திங்கள், பிப்ரவரி 01, 2016

ஆசிரியர்கள் சமூகத்திற்கு மனம் திறந்த மடல்



ஆசிரியர்கள் சமூகத்திற்கு மனம் திறந்த மடல்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் (ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 01)  மறியல் போராட்டம் நடத்தியிருக்கும் அனைத்து ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஓர் மனம் திறந்த மடல்.

திருவாரூர்
பிப்ரவரி 01, 2016


 அன்பிற்கினிய ஆசிரியர் தோழர்களே! 

                                     வணக்கம். 

         இப்போதாவது போராட முன்வந்து போர்க்குணத்தைப் புதுப்பிக்க வந்ததற்கு வாழ்த்துகளையும் போராட்ட வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தின் வெற்றி – தோல்வி, உங்களது கோரிக்கைகளின் நியாயம் – அநியாயம் பற்றியெல்லாம் விவாதிக்கும் முன்பாக இவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டுகிறேன். 


உங்களது குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிப்பதில்லை. மேலும் தமிழ் வழியிலும் உங்கள்  குழந்தைகளை நீங்கள் சேர்ப்பதில்லை.

கல்வி, மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் ஆகியன பாதிக்கும் எந்தப் பிரச்சினையிலும் ஆசிரியர்கள் குரல் கொடுப்பதில்லை.
அரசின் தடையை மீறி தனிப்பயிற்சி நடத்துகிறோம். வணிகமும் செய்கிறோம்.

பணியில் இருக்கும்போதும்  ஓய்வு பெற்ற பிறகும் தனியார் சுயநிதிப்பள்ளிகள் நடத்துகிறோம் அல்லது பங்குதாரராக இருக்கிறோம். 

9, 11  ஆம் வகுப்புகளின் பாடங்களைத் தாண்ட குறுக்குவழியைக் கண்டறிந்தும் அம்முறைகேட்டை கண்டும் காணாமல் இருக்கிறோம்.

10, 11, 12  ஆகிய வகுப்புகளுக்கு பருவமுறையில் தேர்வு நடத்த நாம் ஏன் கோரவில்லை?

11, 12 வகுப்புகளில் ஏன் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை? இது குறித்து குரல் கொடுத்ததுண்டா?

மொழிப்பாடங்களுக்கு ஏன் இரண்டு தாள்கள்? இதை  ஏன் நம் கோரிக்கையாக இல்லை?

மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை வணிகமயமாகும் கல்வி குறித்த நமது பார்வை என்ன?  இது பற்றி போராட வேண்டிய  அவசியமில்லையா?

உயர்கல்வியை வணிகமாக்கும் காட்ஸ் (GATS) ஒப்பந்தம் பற்றி நாம் பேசாமல் வேறு யார் பேசுவது?

ஆசியர்களின் உரிமையை மட்டும் பேசி மாணவர்கள் உரிமையை நசுக்குவது சரியா?

உங்களுக்கு ஏன் இத்தனை சங்கங்கள்? இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆகிய மூன்று நிலைகளுக்கு நூற்றுக்கணக்கான சங்கங்கள் இருக்கின்றன. 

ஒருவரே பல சங்கங்களிலும் உறுப்பினராக அனுமதிப்பது ஏன்? ஒவ்வொரு சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கையும் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிகையும் சாதி சங்கங்கள் அளிக்கும் கணக்குகள் போலல்லவா இருக்கிறது. 

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பாதிப் பேர் பணியாற்ற ஒருசிலர் மட்டும் வேலைநிறுத்தம் செய்வது ஏன்? அவர்களுக்கு இந்த கோரிக்கைகளில் முரண்பாடு இருக்கிறதா?

ஆசிரியர்களின் பணி அறம் குறித்து சங்கங்கள்  பேச வேண்டாமா? 

ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய மு.கருணாநிதி முதல்வராக இருக்கும்போது போராட விடாமல் தடுத்தது எது?

உங்கள் தலைவர்களின்  சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளுக்காக உங்களை அடமானம் வைக்க இசைந்தீர்கள். 

போராட்டம் நடத்துவதற்கு முன்பு முதல்வர் பதவியில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?

ஜெ.ஜெயலலிதாவின் 2011 தேர்தல் வாக்குறுதியை கேட்டுப்பெற 2015 வரை காத்திருக்க வேண்டுமா என்ன?

அரசு எந்திரத்தின் மீதி இவ்வளவு பயம் அவசியமா? 

இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் தேதி அறிவிக்கும்போது பெரிய போராட்டங்களை நடத்துவது ஏன்?

யாரைத் திருப்திப்படுத்த இந்தப் போராட்டம்? தேர்தலில் யாருக்கும் ஆதரவு நிலைப்பாடு எடுப்பது ஆசிரியர் சமூகத்திற்கு அழகா?


அருகாமைப் பள்ளிகளை ஏன் நீங்கள் வலியுறுத்துவதில்லை?

      இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் அதிகம் சினம் கொள்வீர்கள். எனவே இத்துடன் நிறுத்திக் கொள்வோம். சமூகத்தை, கல்வியை, மாணவர்களை புறந்தள்ளிவிட்டு நீங்கள் வைக்கும் எந்தக் கோரிக்கையும் நியாயமற்றதே.  முடிந்தால் மீண்டும் ஓர்முறை உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி.

இப்படிக்கு

இவ்வளவு வருத்தங்களுடன் கும்பல் கலாச்சாரத்தில் மூன்று நாள்கள் மறியலில் பங்குபெற்ற உங்களில் ஒருவன்…

மு.சிவகுருநாதன்
திருவாரூர்


தங்களின் மேலான பார்வைக்கு சில இணைப்புகளைக் கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள்.


தமிழக பள்ளிக்கல்விப் பிரச்சினைகள் குறித்து சில கருத்துகள் 

ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…



 
ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும்  போராடுங்கள்!

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html

ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு

9 மற்றும் 11 ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும் - அறிக்கை

 


இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்
திருவாரூர் 


பன்மை


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக