வியாழன், செப்டம்பர் 10, 2020

இந்தியை நுழைக்கும் முயற்சி

 இந்தியை நுழைக்கும் முயற்சி

மு.சிவகுருநாதன்

 

    கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் ஒன்று வெளியாகியுள்ளது.

    இதில் "மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா?", என்று கேட்கப்பட்டுள்ளது.

   மூன்றாவது மொழி அதுவும் ஹிந்தி எங்கு எப்படி நுழைந்தது? கைத்தொழில் எங்கு வந்தது?

    "இது எங்களால் வழங்கப்படவில்லை முதல் வகுப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பமே இல்லை", என்று மாநகராட்சி ஆணையர் மறுக்கிறார்.

    தலைமையாசிரியர் வழங்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

    முதல் வகுப்பில் சேர விண்ணப்பம் தேவையில்லை என்றால் குழந்தைகள் பற்றிய விவரங்களை எப்படிப் பதிவு செய்வார்கள்?

    உயர்நிலை, மேனிலை வகுப்புகளுக்கு மட்டும் விண்ணப்பம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் (TC) இருக்கும். ஆனால் முதல் வகுப்பு சேர வருபவர்களுக்கு தகவல்களை எப்படிப் பெற முடியும்?

   இவ்விண்ணப்பத்தில் முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் மொழிகள் என்றும் உள்ளது.

   முதல் மொழி ஒன்றாகத்தானே இருக்க முடியும்? பிறகேன் ' மொழிகள்'?

   பெரியம்மை வடுக்கள் இருக்கின்றதா? என்று கேட்பதெல்லாம் ரொம்ப அபத்தம்.

   இப்போது பெரியம்மை முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. யாருக்கும் அந்தத் தடுப்பூசிகள் போடுவதில்லை. பிறகு அம்மைத் தழும்புகளுக்கு எங்கேப் போவது?

   விண்ணப்பம் என்பது இங்கு வணிகம். யாரோ ஒருவர் அச்சடித்து விற்பனை செய்கிறார். அதை கேள்விகள் இன்றி அனைவரும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

   பள்ளிகளில் பலகாலம் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் பதிவுத்தாளை வழங்கி வந்தனர். இப்போதுதான் அது ஒழிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் இவ்வாறு படிவங்களை புழக்கத்தில் விடுகின்றனர் கள்ள நோட்டைப் போல.

   அரசும் கல்வித்துறையும் இதைக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் உரிய படிவங்களை, தகுந்த நேரத்தில் வெளியிட்டால் இம்மாதியான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக