புதன், நவம்பர் 30, 2016

07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.

07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.

 மு.சிவகுருநாதன் 




      குழந்தைகளின் வயதுக்கேற்ற பாடத்திட்டம், அதற்கேற்ற பாடநூல்கள் வடிவமைக்கப்படுவதுதானே சரியாக இருக்கமுடியும். ஆனால் இங்கு நடப்பது என்ன? பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பாக இருந்தால் எளிமையான பாடநூல்களும் இல்லையென்றால் கடுமையான பாடங்களும் என்கிற அபத்தமே இங்கு நிலவுகிறது.

      உதாரணமாக சமூக அறிவியல் பாடத்தை எடுத்துக் கொள்வோம். 8,10,12 ஆகிய வகுப்புப் பாடங்கள் எளிமையாக இருக்க, இவற்றை ஒப்பிடும்போது 7,9,11 வகுப்புப் பாடநூற்கள் கடுமையானதாக உள்ளது. எட்டாம் வகுப்பிற்கு தற்போதும் தனித்தேர்வர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு உண்டு என்பதை நினைவிற்கொள்க.

      7,9 வகுப்புப் பாடங்கள் குறிப்பாக, 7 –ம் வகுப்பு வரலாறு, புவியியல், 9 –ம் வகுப்பு அய்ரோப்பிய வரலாறு மாணவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குபவை. இருந்தால் என்ன? இவர்கள் பொதுத்தேர்வு எழுதப்போகிறார்களா என்ன? 9,11 வகுப்பை படிக்காமல் தாண்டும் உத்தியை இதனால்தான் கண்டுபிடித்தார்களோ என்னவோ!

      பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைப்போர், அரசு, அலுவலர்கள் ஆகிய தரப்பு இவ்வாறு நினைக்கும்போது ஆசிரியர்கள் மட்டும் என்ன மாற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்கள் பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகளை மட்டும் கவனித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அரசுக்கும் அலுவலர்களுக்கும் 100% தேர்ச்சி கொடுத்தால் போதும் என்பதே நிலை. இத்தகைய அவலங்களும் அபத்தங்களும் என்று ஒழியுமோ?

      பாடநூல் பிழைகளைத் திருத்தும்போது கூடவா இந்தப் பாகுபாட்டைக் கடைபிடிக்கவேண்டும்? 05.02.2015 ஆம் நாளிட்ட ‘தி இந்து’ கட்டுரையின் விளைவாக 10 –ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள சில பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. பிற வகுப்பிலுள்ள பிழைகள் பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை. திருத்தப்பட்ட சிலவற்றை மட்டும் கீழே பட்டியலிடுகிறேன்.

   வரலாறு (அடைப்புக்குறிக்குள் திருத்தத்திற்கு முன்பிருந்த வடிவம்)

பக். 31 ஹிட்லர் ஓவியர் (பெயிண்டர்)

பக். 46, 47 பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி – IBRD (உலகவங்கி, பன்னாட்டு கிராமப்புற வளர்ச்சி வங்கி)

பக். 52 அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பட்டியல்

28 நாடுகள் (27 நாடுகள்) சேர்க்கப்பட்ட நாடுகள்: லாட்வியா, குரேசியா

நீக்கப்பட்டது: ஆப்பிரிக்க நாடான லைபீரியா

பக். 72 அம்பேத்கரின் இயக்கம் பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா (Bahiskrit Hitakarani Sabha) (பகிஷ்கிருத்திகாராணி சபா)

பக். 110, 116 ஈ.வே.ராமசாமி (ஈ.வே.ராமசாமி நாயக்கர்)


புவியியல் (அடைப்புக்குறிக்குள் திருத்தத்திற்கு முன்பிருந்த வடிவம்)


பக். 175 அணுமின்சக்தி உற்பத்தியளவு 3% (272 மெகாவாட்)

பக். 201, 202, 206, 212, 213 மின்னணுவியல் (மின்னியல்)

      பத்தாம்வகுப்பைத் தவிர்த்துப் பிற வகுப்புப் பாடநூற்களில் உள்ள பிழைகள் பெரிதாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை. காரணம் அவர்கள் பொதுத்தேர்வு எழுதப்போவதில்லை என்பதே. இதற்கு நீதிமன்ற வழக்கா வரப்போகிறது என்ற மெத்தனபோக்கும் காரணம்.

      பிழைத்திருத்தம் செய்வதிலும் இவர்களுக்கு உள்ள மனத்தடைகளை உணர முடிகிறது. Fax எனபதை ‘பிரதிகள்’ என்று மொழிபெயர்த்துவிட்டு, அதை ‘தொலைநகல்’ என்று திருத்தம் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே ‘பிரதி அஞ்சல்’ என்று திருத்துகிறார்கள். அதுவும் ஓரிடத்தில் மட்டுமே. பிறிதோரிடத்தில் ‘பிரதிகள்’ என்றே இருக்கிறது. ‘தொலைநகல்’ என்னும் பழக்கத்தில் உள்ள சொல்லில் என்ன குற்றம் கண்டனரோ?

      பெரும்பான்மையான வழக்கில் உள்ள ஒரு சொல்வழக்கை பாடநூலில் பயன்படுத்த என்ன தடை அல்லது சட்டச்சிக்கல் என்று தெரியவில்லை. எனவேதான் இதை மனத்தடை என்று குறிப்பிடுகிறேன். இப்படித்தான் தொடக்கநிலை வகுப்புகளில் ‘வயது’ என்று சொல்லாமல் ‘அகவை’ என்று சொல்கிறார்கள் அல்லவா!

     ‘வேலூர் புரட்சி’ என்று சொல்வதிலும் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று விளக்கவேண்டும். இன்னும் ‘வேலூர் கலக’மாகவே இது நீடிக்கிறது. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

      வினாத்தாள்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெளியிடப்படும் தேர்வுக்கான கட்டகம் மற்றும் கையேடுகளில் இப்பிழைகள் திருத்தப்பட்டதற்கான அறிகுறியே இல்லை.

     இவற்றில் ஈ.வே.ராமசாமி நாயக்கர், மின்னியல் என்றே இன்னமும் இருக்கிறது. வினாத்தாள்களிலும் இந்நிலை தொடர்வது வேதனைக்குரியது. ஆனால் பாடநூலில் ஈ.வே.ராமசாமி, மின்னணுவியல் என்று திருத்தப்பட்டுவிட்டது. இதற்கு என்ன காரணம்? இந்தத் திருத்தங்களை ஆசிரியர்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது?

     ஆசிரியர்களுக்குப் பாடநூல்கள் வழங்கப்படுவதில்லை. கடைகளிலும் பாடநூல்கள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் திருத்தப்படாத பழைய பாடநூல்களை வைத்தே காலம் தள்ள வேண்டியுள்ளது.

      ஆசிரியர்களுக்குப் பாடநூல் பிரதிகள் அளிப்பதில் என்ன சிக்கல்? மாவட்டந்தோறும் மீந்துபோன பாடநூற்கள் மலைபோல் குவிக்கப்படுள்ளனவே! இவற்றை அடுத்த ஆண்டிற்கோ அல்லது பருவத்திற்கோ பயன்படுத்த முடியாது. மறு சுழற்சிக்குத்தான் பயன்படும். பணம் பெற்றுக்கொண்டாலாவது இதை ஆசிரியர்களுக்கு வழங்க முன்வருமா பள்ளிக்கல்வித்துறை?

      வகுப்பு மற்றும் பாடநூல் வாரியாக எந்தெந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை சுற்றறிக்கை மூலம் சொல்லலாமே! இங்கு இன்னொன்றையும் சொல்லவேண்டியது அவசியம். தேசப்படங்களை உரிய அளவுகளின்றி அச்சிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தேர்வுகளின்போது விதவிதமான அளவுகளில் தேசப்படங்கள் வழங்கப்படுகின்றன. பொதுத்தேர்வுகளில் மட்டுமே சரியாகச் செய்வோம் என்றால் பிறவற்றுக்கு தேர்வுகள் ஏன்?

      முன்பெல்லாம் கல்வி ஆசிரியர் மையமாக இருக்கிறது, அதை குழந்தை மையக் கல்வியாக மாற்றவேண்டும் என்றோம். இப்போது பொதுத்தேர்வுகள் மையக் கல்வியாக மாறிவிட்டது. இந்நிலையை மாற்றாத வரையில் கல்வியில் மறுமலர்ச்சி சாத்தியமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக