வெள்ளி, ஜூலை 28, 2017

போராடத் தூண்டும் அரசுகள்

போராடத் தூண்டும் அரசுகள்

மு.சிவகுருநாதன்


      ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் சுடுகாட்டிற்குச் சென்றபோது அவ்விடத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு கட்டடம் காணப்பட்டது. இது என்ன என்று வினவியபோது டாஸ்மாக் என்று பதில் வந்தது.




     கடந்த ஒரு மாதமாகவே அங்கு கடை திறக்கப்போவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பிரச்சினையும் ஆரம்பமானது. தொடர் போராட்டம் நடந்தபிறகு காவல்துறை குவிக்கப்பட்டது. பிறகு வேறு வழியின்றி கடை மூடிக்கிடக்கிறது. இந்த மூடல் தற்காலிமானதா. நிரந்தரமா எனத் தெரியவில்லை.

     இந்தப் போராட்டத்திற்கு பிற இடங்களில் நடக்கும் போராட்டங்களைப் போல ஊடக வெளிச்சம் அவ்வளவாக இல்லை. இவ்வளவிற்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இடமது. இந்தக் கடைக்குப் பின்புறம் ஓடம்போக்கியாறு; அதைத் தாண்டினால் தேசிய நெடுஞ்சாலை 67 (நாகப்படினம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலை). ஆனால் பாலம் இல்லை; எனவே 500 மீட்டரில் வராது போலும்!

     நெடுஞ்சாலை மதுக்கடைகள் பற்றிய உச்சநீதிமன்ற உத்தரவு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் குக்கிராமங்களில், அன்றாட வாழ்வே போராட்டமாக வாழும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் மக்களுக்கு பேரிடரை உண்டு பண்ணுகிறது. காரில் போகிறவன் குடித்துவிட்டு அடிபட்டு சாகாமலிருக்க வாழ வழியற்ற ஏழைகள் அழிந்து போக வேண்டுமா? இதை நீதிமன்றங்கள் கவனிக்குமா என்ன?

      இந்தப் போராட்டங்கள் ஒருபுறம் மக்களை பிளவுபடுத்தியுள்ளன. இதைத்தான் அதிகார வர்க்கம் விரும்புகிறது. போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் / கொள்ளாதவர்கள் என ஊர் இரண்டுபட்டுள்ளது. கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்கலம் என எந்தப் போராட்டத்திற்கும் இதே நிலைதான்.

     போராட்டங்களினால் அம்மக்களின் அன்றாட வாழ்வு சிக்கலுக்குள்ளாகியுள்ளது. நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பை ஓட்டும் பலர் இங்குண்டு. அவர்கள் வேலைக்குச் செல்வதா அல்லது போராட்டத்திற்குச் செல்வதா? இதனால் ஊர் இரண்டுபட்டுள்ளது. சில குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்திருப்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஊரில் இணைய ரூ. 5001 அளிக்க வேண்டுமாம்! இந்த டாஸ்மாக் மக்களை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்துகிறது பாருங்கள்.


     எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இத்தகைய குக்கிராமங்களில் வாழ்ந்துகொண்டுருக்கும் மக்கள் செய்த குற்றமென்ன? அவர்களது இயல்பு வாழ்க்கையை ஏன் குலைக்கிறீர்கள்? நெடுஞ்சாலைகளில் கடைகள் கூடாது எனும்போது இக்குக்கிராமங்கள் குறிவைக்கப்படுகின்றன.

     இங்கு கடை திறந்தால் என்னாவாகும்? நடக்கவே முடியாத இச்சாலைகளில் கார்களும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுக்கும். இரவு 7 மணிக்கே அடங்கிவிடும் ஊர் இனி இரவு 10 மணி வரை விழித்திருக்கும். இதுதான் தமிழக குக்கிராமங்களின் நிலை.

     மிக எளிய பெரிய அரசியல் பின்புலமற்ற மக்கள் அவர்களது அன்றாடத் தேவைகளை ஒதுக்கிவைத்துவிட்டு இவ்வாறாக திரளவேண்டிய கட்டாயத்தை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.

     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வாங்கிய விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கவுசிகன் பாட்டில் வெடித்து இறந்து போனான் (2012). இது பற்றிய எனது பதிவை கீழ்க்கண்ட இணைப்பில் காண்க.

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்

http://musivagurunathan.blogspot.in/2012/02/blog-post_29.html



     2016 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு 'படிப்படியாக மதுவிலக்கு' என்ற கொள்கை முடிவெடுத்து, ஜெ.ஜெயலலிதா இருக்கும்போது 500 கடைகளையும், பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு 500 மதுக்கடைகளும் மூடப்பட்டன.

     உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 3000 க்கு மேற்பட்ட கடைகளை மூடவேண்டி வந்த போது இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? படிப்படியாக மதுவிலக்கு என்ற எங்களது கொள்கைப்படி இத்தீர்ப்பை வரவேற்று இவற்றை மீண்டும் திறக்க மாட்டோம் என்று உறுதியளித்திருக்க வேண்டாமா? ஆனால் நடந்தது என்ன?

     இவர்களுக்கு மதுக்கடைகளை மூடும் எண்ணம் அறவே கிடையாது. மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாக வேறுவழியின்றி மக்களை ஏமாற்ற விற்பனை இல்லாத 1000 கடைகளைப் பேருக்கு மூடிவிட்டு, இந்த 3000 கடைகளை மீண்டும் திறக்க அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

     ஒரேயடியாக பூரண மதுவிலக்கு கொண்டுவருவது நமது கோரிக்கையல்ல. அது சாத்தியமுமல்ல. டெங்கு போன்ற சாதாரண நோய்களைக் குணப்படுத்தவே நமது மருத்துவமனைகளும் வசதிகளும் போதாதவை. லட்சக்கணக்கிலுள்ள குடிநோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடு, சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில் அதன் பின்விளைவுகள் கோரமானவை. இது குறித்து மேலதிக கருத்துகளுக்கு கீழ்க்கண்ட இரு இணப்புகளை வாசிக்கவும்.

டாஸ்மாக் வேண்டும்: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை

http://musivagurunathan.blogspot.in/2015/08/blog-post_12.html

டாஸ்மாக் தமிழகம்

http://musivagurunathan.blogspot.in/2012/12/blog-post_31.html

     மூடப்பட்ட கடைகளால் பணி இழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசுத்துறைகளில் எவ்வளவோ காலியிடங்கள் உண்டு. ஆனால் அரசு செய்யாமல் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் கடை திறந்தால்தான் பணி என்று அழுத்தம் கொடுப்பதன் வாயிலாக, குக்கிராமங்களில் இவ்வாறு ஆளும், ஆண்ட கட்சிகளின் துணையோடு கடைகளைத் திறக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.

     சுடுகாடு, இடுகாடு அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தானே கடைகள் திறக்கப்படுகின்றன என்று சொல்வாரும் உண்டு. அந்த இடங்கள் தான் இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் இடமாக உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

     இம்மாதிரியான இடங்களில் அனைத்து வீடுகளுக்கும் முதலில் கழிப்பறை கட்டிக் கொடுத்து விட்டு, பிறகு மதுக்கடைகளைத் திறப்பது பற்றி யோசிக்கலாம்.

     பொதுக்கழிவறை, சுகாதார வளாகம் இருக்கிறதே என்று கேட்கவேண்டாம். அதைப் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். பள்ளிகளிலேயே கழிவறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

     தூய்மை இந்தியாவில் திறந்தவெளிக் கழிவறையா என்று வியப்படையவும் வேண்டாம். குத்தாலம் ஓ.என்.ஜி.சி. அதிகாரியும் எங்களிடம் இதைத்தான் கேட்டார். அதிகாரவர்க்கத்தால் இதுதான் முடியும். அவர்களை இங்கு ஒருநாள் தங்கவைத்தால்தான் நிலைமை உரைக்கும்.

     திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருகே உச்சிமேடு என்ற ஊரில் குளிக்கரை அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் இறந்ததும் இன்னொரு மாணவரும் மற்றொருவரும் கடும் பாதிப்படைந்ததும் (2009) கதிராமங்கலம் நறுவெளியில் ஒரு பெண்மணியும் எரிவாயுக் குழாய் விபத்தால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ஏன் அவர்கள் திறந்தவெளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என எதிர்க்கேள்வி தொடுத்தார். அரசும் நாங்களும் கழிப்பறைக் கட்டித் தருகிறோமே என்றும் சொன்னார். எரிவாயுக் குழாய் தீவிபத்து பற்றி அவர் கடைசி வரை வாய் திறந்தாரில்லை.

     மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை ஆகிய தரப்பு முழுமையும் போர்க்கால அடைப்படையில் கடைகளைத் திறக்க ‘மெனக்கெடுவதையும்’ இலக்கு வைத்து விற்பனை செய்வதும் மாநில அரசின் சீரழிவுகளை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இவர்களுக்கு நன்றி சொல்லி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டனர். அது குறித்த இரு பதிவுகளை இணைப்பில் காண்க.

யாருக்கு நன்றி சொல்வது?

http://musivagurunathan.blogspot.in/2017/04/blog-post.html

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!.

http://musivagurunathan.blogspot.in/2017/04/blog-post_18.html

      சுடுகாட்டுப் பகுதியில் ஒதுங்கும் மக்களைப் பேய், பிசாசுகளிடமிருந்து, காக்கவும் அவர்கள் பீதியடையாமலிருக்க இரவு 10 மணி ஆள்கள் நடமாட்டம் இருக்கவேண்டும் என்பதற்காகவே மதுக்கடை திறக்கப் படுகிறது என்றுகூட சொல்லலாம்!

      இதுபோல் திருவாரூர் தஞ்சாவூர் சாலையில் அம்மையப்பன் ஊராட்சிக்கு உள்பட்ட பாம்பாக்கைப் பகுதியில் கடை திறக்கும் முயற்சி அப்பகுதி மக்களைப் போராட்டத்தில் தள்ளியுள்ளது. இவ்வாறு விளிம்பு நிலை மக்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தில் தள்ளிவிட்டு, அப்போராட்டத்தை ஆதரித்துப் பேசுவோர், முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் பதிவிடும் நபர்களை மிரட்டுவது, கைது செய்வது, குண்டர்கள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை வேடிக்கைப் பார்க்க முடியாது. வளர்மதி, திவ்யபாரதி, குபேரன் போன்றோரின் கைதுகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. இத்தகைய அரசுகள் நீண்டகாலம் நிலைக்காது. இவர்கள் மீண்டும் மக்களிடம் வந்தேயாகவேண்டும்.

      நமது மதுப்பழக்கம் கூடத் தொன்மையானதுதான். பனங்கள், தென்னங்கள் உள்ளிட்ட பாரம்பரிய பழங்குடிக் கலாச்சார இயற்கை மதுவகைகள் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. அவ்வை அதியமான் கள்ளுண்ணும் காட்சிப் புறநானூற்றுப் பாடல் (புறம் 235) வழியே விரியும்.

“சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறினே, யாம் பாட தான் மகிழ்ந்துண்ணும்; மன்னே!” (புறம்:235)

(திணை பொதுவியல்; துறை கையறு நிலை, அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.)

      IMFL (Indian-made foreign liquor) வந்தபிறகு நிலைமை தலைகீழ். உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மதுபானம் என்ற பெயரே அபத்தமல்லவா! இன்று தொல்குடி மக்களுக்குக் கூட இந்த மதுவகைகளுக்குப் பழக்கப்படுத்தி விட்டோம்.

      கள்ளச்சாராயம், போலி மது ஆகியவை ஆறாய் ஓட அரசுகள், இவற்றிற்கு எதிரான நடவடிக்கை எடுக்க மனமின்றி வாளாயிருக்கின்றன. தமிழகத்தை ஆளும், ஆண்ட இருபெரும் அரசியல் கட்சிகளும் தயாரிக்கும் இந்த மட்டகரமது வெளியில் விற்பனை செய்ய லாயக்கற்றவை. எனவேதான் அரசு கள்ளைத் தடைசெய்து தங்களது தலைவர்கள் மற்றும் அவர்களது பிநாமி சாராய ஆலைகளில் தயாரிக்கப்பட்ட தரம்குறைந்த மதுவை அரசே விற்பனை செய்யும் மோசமான சூழல் தமிழ்நாட்டிலுள்ளதை அவதானிக்க முடியும்.

       இங்கு நடப்பதோ கூட்டிக்கொள்ளை. சாராய ஆலைகள் கட்சித் தலைமை மற்ற மேல்மட்டத்தலைவர்கள் நிலையிலும் டாஸ்மாக் கடை பார்கள் அடுத்தடுத்த நிலையிலும் பகிந்துகொள்ளப்படுகின்றன. இந்நிலை என்று மாறுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக