செவ்வாய், மார்ச் 31, 2015

பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!



பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!
                                  
                                     -  மு.சிவகுருநாதன்

கண்டன ஆர்பாட்ட துண்டுப் பிரசுரம்


     ஒவ்வோராண்டும் பள்ளி பொதுத்தேர்வுகள் நேரத்தில் பல்வேறு புதிய ‘காப்பியடித்தல்’ உத்திகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாண்டு வாட்ஸ் ஆப், அவ்வளவே! கல்வி முற்றிலும் தனியார் மயமானதின் விளைவுகளில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளும் சாரய வியாபாரிகளும் இன்று கல்விக் கடவுளாக புது அவதாரம் எடுத்திருக்கும் பின்னணியில் இன்று அரசும் அதிகார வர்க்கமும் இணைந்துள்ளது. 

   இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? நாம் பலமுறை வலியுறுத்தி வருவதைப் போல பொதுத்தேர்வுகளை ஒழித்துக்கட்டுவதுதான் சரியாக இருக்கும். இது மிக எளிதாகச் செய்யக்கூடிய ஓர் செயல். ஓர் சாதாரண அரசாணை மூலமே செயல்படுத்திவிடக் கூடிய இச்செயலுக்கு ஏன் யாரும் துணியவில்லை? இதன் பின்னணியும் கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்கிற அரசியல்வாதிகளின் வியாபார நோக்கமே காரணமாக இருக்கமுடியும். இது ஒன்றும் நாடாளுமன்றத்தால் கொண்டு வரவேண்டிய அரசியல் சட்டத்திருத்தமல்ல. கல்விக்கூடங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க இன்று அரசு தயாரா? என்று கேட்கலாம். இல்லையென்றால் இதையாவது செய்யுங்கள்.

   ஆனால் இதற்காக குரல் கொடுக்கவேண்டிய ஆசிரிய சமூகம் மிகவும் தேங்கிப்போகியிருப்பதுதான் இங்கு பேரவலமாக உள்ளது. 100 விழுக்காடு தேர்ச்சி அளிப்பதற்கு மாணவர்களைத் தண்டிக்கும், கண்டிக்கும் உரிமைகளைக் கேட்டுப் போராடிய ஆசிரியர்கள், இன்று தேர்வறையில் மாணவர்கள் காப்பியடிப்பதற்கு ஆசிரியர்களைப் பொறுப்பாக்கித் தண்டிப்பதை எதிர்த்து நாளை (01.04.2015) மாவட்டத் தலைமையிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு செய்துள்ளனர். இதைப் பற்றி நாம் பலமுறை எழுதியாகிவிட்டது.

  இப்பிரச்சினையின் ஆணிவேரை மறைத்து அல்லது மறந்துவிட்டு தொடர்புடைய அனைவரும் இவ்வாறு நிழல்யுத்தம் நடத்துவது ஏனென்று புரியவில்லை. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் கடைபிடிக்கப்படுகிற மதிப்பீட்டு முறையை சற்று மேம்படுத்தி 10, 11 மற்றும் 12 வகுப்புக்களுக்கும் அமல் செய்வதால் என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது? தேர்வுகள் எளிமையாக குழந்தைகளை வதை செய்யாமல் இருந்துவிட்டுப் போகட்டுமே! 18 வயது வரையிலும் குழந்தைதானே! நமது சட்டங்களும் அதைதான் சொல்லுகின்றன. உலக அரங்கில் இந்தியா இன்னும் மனித – குழந்தை உரிமைகளை மதிக்காத தேசமாக இருக்கிறது என்ற அவப்பெயராவது இதன்மூலம் நீங்கினால் நல்லதுதானே!

  இறுதியாக ஒன்று. குழந்தைகள் மட்டும் அளவிற்கு அதிகமான பாடநூற்களைப் படிக்கவேண்டும் என சமூகம், பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைத்துத் தரப்பும் விரும்புகிறது. பாடநூல்களைத் தாண்டி படிப்பதையும் தாங்களும் படிக்கவேண்டுமென்பதையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா? மேலும் அதிகம் வாசிப்பு உள்ளவன் ‘மெண்டலாகி’ விடுவான் என்கிற கற்பிதத்தையல்லவா இச்சமூகம் உற்பத்தி செய்து வைத்துள்ளது! இனி உண்மையில் பாடம் கற்க வேண்டியவர்கள் மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான்.

குறிப்பு:

 இதே கருத்தைத் தெரிவித்து நான் தொடர்ந்து எழுதுவருவதன் ஓர் பகுதிதான் இது. விளக்கத்திற்கு முந்தைய கட்டுரைகளைப் படிக்க கீழே இணைப்புகள் தந்துள்ளேன். 


தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

http://musivagurunathan.blogspot.in/2012/04/blog-post_9893.html

 ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_22.html

 ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும்  போராடுங்கள்!

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக