயே உயிர் நீத்தனர். இவர்கள் அனைவரும் கழிவு நீர்த் தொட்டியை ஒட்டி உள்ள "ஆர்கே லெதர்ஸ்" என்கிற தோல் பதனீட்டுத் தொழிலகத்தில் பணியாற்றியவர்கள். இவர்களில் ஒன்பது பேர் இந்தத் தொழிலகத்தில் உள்ள ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் மேற்கு வங்கத்திலுள்ள பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிகள். இவர்கள்: 1.அபீப்கான், அவரது புதல்வர்கள் 2.அலி அக்பர், 3.அலி அங்கர், 4.ஷாஜகான், 5.குதுப்கான் 6.அக்ரம், 7.எஷ்யம், 8.ப்யார், 9.ஹபீப். இன்னொருவர் இந்தத் தொழிலகத்தின் 'வாட்ச்மேன்'. இவர் கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சம்பத் என்னும் தமிழர். அமினுல் அலிகான் எனும் மே.வங்கப் புலம் பெயர் தொழிலாளியும் ரவி என்னும் சூபர்வைசரும் மட்டும் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

      தமிழகத்தின் ஆக மோசமான சுற்றுச் சூழல் மாசுபட்ட நகரமான ராணிப்பேட்டையில் தொடர்ந்து இத்தகைய விபத்துகளில் தொழிலாளிகள் மரணமடைவது நிகழ்கிறது. இந்த விபத்தைப் பொருத்தமட்டில் இரு அம்சங்கள் கவனம் பெறுகின்றன 1. விதிகளை மீறி திடக் கழிகளைச் சேமிப்பதற்கான தொட்டியில் (SLF- Secured Land Facility) திரவத் தன்மையுடன் கூடிய  கொடும் விஷக் கழிவைச் சேமித்து வைத்திருந்தது 2. இதை ஒட்டி ஒரு தோல் தொழிலகம் இயங்கியதோடு விதிகளை மீறி இங்கேயே இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் தங்க வைக்கப் பட்டிருந்தது.

இது தொடர்பான உண்மைகளை அறிய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பங்கு பெற்றோர்:

1.அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO)
2. சீனிவாசன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை
3.பேரா. மு. திருமாவளவன், அரசு கல்லூரி முன்னாள் முதல்வர், சென்னை
4.வழக்குரைஞர் கி.நடராசன், உயர்நீதிமன்றம், சென்னை
5. ரமணி, ஜனநாயகத் தொழிலாளர் இயக்கம் சென்னை
6. ஒய்.ஃபையாஸ் அகமது,  மாவட்டத் தலைவர், பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, வேலூர்
7. தமிழ் நாசர், இளந்தமிழர் இயக்கம், சென்னை
8. வழக்குரைஞர் முகம்மது மசூத் , ராணிப்பேட்டை
9. மணிகண்டன், ஜனநாயகத் தொழிலாளர் இயக்கம், சென்னை

      இக்குழு சென்ற பிப் 7 அன்று ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் விபத்து நடந்த கழிவு நீர்ச் சுத்திகரிப்புக்கான பொது நிலையம் (Common Effluent Treatment Plant-CETP), தொழிலாளிகள் கொல்லப்பட்ட ஆர்கே லெதர்ஸ் தொழிலகம், கண்ணமங்கலத்தில் உள்ள இறந்துபோன சம்பத்தின் வீடு ஆகிய இடங்களுக்குச் சென்று தொடர்புடையவர்களை நேரில் சந்தித்தது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் பலருடனும் தொடர்பு கொண்டு பேசியது.

    குழுவினர் சந்தித்தோர்:

1.ஆர்கே லெதர்ஸ் மெக்கானிக் ஆர்.தயாளன், சூபர்வைசர் துர்கா பிரசாத், நிதி அதிகாரி சிரீராம் (சென்னை), 
2. சிபி.சி.ஐ.டி துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், 
3. இறந்து போன சம்பத்தின் மனைவி கீதா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் 
4. விபத்தை ஒட்டி உடனடி நடவடிக்கை கோரிச் சாலை மறியல் போராட்டம் நடத்திய த.மு.மு.க வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.முகம்மது ஹஸன், 
5. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ஜே.முகம்மது ஆசாத்.

      கீழ்க்கண்ட அரசு அதிகாரிகளைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். 1. வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் ஐ.ஏ.எஸ், 2. தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் காமராஜ் 3. சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி உதயசங்கர் 4.தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் துணை இயக்குநர் சுந்தர பிரபு, 5. வேலூர் பகுதி தொழிலாளர் துறை துணை ஆணையர் ஜெயபாலன் 6. தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் இணை இயக்குநர் சசிகலா 7. வேலூரில் உள்ள தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் இணை இயக்குநர் பூங்கொடி பொறியாளர் காமராஜும் இணை இயக்குநர் பூங்கொடியும் பேச மறுத்துவிட்டனர்.

பின்னணி

   தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் கடும் பிசுபிசுப்பு மிக்க கழிவுப் பொருள் குரோமிக் அமிலம் உட்படபல கொடும் விஷங்களைக் கொண்டது. இதன் 1.விஷத் தன்மையை நீக்கி, 2.அதன் திரவத் தன்மையையும் முற்றிலுமாக நீக்கி (Zero Liquid Discharge), 3.அதிக விஷத் தன்மையற்ற உலர்ந்த திடக்கழிவுகளாக மாற்றி புவி நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்தில் உள்ள கான்க்ரீட் தொட்டியில் (Secure Land Fill-SLF) சேமித்துப் பின் அதைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்ற வேண்டும். ராணிப்பேட்டையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோல் பதனீட்டுத் தொழிலகங்களில் பல தொழிலகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து "பொது கழிவுத் திருத்த நிலையங்களை" (Common Effluent Treatment Plant - CETP) அமைத்துத் தம் தொழிலகங்களிலிருந்து வரும் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றன. ராணிப்பேட்டை சிட்கோவில் மட்டும் இது போன்ற 8 பொதுக் கழிவு நீர்த் திருத்த நிலையங்களும், இது தவிர தனியாக ஒவ்வொரு தொழிலகமும் அமைத்துக் கொண்ட 226 சுத்திகரிப்பு நிலையங்களும் (Independant Effluent Treatment Plant - IETP) உள்ளன.

   தற்போது விபத்திற்கு ஆளான இந்தப் பொதுச் சுத்திகரிப்பு நிலையத்தை "சிட்கோ  செம்மைப்படுத்தப்பட்ட தோல் கழிவுத் திருத்த தொழிலக லிமிடெட்" (SIDCO Finished Leather Effluent Treatment Company Limited) எனும் நிறுவனம் அமைத்து நிர்வகிக்கிறது. அருகருகாக உள்ள 89 தோல் பதனீட்டுத் தொழிலகங்கள் சேர்ந்து இதை அமைத்துள்ளன. தற்போது செயலிழந்துள்ள 9 தொழிலகங்கள் தவிர மீதமுள்ள 80 தொழிலகங்கள் தம் கழிவுகளை இதற்கு அனுப்புகின்றன. 1995ல் உருவாக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலைய நிர்வாகப் பொதுக்குழுவில் ஒவ்வொரு தோல் பதனீட்டுத் தொழிலகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி இருப்பர். இவர்கள் 9 நிர்வாக இயக்குனர்களைத் தேர்வு செய்வர். இந்தப் பதவிகளை அடைவதில் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தொழிலகமும் அனுப்பும் கழிவுகள் மீட்டர் கருவி ஒன்றால் அளக்ககப்பட்டு லிட்டருக்கு இவ்வளவு என அதற்குக் கூலி பெறப்படுகிறது. இவ்வாறு வந்தடையும் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அப்படியே காயவிட்டு அகற்றினால் இந்தச் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவு அப்படியே நிர்வாகத்தின் கைக்குப் போய்விடும். அதனால்தான் இந்தப் பதவிக்கு இத்தனை போட்டி. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிர்வாக இயக்குனர் அமிர்தகடேசன் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நபர்.

   இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கான வடிவமைப்பு முதலிய தொழில்நுட்பங்களை அமைத்துத் தருவது 'செம்காட்' எனப்படும் "தோல் பதனிடுவோரின் சென்னை சுற்றுச் சூழல் நிர்வாக நிறுவனம்" (Chennai Environmental Management Company of Tannes -CEMCOT). இந்த நிறுவனமும் தோல் பதனிடும் தொழிலகங்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. தற்போது உரிய வலுவுடன் கட்டப்படாமல் உடைந்து "ஒரு சுனாமி போல" உள்ளிருக்கும் பிசுபிசுப்பான விஷக் கழிவுப் பொருட்கள் வெளிவந்து 10 தொழிலாளிகளைத் தழுவிக் கொன்ற இந்த சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைத்ததும் இந்த நிறுவனமே.

   2008ம் ஆண்டில், 6 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இணைந்து இந்த CEMCOT நிறுவனத்தை ‘இலாப நோக்கற்ற நிறுவனம்” என 1956ம் ஆண்டு கபெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து தொடங்கின, சுத்திகரிப்பு தொடர்பான முழு நீர் வடிகட்டி (ZLD) முதலான அமைப்புகளை வடிவமைப்பது, செயல்படுத்துவாது, (maintenance) ஆகியவற்றை இந்நிறுவனமே செய்கிறது. தற்போது விபத்துக்குள்ளாகிய பொது சுத்திகரிப்பு நிலையம் உட்பட 7 நிலையங்களை இது நிர்வகிக்கிறது. 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு (Board of Directors) இதை நிர்வகிக்கிறது, இதன் தலைவர் எம்.எம் ஹாஷிம் ஒரு மிகப்பெரிய தோல் தொழிலதிபர். உறுப்பினர்களில் ஏழு பேர் இந்த ஏழு பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தலைவர்கள். மீதமுள்ளோர் ஓய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள உயர் அதிகாரிகள்.  

   200 கோடி ரூபாய் திட்டத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தில் 35 சதச் செலவினத்தை மட்டுமே இச் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்கின்றன. 15 சதச் செலவை தமிழக அரசு ஏற்கிறது. மீதமுள்ள 50 சதச் செலவு இதற்கென ஒதுக்கப்பட்ட திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போது விபத்திற்குள்ளான பொது சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டிற்கென ஒதுக்கப்படுள்ள தொகை 29 கோடி ரூபாய். இதை  அமைத்து நிர்வகிப்புதற்கு மும்பையிலுள்ள Hydroair TectonicsPCD Ltd எனும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

   ஆக சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைப்பது, செயல்படுத்துபவது எல்லாவற்றிலும் தோல் பதனிடும் தொழிலகங்களின் உரிமையாளர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். திருடன் கையில் சாவியைக் கொடுப்பது என்பார்களே அதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இவர்களின் நோக்கம் "சுத்திகரிப்பின்" பெயரிலும் உச்சபட்சமான லாபம் சம்பாதிப்பதே. பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பது என்பதெல்லாம் இவர்களுக்குப் பொருட்டல்ல.

     இவற்றை மேற்பார்வையிட்டுக் கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (TNPCB) உள்ளூர் அதிகாரிகள் யாரை அவர்கள் கண்காணிக்க வேண்டுமோ அவர்களோடு நெருக்கமாக இருந்து அவர்களது விதி மீறல்கள் அனைத்தையும் அனுமதித்து வந்துள்ளனர்.

   தற்போது இடிந்து விழுந்து பத்து தொழிலாளரின் இறப்பிற்குக் காரணமான இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு SLF கான்க்ரீட் தொட்டிகள் உள்ளன. ஒரு தொட்டி நிறந்த பிறகு அதைச் சுற்றி உரிய தரமற்ற கான்க்ரீட் சுவர்களை எழுப்பி இரண்டாவது தொட்டியை உருவாக்கியுள்ளது சுத்திகரிப்பு நிலைய (CEPT) நிர்வாகம், இது அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக இப்போது மாசு கட்டுப்பாட்டு நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது. உரிய வலுவுடன் கட்டப்பட்டிருந்தாலும் கூட இந்த தொட்டிகள் திரவங்கள் நீக்கப்பட்டுத் திட வடிவம் அடைந்த கழிவுகளை மட்டுமே தாங்க வல்லன. அதற்குள் கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுத்திகரிக்கப்படாத பிசுபிசுப்பு மிக்க திரவ வடிவிலான கழிவுகளை சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் நிரப்பி வைத்துள்ளது. தற்போது விபத்திற்குப் பின் 800 டன் கழிவுப் பொருள் உள்ளே இருந்ததாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டாலும் இதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கழிவுகள் உள்ளே தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

   இந்த திரவக் கழிவுகளின் அழுத்தம் தாங்க இயலாததால்தான் இடையிடையே கான்க்ரீட் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்ட அந்த இரண்டாம் தொட்டி ஜனவரி 31 இரவு 1 மணி அளவில் உடைந்து விழுந்து 10 தொழிலாளர்கள் சாவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

விபத்துக்குப் பின்

    பல மணி நேரம் போராடிக் காலையில்தான் உயிருடன் சமாதியான இந்தப் 10 தொழிலாளர்களின் உடலையும் தீயணைப்புப் படையினரும் அரக்கோணத்திலுள்ள Natioanal Disaster Responsive Fprces ம் வெளியே எடுத்துள்ளனர். இப்போது மே.வங்கத்தைச் சேர்ந்த 9 தொழிலாளிகளின் உடல்களும் மே.வங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பத்தின் உடல் அவரது கிராமத்திற்கு அனுப்பபபட்டது. தமிழக அரசு இறந்த ஒவ்வொருவருக்கும் 3 இலட்ச ரூபாயும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் ஏழரை இலட்ச ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இது தவிர இறந்து போன மே.வங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் அம்மாநில அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னகக் கிளையின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச் சூழல் பொறியாளட் என்.சுந்தரபாபு தலைமையில் அவ் வாரியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விபத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் குழு, உடைந்த இரண்டாவது SLF தொட்டி அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய எஸ். சார்லஸ் ரோட்ரிக்ஸ், பி.காமராஜ், எம்.முரளீதரன் என்கிற மூன்று சுற்றுச் சூழல் பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

     வெளி வந்த கழிவுகள் அந்தப் பகுதியையே மாசுபடுத்தி எங்கும் ஒரே துர்நாற்றம் வீசுகிறது. அவசர அவசரமாக இந்தக் கழிவுகள் நீக்கப்படுகின்றன. நாங்கள் சென்றபோதும் இந்த வேலை முற்றுப் பெறவில்லை. இவை கும்மிடிப் பூண்டியில் உள்ள தீங்கு பயக்கும் கழிவுகளைச் சேமிக்கும் பகுதிக்கு உரிய பாதுகாப்பு இல்லாத லாரிகளில் கொண்டு செல்லப்படுவதை எங்கள் குழு கண்டது.

   மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் பேரில் இன்று விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்திய 80 தோல் பதனிடும் தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சுமார் 15,000 தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர்.   

  விபத்து ஏற்பாட்டவுடன் சுத்திகரிப்பு நிலைய இயக்குனர்களில் முக்கியமானவர்கள் தலைமறைவாயினர். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி துறைக்கு மாற்றப்படும்வரை உள்ளூர் காவல் துறை அவர்கள் யாரையும் தேடிக் கைது செய்ய முயற்சிக்கவில்லை. தற்போது விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மார்றப்பட்ட பின், பிப்ரவரி 9 அன்று நிர்வாக இயக்குநர் ஆர்.அமிர்தகடேசன், தொழில்நுட்ப இயக்குநர் வி.ஜயசந்திரன், நிதி இயக்குநர் கே.சுப்பிரமணியன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.த.ச 337, 285, 304 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைது செய்யப்படுவார்களா என சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி உதயகுமாரைக் கேட்டபோது அவர்களை வரச் சொல்லியுள்ளோம். விசாரித்த பின்பே முடிவெடுக்கப்படும் என்றார்.

   இறந்து போன சம்பத்தின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் கண்ணமங்கலத்தில் சென்று சந்தித்தபோது இதுவரை ஒரு அதிகாரி கூட தங்களை வந்து பார்க்கவில்லை எனக் கூறினர். அவர்கள் இன்று சாப்பாட்டுக்கே வழி இன்றி உள்ளனர். ஒரு பெண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

   மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்தபோது மே.வங்கத்தைச் சேர்ந்த 9 பேர்களின் சரியான முகவரி  கிடைத்தபின்புதான் 10 பேர்களுக்கும் அரசு அறிவித்துள்ள இழப்பீடு அளிக்கப்படும் என்றார். இழப்பீடுகளுக்கு அப்பால் இது போன்ற விபத்துக்களைத் தடுக்கவும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் பாதுகாப்பு நோக்கிலும் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது எனக் கேட்டபோது இது தொடர்பான குழுக்களின் ஆய்வறிக்கைகள் வந்தபின்புதான் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

    தொழிலாளர்களுக்கான எந்தப் பாதுகாப்பும் இல்லாது கடும் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்துள்ள  தொழிலாளர்களின் நிலை குறித்து விசாரிப்பதற்காக வேலூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் வேலூர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அங்கிருந்த அதிகாரி ஜெயபால் தாங்கள் அமைப்பு சாரா புலம் பெயர் தொழிலாளிகள் குறித்துத்தான் பேச இயலும், தோல்பதனீட்டுத் தொழிலகங்கள் என்பன தொழிற்துறையின் கீழ்தான் வருகிறது எனச் சொன்னார்.

    இது தொடர்பான அதிகாரியான வேலூரில் உள்ள தொழில் பாதுகாப்பு மற்றும் நல இயக்ககத்தின் துணை இயக்குநர் சுந்தர பிரபுவைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தாங்கள் உள்ளூர்த் தொழிலாளிகள் மற்றும் மாநிலம் விட்டு இடம் பெயர்ந்தோர் என வேறுபடுத்தி அணுகுவதில்லை என்றார், எல்லோரையும் நாங்கள் படிவம் 25ல் பதிவு செய்கிறோம் என்றார். அவர்கள் எப்போது வேலைக்கு சேர்கிறார்களோ அப்போது அந்தப் பதிவு செய்யப்படும் என்றார். தற்போது இறந்தவர்களில் ஒரு சிலர் ஜனவரியில் பணியில் சேர்ந்ததாகவும் இன்னும் சிலர் விபத்துக்கு முதல்நாள்தான் வேலக்குச் சேர்ந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த த.மு.மு.க பொறுப்பாளர்  ஹசன் அங்கு இந்தப் பத்து பேர்கள் தவிர இன்னும் பல புலம் பெயர் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர் எனவும் இறந்த இவர்களும் பல நாட்களாகவே வேலை செய்து வருகின்றனர் எனவும் கூறினார்.

     தொழிலாளர் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரிகளும் உரிய முறையில் இந்தத் தொழிலகங்களில் வேலை செய்கிறவர்கள் பதிவு செய்யப்படுகின்றனவா, இங்கு வேலை செய்பவர்கள் கட்டாயமாகவோ, வேறு வழியின்றியோ வாழத் தகுதியற்ற இந்தத் தொழிற்சாலைகளிலேயே விதிகளை மீறித் தங்க வைக்கப்படுகின்றனரா என்றெல்லாம் எந்த ஆய்வுகளையும் செய்வதில்லை. எந்தப் பதிவும் இல்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் இப்படி ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளிகள் ராணிப்பேட்டைப் பகுதியில் உள்ளனர். மௌலிவாக்கம்  விபத்திற்குப் பின் இவர்கள் குறித்த ஒரு சர்வே செய்யப்படும் எனத் தொழிர்துறை அமைச்சர் பி.மோகன் தெரிவித்தார்.  1000 ம் பேர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் தற்காலிக ஆரம்ப மருத்துவமனை, 'க்ரெச்' முதலான வசதிகள் செய்யப்படும் எனவும் தமிழக அரசின் தொழிற் துறை அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

      தற்போது இந்த விபத்திற்குப் பின் இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் குறித்த ஒரு 'சர்வே' செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பதிவு செய்வது என்பதை விட்டுவிட்டு ஏன் சர்வே செய்வது என்கிற நிலையை மேற்கொள்கிறது என்பதைத் தமிழக அரசு விளக்கவில்லை. ‘யுனிசெஃப்’ உடன் இணைந்து இத்தகையப் புலம் பெயர் தொழிலாளிகளைப் பதிவு செய்வது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்றெல்லாம் 2010 ல் திட்டமிடப்பட்டது அதுவும் நிரைவேற்றப்படவில்லை.

    1979ம் ஆண்டின் “மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளிகள் சட்டத்தின் (Inter-state Migrant Worker’s Act, 1979)”படி இவர்களைப் பதிவு செய்ய வேண்டும்.  இதை அரசின் தொழிலாளர்  துறைதான் செய்யவேண்டுமே ஒழிய காவல்துறை செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் பணியாற்றுகிற சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தொழிலாளிகளில் பெரும்பாலோர் மேற்படி சட்டம் இவர்களுக்கு உறுதியளித்துள்ள பாதுகாப்புகள் எதுவுமின்றியே பணிசெய்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்சக் கூலி அளிக்கப்பட வேண்டும் என ஒரு சட்ட விதி இருந்தும் இப் புலம் பெயர் தொழிலாளிகள் சற்றும் மனிதாபிமானமற்ற சூழலில் அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். புலம்பெயர் குழந்தைத் தொழிலாளிகளுக்கும் இதே கதிதான்.

    தங்களின் சொந்தக் கிராமங்களிலிருந்து இடைத்தரகர்களால் கொண்டு வரப்படும் இவர்கள் கொத்தடிமைகளாகவே (bonded labours) நடத்தப்படுகின்றனர். சற்றும் சுகாதாரமில்லாத சிறு தகரக் கொட்டகைகளில் குடியமர்த்தப் படுகின்றனர். அல்லது விதிகளை மீறி தொழிலிடத்திலேயே தங்க வைக்கப்படுகின்ரனர்.  தொழில் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாலோ,  உறுப்புக்களை இழந்தாலோ, இவர்களுக்கு எவ்விதமான சட்டப் பாதுகாப்புகளும் கிடையாது. இவை காவல்துறையால் முறையாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படுவதுமில்லை..தற்போது சென்னை மெட்ரோ ரயில்பாதை உருவாக்கத்தில் பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளிகளும் எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல்தான் வேலை செய்கின்றனர். மௌலிவாக்கத்தில் கட்டிக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்து இறந்த 61 புலம் பெயர் தொழிலாளிகளும் அப்படித்தான் மாண்டனர். அரசு நிறுவனங்களும் ஒப்பந்தக்காரர்களும் புலம் பெயர் தொழிலளிகளுக்கான சட்ட விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை.

எமது பரிந்துரைகள்

1. நடந்து முடிந்தது வெறும் தற்செயலான விபத்தல்ல. முதலாளிகளின் லாப வேட்டையும், அதிகாரிகளின் ஊழல் வேட்கையும் இணைந்து செய்த படுகொலை. வெறும் இழப்பீடு மட்டும் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர இயலாது. நிரந்தரத் தீர்வு வேண்டும், இந்த நோக்கில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும், மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளிகளை உரிய முறையில் பதிவு செய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுக்காக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யவும் தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் அமைந்த ஒரு நீதித்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

2. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர்களின் கூற்றுப்படி சென்ற ஜனவரி 9ம் தேதியே இத்தகைய இரண்டாவது SLF  தொட்டி இங்கு இயங்குவது குறித்தும், அதில் திரவக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளதும் தெரிந்துள்ளது. அப்போதே உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும். எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு நிறுவனத் தலைவர் ஸ்கந்தனும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றி தற்போது தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ள மூன்று சுற்றுச் சூழல் பொறியாளர்களும் இந்தக் குற்றச் செயலில் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்.

3. விபத்துக்குள்ளான பொது சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள ‘செம்காட்’ நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்தக்காரரான மும்பையைச் சேர்ந்த Hydroair Tectonics PCD Ltd உரிமையாளர்கள் ஆகியோரும் சி.பி.சிஐ.டி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கஐது செய்யப்பட வேண்டும். விபத்துக்குள்ளான பொது சுத்திகரிப்பு நிலையத்தின் மேம்பாட்டிற்காக 29 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. இதில் 65 சதம் மக்கள் வரிப்பணம் என்பது குறிப்பிடத் தக்கது.

4. விதிகளை மீறி இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் இந்தத் தொட்டிக்கு அருகில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாலேயே அவர்கள் இன்று சாக நேர்ந்துள்ளது. உரிய முறையில் இவற்றைக் கண்காணிக்காத வேலூர் பகுதி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலத் துறை துணை இயக்குனரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குறித்த படிவம் 25 இறந்த பின்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அது குறித்தும் புலனாய்வு செய்ய வேண்டும்.

5. சம்பத்தின் வீட்டாரை உடனடியாக அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று பார்ப்பார்கள் என அரசுத்  தரப்பில் சொல்லப்பட்டும் நேற்று வரை யாரும் பார்க்கவில்லை. மாவட்ட அட்சியரிடம் இது குறித்து நாங்கள் பேசிய பின்னும் எதுவும் நடக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு அறிவிக்கப்பட்ட இழப்பீடுகளை அந்தக் குடும்பத்திற்கு உடனடியாக அரசு வழங்க வேண்டும். சம்பத்தின் மனைவிக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். மூன்று குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.

6. விபத்து நடந்தவுடன் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் இறந்த ஒவ்வொருவருக்கும் 7..5 லட்ச ரூ இழப்பீடு அளிப்பதாக வாக்களித்தது. இப்போது தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் பகுதிக் கிளை இறந்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் 2.5 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இது தற்காலிக நிவாரணமாகக் கருதப்பட்டு இத்துடன் நிர்வாகம் முன்பு வாக்களித்த தொகையையும் இறந்தவர்களுக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. பொதுக் கழிவு நீர்த் தொட்டி சுத்திகரிப்பு நிலையம், இவற்றை வடிவமைக்கும் நிறுவனம் ஆகியவற்றை தோல் பதனீட்டுத் தொழில் முதலாளிகளின் கையில் அளிக்காமல் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.

8. தமிழகமெங்கும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநிலம் விட்டு இடம் பெய்ர்ந்து தொழில் செய்யும் தொழிலாளிகளை தொழிலாளர் நலத் துறை உடனடியாகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்குக் குறைந்த பட்சக் கூலி,  தொழிலிடப் பாதுகாப்பு முதலியன் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இடைத் தரகர், ஒப்பந்தக்காரர்களின் சுரண்டல்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. தற்போது விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்திய 80 தோல் பதனீட்டுத் தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளதால் 15,000 பேர் வேலை இழந்துள்ளனர். மீண்டும் இந்தத் தொழிலகங்கள் திறக்கப்பட்டு விதி மீறல்கள் ஏதும் இன்றி செயல்படுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் . அதுவரை வேலை இழந்த தொழிலாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்பு: 

அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 600020.
செல்: 9444120582.

நன்றி: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக