ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

பிற்காலச் சோழர்கள் அனைவருமே ‘மநுநீதி’ச் சோழர்கள்.

பிற்காலச் சோழர்கள் அனைவருமே ‘மநுநீதி’ச் சோழர்கள்.



மு.சிவகுருநாதன்



     அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (RMSA) சமூக அறிவியல் பயிற்சியின் இறுதி நாளான 04.08.2017 அன்று மதியம் திருவாரூர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இ. கல்யாணசுந்தரம் உரையாற்றியபோது, ‘புத்தகங்களில் சொல்லப்படுவதெல்லாம் உண்மையான வரலாறு இல்லை. அதில் மநுநீதிச்சோழன் போல பல நம்பிக்கைகள் உள்ளன. அவற்றையெல்லாம் பகுத்தறிவிற்கு உட்படுத்த வேண்டும். பெரியார், காந்தி, புத்தர் குறித்தும் பேசினார். வழமையான வரலாற்றுப் பேராசிரியர்களைவிட இவர் சிறிது நம்பிக்கையளித்தார். இவரது கருத்துகள் பலருக்கு அதிர்ச்சியளித்தது. அதன் தொடர்ச்சியாக சில கருத்துகளை இங்கு சொல்ல விழைகிறேன். வாஞ்சி (அய்யர்) நாதன் பற்றி பிறகு பார்க்கலாம்.


    இந்து சட்ட மூலங்களில் மநு தர்ம சாஸ்திரமும் (மநு ஸ்மிருதி) ஒன்று. இது ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பலரால் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலே. கி.மு. 150 க்கும் கி.பி. 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக இருக்குமென ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கணிக்கிறார்.

   அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்டதர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட முறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1. சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2. சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள். அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக்கூடாது.
3. மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடாது.
4. சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது. அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம். அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பத போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.
5. சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.
6. ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம்.
7. சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.
8. சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.
9. மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது. மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாகவேண்டும்.
10. சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81).


(பக். 80,81 - அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்? தொகுதி - 13 )



     மேலும் விஷ்ணு ஸ்மிருதியின் படி சொல்லப்படும் தண்டனைகளில் சில. (அம்பேத்கர் நூலில் குறிப்பிடப்படுபவை.)

  • “ஒருவன், அவனைவிட மேலானவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குச் சமமாக உட்காருவேனேயானால் அவனுடைய புட்டத்தில் சூடு இழுத்து அடையாளம் இட்டு அவனை நாடு கடத்திட வேண்டும்.
  • ஒருவன் தன்னினும் மேலானவன் மீது துப்புவானேயாயின், அவனது இரண்டு உதடுகளையும் இழக்க வேண்டும்.
  • அவன் அவர்களுக்கு எதிராக, வாயு பிரியவிட்டால், அது வந்த அவனது பின் பாகத்தை இழக்க வேண்டும்.
  • அவன் வசைமொழிகளை உபயோகப்படுத்தினால் அவனது நாவை இழக்கவேண்டும்”.

(பக். 68, அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்? தொகுதி - 13 )


       இம்மாதிரியான சட்டங்களை மக்களிடம் பதியவைக்க / திணிக்க / மேலாண்மையை நிறுவ உள்ளூர் மொழிகளில் வழக்காறுகளில் நிறைய கதைகள், புராணங்கள் உற்பத்தியாயின. அந்த வகையில் கட்டப்பட்ட புனைவுதான் ‘மநு நீதிச் சோழன்’ என்னும் புராணம். ‘மநு நீதி’யுடன் உள்ளூர் அரச வம்சமான ‘சோழன்’ என்கிற அடைமொழி இணைக்கப்படும்போது இவர்களது நோக்கம் நிறைவேறிவிடுவதைக் காணலாம்.

      இதைச் சரியாக உணந்தவர் பெரியார் மட்டுமே. அவர் பெயரைச் சொல்லி ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிழைப்புவாதிகள் தங்களை ராஜராஜன் என்றும், மநுநீதிச் சோழன் என்றும் சொல்லிக்கொள்வதில் சிறிதும் வெட்கப்படாதவர்கள். மேலும் களப்பிரர்கள் காலத்தில் தமிழ் மொழி அழிக்கப்பட்டது என கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுபவர்கள். கீழடி போன்ற தமிழர்களின் தொன்மைகளுக்கு எதிராகவும் தமக்கானவற்றையும் திருவள்ளுவர், தமிழன்னை சிலை என உருவாக்கிக் கொள்பவர்கள்.

     இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மநுநீதி’ச் சோழனுக்கு சிலை நிறுவுவார்கள். எட்டாம் வகுப்புப் பாடநூலில் ‘மநுநீதி’ச் சோழன் வரலாற்றை உனது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் சொல்வார்கள். இவற்றை வேதவாக்காக தல புராணக்கதைகளை வரலாறாக ஓப்பிக்கும் பலர் இங்குண்டு. இப்போது திருவாரூரில் ‘மநுநீதி’ச் சோழன் மணிமண்டபம் கட்டப்பட்டு வருவதையும் நாம் அறிவோம்.



  • “ஒரு சத்திரியன் கொலை செய்யப்பட்டிருந்தால், பிராமணனைக் கொலை செய்தற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் நாலில் ஒரு பங்கு தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைசியனாக இருந்தால் எட்டில் ஒரு பங்கும், ஒரு சூத்திரனைக் கொலை செய்துவிட்டால் அதுவும் அச்சூத்திரன் நற்குணவானாக வாழ்ந்திருப்பின் பதினாறில் ஒரு பங்கும் தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் இரு பிறப்பெடுத்தவர்களில் உயர்ந்தோன் (பிராமணன்) சத்திரியனைத் தன்னிச்சையில்லாது கொலை செய்துவிட்டால் அதிலிருந்து அவனை விடுவித்துக் கொள்வதற்கு நூறு பசுவும் ஒரு காளையும் அவன் கொடுக்க வேண்டும்.
  • அல்லது மூன்று ஆண்டுகள் தலைமுடியை முடிந்துகொண்டு புலனுணர்வுகளை அடக்கிக் கொண்டு பிராமணனைக் கொலை செய்த ஒருவன் கடைபிடிப்பதைப் போலவே அவனும் கடைபிடித்துக் கொண்டு நகருக்கு வெளியே வெகு தூரத்தில் வசித்துக் கொண்டிருக்க வேண்டும். மரத்தின் அடியில்தான் அவன் வசிக்கத்தக்க இடமாகும்”.

(பக். 67, அம்பேத்கர் - சூத்திரர்கள் யார்? தொகுதி - 13 ) 


      இதன் காரணமாகவே முதலாம் ராஜராஜன் தன்னுடைய அண்ணன் ஆதித்திய கரிகாலனைக் கொன்ற (கி.பி. 969) பிராமணர்களைப் பிடித்துத் தண்டிக்கும் நிலை வரும்போது அந்தக் கொலையாளிகளுக்கு ‘மநுநீதி’ப் படிதான் தண்டனை வழங்கப்பட்டதை அறியலாம். அவர்களது நிலங்களை பறிமுதல் செய்து கோயிலுக்கு உரிமையாக்கிய பின், அவர்களை நாடு கடத்துகின்றனர்.

      இங்கே பெயரளவில் சோழர்கள் ஆண்டாலும் ‘மநுநீதி’யே ஆட்சி செய்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆட்சியதிகாரம் பிராமணர்களிடமே இருக்க சோழர்கள் வெறும் பொம்மைகளாக இருந்ததுதான் தமிழகப் ‘பொற்கால’ வரலாறு. பிற்காலச் சோழர்களின் இறுதிக்காலத்தில்தான் சூத்திரசாதியினர் மேலாதிக்கம் பெற்றதையும், அப்போது பிராமணர்களால் செய்யப்பட்ட ‘குகையடிக் கலகங்கள்’ என்பதையும் தொ.ப.மீ. விளக்குவார். ‘மநுநீதி’ச் சோழன் உண்மைதான்! ஆனால் அவன் ஒருவனல்ல; பிற்காலச் சோழர்கள் அனைவருமே ‘மநுநீதி’ச் சோழர்கள் என்பதே உண்மை.



(அம்பேத்கர் நூல் தொகுப்புகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டு மலிவு விலையில் கிடைக்கின்றன. தொகுப்பு ஒன்றின் விலை ரூ. 40 மட்டுமே. அதை வாங்கி வாசிக்க முயல்வது இந்திய சமூகத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள உதவும்)



நூல் விவரம்:


சூத்திரர்கள் யார்?

– அவர்கள் எவ்வாறு இந்தோ – ஆரிய சமுதாயத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள்?

- தொகுதி 13

பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர்


தமிழில்: ரா.ரங்கசாமி (மாஜினி), நா,ஜெயராமன்

முதல் பதிப்பு: 1947 (ஆங்கிலம்)

முதல்பதிப்பு: 1999 (தமிழ்)

விலை: ரூ. 40

பக். : 346

வெளியீடு:

டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்,

நல அமைச்சகம்,

இந்திய அரசு,

புதுதில்லி.

விற்பனை உரிமை:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600014.

அச்சாக்கம்:

பாவை பப்ளிகேஷன்ஸ்,

16 ஜானி கான் கான் சாலை,

ராயப்பேட்டை,

சென்னை 600014.

பேச: 044-28482441, 28482973

மின்னஞ்சல்: pavai123@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக