திங்கள், பிப்ரவரி 21, 2011

கனிமொழி வரலாற்று அறிஞராகவும் மாறிய கதை

கனிமொழி வரலாற்று அறிஞராகவும் மாறிய கதை.

-மு.சிவகுருநாதன் 

     
         தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியில் கட்டப்பட்ட கூத்து களரி சேத்தி-1  கட்டடங்களை 18 ,பிப்ரவரி 2011 இல் கனிமொழி திறந்து வைத்திருக்கிறார்.நல்லது.பாராட்டுவோம்! (தினமணி-திருச்சி பிப்.20,2011)
     
        நான் இங்கு அரசியல் பேசவில்லை என்று சொல்லி வரலாற்று அறிஞராக தன்னை மாற்றிக்கொண்டு கனிமொழி நிகழ்த்திய திரிபுவாத உளறல் சொல்லாடல்களே நம்மை பேசவைக்கின்றன.

        கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மு.கருணாநிதி களப்பிரர் காலத்தில் தமிழ் முடங்கிப்போனதாகச் சொல்லி தனது வைதீக ஆதரவை மீண்டுமொரு முறை  வெளிப்படுத்திக்கொண்டார். அதன் வழியில் கனிமொழியும் தனது வைதீக ஆதரவு நிலைப்பாட்டிற்கு இந்தப் பேச்சுக்கள் மூலம் வலுசெர்த்திருகிறார் .
         
          இந்தியாவில் தமிழகம், கேரளத்தைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் படையெடுப்பாளர்களின் கைகளுக்கு போனதால் பல மாற்றங்களை சந்தித்துள்ளனவாம். படையெடுப்பு நடைப்பெற்று  புதிய ஆட்சி முறை ஏற்படும்  போது அந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் அனைத்தும் மாறிவிடுகிறதாம் .
         
         இவர் எந்தப் படையெடுப்பைச்  சொல்கிறார்? தமிழகம், கேரளாவை மட்டும் விட்டுவிடுவதால்  முகலாயர் படைஎடுப்பைத்தான் சொல்கிறார் என்று அவதானிக்கலாம். இப்படையெடுப்பால்  என்ன கெட்டுவிட்டது? இந்தியாவில் இந்துக் கலாச்சாரம் அழிந்து முற்றிலும் இஸ்லாம் மயமாகிவிட்டதா? படையெடுப்பு என்று சொல்கிறபோது ஆரியப் படையெடுப்பு  தொடங்கி அய்ரோப்பியர் படையெடுப்பு வரை  சொல்லத்தான் வேண்டும்.எல்லாவற்றையும் சொன்னால்  தமிழ்நாடு மட்டும் எப்படி தப்பிக்கும்?

          தமிழகத்தில் மட்டும்தான் நிரந்தர ஆட்சி மாற்றம் இல்லாத ஒரு சூழல் இருந்துள்ளதாம். கிட்டத்தட்ட 2000 ஆண்டு கால  வாழ்க்கைமுறை, மதிப்பீடுகள், கலைவடிவங்கள், அதன் சாரங்களைத்  தொடர்ந்து பின்பற்றி வாழக்கூடிய  வாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுந்தான் கிடைத்துள்ளதாம். ஏன் மலையாளிகளுக்கு கிடைக்கவில்லை? அங்கு இடதுசாரிகள் ஆட்சியதிகாரத்தில் இருந்து கூட காரணமாக இருக்கலாம்.

        தமிழகத்தில் 2000 ஆண்டு வரலாறு என்ன? நிரந்தர ஆட்சி மாற்றமே இல்லையா? கிபி 250 -கிபி 600  வரை தமிழகத்தில் என்ன நடந்தது? மு.கருணாநிதி குடும்பத்தின் முன்னோர்களான  சேர,சோழ, பாண்டியர்கள்  2000  ஆண்டு காலத்தில் தொடர்ந்து கோலோச்சி  கலாச்சார, பண்பாட்டு மரபுகளை கடத்தி வந்தார்களோ?

        திராவிட இயக்க ஆட்சி இருக்கக் கூடிய ஒரு காலகட்டத்திலும் இல்லாத ஒரு காலகட்டத்திலும் நமது கலை வடிவங்கள், நம்பிக்கைகள் மாறக்கூடியவையாக இருந்துள்ளனவாம்.  எனவே நமது அடையாளங்கள்  என்பவை ஆட்சியையும் சார்ந்ததாகத்தான் பல நேரங்களில் அமையக் கூடிய அபாயம் உள்ளதாக  கனிமொழி எச்சரிக்கிறார்.

       40  ஆண்டுகளுக்கு மேலான திராவிட இயக்க ஆட்சியில் என்ன கலாச்சார புரட்சி நடத்தப்பட்டுள்ளது? ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் தவிர வேறு எந்த வகையான மதிப்பீடுகள் இவர்களால் உயர்த்தப்பட்டுள்ளன. வருணாஸ்ரமத்தை   மறுத்து கல்வி அளித்தது கூட திராவிட இயக்க ஆட்சியின் சாதனைகளில் இல்லை.

       கூத்து போன்ற தொல் தமிழ் கலைவடிவங்களை வருங்கால  தலைமுறைக்குக் கொண்டு சொல்வதற்கும் திமுக  ஆட்சி தொடர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும்   படையெடுப்பு,ஆட்சி மாற்றம் கலாச்சாரம் -பண்பாடு அழிவு என்றெல்லாம் உளற வேண்டிய அவசியம் என்ன?

       ரவிக்குமார் ஆசிரியராக இருக்கும்  மணற்கேணி- 02 (செப்டெம்பர் -அக்டோபர் 2010) இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்துடன் ஒத்திசைந்து முடிக்கிறேன்.


       “நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் ‘அத்தாரிட்டி’ களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கின்றோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.  இது தனிமனிதர்கள் அடையும் லாபநஷ்டங்கள்  தொடர்பான பிரச்சனையல்ல. வரலாற்றுப் பிரக்ஞை  குறித்த சிக்கல். இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்”.  

                   மணற்கேணி-02 (செப்டெம்பர் -அக்டோபர் 2010)

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக