வியாழன், டிசம்பர் 01, 2016

08. கல்வி அபத்தங்கள்

08. கல்வி அபத்தங்கள்

- மு.சிவகுருநாதன் 

          கல்வி விழிப்பை உண்டாக்குவது, சிந்திக்கத் தூண்டுவது. பெரியார் சொன்னது போல் நமது சிந்தனையில் தேங்கிப்போன கசடுகளை வெளியேற்றுவதாக கல்வி அமையவேண்டும். ஆனால் கல்விமுறையே அபத்தமாகவும், சிந்தனைகளுக்கு எதிராகவும் இருந்தால் என்ன செய்வது? நாம் வழக்கமாக ஏதோ ஒன்றுக்கு பழக்கப்பட்டுள்ளோம். அதை மாற்றவோ, கேள்வி கேட்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். வருங்கால சமுதாயத்தையும் இவ்வாறு மழுங்கடிப்பதா கல்வி? சில கல்வி அபத்தங்களை பார்ப்போம்.

அபத்தம் – ஒன்று 

       “பெயரில் என்ன இருக்கிறது?”, என்றெண்ண வேண்டாம். சில நேரங்களில் பெயரே எல்லாமாகவும் இருக்கிறது. விஞ்ஞானம், பௌதீகம், ரசாயனம், மிருகவியல், சரித்திரம், பூகோளம் ஆகிய பெயர்கள் முறையே அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என்று மாறும்போது இன்னும் ஏன் ’கணக்கு’ என்று சொல்லவேண்டும்?

      Mathematics என்பதை எப்படி கணக்கு என்று சொல்வது? அதை மாற்ற வேண்டாமா? +1, +2 வகுப்புகளில் மட்டும் கணிதவியல், பத்தாம் வகுப்பு முடிய ஏன் இன்னும் கணக்கு? கணிதவியல் என்னும் அறிவியலை கணக்கு (sum) என்ற அளவில் சுருக்குவது தகுமா?

      இது மட்டுமல்ல பிரச்சினை. இந்நிலை தவறான புரிதல்களுக்கு இட்டுச்செல்கிறது? கணிதவியல் என்பது அறிவியல் அல்ல என்ற எண்ணம் பல ஆசிரியர்களுக்கே இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேனிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ள ஒரு பிரிவுக்கு ‘pure science’ என்று சொல்லும் போக்கும் இங்குண்டு. கணிதவியலைத் தவிர்த்துவிட்ட அப்பிரிவு எப்படி ‘pure science’ ஆகமுடியும்?  கணிதவியலில்  10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குச் செய்முறைத்தேர்வும் மதிப்பெண்கள் வழங்குவதும் இந்தத் தவறான பார்வையால் இல்லாமாற்போகிறது.

      இதோடு இன்னொரு அபத்தம் பாருங்கள்! இன்னொரு மொழிக்கு நாம் எப்படி பெயர் சூட்டியிருக்கிறோம் என்று? English என்பதை இங்கிலீஷ் என்றாவது எழுதிவிட்டுப் போங்கள். அது என்ன ‘ஆங்கிலம்’! ‘மெட்ராஸ்’ சென்னை ஆவது இயல்பாக நடக்கும்போது கணக்கு கணிதவியல் ஆவதும் ஆங்கிலம் இங்கிலீஷ் ஆவதும் வேண்டுந்தானே! இதிலென்ன சிக்கல் இருக்கமுடியும்? 


  அபத்தம் – இரண்டு 


        தேர்வுகள் கொசுக்கள் போல, அதை ஒழிக்க முடியாது போலும்! தேர்வுக்கான நேர நிர்ணயம் எதன் அடைப்படையில் செய்யப்படுகிறது என்பது நமது சிற்றறிவிற்கு புலப்படாத ஒன்று. பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு முடிய 60, 75, 100 (1 – 9 முடிய தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60, 10 –ம் வகுப்பு அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100) ஆகிய மதிப்பெண்களுக்கும் 11, 12 வகுப்புகளுக்கு 80, 100, 150, 200 ஆகிய மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

        பத்தாம் வகுப்பு முடிய 2.30 மணிநேரம் ஒதுக்கப்படுகிறது. 11, 12 வகுப்புகளுக்கு 3.00 மணிநேரம். அரசு பொதுத்தேர்விற்கு 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. ஒன்பது முடிய உள்ள வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு (CCE) முறையில் தொகுத்தறி (SA) மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களுக்கு 2.30 மணிநேரம் மாணவர்களை அமரவைப்பது வன்முறையில்லையா? 11, 12 வகுப்புகளில் 80, 100, 150, 200 என பல்வேறு மதிப்பெண்ணுக்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3.00 மணி நேரம் நிர்ணயிப்பதும் அபத்தமல்லவா? மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு காலமும் மாறவேண்டுமா இல்லையா?

      மொழிப்பாட இரண்டாம் தாளுக்கு 80 மதிப்பெண்கள் (20 மதிப்பெண்கள் வாய்மொழித்தேர்வு), இயற்பியல், வேதியியல் போன்ற செய்முறைத் தேர்வுடன் கூடிய பாடக் கருத்தியல் தேர்வுகளுக்கு 150 மதிப்பெண்கள், கணிதவியல், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கு 200 மதிபெண்கள் என்ற எல்லா தேர்வுகளுக்கும் ஒரே நேரம் என்பது ஏற்கத்தக்கதா? இதைப்பற்றி யாரேனும் கருத்து சொன்னதுண்டா? தேர்வு எழுதும் மாணவர்களின் கருத்துகள் கேடகப்பட்டதுண்டா? மொழிப்பாடத் திறன்கள், சிந்தனை என்று சாக்குப்போக்குச் சொல்வதெல்லாம் இன்னும் அபத்தம். அப்படி ஒன்றும் திறன்கள் வெளிப்படும் கல்விமுறையாக இது இல்லை என்பதே உண்மை.

     அபத்தம் – மூன்று

      9 - 12 வகுப்புகளுக்கு மொழிப்பாடத்திற்கு இரு தாள்கள் ஏன்? இங்கும் மொழித்திறன் என்னும் பம்மாத்து இருக்கிறது. நடைமுறையில் இதைவிட அபத்தம் இருக்க முடியாது. பத்தாம் வகுப்பில் தமிழில் தேர்ச்சியடையாத மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

       பத்தாம் வகுப்பில் இரு தாள்களுக்கும் சேர்த்து 200 மதிப்பெண்கள். நூற்றுக்குக் கணக்கிடப்பட்டு தேர்ச்சிக்கு 35 மதிப்பெண் எடுக்கவேண்டும். முதல் தாளில் 40 எடுக்கும் ஒரு மாணவர் இரண்டாம் தாளில் 28 எடுத்தால் பெயில் (40 + 28 = 68 ÷ 2 = 34). முறைப்படி பார்த்தால் இவர் இரண்டாம் தாளில் மட்டுமே தேர்ச்சியடையவில்லை. ஆனால் அவர் இரு தாள்களையும் திரும்ப எழுதவேண்டும். இது எவ்வளவு பெரிய அபத்தம் பாருங்கள்!

       இரு தாள்களிலும் நூற்றுக்கு 34 மதிபெண்கள் எடுத்து பெயிலாவது மொழிப்பாடங்களில் மட்டுமே சாத்தியம். இரு தாள்களையும் வெவ்வேறு நபர்கள் திருத்துவதால், விளிம்பில் நிற்கும் மாணவர்ளுக்குக் கருணை காட்ட வாய்ப்பில்லை. இந்நிலை மாற மொழியாசிரியர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

        மேனிலையிலும் முதல் தாள் 100 மதிபெண்கள், இரண்டாம் தாள் 80 மதிப்பெண்கள் (வாய்மொழித்தேர்வு 20 மதிப்பெண்கள்). ஒரு தாளில் பெயிலானால் இரு தாளையும் மீண்டும் எழுதவேண்டும். ஏன் ஒரு தாளாக கணக்கில் கொள்ளக்கூடாது?

        சமூக அறிவியலில் வரலாறு 40, புவியியல் 40, குடிமையியல் 10, பொருளியல் 10 என்ற அடிப்படையில் வினாத்தாள் அமைகிறது. மொழிப்பாடங்களுக்கு 50 + 50 = 100 என்ற அடிப்படையில் ஒரே தாளாக இருந்தால் என்ன? இல்லையில்லை, மொழித்திறன் ரொம்ப அவசியம் என்று கருதினால் இரு தாள்களை தனித்தனி தாள்களாக 7 தேர்வுகள் 700 மதிபெண்கள் என்றும் மேனிலையில் 8 தேர்வுகள் 1200 மதிபெண்கள் என்று அமைப்பதில் என்ன சிக்கல்? (மேனிலையில் இரு தாள்களுக்கு தலா 100 என்பதால் கூடுதல் 1200 ஐ தாண்ட வாய்ப்பில்லை.) தேர்ச்சியடையாதவர்கள் அந்த ஒரு தாளை மட்டும் எழுதினால் போதும் என்ற நிலை அப்போதுதான் வரும்.

   அபத்தம் – நான்கு

        மேனிலை வகுப்புகளில் ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள், கூடுதல் 1200 என்பதே மாபெரும் மோசடி. +1, +2 என்பது இரண்டாண்டுத் தொடர் படிப்பு. முதலாண்டில் 6 பாடங்கள் 600 மதிப்பெண்ணுக்க்கான பொதுத்தேர்வு, இரண்டாமாண்டில் 6 பாடங்கள் 600 மதிப்பெண்ணுக்க்கான பொதுத்தேர்வு என 1200 மதிப்பெண்கள் இருப்பதுதான் முறை. நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இதுதான் நடைமுறை. அதனால்தான் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் அவர்களது பங்கு கணிசமாக உள்ளது. +1 –ல் பொதுத்தேர்வு நடத்தாமல் +2 –ல் மட்டும் நடத்தில் 1200 க்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது மோசடியன்றி வேறென்ன?

          100 மதிப்பெண்கள் தேர்வெழுத 2:45 நிமிடங்கள், 200 மதிப்பெண்கள் தேர்வெழுத 3:15 நிமிடங்கள் என்பதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல; அநியாயமும் கூட. 9, 11 வகுப்புகளைத் தவிர்க்கும் நிலைக்கும் தனியார் கல்விக்கொள்ளைக்கும் இதுவே காரணம். குறுக்கு வழியில் அரசின் மருத்துவம் மற்றும் பொறியியல் இடங்களை அபகரிப்பதற்கு அதிகார வர்க்கம், தனியார் கல்விக் கொள்ளையர்கள், பணக்காரர்கள் சேர்ந்து தீட்டிய சதித்திட்டமிது.


     அபத்தம் – அய்ந்து 


       +2 கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் 75 மதிபெண்களுக்கு OMR (Optical Mark Reader) விடைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் பிற பாடங்களுக்கும் குறிப்பாக மாற்றெண் (Dummy) கொண்ட தேர்வுகளுக்கு மட்டுமாவது பயன்படுத்தினால் என்ன? OMR என்பதை ஏதோ கணினிப் பாடம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கும் மனப்பான்மையை நாம் எப்போது மாற்றப்போகிறோம்? மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய இது வசதியாக இருக்குமே!


    அபத்தம் – ஆறு


    சரித்திரம், பூகோளமாக இருந்த காலகட்டத்தில் வாரத்தில் அய்ந்து பாடவேளைகள் வரலாறு பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று வரலாறு, குடிமையியல், புவியியல், பொருளியல் என நான்கு பகுதிகளாக சமூக அறிவியல் மாறிய பிறகும் இந்நிலை தொடர்வது ஏன்? இதனுடைய நீட்சி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு தேவையில்லை என்கிற அளவிற்குச் செல்கிறது. இத்தகைய அபத்தங்களும் மாற்றப்பட வேண்டுமல்லவா! இவை எல்லாவற்றிற்கும் நீதிமன்றங்களையே நம்பியிருக்கும் போக்கு நல்லதல்ல. அவையும் எல்லா நேரங்களில் சரியாக முடிவெடுக்கும் என்று சொல்வதற்கில்லை. இம்மாதிரியான அபத்தங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போவது கல்வியை கேலிக்குரிய ஒன்றாக மாற்றிவிடும்.


  (அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக