வெள்ளி, ஏப்ரல் 28, 2017

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்


பொ. இரத்தினம், வழக்கறிஞர்,

நிறுவனர்,
சமத்துவ மக்கள் படை.


தொடர்புக்கு: 

94434 58118
7010281861


        ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜின் பேச்சைக் கண்டித்து, அவர் நடித்து ஏப்ரல் 28 –ல் வெளியாகும் பாகுபலி 2 படத்தைத் திரையிட கன்னட சலுவாளி கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடி, எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து கன்னட மக்களிடம் நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்து ஏப்ரல் 21 –ல் அறிக்கை வெளியிட்டார்.

     நாட்டைக் கெடுக்க நிறைய அரசியல்வாதிகள் இருக்கும்போது நடிகர்கள் வேறு கிளம்பியுள்ளனர். ‘மானமிகு’ என்கிற அடைமொழிக்குள் மானங்கெட்ட பிழைப்பு நடத்துவது ஏன்?  எப்படி வேண்டுமானாலும் நடித்து வியாபாரம் செய்துவிட்டுப் போங்கள். கொள்கை அது, இது என்று ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? பெரியாரை அவமானப்படுத்துவதே இவர்களைப் போன்றவர்கள்தான். உங்களுடைய வணிகத்தில் முற்போக்கு, பகுத்தறிவு ஆகியவற்றுக்கு இடமேது?  பெரியாராக நடித்துவிட்டால் பெரியாராக மாறிவிடமுடியாது. குஷ்புகூட மிக நன்றாக நடித்துள்ளார். 

    வட்டாள் நாகராஜின் பூர்வீகம் தெலுங்கு என்று சொல்லப்படுகிறது. அவர் கர்நாடக மக்களில் ஒரு சிலரை வன்முறையாளர்களாக மாற்றி, வெறியூட்டி வைத்துள்ளார். கன்னட மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கன்னட சமூகமே இவ்வ்வாறு இருப்பதாக எண்ணுவது தவறு. தமிழ்ச் சமூகத்திலும் சில கிரிமினலகள் மக்களை வெறியூட்டுவதுபோல அங்கும் நடக்கிறது. சில கிரிமினல்களின் பித்தலாட்ட,  அரசியல், பிழைப்புவாத நடவடிக்கை என்பதில் அய்யமில்லை.

   பெரியார் கூட கன்னடர் தானே! கர்நாடக மக்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்களே என்றா கேட்டார்கள்? சத்யராஜின் உதவியாளர் சேகர் ஒரு கன்னடக்காரர். இளைஞர்களை முட்டாள்களாக வைத்திருக்க விரும்புவது சினிமாக்காரர்களின் விருப்பம். எவனோ எழுதிக் கொடுத்த வசனத்தைக் கொண்டு இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. இவர்களை விட நூறு மடங்கு திறமையாக எழுதக்கூடியவர்களும் இந்த நாட்டில் உண்டு. காவிரி நடுவர் தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் ரசிகர் நடத்திய போராட்டம் இனவெறியைத் தூண்டியது. பின்பு நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவமும் நடந்தது. கன்னடத் திரையுலகமும் இம்மாதிரியான வெறித்தனங்களை உண்டு பண்ணுகிறது.

     சாமானிய கன்னட, தமிழ் மக்கள்  இம்மாதிரியான வெறித்தனத்திற்கும் பித்தலாட்டத்திற்கும் ஆட்படாதவர்கள். எனவே சினிமாக்காரர்கள் தங்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டு இருப்பது நல்லது. இவர்களது சேட்டைகள் மூலம் சமூகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்த சூதாடிக் கும்பல்களால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. ரஜினிகாந்த் போன்றவர்கள் தங்களது மாநில மக்களுக்கு தமிழகத்தைவிட அதிக அளவிற்கு நிதியுதவி செய்கின்றனர்.

     மன்னிப்பு கேட்டால் நீங்கள் செய்கிற காரியத்தில், கொள்கையில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்களில் சத்யராஜூம் ஒருவர். மன்னிப்பு கேட்டால் நீ செய்கிற செயலே தப்பு என்றுதானே பொருள்?  பெரியார் மன்னிப்பும் கேட்டதில்லை; ஒரு கத்தரிக்காயும் கேட்டதில்லை. படத்தை வெளியிட எதிர்ப்பும் வருகிறது என்று சொன்னால், அப்போது மட்டும் தமிழனாக இல்லாமல் வியாபாரியாக மாறிவிடுகின்றனர். எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்பது வணிக உத்தியே. இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளில் இப்பகுதியை வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து வெளியிடலாமே! தன்மானத்தை இழந்த வியாபாரிக்கு பெரியார் முகமூடி எதற்கு?
   
    “ஈழத்தமிழ் விதவையைத்தான் திருமணம் செய்துகொள்வேன்”, என்று சூளுரைத்த சீமான் என்னும் நடிகர், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களும் ஏமாளிகள் என்பதை இவர்கள் தெளிவாக உணந்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களின் பணத்திற்கான இங்கே பல்வேறு கும்பல்கள் களமாடுகின்றன. தமிழ் தேசியப் போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லை. இதில் சினிமாவிற்கும் பெரும்பங்கு இருக்கிறது. 

       இறுதியாக ஒரு செய்தி:

   பெரியார்  படத்தில் நடித்ததற்காக நடிகர் சத்யராஜூக்கு பெரியார் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை மு.கருணாநிதி மூலம் கி.வீரமணி வழங்கினார். இதனை எதிர்த்து தனது இறுதிக்காலம் வரை பெரியாரிஸ்ட்டாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் வாழ்ந்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10, 2016 –ல் மறைந்த ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) தனது ‘மடலுரையாடல்’ நூலில் (ஜனவரி 2008) பின்வருமாறு எழுதுகிறார். 

    “வீரமணியார் விற்ற பெரியார் பச்சைக்கல் மோதிரத்தைத் திருப்பிப் பெற்று அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும். கருணாநிதியார் அதனை வலியுறுத்தி வீரமணியைச் செய்யவைக்கவேண்டும். தவறினால் அல்லது மறுத்தால் கருணாநிதியே அம்மோதிரத்தை மீட்டு அரசுக் காப்பகத்தில் வைத்துப் பாதுகாக்கவேண்டும். இருவருமே அதைச் செய்யவில்லை என்றாலும், நடிகர் சத்யராஜ், அதனை வலியச் சென்று தனக்கு அணிவித்த கருணாநிதியாரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். வாங்க மறுத்தால் அரசு வங்கியில் பெரியார் பெயரில் டெபாசிட் செய்து தனி லாக்கரில் வைத்திட வேண்டும். இவை இன உணர்வாளர்களின் விருப்பம் – இனப் போராளிகளின் விருப்பம் – பெரியாரியல்வாதிகளின் விருப்பம்”. (மடலுரையாடல் – தமிழர் தன்மானப் பேரவை வெளியீடு, ஜனவரி 2008)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக