செவ்வாய், ஜூலை 18, 2017

கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு?

கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு?

மு.சிவகுருநாதன்



           அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்றிலிருந்து (18.07.2017) பல கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளன. போராடாமல் வாழ்க்கையில்லை; வரவேற்போம். ஆனால் சில ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன். 


      இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2015) ஆசிரியர் இயக்கங்கள் போராட்டத்தில் 15 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் போதாமைகளை விளக்கி எனது கருத்தை இப்பகுதியில் தெரிவித்திருந்தேன். இப்போது அரசு ஊழியர்கள் இயக்கங்களும் சேரும்போது கோரிக்கைகள் இன்னும் குறைவாக 3 என சுருங்கியதை ஏற்கமுடியவில்லை. கோரிக்கைகள் குறைவாக இருக்கவேண்டும் எனச் சுருக்கிக்கொள்வதை ஏற்க இயலவில்லை. 


      ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் செவ்வாய் கோளில் பணிபுரிபவர்கள் அல்ல. இந்த சமூகத்தின் பிரச்சினைகளைப் பிரதிபளிக்காமல் எங்களுக்காக மட்டும், பணப்பயன்களுக்காக மட்டுமே போராடுவோம் என்பது ஏற்புடையதாக இல்லை. 


     2015 போராட்டங்களின் கோரிக்கைகள் போதாமை அரசு ஊழியர்கள் இணையும்போது இன்னும் விரிந்த அளவில் சென்றிருக்க வேண்டிய நிலை, தற்போது மிக ஏமாற்றமளிக்கிறது. 


    நமது போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு வேண்டும். அதற்கு சமூகம் சார் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த சமூகம் இப்போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தரக்கூடிய சூழலும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வாய்ப்பும் அமையும். 


     தனியார்மயத்தின் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. கல்வி தனியார் மயமாவதால் அரசுப்பள்ளிகள் மூடக்கூடிய நிலையில் உள்ளன. வருங்காலங்களில் ஆசிரியர்கள் நியமனமே இருக்காது. தனியார் துறைகளில் சமூகநீதி, இடஒதுக்கீட்டுக்கு வேலை இல்லை. இனி எத்தனை பேருக்கு அரசு வேலைகள் கிடைக்கும்? அரசு ஊழியர்களுக்கும் இதுவேதான். 


     மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகம். இவை சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல; நடுத்தர வர்க்கத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் இதன் தாக்கம் இருக்கவே செய்யும். இந்நிலையில் தமக்காக மட்டும் போராடுவது சாத்தியமில்லை. அனைவருக்காகவும் போராடவேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அவசியம். 


    வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. போன்ற வரிக்கொடுமைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரச் சிக்கல்கள், கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்கலம். நாகூர், மீத்தேன், ஹைட்ரோகார்பன், டாஸ்மாக் போன்று எண்ணற்ற பேர்டர்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கட்டுள்ள நாம் அவற்றைக் கண்டுகொள்ளாமலிருப்பது தகுமா? 


    பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள், நீட் தேர்வுகள், மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு நமது மாணவர்களின் நலம் பாதிக்கப்படுதல், ஊழல், மதவாதம், சாதிய வெறி போன்றவற்றையெல்லாம் பிறகு யார்தான் பேசுவது? 


     தொழிற்சங்கள் குறுகிய நோக்கங்களுக்காக செயல்படாமல் பரந்த, சமூக நோக்கில் கடமையாற்றுவது இக்காலகட்டத்தில் அவசியத்தேவையாக உள்ளது. இதை போராட்டக்களத்தில் உள்ள அனைவரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.



முந்தைய பதிவுகள் சிலவற்றைன் இணைப்புகள் கீழே:



ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_22.html
 

ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு


http://musivagurunathan.blogspot.in/2015/10/blog-post.html



ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html



இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

https://www.facebook.com/mu.sivagurunathan

http://musivagurunathan.blogspot.in/

பன்மை

https://panmai2010.wordpress.com/

மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்: 9842802010

செல்: 9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக