ஞாயிறு, ஜனவரி 23, 2011

‘வெண்மணி’ காலாண்டிதழ் -மு.சிவகுருநாதன்

‘வெண்மணி’ காலாண்டிதழ்    -மு.சிவகுருநாதன் 

 



          “சட்டம், அரசு,  நீதி, நிர்வாகம் என எல்லா வழிகளிலும் மறித்து நிற்கின்ற சாதிக்கும் அதன் வெளிப்பாடான தீண்டாமைக்கும் எதிரான - செங்கொடி இயக்கத்தின் துணை கொண்டு - மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளைத் தாங்கி களம் காண்பது” என்ற கொள்கைப் பிரகடனத்துடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ காலாண்டிதழ் வெண்மணிப் படுகொலையின் நினைவு நாளில் வெளியாகியிருக்கிறது.

          

            கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள், அம்பேத்கர் பட விமர்சனம் என 42 பக்கங்கள் விரியும் இவ்விதழ் அடித்தட்டு தலித் மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைவதில் மகிழ்ச்சி.   வருகின்ற இதழ்கள் இன்னும் காத்திரமான கட்டுரைகள், தகவல்கள் நிரம்பியதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.



            ‘நோக்கமும் பயணமும்’ என்ற பி. சம்பத்தின் கட்டுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.   ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களை சமூக சீர்திருத்தப் போராளிகள் பட்டியலில் சேர்ப்பது எந்த அளவிற்கு பொருந்தும் என்பது விளங்கவில்லை.



            கடந்த மூன்றாண்டுகளாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தின் 22 மாவட்டங்களில் 1845 கிராமங்களில் தீண்டாமை குறித்த ஆய்வுகள் நடத்தி 85 விதமான தீண்டாமைக் கொடுமைகளையும் 23 விதமான வன்கொடுமைகளையும் கண்டறிந்து வெளிப்படுத்தியதை பாராட்டாமல் இருக்க முடியாது.   இத்தகைய தீண்டாமை வடிவங்கள் இவ்விதழ்களில் வெளியிடப்படவேண்டும்.  இன்று தீண்டாமை மிகவும் பூடகமான முறையில் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுவது பலபேர் அறியாத ஒன்றாக இருக்கிறது.



            அண்ணல் அம்பேத்கர் குறித்த இரா. அதியமானின் கட்டுரை போன்ற  தொடக்கநிலை கட்டுரைகளைத் தவிர்த்து, விரிவான வழியில் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களை அறிமுகம் செய்வது இன்றைய இளம் தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும்.



            உத்தப்புரம் குறித்த க. சுவாமிநாதனின் கட்டுரை, அருந்ததியர் நிலை மற்றும் உள் ஒதுக்கீடு பற்றி கே. சாமுவேல்ராஜ் கட்டுரை போன்றவை சமூகத்தின் இன்றைய அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுடன் சமூகத்தின் சாதியபிமானத்தையும் வெளிப்படுத்துகிறது.



                        வன உரிமைச் சட்டம் - 2006ஐ செயல்படுத்தாமல் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பறிக்கும், கேவலமான ஆடு திருடும் தொழிலில் ஈடுபடும் அரசின் வனத்துறையின் அத்துமீறலை ‘ஆடு திருடவா அதிகாரம்?’ என்ற பெ. சண்முகத்தின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.



            வெண்மணிப் படுகொலையின் தீர்ப்பை மயிலை பாலுவின் கட்டுரை விமர்சிக்கிறது.   இந்தியாவில் 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பார் சுமார் 17 கோடி பேர் இருக்கின்றனர்.   இம்மக்களுக்காக அமல்படுத்தப்படும் துணைத் திட்டங்களினால் பட்டியலின மக்கள் நேரடியாக பலனடையும் விதமாகவும், பிற பிரிவு மக்களுடன் சமத்துவமாக்கும் விதமாகவும் இல்லை என்பதை  த. நீதிராஜனின் கட்டுரை புள்ளி விவரங்களுடன் அளிக்கிறது.



            அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் பற்றிய சைதை ஜெ-வின்  திரை விமர்சனக் கட்டுரை அத்திரைப்படத்தின் நல்ல அம்சங்களை எடுத்துரைக்கிறது.  அம்பேத்கர் மூலம் இந்திய வரலாற்றின் மாற்றுச் சிந்தனையை படம் பார்க்கும் அனைவர் மனத்திலும் உருவாக்கும் என்பது நடந்தால் நன்றாக இருக்கும்.



            அருந்ததிய இனத்தைச் சேர்ந்த விடுதலை வீரர் ஒண்டி வீரனை மிகச் சுருக்கமாகவேனும் அறிமுகம் செய்கிறது கு. ஜக்கையனின் கட்டுரை.  ஆதவன் தீட்சண்யாவின் கவிதை நன்றாக இருக்கிறது.  சிதம்பர ரகசியங்களை அம்பலமாக்கி கடவுள் நந்தனோடு சேர்ந்து மாட்டுக்கறி உண்பதும் அவருக்கு நந்தன் அடைக்கலமளிப்பதும் மெச்சும்படியாக உள்ளது.



            இந்த இதழின் சிறப்பு அம்சமாகப்படுவது ‘பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டம் வரைவு கோரிக்கை சாசனம்’ ஆகும்.  1979இல் சிறப்பு உடன்கூறு திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு 2007 -ல் பட்டியலின மக்களுக்கான துணைத்திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்ற இத்திட்டம் செயல்படாமல் முடங்கியிருக்கும் நிலையை எடுத்துக்காட்டி இத்திட்டம் சிறப்பாக செயல்பட 10 பரிந்துரைகளையும் இச்சாசனம் செய்கிறது.



            இனிவரும் இதழ்கள் இன்னும் அதிக வீச்சான, கருத்தாழமிக்க கட்டுரை மற்றும் படைப்புகளை ‘வெண்மணி’ கொண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டாக்குகிறது இந்த இதழ்.



நன்கொடை :ரூ 10
ஆண்டு சந்தா :ரூ 40
தொடர்பு முகவரி:
வெண்மணி காலாண்டிதழ்,
c /o பாரதி புத்தகாலயம்,
421 -அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600018 .
செல்: 9443545398
           9445419748
e.mail:venmani1968@gmail.com

2 கருத்துகள்:

முல்லை அமுதன் சொன்னது…

vaazhthukkal
emakkum anuppungkal.
mullaiamuthan

இன்று... சொன்னது…

திரு.சிவகுருநாதன்,முடிந்தால் எனது கீழ்க்கண்ட பதிவை பார்வையிடவும்,வெண்மணி பற்றி எழுதியுள்ளேந்மேலோட்டமானது என்றாலும்- மிகவும் குழு அரசியல் மிகுந்துவிட்ட பதிவுலகத்திற்கு இது போதும் என நினைக்கின்றேன்.
http://rpjay.blogspot.com/2011/01/blog-post_2223.html
(தமிழ்மணத்தில் பலமுறை பதிவு செய்தும் அவர்கள் போடவில்லை,காரணம் தெரியவில்லை)

கருத்துரையிடுக