வெள்ளி, பிப்ரவரி 18, 2011

சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு - சுற்றுச்சூழல் மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு - சுற்றுச்சூழல் மாத இதழ்

- மு. சிவகுருநாதன்







          பூவுலகின் நண்பர்களால் கு. சிவராமன் ஆசிரியராக ‘பூவுலகு’ என்ற சுற்றுச்சூழல் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.  டிசம்பர் 2010 இதழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிறப்பிதழாக வந்துள்ளது.


            ‘வேதாந்தா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை  தூத்துக்குடியில் ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்டு மு. கருணாநிதியால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் பி.மி. தமிழ்மாந்தனின் கட்டுரை அவ்வாலையில் ஏற்பட்ட விபத்துக்களைப் பட்டியலிடுவதுடன் தமிழக அரசியல் கட்சிகள் எப்படி ஆலை நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறிப் போயின என்பதை அம்பலப்படுத்துகிறது.


            ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல் செய்ய உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றால் மக்கள் விரோதத் தீர்ப்பை எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருப்பதாக வழக்குரைஞர் சுந்தர்ராஜன் குறிப்பிடுகிறார்.



            ஸ்டெர்லைட் செம்பு உருக்காலை மூலம் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுதல் பற்றியும் தொழிற்சாலையின் விதி மீறல், முறைகேடுகள் பற்றியும் பேசும் வெ. கஜேந்திரனின் கட்டுரை வளர்ச்சிக் கோட்பாட்டுக்கும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள வலியுறுத்துகிறது.


            ப. நற்றமிழனால் தமிழாக்கப்பட்டுள்ள நித்தியானந்த ஜெயராமனின் கட்டுரை அரசும் நீதித் துறையும் சூழலியல் குற்றவாளியான ஸ்டெர்லைட் ஆலைக்கு எவ்வாறு சாதகமாக நடந்து கொள்கின்றன என்பதை விவரிக்கிறது.


            நாட்டிலுள்ள பாக்சைட் வளத்தில் 55% இருப்பதாகக் கருதப்படும் ஒரிசா மாநிலத்தில் பாக்சைட் சுரங்கம் தோண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது.  ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் மட்டும் இதற்கு காரணமல்ல.  பலரின் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவு என்பதை ஒரு கட்டுரை விளக்குகிறது.  பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவப் படைகளைக் கொண்டு பழங்குடி மக்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நிகழ்த்தி வரும் மத்திய அரசு  ஒரு புறமிருக்க,மறுபுறம் சீருடையணியாத மாநில  காவல்துறையினர் நியமகிரி மலைச்சரிவிலுள்ள பழங்குடியினத் தலைவர் லடோ மாஜி சிகாகாவை  கடத்திச் சென்று சித்ரவதை செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.   வன உரிமைகளுக்காக போராடுவோரை எளிதில் மாவோயிஸ்ட்கள் என்ற முத்திரைக் குத்துவதையும் இக்கட்டுரை புலப்படுத்துகிறது.


            சங்க கால இலக்கியத்தில் தாமரை என்ற மருதமலை முருகனின் கட்டுரை தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாத தொழில்நுட்பத்தைக் கொண்டு நேநோ தொழில்நுட்ப ஆய்வுகள், தண்ணீர் - அழுக்கு ஒட்டாத ஆடைகள், நீர் ஒட்டாத சுவர் வண்ணப் பூச்சுகளுக்கு அடிப்படையாகப் பயன்படுவதையும் மருத்துவ தாவரப் பன்மயம்  (Medicinal Plant Diversity)  போன்று இன்றைய அறிவியல் கோட்பாடுகளுக்கு சங்க இலக்கியம் முன் மாதிரியாக இருப்பதை விவரிக்கிறது.


            பசுமைப் புரட்சியின் கதையைத் தொடராக வைகை குமாரசாமி எழுதி வருகிறார்.  நாம் வயல்களில் தெளித்த  DTT  என்ற நஞ்சு ஆறு, கடல், மீன்கள் என சங்கிலித் தொடராக எஸ்கிமோக்கள் வரை சென்ற கதையையும் அதன் மூலம் விதவிதமான நோய்கள் உண்டானதையும் இத்தொடர் விளக்குகிறது.

            
             பன்னாட்டு உரம் மற்றும் பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு முகவர்களாகச் செயல்படும் ‘பசுமை விகடன்’ போன்ற போலி சுற்றுச் சூழல் இதழ்கள் மத்தியில் பூவுலகின் பணி இன்றியமையாததாகும்.

(டிசம்பர் இதழில் 21 லிருந்து   30 வரை  பக்கங்கள் மாறியுள்ளபடியால் சில கட்டுரைகளை முழுமையாகப் படிக்க முடியவில்லை)



தனி இதழ் ரூ. 20

தொடர்பு முகவரி:

பூவுலகின் நண்பர்கள்,
A-2 அலங்கார் பிளாசா,
425 - கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600 010,

பேசி: 044 - 26601562,
இணையம் :   www. poovulagu.org
மின்னஞ்சல்: info@poovulagu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக