வியாழன், செப்டம்பர் 10, 2020

'கொரோனா' காலத்தில் கல்வி

 'கொரோனா' காலத்தில் கல்வி

மு.சிவகுருநாதன்

   'கொரோனா'விலிருந்து மீண்டாலும் அதன் தாக்கங்களிலிருந்து மீள்வது நெடுங்காலம் பிடிக்கும். இதன் தாக்கம் எல்லாத்துறைகளைப் போன்று கல்வியிலும் எதிரொலிக்கவேச் செய்யும்.

  பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பதை இன்று முடிவு செய்ய முடியாத சூழல் தொடர்கிறது. இந்தக் கல்வியாண்டை நிறுத்திவைக்கும் (zero academic year) முடிவை எடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. அதைத் தாண்டி மாநிலங்கள் ஏதாவது செய்திடுமா என்ன?

  சில மாதங்களாவது பள்ளிகளைத் திறந்து பள்ளிகளில் ஒரே தேர்வு, கல்லூரிகளில் ஒரு செமஸ்டர் தேர்களையாவது நடத்திவிடுவது என்கிற முடிவில் இயங்குவதாகத் தெரிகிறது.

  கல்வியாண்டின் நாள்கள் குறைவதால் பாடப்பகுதிகளைக் குறைக்க வேண்டியது முதன்மையானப் பணியாகும். மத்தியக் கல்வி வாரியம் (CBSE) இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்குப் பிடிக்காத, இந்துத்துவக் கருத்தியலுடன் உடன்படாதப் பகுதிகளை நீக்கிவிட்டனர். இது மட்டுமா, இந்தக் 'கொரோனா' காலத்தில் நாம் எதிர்கொண்ட அறமற்ற செயல்கள் அதிகம்.

   தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதில் காட்டிய வேகம், அதன் பின்வாங்கலுக்குப் பின் கல்வித்துறை முட்டுச்சந்தில் நிற்பதைப் போல இருக்கிறது.

  மிகத் தாமதமாக மாணவர் சேர்க்கை, பாடநூல் வழங்கல் நடந்தேறியுள்ளது. பாடப்பகுதிகள் குறைப்பிற்கு ஒரு குழு அமைப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

  இணையக் கல்வி அறிவிப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகச் சுருங்கிப் போனது. அனைவருக்கும் இணையக் கல்விக்கான சம வாய்ப்புகள் அறவே இல்லை. தனியார் சுயநிதிப் பள்ளிகளில்கூட 100% இணையக் கல்வி சாத்தியமே இல்லை.

  இருப்பினும் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்க 'online' ஆயுதம் அவர்களுக்கு உதவுகிறது. மத்திய மாநில அரசுகள் இணையக் கல்வியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. இதற்குப் பின்னாலிருக்கும் வணிக உத்திகள் அனைவரும் அறிந்தது.

  1 முதல் 8 முடிய உள்ள வகுப்புகளுக்கு நாள்தோறும் 3 'online' வகுப்புகள் இருக்கலாம் என்றது மாநிலக் கல்வித்துறை. 5-14 வயதெல்லைகளை ஒன்றாக்கி எல்லாருக்கும் 3 வகுப்புகள் என்று அறிவித்தக் கொடுமையை என்ன சொல்வது?

  'நீட்' தற்கொலைகளைப் போன்று, 'online' தற்கொலைகளும் தொடர்கின்றன. இதெல்லாம் வெறுமனே செய்திகளாகக் கண்டு நகர்கிறது நமது சமூகம்.

  தனியார் பள்ளிகளைப் பாதுகாக்கவே மாணவர் சேர்க்கையை முடிந்த வரையில் தள்ளிப் போட்டனர். தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி அரசுப் பள்ளிகளில் கூட இடங்கள் நிரம்பிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. அங்கு கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு என்னாயிற்று என்று தெரியவில்லை.

  மாணவர்களிடம் விண்ணப்பம் பெற்று அவற்றைப் பரிசீலிக்காமல் எப்படி உடனே இடங்கள் முடிந்துவிட்டது என அரசுப்பள்ளிகளில் சொல்ல முடியும் என்பது விளங்கவில்லை.

   பாடநூல்கள் பெற்ற மாணவர்கள் குறிப்பாக 10, +1, +2 வகுப்புகளில் படிப்போர் ஏதோ ஒரு வழியில் பொதுத்தேர்விற்கு தயாராகக் கூடும். அந்த மாணவர்களுக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஏதோ தங்களால் இயன்ற வழிகளில் அவர்களது எல்லைகளுக்குட்பட்டு தேர்விற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். வேறு வழியற்ற சில மாணவர்கள் சுயமாகக் கற்கவும் வாய்ப்புள்ளது.

  இந்நிலையில் இவ்வாண்டு நீக்கப்படும் பாடப்பகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாதது வியப்பைத் தருகிறது. அவற்றை விரைவில் வெளியிடுவது நல்லது.

   அப்போதுதான் அவற்றைத் தவிர்த்து பிற பகுதிகளில் உரிய கவனம் செலுத்த முடியும். கல்வித் தொலைக்காட்சி, இணைய வகுப்பு, சுய கற்றல் என அனைவருக்கும் இது இன்றியமையாதது. மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் உடன் செய்திருக்க வேண்டிய பணியிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக