செவ்வாய், டிசம்பர் 06, 2016

ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர்

ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர்

மு.சிவகுருநாதன். 



         தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா (68) 75 நாள்கள் நீண்ட மருத்துவப் போராட்டங்கள் பலனளிக்காமல் 05.12.2016 நள்ளிரவில் மரணமடைந்து விட்டார். இன்னும் நான்காண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்ய பெரும்பான்மை மக்கள் அளித்த தீர்ப்பு கனவாகிப்போனது. எளிதில் அணுக முடியாத புதிரான தன்மையோடு இருந்த அவரது இறப்பு, மருத்துவச் சிகிச்சை அனைத்தும் புதிராக முடிந்தது வியப்பைத் தருவது. மறைந்த தலைவருக்கு அமைதியான முறையில் இறுதியஞ்சலி செலுத்திவதே அவருக்கு செய்யும் நன்றியாக இருக்கும்.

        இங்கு அரசியல் களம் அவருக்கு மலர்ப் பாதையாக இருந்திருக்கவில்லை. மு.கருணாநிதி போன்ற முதிர்ந்த அனுபவசாலிகள், கெட்டித்தட்டிப்போன ஆணாதிக்கச் சூழல் ஆகியவற்றுக்கிடையேதான் அவரது அரசியல் பணி அமைந்தது. இதில் தன்னையும் கட்சியையும் தக்கவைத்துக் கொள்ள அதிரடி அரசியல் பாணியைப் பின்வற்றினார் என்றே சொல்லவேண்டும். இது எம்.ஜி.ஆரிடம் கற்றுக்கொண்ட பாலபாடம்.

       எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிதறிய கட்சியை ஒன்றுபடுத்தி அவரது சாதனைகள் பலவற்றை முறியடித்து ஆட்சியைத் தக்கவைத்தப் பெருமை ஜெயலலிதாவிற்கு உண்டு. இவற்றிற்கு அடித்தட்டு, சாமான்ய மக்கள் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம், டாஸ்மாக், வேற்று அதிகார மையம் போன்ற குற்றச்சாட்டுகள், வழக்குகள் இருந்தபோதிலும் சாமான்ய மக்கள் ஜெயலலிதா மீது வைத்த நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. இங்குதான் நடுத்தர வர்க்க மனநிலையிலிருந்து விலகி வெகுமக்கள் உளவியலை ஆய்வுக்குட்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது. குறிப்பாக இடதுசாரிகள் பெறவேண்டிய இடத்தை எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா போன்றோர்கள் எப்படி பெறுகிறார்கள் என்பது சமூகவியல் ஆய்வு செய்யவேண்டிய ஒன்று.

       இவரது ஆட்சியில் வெகுமக்களின் பங்கு எவ்வளவு இருந்தது என்பது விவாதத்திற்குரிய செய்தி. ஆனால் அவர்கள் ஜெயலலிதாவை அவரது ஆட்சியை தங்களுடையதாகவே கருதி வந்திருக்கின்றனர். ஊழல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இவர்களது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை.

      தமிழ்நாட்டின் சாபக்கேடு தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற ஒருதுருவ அரசியல்தான். கருணாநிதியை விமர்சனம் செய்தால் அவன் அ.இ.அ.தி.மு.க.; ஜெயலலிதாவை விமர்சித்தால் தி.மு.க. என்கிற எளிய முன்முடிவுகளினால் நடுநிலைத் தன்மை அகற்றப்பட்டுவிட்டது. மறைந்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் செய்ததுபோல ஜெயலலிதா பற்றிய சமூகவியல் ஆய்வுகள் மிக அவசியம். இதிலிருந்துதான் வருங்கால சமூகம் தனக்கான் தலைவர்களைக் கண்டடைய வேண்டும்.

      பெரியாரின் வாரிசுகளான இவர்கள் பெரியார் கொள்கையிலிருந்து விலகிநிற்றல் குறித்தான் விமர்சனம் இங்குண்டு. சி.என். அண்ணாதுரையிலிருந்து தொடங்கிய இந்த விலகல் இன்று உச்சமடைந்துள்ளது. ராமர் கோயில், ராமர் பாலப் பிரச்சினைகளில் இவரது நிலைப்பாடுகள் மட்டுமல்ல; பெரும்பாலான பிற நிலைப்பாடுகளில்கூட இந்த விலகலை அவதானிக்கமுடியும். தி.மு.க. காரர்கள் மறைமுகமாக செய்யும் இந்த வேலையை கொஞ்சம் வெளிப்படையாக செய்யும் தன்மைக்கு ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. காரர்கள் ஈடுபட்டனர், அவ்வளவே.
     
       ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தினால் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாத அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கும் ஒற்றை ஆளாய் செயல்பட்ட ஆட்சிக்கும் இது பொருந்தும். இந்த வெற்றிடம் அல்லது இடைவெளி எவ்வாறு நிரப்பபடுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

     தமிழகத்தின் ஆளும்கட்சியாக மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெருங்கட்சியாக மக்கள் தீர்ப்போடு அமர்ந்த ஒரு கட்சி இன்று தலைமை இல்லாது தனிமரமாகியுள்ளது. இந்த இடைவெளியைக் குறுக்குவெளியில் பயன்படுத்தி பலனடைய பலர் காத்திருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. இது இந்திய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முயற்சி.

     குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. இந்நிலையை வெகுவாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, உதய் திட்டம் போன்றவற்றில் இதை உணரமுடிகிறது. புதிய கல்விக்கொள்கை, ‘நீட்’ தேர்வு போன்றவற்றிலும் இந்நிலை நீடித்தால் அது மிகவும் ஆபத்தாக முடியும். மக்களாட்சி மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலைகளில் ஈடுபடும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

    மாநில ஆளுநர் நியமனமும் இவ்வகையில் நடைபெற்றதும் கண்டிக்கத்தக்கது. மாநில அரசை கலந்தாலோசித்து ஆளுநரை நியமிக்கும் நடைமுறையை விடுத்து, பொறுப்பு ஆளுநர் என்ற தனக்குச் சாதகமான ஒருவரை நியமித்து அவரையே நிரந்த ஆளுநராக மாற்ற எண்ணும் தந்திரம் போன்ற பல மோசடிகள் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும்போது நடந்தேறியுள்ளன. தற்போது ஜெயலலிதா மரணடைந்துள்ள நிலைகள் இத்தகைய நடவடிக்கைகள் அதிகமாக வாய்ப்புண்டு. இவற்றைச் சமாளிக்கும் திறனை கட்சியும் ஆட்சியும் பெற வேண்டும்.

    ஆட்சிக்குத் தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்று முடிவாகிவிட்ட நிலையில் கட்சித்தலைமை யாருக்கு என்ற வினா எழுகிறது. முன்பிருந்தது போல இரண்டையும் ஒருவரே வைத்திருப்பது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் வெளியார் குறுக்கீடுகள், தலையீடுகள் இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டியது ஒவ்வொரு கட்சித் தொண்டனின் கடமையாக இருக்கவேண்டும்.

     ஒரு சமூகமோ, மக்கள் இயக்கமோ தனக்கான தலைமையை கண்டடையும். திணிக்கப்பட்ட தலைமைகள் மக்கள் ஆதரவைப் பெறுவது இல்லை. அந்த வகையில் அ.இ.அ.தி.மு.க. வும் பயணப்படும் என நம்பலாம். கடந்தகால தவறுகளிலிருந்து அவர்களும் பிற கட்சியினரும் தங்களை மேம்படுத்திக்கொள்ள துயரமான இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் அய்யமில்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//சாமான்ய மக்கள் ஜெயலலிதா மீது வைத்த நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. இங்குதான் நடுத்தர வர்க்க மனநிலையிலிருந்து விலகி வெகுமக்கள் உளவியலை ஆய்வுக்குட்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது. குறிப்பாக இடதுசாரிகள் பெறவேண்டிய இடத்தை எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா போன்றோர்கள் எப்படி பெறுகிறார்கள் என்பது சமூகவியல் ஆய்வுக்கு செய்யவேண்டிய ஒன்று.//

ஆய்வுக்குரிய நல்ல கருத்து ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள்!

கருத்துரையிடுக