திங்கள், ஜூலை 31, 2017

மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி)

மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி)

(ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வெள்ளி விழா நினைவுகள்: 1992 – 2017)

மு.சிவகுருநாதன்

(இது ஒரு அனுபவப் பகிர்வு; சுயபுராணம். முந்தைய பதிவின் தொடர்ச்சி. விருப்பம் இல்லையேல் தாண்டிச் (Skip) செல்ல வேண்டுகிறேன். நன்றி!) 








           இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு தற்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புத்தகங்களை வெளியிடுகிறது. ஆனால் அன்று கிடையாது. ‘பதிப்புச் செம்மல்’ கணபதியின் சாந்தா பப்ளிஷர்ஸ் நோட்ஸ்கள் போல நூல் வெளியிட அனுமதி பெற்றிருந்தனர். இவர்களது நூலில் இடம்பெற்ற உலகப்புகழ்பெற்ற வாசகம், (வரலாறு பாடப்பொருள்) “ஆசிரியர்களின் முக்கியத் தொழில் ஆடு, மாடு மேய்த்தலாகும்”, (இங்கு ஆரியர்கள் – ஆசிரியர்கள் என்ற பாடபேதம் உணர்க.)

     ஆர்.சுவாமிநாதன் என்னும் வரலாற்று விரிவுரையாளர் ஒரு தேர்ந்த இசைக்கலைஞரைப் போல தொடையைத் தட்டி பாடம் நடத்தக்கூடியவர். இவர் அடிக்கடி சொல்லும் வாசகம், “ஆசிரியப்பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி”, என்பதாகும். ஒருகட்டத்தில் நாங்கள் மிகவும் வெறுத்துப் போய், “ஆசிரியப்பணி அற்பப்பணி; அதை நீ புறக்கணி”, என்று கிண்டல் செய்யும் நிலை உண்டானது.

     புவியியல் பாடத்திற்கு வெங்கடாசலம் விரிவுரையாளராக இருந்தார். சட்டை மேல் பொத்தானைப் போடுவதில்லை. அவர் ஒவ்வொரு முறை போடச் சொல்லும்போதும் போட்டுவீட்டு, பிறகு கழற்றிவிடுவதே வழக்கமாயிற்று. ஆனால் இப்போது தானாகவே போட்டுவிடுகிறேன். மேலும் மாணவர்களின் பொத்தான்கள், தலைமயிர் இத்யாதிகளைக் கவனிப்பதேயில்லை. இன்று மாணவர்களின் ‘ஹேர் ஸ்டைல்’ குறித்து பலவிதமான புகார்கள் வருகின்றன. இது அவ்வளவு பூதாகரமான ஒன்றல்ல என்பது என் கருத்து.

     நாங்கள் செல்லமாக ‘கிச்சு’ என்றழைக்கும் கிருஷ்ணசாமி English Phonetics அருமையாக நடத்துவார். அவர் சொன்னபிறகுதான் A S Hornby -ன் Oxford Advanced Learner’s Dictionary Of Current English வாங்கினேன். ஒவ்வொரு நாளும் பாடம் நடத்தத் துண்டுச்சீட்டில் குறிப்புகளுடன் வருவார். கூடவே அகராதி மற்றும் இதர நூல்களை மார்போடு அணைத்து வருவார். வகுப்பறைக்குள் இவற்றுடன் எவ்வாறு நுழைவது என்று அபிநயத்துடன் செய்து காட்டுவார். நாங்கள் பயிற்சி முடித்த சில ஆண்டுகளில் அவர் மரணமடைந்துவிட்டதை அறிந்து வருந்தினேன்.

    துரைராஜ், சுகுமார் போன்ற அறிவியல் விரிவுரையாளர்கள் அறிவியல் பாடபோதனையை மெருகூட்டினர். திருமயம், கரிகாலன் போன்ற அலுவலகப் பணியாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தோம். திருநாகேஸ்வரம் செல்லும்போது கரிகாலன் வீட்டுக்கு ஒருமுறை சென்று வந்தோம். பிற்காலத்தில் அவரும் இறந்த செய்தி அதிர்ச்சியளித்தது.

     ஆடுதுறை கடைத்தெருவில் சாந்தி ஸ்டோர்ஸ் என்னும் சிறிய துணிக்கடை; அழகு பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமானது. இவர் பட்டிமன்றப் பேச்சாளர், சைவத் தொண்டர். இவரைப்பற்றி மாணவர்கள் பல தகவல்கள் சொல்வதுண்டு. இவருடன் உரையாடித் திரும்புவதும், எப்போவதாவது குடந்தைக்குச் செல்வதும் உண்டு. ஒருமுறை மறைந்த கல்வெட்டு ஆய்வாளர் குடந்தை சேதுராமன் இல்லம் சென்று அவருடன் உரையாடித் திரும்பினோம். அவர் ராமன் & ராமன் நிறுவனத்தின் உரிமையாளர் என்று நினைக்கிறேன்.

     வகுப்புகள் தொடங்கப்பட்ட புதிதில் படித்த பள்ளி, +2 மதிப்பெண்கள், பாடப்பிரிவு ஆகியவற்றைக் கேட்பார்கள். ஷோபா என்னும் சக மாணவி யார் கேட்டாலும் ‘pure science’ என்று சொவது வழக்கம். அதன்பிறகு நானும் “pure maths.’ என்று சொல்லலானேன். இதை மறுத்து ஏன் என்று வினவியவர்கள் அதை மட்டும் அப்படியே எற்றதுதான் விநோதம். இன்றும் கூட ஒரு மாணவியிடம் “என்ன குருப்” என்று வினவும்போது ‘pure science’ என்று சொல்வதையே காணமுடிகிறது. கல்வியின் அபத்தங்களுள் இதுவும் ஒன்று. எவ்வளவு மாற்றங்கள் வரினும் அடிப்படையான மனமாற்றங்கள் வராத வரையில் கணிதவியல் இங்கு அறிவியலே அல்ல. இறுதிக்காலத்தில் சில நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தது பிரச்சினையாகப் பட்டபோது “நான் பேசிக்கொள்கிறேன்”, என்று அனைவருக்கும் தெம்பளித்த ஷோபாவின் உறுதி பாராட்டிற்குரியது.

    இரண்டாம் ஆண்டுதான் விடுதி. முதலாண்டு தரங்கம்பாடி சாலையில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான நாட்டு ஓடு வேயப்பட்ட ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். பக்கத்துவீடு ராணியம்மாள் வீடு; அப்போதும் விடுதியிலும் எங்களுக்குப் பொங்கிப் போட்டவர் அவர். மூர்த்தி என்னும் பால்காரர். அவரது அம்மா இரு மாதங்கள் விடுதியில் சமைத்தார். அங்கிருந்து நடந்து வீரசோழனாற்று ரயில்வே பாலத்தைக் கடந்து வகுப்புகளுக்குச் செல்வோம். 1.5 கி.மீ. தொலைவிருக்கும்; மதியமும் நடந்து வந்துதான் சாப்பிட்டுத் திரும்புவோம்.

    பயிற்சியின் இறுதி நாள்களில் ஞாயிற்றுக் கிழமை அருகிலுள்ள நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது என்று முடிவாகியது. குடந்தை அக்கா வீட்டில் தங்கியிருந்த மகாலெட்சுமியின் வீட்டிற்குச் சென்று மீன்குழம்பு, வறுவல்களுடன் மதிய உணவை முடித்தோம். மற்றொரு நாளில் க.அபிராமியின் வீட்டிற்குச் சென்றோம். பட்டு நெசவு செய்யும் சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த, அவரது தந்தை கண்ணன் விருந்துக்குப் பிறகு பாட்டுப்பாடி எங்களை மகிழ்வித்தார். பிறிதொருநாள் திருநாகேஸ்வரம் கோயில்களுக்குச் சென்றுவீடு அருகிலுள்ள லெட்சுமியின் இல்லம் என்றோம். அவரது தந்தை பக்கத்திலிருந்த தியேட்டர் மேலாளர். எனவே ஓடிக்கொண்டிருந்த மேட்னி ஷோவை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு வந்தோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடுதுறை செல்லவேண்டும் என்ற நண்பர் தியாகசுந்தரத்தின் ஆசைக்கிணங்க இரு சக்கர வாகனத்தில் கிளம்பி, ஆடுதுறை சீத்தா ராமவிலாசில் பூரிக்கிழங்கு சாப்பிட்டுவிட்டு, தரங்கம்பாடி சாலையில் இருக்கும் ராணியம்மாளிடம் நலம் விசாரித்துப்பின்பு பயிற்சி நிறுவனம் சென்றோம். அன்று விடுமுறையாதலால் யாருமில்லை. விடுதியும் பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் வைத்த புங்கை மரங்கள் பெரிதாக வளர்ந்திருந்தன. அதனருகே நின்று படமெடுத்துத் திரும்பினோம். திரும்பி வரும் வழியில் திருப்பனந்தாள் கன்னாரக்குடி குமாரை குடந்தை வீட்டில் சந்தித்துத் திரும்பினோம்.

     இப்போதும் ஆசிரியர்களிடம் நம்பிக்கை வைக்க ஒன்றுமில்லை. இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்வது வருத்தமாகவே உள்ளது. சமூக யதார்த்தம் சுடுகிறது. என்ன செய்ய? பயிற்சி முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஒரு சந்திப்பு நிகழ்வு நடத்தவேண்டுமென ‘சந்தன’ வீரப்பன் போல் வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை தஞ்சை ஆ.மகேஸ்வரன் வெளியிட்டிருந்தார். ஒருவகையில் இப்பதிவிற்கும் அவரே காரணம். வாட்ஸ் அப் குப்பைகளில் ஆடியோவை நான் கவனிப்பதில்லை. “ஆடியோ போட்டிருந்தேன், பதில் இல்லை”, என்றபோதே இவ்விவரம் எனக்குத் தெரிந்தது. வாட்ஸ் அப்பில் வந்து குவியும் ஆடியோ, வீடியோக்களைப் பார்த்தால் கட்டாயம் மனநல மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிருக்கும்.

    Teacher Trainees 90-92 என்கிற வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கியதும் இதே நண்பர்தான். எனக்குத் தெரிந்த சில எண்களை இத்துடன் இணைத்துவிட்டேன். இப்போது சுமார் 15 நண்பர்கள் இக்குழுவில் உண்டு. பூசை, புனஸ்காரப் பதிவுகளுடன் கூடவே தியாகுவின் கடும் எதிர்வினைக்கு மத்தியில் இக்குழு இன்றும் வாழ்கிறது! மகேஸ்வரனைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைச் சொல்லியாகவேண்டும். அவர் இப்போது ஆசிரியர் இல்லை. 1995 பணி கிடைத்த ஒரு மாதத்தில் ஆசிரியர் பணியை விட்டுவிலகி இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகப்பணிக்குச் சென்றுவிட்டார். இப்போது தஞ்சையில் பணிபுரிகிறார். சமூகப்பணியில் இருப்பதாகக் கூட கேள்விப்பட்டேன். அதைக்கூட எங்கும் விரிவாக பதிவு செய்ததில்லை. இப்போது நான் சென்ற பத்தியில் சொன்ன முதல்வரிக்கு உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

    அரியலூர் து.பன்னீர்செல்வன் சந்திப்பு நிகழ்விற்கு முகநூல் வழியே தொடர்புகொண்டார். எந்த நாளும் யாருக்கும் ஒத்துவரவில்லை என்றார். மே மாதம் யாருக்கும் வசதியாக இல்லை போலும்! அப்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டாலும் 47 பேரில் சுமார் 15 பேரைத்தான் திரட்டமுடியும் என்பது எனது கருத்து. ஆண்களில் பன்னீர்செல்வன்தான் முதல்முதலில் திருமணம் செய்தவர். முத்தமிழ்ச்செல்வியுடன் சாதிமறுப்பு, காதல் திருமணம். இவருடைய மகன் தற்போது சீனாவில் மருத்துவம் படிக்கிறார்.

     மகேஸ்வரன் மிக நெருக்கமான தோழர். பல ஆண்டுகள் கடிதத் தொடர்பில் இருந்தோம். தஞ்சை மானம்புச்சாவடி வீட்டுக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். அவரும் ஒருமுறை எனது வீட்டுக்கு வந்துள்ளார். திருமணம், தஞ்சையில் மனை வாங்கும் முயற்சியில் அவருடைய உதவியைப் பெற்றேன். பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டு திருவாரூரிலேயே தங்கிவிட்டேன்.

     பிறரனைவரும் ஆசிரியராக, குடும்பத்தில் அய்க்கியமாகி அனைத்தையும் மறந்து வாழத் தலைப்பட்டு விட்டோம் என்பதை இங்கு வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. குடும்பச் சிறையில் சிக்காமல் வாழ்க்கூடிய வாய்ப்பு எனக்கும் நண்பர் தியாகசுந்தரத்திற்கும் கிடைத்தது. அந்த நல்வாய்ப்பை மே 10, 2010 இல் நான் தவறவிட்டேன்; அதுவே எனது திருமண நாள். அந்த வகையில் தியாகசுந்தரம் பாராட்டிற்குரியவர். அவர் தற்போது திருச்சி மாவட்டம் மணப்பறை அருகே ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியாகப் பணிபுரிகிறார். மதுரையை ஒட்டிய பகுதியில் ‘முதியோர் இல்லம்’ தொடங்கி தனது இறுதிக்காலத்தைத் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறார்.

     1993 இல் தஞ்சை மகேஸ்வரனுடன் நடுக்காவிரி சீனிவாசன், செந்தலை நா.சீ. பாலகிருஷ்ணன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டு, இருவரும் கல்லணை சென்று இறங்கினோம். சில நிமடங்களில் கனமழை; ஓட்டிவந்து வந்த் பேருந்தில் ஏறிக்கொண்டோம். அதன்பிறகு வரலாற்றுப் புகழ்மிக்க செந்தலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. செந்தலை பாலகிருஷ்ணனின் தந்தையார் ஶ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தில் மரணமடைந்தது மிகுந்த அதிர்ச்சியளித்தது. இன்று பாலகிருஷ்ணன் பட்டதாரி தமிழாசிரியர்; சீனிவாசன் உதவி பெறும் பள்ளியில் முதுகலை ஆசிரியர்.

   துவரங்குறிச்சி மாறன் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர். மாணவர்களை பல்வேறு விளையாட்டுகளில் ஊக்கம் கொடுத்துச் செயல்படுவதாக அறிகிறேன். மகாதேவப்பட்டினம் உதயகுமாரும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருக்கிறார். பின்னத்தூர் மகேஷ்வரன் வெகுஜன எழுத்தாளராகிவிட்டார். எனது அறைத் தோழர்கள் சா.அண்ணாதுரை ஆலத்தம்பாடியிலும் து.மோகன் பட்டுக்கோட்டையிலும் பட்டதாரி ஆசிரியாகப் பணி புரிகின்றனர்.

   எஸ்.சிவராமன் முதுகலை வேதியியல் ஆசிரியர்; க.வேங்கடசுப்பிரமணியன், செந்தில்ராஜ் (செந்தில்குமார்), க.அகோரமூர்த்தி (ரமேஷ்) ஆகியோர் பட்டதாரி கணிதவியல் ஆசிரியர்கள். திருவாரூர் மாப்பிள்ளையான காரைக்கால் புதுத்துறை மு.ரா.ராஜகோபால் அங்கு பட்டதாரி ஆசிரியாக உள்ளார். நானறிந்த வரையில் க.சாந்தி, கோ.பாரத், சுந்தரபெருமாள்கோயில் பாரதி ஆகியோர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள். அருணகிரி பாபநாசத்திலும் ராஜூ தஞ்சாவூரிலும் உள்ளனர். செய்துல் ஃபாரூக் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியக்கூடும். சாத்தனூர் சந்திரமோகன் ஆடுதுறைக்கு வெகு அருகில் இருந்தவர். க.வேங்கடசுப்பிரமணியன், க.அகோரமூர்த்தி, சா.அண்ணாதுரை ஆகியோர் விரைவில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆக வாய்ப்பிருக்கிறது.

     எங்களுக்கு முன்னால், பின்னால் படித்த நண்பர்கள் சிலர் இன்றும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி. திருவாரூரில் க.நாகராஜன், (பட்டதாரி ஆசிரியர், தமிழ், திருக்குவளை) கண்ணன் (பட்டதாரி ஆசிரியர், கணிதவியல், அடியக்கமங்கலம்) போன்ற சீனியர்கள் இருக்கிறார்கள். திருநாகேஸ்வரம் ரவிச்சந்திரன், திருக்குவளை குருமூர்த்தி போன்றவர்களை பணி கிடைத்த தொடக்க காலத்தில் பார்த்ததோடு சரி. எங்களுக்கு ஜூனியர்களில் வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருந்த மன்னார்குடி முருகவேல் வாகன விபத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மரணடைந்தது வருத்தமளித்த நிகழ்வு. வேதாரண்யம் ஆயக்காரன்புலம் நண்பரைத் திருவாரூரில் (பெயர் நினைவுக்கு வரவில்லை) சந்தித்தேன். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்; மகன் கல்லூரியில் படிக்கிறார்.

      ஆட்டோஃகிராப் கையெட்டும் தொலைவில் இல்லை. பெயர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நினைவின் புதர்ச் சரிவிலிருந்து மீட்டெடுக்கிறேன். இதற்கு ஆ.மகேஸ்வரனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

    மாற்றுக்கல்வி குறித்த பேச்சு, எழுத்து, சிந்தனை ஆகிய பன்னெடுங்காலமாக இங்கு பதிவாகியுள்ளது. ஆனால் கல்வியியல் பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் இதற்கான எவ்வித அறிமுகம் கூட இல்லை. இந்தப் படிப்புகள் பாரம்பரிய குருகுலப் பொதுப்புத்திக்கு ஏற்ப ஆசிரியர்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே இதன் மூலம் நமது எல்லைகள் விரிவடையவும் கல்வியில் சிறிதளவிலேனும் மாற்றம் வருவதும் சாத்தியமே இல்லாத சூழல் உள்ளது.

      சுயகல்வி, வாசிப்பு மூலமே இவற்றைக் கண்டடைய வேண்டியுள்ளது. இது எல்லாருக்கும் சாத்தியப்படுமா என்ன? கல்வி குறித்த வாசிப்புகள், சுயதேடல் ஆகியவற்றைத் தூண்டவோ அல்லது சிறு சலனத்தை ஏற்படுத்தாத அமைப்புகளால் என்ன பலன்? கல்வியில் மாற்றங்கள் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. இங்கு செய்யப்படும் மேற்பூச்சுகள் எதற்கும் உதவாதவை எனும்போது ஏக்கமே மிஞ்சுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக