திங்கள், ஏப்ரல் 24, 2017

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை

 உண்மை அறியும் குழு அறிக்கை

 

மதுரை,
ஏப்ரல் 22, 2017




   இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் கடந்த பத்து நாட்களாகப் பரபரப்பான செய்தியாக உள்ளது. கோவிந்தனின் குடும்பத்தார் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில் அவரது உடல் தற்போது இராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பான பிரச்சினையாக உள்ளதோடு இது ஒரு சாதிப் பிரச்சினையாகவும் உருப்பெறக்கூடிய நிலை உள்ளதை ஊடகங்களின் மூலம் அறிந்த நாங்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து நேற்று முழுவதும் இப்பகுதியில் பலரையும் சந்தித்தோம்.

எம் குழு உறுப்பினர்கள்:

       1.பேரா.அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு
  1. வழக்குரைஞர் ரஜினி, மதுரை,
  2. வழக்குரைஞர் ஏ.செய்யது அப்துல் காதர் (NCHRO), மதுரை,
  3. வழக்குரைஞர் எம். காஜா நஜ்முதீன் (NCHRO) , மதுரை,
      5, வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், (NCHRO), மதுரை,
  1. மு.சிவகுருநாதன், சமூக ஆர்வலர், திருவாரூர்,
  2. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை

          இக்குழுவினர் நேற்று முழுவதும் உசிலன்கோட்டை, தொண்டி, இராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இது தொடர்பாகப் பலரையும் சந்தித்துப் பேசியது. நாங்கள் சந்தித்தவர்கள்: கோவிந்தனின் மனைவி பவானி (34), அவரது மகள்கள் பாண்டியம்மாள் (19), மோனிஷா (17), தனலட்சுமி (14), சகோதரர்கள் குமார் மற்றும் கண்ணன், தந்தை பாலு, தாய் காளியம்மாள், சகோதரி ஜெயந்தி, என்கவுன்டரில் கொலை செய்தவர்களும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுமான எஸ்.ஐ .தங்கமுனியசாமி குழுவினர், இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிகண்டன். பரமக்குடி வழக்குரைஞர் சி.பசுமலை ஆகியோர் உட்படப் பலரையும் சந்தித்தனர். எமது வழக்குரைஞர்கள் அப்துல் காதர், காஜா நிஜாமுதீன் இருவரும் இராமநாதபுரம் சிறைக்குச் சென்று அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள துல்கருனை, சின்ராஜ் ஆகியோரை மனு போட்டு சந்தித்துப் பேசியபோது தங்களுக்குக் காவல்துறையினரே வக்கீலுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தாங்கள் அவர்களுடன் பேச முடியாது எனவும் கூறினர். கேணிக்கரைக் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது இப்போது பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரே அதற்கும் பொறுப்பாக உள்ளார் என்றனர். அங்கு சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இன்று காலை தொலைபேசியில் அவரிடம் பேசினோம்.




சம்பவம்: 

     கோவிந்தன் தேவேந்திரகுல வேளாளர் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் பாண்டித்துரை என்பவர் 1997 -ல் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுகிறார். இப்பகுதியில் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் சாதிப் பகை இருப்பது அனைவரும் அறிந்ததே. கோவிந்தன் சாதிப் பிரச்சினையில் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவரும் கூட. பாண்டித்துரையின் கொலைக்குக் காரணமானவர் எனக் கருதப்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 1998ல் கொல்லப்பட்டதை ஒட்டி கோவிந்தன் உட்பட 56 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இறுதியில் கோவிந்தன் விடுதலை செய்யப்பட்டார். 

       தொடர்ந்து கோவிந்தன் அப்பகுதியில் சாதி மோதல்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்பவரானார், இதை ஒட்டி அவர் மீது சில வழக்குகளும் உண்டு. சென்ர ஆண்டில் பழையனக்கோட்டையைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் சிலர் சென்ற ஆண்டு கோவிந்தன் வீட்டில் இருந்தபோது அவரைத் தாக்க வந்ததாகவும் கோவிந்தன் அவர்களை அடித்து விரட்டி இருவரைப் பிடித்து வைத்ததாகவும் இதை ஒட்டி அவர் மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவரது வீட்டார் கூறினர். காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தபோது கோவிந்தன் மீது இப்படி மூன்று வழக்குகள் உள்ளன என்றார். எனினும் அவர் மீது கொள்ளை மற்ரும் வழிப்பறி தொடர்பான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதை அவரது வீட்டாரும் பிறரும் உறுதிபடக் கூறினர்.

       சென்ற 13 ம் தேதி மாலை 6.30 மணி அளவில் சாதாரண உடையில் வந்த சிலர் கோவிந்தனை ஏதோ விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும் நாண்ட நேரம் அவர் வராததை ஒட்டி சில மணி நேரம் கழித்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது அடுத்த நாள் வருடப் பிறப்பிற்கு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இரவு பத்தரை மணிக்குப் பின் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. செல்போனை யாரும் எடுக்கவில்லை என அவரது மனைவி கூறினார். காலை 5 மணி அளவில்தான் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.



    இது ஒரு பச்சைப் படுகொலை எனக் கூறி அவரது உடலை வீட்டார்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமல் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் முன்னர் கோவிந்தனின் வீட்டுக்கு வந்த போலீசார் கோவிந்தனின் உடல் மார்ச்சுவரியில் அழுகிக் கிடப்பது சுகாதாரக் கேடு உட்படப் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது எனவும் உடனடியாக உடலை எடுத்துச் செல்லாவிடால் தாங்களே எரியூட்டி விடுவதாகவும் எச்சரித்து ஒரு அறிக்கையை ஏப்ரல் 19 அன்று வீட்டுச் சுவர்களில் ஒட்டிச் சென்றுள்ளனர். குடும்பத்தார் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவதும், அடிக்கடி போலீஸ் வாகனம் வந்து செல்வதாகவும், தாங்கள் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்படுவதாகவும் இது தங்களுக்கு அச்சத்தை ஊட்டி நிம்மதியைக் குலைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

       சி.பி.ஐ விசாரணை, மறு பிரேத பரிசோதனை ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தை அணுகியபோது அவற்றை நீதிமன்றம் மறுத்துள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதையும், வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் காரணமாகச் சொல்லியுள்ளது.

     தாங்களே கோவிந்தனின் உடலை எரித்துவிடுவதாகக் காவல்துறை அவரது வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது குறித்து கோவிந்தனின் மனைவி அடுத்த நாள் (ஏப்ரல் 21) உயர்நீதி மன்றத்தை அணுகினார். தற்போது அதற்குத் திங்கட்கிழமை வரை (ஏப் 24) தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகளிடம் அது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காவல்துறை சொல்வது: 

    தொண்டி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (எண் 111/17, தேதி ஏப்ரல் 14, 2017) இ.த.ச 279, 294(b), 332, 307, குற்ற நடவடிக்கைச் சட்டம் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     தொண்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சங்கு வகைகள், கடல் ஆமை  முதலான தடை செய்யப்பட்ட பொருள்களை விற்கும் ஒரு வணிகர் எனக் கூறப்படுகிரது. இவர் சென்ற 11ம் தேதி தனது காரில் 9 இலட்ச ரூபாய்  பணத்துடன் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கோவிந்தன் அவரைத் தாக்கி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார், இது குறித்து காசிநாதன் இரண்டு நாள் கழித்து 13-ம் தேதி இராமநாதபுரம் கேணிக்கரைக் காவல் நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார் (குற்ற எண் 291/17, பிரிவுகள் இ.த.ச 341, 395, 397,365). தனது ஓட்டுனர் தொண்டியைச் சேர்ந்த துல்கருணை என்பவர் மூலம் தான் பணம் கொண்டுவருவதை அறிந்து கோவிந்தன் இந்த வழிப்பறியைச் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

      உடனடியாக இராமநாதபுரம் உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவின்படி இராமநாதபுரம் B2 நகரக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி  கேணிக்கரை பொறுப்பு காவல் ஆய்வாளர் கணேசனுக்கு உதவியாக சௌந்தரபாண்டியன், மோகன், மாரிமுத்து மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் சுரேஷ்  பண்டியன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் ஆஜராகியதாக தங்க முனியசாமி மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் (தொண்டி 111/17) கூறுகிறார். துல்கர்னையை விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன்பங்காக கோவிந்தனால் கொடுக்கப்பட்ட ரூ 80,000 த்தை ஒப்படைத்ததாகவும். பின் ஒரு இன்டிகா காரை (TN 65 6361) வாடகைக்கு எடுத்துக் கொண்டு துல்கருனையை அழைத்துக் கொண்டு சென்றபோது கோவிந்தன் துல்கருனைக்குப் போன் செய்து சின்ராஜிடம் மேலும் 60,000 ரூ கொடுத்து அனுப்புவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு போய்விடு எனச் சொன்னாராம். 

    சற்று நேரத்தில் சின்ராஜ் அந்தப் பணத்தைக் கொண்டு வந்தாராம். தங்கமுனியசாமி குழுவினர் சின்ராஜையும் பிடித்து அழைத்துக் கொண்டு கோவிந்தனைத் தேடிச் சென்றார்களாம். தொண்டியிலிருந்து திருவாடனை நோக்கி அம்பாசடர் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த கோவிந்தனை மடக்கியபோது அவர் தன் காரால் இவர்கள் காரை மோதிவிட்டுத் தப்பி ஓடியதாகவும்,  திருவெற்றியூர் சவேரியார் நகரில் காரை நிறுத்திவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த கோவிந்தன்  முதல்நிலைக் காவலர் சவுந்தரபாண்டியனையும் தன்னையும் அரிவாளால் வெட்டியதாகவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிந்தனைத் தான் காலில் சுட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டுத் தானும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தன் இறந்ததைத் தான் பின்னரே அறிந்ததாகவும்  தங்கமுனியசாமி கூறுகிறார். ஊடகங்களில் இதுவே செய்தியாகவும் வெளி வந்துள்ளது.

     கேணிக்கரைக் காவல்நிலையத்திற்குத் தற்போது பொறுப்பில் உள்ள ஆய்வாளர் டி.ஏ.வெங்கடேசனைத் தொடர்பு கொண்டபோது, அவர் தான் இந்தப் பகுதிக்குப் புதியவர் எனவும் இங்குள்ள காவலர்களின் பின்னணி தனக்குத் தெரியாது எனவும் காசிநாதன் வழிப்பறி குறித்துப் புகார் அளித்தபோது தான் அந்தக் காவல் நிலையத்திற்குப் பொறுப்பாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் எங்களிடம் கூறியவை:

        காவல்துறைக் கண்காணிப்பாளர் என். மணிகண்டன் அவர்கள் எம் குழுவிடம் விரிவாகப் பேசினார். எங்கள் ஐயங்களை முன்வைத்தபோது தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளதால் இப்போது தான் இந்த வழக்கைப் பொருத்த மட்டில் ஒரு “மூன்றாம் நபர்” (third party) எனவும், தான் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறினார். இப்படியான ‘மோதல்’ கொலைகளில் சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் தான் உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி தற்காப்பிற்காகவே சுட்டுக் கொன்றதாகவும் நிறுவும் வரை என்கவுன்டர் செய்த காவலர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம், உச்சநீதி மன்றம் முதலியன கூறியுள்ளதையும் அவருக்குக் கவனப்படுத்திய போது அப்படி இருந்தால் அதை இப்போது பொறுப்பேற்றுள்ள சி.பி.சி.ஐ.டி தான் செய்ய வேண்டும் என்றார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடனேயே இதைச் செய்திருக்க வேண்டாமா எனக் கேட்டபோது தான் இது தொடர்பான விதிகளைப் பரிசீலிப்பதாகச் சொன்னார். சட்டவிரோதக் கடத்தல் தொழில் செய்யப்படுவதாகச் கூறப்படும் ஒரு நபர் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு புகாரைச் செய்துள்ள நிலையில் உடனடியாக மற்ற காவல் நிலையம் ஒன்றிலிருந்து காவல்துறையினரை வைத்து ஒரு சிறப்புப்படை அமைக்க வேண்டிய அவசரம் ஏன் எனக் கேட்டபோது, கடத்தல்காரர் என்பதற்காகவே அவர் கொடுத்த புகாரை விசாரிக்காமல் இருக்க முடியாது எனவும், இப்படியான சிறப்புப் படை அமைப்பது வழக்கம்தான் எனவும் அவர் கூறினார். இது ஒரு சாதி வெறுப்புகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு பகுதி என்கிறபோது இப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உளவுத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பலர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு பற்ரிக் கேட்டபோது இதில் எல்லாம் சாதியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே எற்றுக் கொண்டுள்ளபோது இப்படி நீங்கள் சொல்வது சரிதானா எனக் கேட்டபோது இது தொடர்பாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி எல்லாப் பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.

     இராமநாதபுரம் மருத்துவமனையில் ‘சி’ வார்டில் ‘சிகிச்சை’ பெற்றுவரும் தங்கமுனியசாமியையும் சௌந்தரபாண்டியனையும் பார்த்தோம். தங்கமுனியசாமி எதையும் சொல்லமுடியாது என மறுத்துவிட்டார். நீங்கள் காலில்தான் சுட்டீர்கள், பின் எப்படி அவர் இறந்தார் என்பதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில் அங்கு பொறுப்பில் இருந்த செவிலியர் ஒருவரை விசாரித்தபோது அவர் சிரித்துக் கொண்டே தற்போது  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என ஒத்துக்கொண்டார்.

எமது பார்வைகள்:

  1. சாதிமுரண்கள் மிகவும் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் இது குறித்த சிந்தனை சற்றும் இன்றிக் காவல்துறை செயல்பட்டுள்ளது. அதன் செய்ல்பாடுகள் இப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக உள்ளன. திருவாடனைச் சரகத்தில் உள்ள ஐந்து காவல்நிலையங்களிலும் உளவுத்துறையினராக (SB CID) ஆதிக்க சாதியினரே இருப்பதாகவும் குறிப்பாக திருவாடனையில் உள்ள ராஜா என்பவர் மிகவும் சாதி உணர்வுடன் செயல்படுவதாகவும் நாங்கள் சந்தித்த பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டினர். அதுவும் இதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினராக உள்ளதால் சாதி வெறுப்பு காவல் நிலையங்களில்கூடுதலாக உள்ளது என்பதையும் அவர்கள் கூறினர். என்கவுன்டர் செய்வதற்கு அனுப்பப்பட்டவர்களில் தங்கமுனியசாமியும் கமுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினரே. அவர்தான் என்கவுன்டர் செய்தவரும் கூட. அந்த டீமில் இருந்த சௌந்தரபாண்டியன் என்பவர் பட்டியல் இனத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இது வழக்கமாகக் காவல்துறை செய்வதுதான். அப்படியான ஒருவரையும் அவர்கள் டீமில் இணைப்பது இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகத்தான்.
  2.  பரமக்குடி வழக்குரைஞர் பசுமலை அவர்களைச் சந்தித்தபோது அவர் உரிய ஆதாரங்களுடன் ஒரு முக்கிய தவலைக் கூறினார். சில ஆண்டுகள் முன் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளில் (2011) ஆறு பட்டியல்சாதியினரைச் சுட்டுக் கொன்றதை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் கமிஷன் முன் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான முத்துக்குமார் என்பவரின் மனைவி பான்டீஸ்வரி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தன் கணவரைச் சுட்டுக் கொன்றது இந்த தங்கமுனியசாமி எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஒருவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைப்பொன்றில் இருந்து செயல்படுபவரும், பஞ்சாயத்துக்கள் செய்பவருமான கோவிந்தனைப் பிடிக்க அனுப்பியது என்பதைக் காவல்துறை எப்படி விளக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
  3. 2011 பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தற்போது நடந்துள்ல இந்த என்கவுன்டர் எல்லாவற்ரையும் பார்க்கும்போது காவல்துறை பட்டியல்சாதியினரைத் தொடர்ந்து காழ்ப்புடன் அணுகிவருவது உறுதியாகிறது.
  4. கோவிந்தன் மீது சாதிப் பஞ்சாயத்துகள் செய்பவர், சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற புகார்கள் இருந்தபோதும் அவர் மீது வழிப்பறி செய்ததாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
  5. இந்த என்கவுன்டருக்குத் துணை செய்த துல்கர்னை, சின்ராஜ் முதலானோருக்கு வழக்குரைஞர் முதலானோரை வைத்து எல்லா உதவிகளையும் செய்து காவல்துறை அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல ஐயங்களுக்குக் காரணமாகிறது.
  6. பணம் பறிகொடுத்ததாகச் சொல்லப்படும் காசினாதன் என்பவர் ஒரு கடத்தல்காரர். 11ம் தேதி பணத்தைப் பரிகொடுத்ததாகச் சொல்லும் இவர் ஏன் 13ம் தேதிவரை புகார் கொடுக்காமல் இருந்தார் என்பதும், புகார் கொடுத்தவுடன் உடனடியாக ஒரு சிறப்புப்படையை நியமித்து அதில் இன்னொரு காவல்நிலையத்தைச் சேர்ந்த தங்க முனியசாமியைக் குறிப்பாகச் சேர்த்ததும் தற்செயலானவை அல்ல.
  7. எந்தப் பெரிய காயங்களும் இல்லாத தங்கமுனியசாமியை மருத்துவமனையில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. காவல்துறையின் பிடிவாதத்தாலேயே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள செவிலியரும் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்றனர். காவல்துறை இந்தப் போலி என்கவுன்டருக்கு ஒரு ‘அலிபி’யை உருவாக்குவதற்காகவே இதைச் செய்கிறது. இதற்கு எந்த அறமும் இன்றி மருத்துவ நிர்வாகம் ஒத்துழைப்பது இழிவானது.
  8. என்கவுன்டர் செய்து கொன்ற தங்கமுனியசாமி முதல் தகவல் அறிக்கையில் தான் கோவிந்தனைக் கால்களிலேயே சுட்டதாகக் கூறுகிறார். காலில் சுடப்பட்டு உயிருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 42 வயதுள்ள ஆரோக்கியமான யாரும் அடுத்த சிலமணி நேரங்களில் இறப்பது என்பது சாத்தியமே இல்லை. கொவிந்தனின் உடலின் வீடியோ ஒன்றை எங்கள் குழு பரிசீலித்தபோது அவருக்கு விலா மற்றும் உடலின் மேற்பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் உற்றார் உறவினர்கள் யாரும் இன்றி காவல்துறையினர் தன்னிச்சையாக பிரேத பரிசோதனை செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இதைக் காவல்துறையும் மருத்துவத் துறையும் விளக்க வேண்டும்.

கோரிக்கைகள்:
  1. இது ஒரு போலி என்கவுன்டர் என்று எம் குழு உறுதியாகக் கருதுகிறது. இதைக் கொலைக் குற்றமாகக் கருதி தங்கமுனியசாமி உள்ளிட்ட என்கவுன்டர் கொலைக்குக் காரணமானவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
  2. கோவிந்தனின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் முன்னிலையில் மீண்டும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  3. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனடியாக அதிகாரிகளை நியமிப்பதோடு விச்சாரனையை முடிக்க காலகெடுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
  4. சாதிபார்த்தெல்லாம் காவல்துறையினரை நியமிக்கக் முடியாது எனக் கண்காணிப்பளர் சொல்வதை ஏற்க முடியாது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே ஏற்றுக்கொண்டதன் விளைவாகத்தான் இங்கே வன்கொடுமத் தடுப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் இயற்ற்றப்பட்டுள்ளன. சமூகத்தின் பன்மைத் தனமை ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை சச்சார் கமிஷன் அறிக்கை உட்படப் பல ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. சாதி முரண் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் பதவியில் உள்ள காவல்துறையினர், உளவுத்துறையினர் முதலானோரின் சமூகப் பின்னணி குறித்துக் காவல்துறை உரிய முறையில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதேபோல கோவிந்தனைப் பிடிக்க தங்கமுனியசாமி முதலானோர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்படும் சாதி உணர்வுள்ள உளவுத்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
  5. இந்தப் போலி மோதலில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் குடும்பத்துக்கு உடனடியாகப் பத்து இலட்சரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மகள்களில் ஒருவருக்கு தகுதியுள்ள அரசு வேலை ஒன்று அளிக்கப்பட வேண்டும்.
  6. பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும், மிரட்டப்படுவதையும், அடிக்கடி காவல்துறை வாகனங்களை அனுப்பி அந்தக் குடும்பத்தின் மீதே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுமாறு செய்வதையும் இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றை உடனடியாகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  7. இதுபற்றியான செய்தி வெளியீட்டில் ஊடகங்கள் சில காவல்துறையின் பொய்களை எந்த ஆய்வுகளும் இன்றி அப்படியே வெளியிடுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்தைக் கேட்டே ஒருவர் பற்றிய குற்றச்சாட்டை வெளியிட வேண்டும் என்பதே ஊடக தர்மம். இந்தியாவில் நடைபெறும் என்கவுன்டர் கொலைகளில் 90 சதம் போலியானவை என்பது ஊடகத்தினர் அறியாத ஒன்றல்ல.
  நன்றி: பேரா. அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக