வெள்ளி, பிப்ரவரி 18, 2011

சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் - இரு மாத இதழ்

சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் - இரு மாத இதழ்

- மு. சிவகுருநாதன்

 


          இலக்கிய இதழ்களில் நேர்காணல்களுக்கு  எப்போதும் முக்கியத்துவம் உண்டு.   பவுத்த அய்யனார் நேர்காணலுக்கென்றே தனி இதழ் தொடங்கி கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் நேர்காணலுடன் ஜனவரி 2010-ல் முதல் இதழை வெளியிட்டார்.  இரண்டாவது இதழ் வண்ணநிலவனுக்காகவும், மூன்றாவது இதழ் நாசருக்காவும் வெளிவந்துள்ளது.


            “எந்த ஒரு விஷ­யத்திற்கும் சட்டம், அரசியல், சமூகம் ஆகிய முப்பரிமாணங்கள் உண்டு.   இந்த முப்பரிமாணங்களையும் சிக்கு சிடுக்கு இல்லாமல், தெளிவாக, ஸ்படிகம் போல் தன் எழுத்தில் வடிக்க முடிந்தவர் அவர்.  அறிவுஜீவி என்று யார் யாரையோ சொல்கிறோம்.   இவர் ஒரு முதல் தரமான அறிவு ஜீவி”, என்று ‘துக்ளக்’ சோவைக் குறிப்பிடும் எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல் இரண்டாவது இதழில் வெளியானது.


            “வண்ணநிலவன் எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன.  இடைப்பட்ட காலத்தில் பலவிதமான தத்துவப் பார்கைள் அறிமுகமாகி இலக்கியத்துடன் உறவாடி மறைந்து விட்டன.  அனைத்தையும் கடந்து, இன்றளவும் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை நம் மனம் நெருக்கமாகவே உணர்வதாக” இவரது சிறுகதைகள் பற்றி பாவண்ணன் எழுதிய கட்டுரை சொல்கிறது.  வல்லிக்கண்ணன் பற்றிய வண்ணநிலவன் கட்டுரை ஒன்று உள்ளது.


            விக்கிரமாதித்யன், சோ, பவா. செல்லதுரை, சா. கந்தசாமி, நர்மதா ராமலிங்கம், வண்ணதாசன், கலாப்பிரியா, ருத்ரய்யா போன்றோர் வண்ணநிலவன் பற்றிய தமது மதிப்பீடுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

            மூன்றாவது இதழில் நடிகர் ம. நாசரின் நேர்காணல் 36 பக்கங்கள் வரை நீள்கிறது.  நாசர் தமது நேர்காணலில்,

            “எனக்குக் கிடைத்த வாய்ப்பு எல்லா இஸ்லாமியர்களுக்கும் கிடைப்பதில்லை.  ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு சமூகத்தின் மீதும் அரசியல் குறியீடு இருப்பது ஆபத்தானது”

            “தமிழ் சினிமாவில் தீவிரவாதிகள் என்றால் அது முஸ்லீம்கள்தான் என்று ஸ்திரப்படுத்தி விட்டார்கள்”

             “எல்லா ஊடகங்களும் எல்லா மக்கள் மீதும் அக்கறை கொண்டிருந்தால் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  நான் முஸ்லீம் என்பதால், முஸ்லீம்கள் ஒடுக்கப்பட்டால்தான் கோபம் வரும், பரிதாபம் வரும் என்பது கிடையாது.  ஒடுக்குமுறை யாருக்கு, எங்கு நடந்தாலும் எனக்குக் கோபம் வரும்.  பொதுவாக இன்று அரசியலாக்கப்பட்ட மத உணர்வு ஆபத்தானதாக உள்ளது”

            “என்னுடைய இனம் பாதிக்கப்படும் போது மட்டுமே குரல் கொடுத்தேன் என்றால் அது சரி கிடையாது.  அது உத்தப்புரத்தில் நடந்தாலும் உஸ்மான்புரத்தில் நடந்தாலும் சரி, நம்மால் குரல் கொடுக்க முடியாவிட்டாலும் அது பற்றிய பிரக்ஞையாவது இருக்க வேண்டும்.  அது பற்றிய தெளிவு வேண்டும்.  சாதாரணக் குடிமக்கள் இதைப் பற்றிய அரசியலே தெரியாமல் உள்ளார்கள்”

            என்று பல்வேறு  கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.


            வெங்கடேஷ் சக்கரவர்த்தி, டிராட்ஸ்கி மருது, மோசசு மைக்கேல் பாரடே, பாலச்சந்தர், அனீஸ், ஞாநி, சிம்புத்தேவன், யூகி சேது, ருத்ரன் போன்றோர் நாசர் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


            “ஆவாரம்பூவிற்குப் பின் நாசருடைய பாத்திரத்தை நோக்கிய அணுகுமுறை மாறியிருப்பதை அவதாரம், தேவதை, குருதிப்புனல் போன்ற திரைப்படங்களின் வழி உணர முடியும்.  அதற்கு மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது நாசருடைய இடைவிடாத தேடல்”, என்று சண்முகராஜா தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.


            “பொருளாதார மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக தான் வணிகமயமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன் மீதே ஒரு வித கசப்புணர்ச்சியோடும் சுய விமர்சனத்தோடும் இயங்கி வருகின்ற அரிதாரமற்ற அரிதான கலைஞனாக” கருணாபிரசாத் நாசரை இனம் காண்கிறார்.  கவனிக்க வேண்டிய ஆளுமைகளை அறிமுகம் செய்வதால் படிக்க வேண்டிய இதழாக நேர்காணல் இருக்கிறது. 

            இதழ் - 2        பக். 40           விலை ரூ. 15

            இதழ் - 3        பக். 68           விலை ரூ. 25
 
வெளியீடு:

                        மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்,
                        3/363, பஜனை கோவில்தெரு,
                        கேளம்பாக்கம், சென்னை - 603 103
                        செல்: 9688086641.

                   e-mail: ayyapillai@gmail.com

1 கருத்து:

முல்லை அமுதன் சொன்னது…

vaazhthukkal.oli paravaddum.
mullaiamuthan

கருத்துரையிடுக