வெள்ளி, பிப்ரவரி 18, 2011

சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் - கலை இலக்கிய மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் - கலை இலக்கிய மாத இதழ்

- மு. சிவகுருநாதன்





          முன்பு புதுப்புனல் வெளியீடாக எம். ஜி. சுரேஷ்-இன் ஆசிரியப் பொறுப்பில் ‘பன்முகம்’ இதழ் வெளியாகி நின்று போனது.  ஜனவரி 2010 முதல் ஆர். ரவிச்சந்திரனை ஆசிரியராகவும் லதா ராமகிருஷ்ணனை இணை ஆசிரியராகவும் கொண்டு ‘புதுப்புனல்’ மாத இதழ் இதுவரை 10 இதழ்களை வெளியிட்டுள்ளது.


            இதழ் வெகு சாதாரணமாக வெளிவருவது பெருங்குறையாகப்படுகிறது.  ‘பன்முகம்’ இலக்கியக் கோட்பாட்டிதழ் போன்று நடத்த விரும்புவதாக ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது.  அதற்கேற்ற படைப்புகள் கிடைக்கப் பெறாதது இதழை செழுமையாக்க முடியாததன் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


            தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, அம்ருதா போன்ற இடைநிலை இதழ்களின் பெருக்கம் சிறு பத்திரிக்கை சார்ந்து எழுதும் படைப்பாளிகளை ஈர்த்து விட்ட காரணத்தால் உண்மையான சிறுபத்திரிக்கைகளுக்கு இன்று எழுத ஆளில்லாமல் போய்விட்டது.   குறித்த காலத்தில் வராமற் போகும் இதழ்கள் தகுந்த கவனிப்பைப் பெறாமலிருக்கின்றன.   இனி வரப்போகும் இதழ்கள் சிறப்பாக அமையுமென எதிர்பார்க்கலாம்.


            பிப்ரவரி 2011 இதழில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் ‘நாட்டுப்புறம்’ என்ற சொல் ‘நாட்டுப்புரம்’ என பிழையாகச் சுட்டப்பட்டிருப்பது குறித்த மு. பிரகாஷ்-ன் கட்டுரை இடம் பெற்றுள்ளது சிறப்பு.  நான் பல முறை எழுதியபடி பாடநூற்கள், பாடத்திட்டம், கற்றல் - கற்பிக்கும் முறைகளை யாரும் விமர்சனத்திற்குட்படுத்துவதில்லை என்பது பெருங்குறையாக இருந்து வருகிறது.  அந்த வகையில் இக்கட்டுரை சங்க இலக்கியச் சான்றுகளுடன் ‘நாட்டுப்புறம்’ என்ற சொல்லே சரியயென நிறுவுகிறது.


            ‘வரலாற்றுப் பன்மையும் தேசிய ஒழுக்கமும்’ என்ற கட்டுரையில் மு. ரமேஷ் களப்பிறர் என்று சொல்லி மீண்டும் குழப்பத்திலாழ்த்துகிறார்.  (இல்லை, அச்சுப்பிழையா என்பதும் தெரியவில்லை).  மயிலை. சீனி. வேங்கடசாமி, பொ. வேல்சாமி உள்ளிட்ட யாரும் களப்பிறர் என்று சொல்லவில்லை.  களப்பிரர் என்றுதான் கையாள்கின்றனர்.   களப்பிரர்களும் பல்லவர்களும் முன் வைத்த சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்கும் மனோபாவத்தை வைதீகம் வழங்கவில்லை என்கிறார்.   அவைதீக மரபுகளையும் ஆட்சிகளையும் அழித்தொழித்ததுதானே வைதீகத்தின் முதன்மைப் பணி.


           இந்தியாவில் பிரெயில் எழுத்து முறையில் வளர்ச்சி பற்றி மில்டன் சந்தானகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  தற்போது ‘க்ரியா’ பிரெயில் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.


            சு. வேணுகோபால், திராணி, உ. மணி ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  யதார்த்த பாணி சிறுகதைகள் வெகுவாக சலிப்பை உண்டு பண்ணுகின்றன.  க. அம்சப்பிரியா, க்ருஷாங்கினி மற்றும் பலரது கவிதைகளும் நூல் மதிப்புரைகளும் இடம் பெற்றுள்ளன.


            ‘ராஜ விளையாட்டு’ என்ற ஸ்டீஃபான் ஜஸ்வேய்க்கின் ஜெர்மானியக் குறுநாவல் லதா இராமகிருஷ்ணனின் மொழி பெயர்ப்பில்  தொடராக வருகிறது.   நாவலை மொத்தமாகப் படிப்பதுதான் நன்றாக இருக்கும்.  படிக்க வேண்டிய ஒரு சிற்றிதழ்.  இனிவரும் இதழ்கள் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.

தனி இதழ் ரூ. 15.  ஆண்டு சந்தா ரூ. 180.

தொடர்புக்கு:

புதுப்புனல்,
117,திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை(முதல் மாடி),
(ரத்னா கேப் எதிரில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005,

செல்: 96623 76282
            98844 27997
e-mail : pudhupunal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக