திங்கள், அக்டோபர் 31, 2016

04. தேயிலை செடியா? மரமா?

04. தேயிலை செடியா? மரமா?





-மு.சிவகுருநாதன்





      எளிதாகப் படிக்கவும் அதிக மதிப்பெண்கள் வாங்கவும் ஆங்கில வழியில் படிப்பதும் தேர்வு எழுதுவதும் சிறந்தது என்ற ஒரு கருத்து பலகாலமாகவே இங்குண்டு. இந்தக் கருத்தை நமது பாடநூல்கள் நிருபிக்கின்றன.





      இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். புரிந்துப் படிப்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. வெறும் மனப்பாடம் செய்து வாந்தியெடுப்பதுதான் அதிக மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது.





      தமிழ்ப்பாட வழி நூல்களுக்கு நீட்டி முழக்கப்படுகின்றன. எளிமையான மொழிநடை இல்லை. தமிழில் எளிமை. சொற்சிக்கனம் ஆகியவற்றுக்கு வாய்ப்பில்லை என்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.





      தமிழ்வழிக் கல்வி, தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துவோர் இதை கண்டுகொள்ள மறுக்கின்றனர். வெறும் தமிழ் வழிக் கல்வி பற்றி பேசிப் பலனில்லை. இந்தப் பாடநூல்களைகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். ஒரு கருத்தைப் பிழையின்றி, எளிமையாக உணர்த்த தமிழால் முடியாதா என்ன?





     தி இந்து, தினமணி போன்ற நாளிதழ்கள்கூட சிறப்பான மொழிவளத்தைக் கையாள்கின்றன. இவை துளியும் இல்லாமல் செயற்கையாக நமது பாடநூல்கள் உருவாக்கப்படுவது தெளிவு. இங்கும் சுட்டப்படும் எடுத்துக்காட்டுகள் இவற்றை உணர்த்தும்.





      நமது பள்ளிப்பாடநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் தமிழில் பெயர்க்கப்படுகின்றன. நேரடியாக தமிழில் எழுத வாய்ப்பே இல்லையா? இந்த மொழிபெயர்ப்புகள் ரொம்பவும் அபத்தம். பிழைகள் நிறைந்த இந்த அபத்தக் கூத்துக்கு ஒரு உதாரணமாக எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.





      “Tea is a beverage made from the leaves of a tropical shrub. Tea is a hardly perennial shrub. The plant is constantly trimmed to a height of 1.5 m. to stimulate the growth of new leaves and to facilitate picking of the leaves”.



(பக். 171, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)





      “தேயிலை இலைகள் பானம் தயாரிக்கும் அயன மண்டலச் செடியாகும். தேயிலை, பல வருடங்களுக்குப் பயன்தரக்கூடிய செடி வகையாகும். தேயிலையைப் பறிக்கவும் புதிய இலைகள் தொடர்ந்து முளைக்கவும் தேயிலைச் செடிகள் 1.5 மீ உயரத்திற்கு வெட்டிவிடப்படுகின்றன”.



(பக். 183, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)





       தேயிலை இலைகள்!? என்னே அருமையான மொழிபெயர்ப்பு! ‘Shrub’ என்பது ‘செடி’ என மொழிபெயர்க்கப்படுகிறது. ‘plant’ –ம் இங்கும் செடியாகிறது.





       உண்மையில் தேயிலை செடியல்ல; மரம். ‘Camellia sinensis’ (கேமலியா சைனன்சிஸ்) என்ற அறிவியல் பெயரால் வழங்கப்படும் இத்தாவரம் நீண்டு வளரும் மரவகைச் சார்ந்தது. இலைத் தேவைக்காக இம்மரம் வெட்டிவிடப்படுவதால் (கவாத்து) புதர்ச்செடியாக நமக்குக் காட்சியளிக்கிறது.





     இங்கு ஒரு இடையீடு: சவுக்கு மரத்தை அழகுக்காகக் கத்தரித்து வளர்ப்பதைத் பூங்காக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ‘ஊசியிலைகளைக் கொண்ட, Casuarina equisetifolia’  என்று சொல்லப்படும் சவுக்குமரத்தை யாரும் செடியென்று சொல்வதில்லை. அதைப் போலத்தான் தேயிலை மரமும். பிறகெப்படி இது செடியாகும்?





        இதே பாடத்தில் கரும்பு ஒரு புல் வகை என்று கூறப்படுகிறதே! அது என்ன புல்வகை? சல்லிவேர்த்தொகுப்பைக் கொண்ட ஒருவித்திலைத் தாவரங்கள் அனைத்தும் புல்லினங்களே. தானியங்கள் மட்டுமல்ல; கரும்பு, மூங்கில் போன்றவை புல்வகைகள். ஆனால் தேயிலை மட்டும் செடியானது எப்படி?





      “Sugarcane is a tall tropical grass which grows to a height of 3.5 m. It is cultivated almost everywhere in the tropics and subtropics”.



(பக். 171, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)





     “கரும்பு ஓர் உயரமான அயன மண்டலப் புல் வகைத் தாவரமாகும். இது 3.5 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரமாகும். இது அயன மண்டல மற்றும் துணை அயன மண்டலப் பகுதிகளில் பெரும்பாலன இடங்களில் வளர்க்கப்படும் பயிராகும்”.





      ‘வெப்பமண்டலம்’ என்கிற சொல் வழக்கிலிருக்க, ‘அயனமண்டலம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவானேன்? “பகுதிகளில் பெரும்பாலன இடங்களில்” என்ற மொழிபெயர்ப்பு ரொம்ப அபத்தமாக இல்லை!




(பக். 183, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)





     “A range of crops is grown by humans – some food and other fiber. Cereals form the basic diet of mankind. Cereals are grass like plants which have starchy edible seeds. The most common cereals are rice, wheat, maize and millets”.



(பக். 168, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)





      “மனிதனால் பல்விதமான வேளாண்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சில பயிர்கள் உணவுக்காகவும் சில பயிர்கள் இழைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன. தானியங்களே மனிதனது அடிப்படை உணவாகும். மாவுச்சத்துக் கொண்ட விதைகளையுடைய தானியவகைகள் புல்வகைத் தாவரங்களாகும். நெல், கோதுமை. சோளம் மற்றும் தினை வகைகள், பொதுவான தானிய வகைகள் ஆகும்”.



(பக். 179, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)





      உணவுப் பயிர்கள், இழைப் பயிர்கள் தவிர்த்து வேறு பயிர்கள் இல்லையா? அது போகட்டும். “Cereals are grass like plants which have starchy edible seeds”, என்ற வரியின் மொழிபெயர்ப்பைக் கவனிக்கவும். “மாவுச்சத்துக் கொண்ட விதைகளையுடைய தானியவகைகள் புல்வகைத் தாவரங்களாகும்”.





       ஏன் இவ்வாறு நீட்டி முழக்கவேண்டும்? ஒவ்வொரு தமிழ்வழிப் பாடநூலும் ‘கோனார்’ நோட்சா என்ன? தமிழ் வழிபாடநூல் அதிக பக்கங்கள் கொண்டதாக இருப்பதையும் இங்கு கணக்கில் கொண்டாக வேண்டும். எளிமையாக சுருங்கச் சொல்லும் தன்மை தமிழில் இல்லையா? குறை தமிழில் இல்லை; உங்களது மொழி நடையில் உள்ளது. இப்படிப் படிப்பவர்கள் சிறந்த மொழிநடை உடையவர்களாக மாறமுடியுமா? இதிலிருந்து தப்பித்தோடியவர்களே இன்று மொழியாளுமை மிக்க எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். தமிழில் படிப்பவனை ஏன் இவ்வாறு ஏளனமாக அணுகுகிறீர்கள்?



      தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பாடநூற்களிலும் மொழிக்கொலை செய்ய அனுமதிக்கலாமா? இங்கு கொலை என்பது இலக்கணப் பிழை மட்டுமல்ல; சரளமான மொழிநடை. சிறந்த மொழியாக்கம், படிப்பதற்கு இனிமை போன்ற பல்வேறு காரணிகளைச் சுட்டுகிறேன். தமிழாசிரியர்களே அனைத்துப் பாடங்களையும் எழுதியது போல் இருக்கிறது. மொழியின் வீச்சை உணராதவர்கள் எழுதிய பாடங்களில் இனிமை, தெளிவு, சுருக்கம் இருக்க வாய்ப்பேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக