திங்கள், மே 21, 2012

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்


பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில் 

                                               -மு.சிவகுருநாதன்
    
இடமிருந்து அப்துல் காதர்,அ.மார்க்ஸ்,மு.சிவகுருநாதன்,பா.ரவிக்குமார்,த.பிரிட்டோ


 1995 இல் அ.மா.வின் நேர்காணலை சுபமங்களாவிற்காக கும்பகோணத்தில் த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் பதிவு செய்தோம். இதை த.பிரிட்டோ தொகுத்து எழுதினார். பின்னர் அ.மா.விடம் காட்டி திருத்தம் செய்து நேர்காணல் இறுதி வடிவம் பெற்றது. இந்த நேர்காணல் சுபமங்களா ஜூலை-1995 இதழில் வெளியானது. த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், மு.சிவகுருநாதன் ஆகிய மூன்று பெயர்களுடன் இந்நேர்காணல் வெளியிடப்பட்டது.

    ஓடை.பொ.துரையரசன் தொகுத்து பயணி வெளியீடாக வந்திருக்கும் அ.மா. நேர்காணல் தொகுப்பில் இந்நேர்காணல் இடம்பெற்றுள்ளது. த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம் ஆகிய பெயர்களில் இந்நேர்காணல் வெளியாகியுள்ளது.

     இந்த நேர்காணல் குறித்து அப்போதைய காலச்சுவடு  ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக சுபமங்களா இதழில் எதிர்வினையாற்றியிருந்தனர். அதற்கு நான் இச்சிறு பதிலை எழுதினேன். பெரிய ஜனநாயகவாதியாக மதிக்கப்பட்ட கோமல் சுவாமிநாதன் இக்கடிதத்தை வெளியிடவில்லை.

    வேறு எங்கும் வெளியிடப்படாத இக்கடிதத்தை இங்கு பிரசுரிக்கிறேன். அப்போது எனக்கு வயது 22. இத்துடன்  மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோரின் கூட்டுக் கடிதத்தைக் கிண்டல் செய்து கேப்பியார் இதழில் மோகன் எழுதிய குறிப்பொன்றும் இங்கு நன்றியுடன் எடுத்தாளப்படுகிறது.


 
குருபீடமும் வாரிசு அரசியலும்

    அ.மார்க்ஸ்  நேர்காணல் தொடர்பான தொடர்ந்த விவாதங்களை வரவேற்கிறோம். அக்டோபர் 1995 சுபமங்களா இதழில் காலச்சுவடு மும்மூர்த்திகள் எழுதியுள்ள கருத்துகள் மீதான எதிர்வினையைத் தருவது அவசியமாகிறது. அதில் இவரது சிஷ்யர்கள் .................... என்று கேட்பதற்கு இவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. என்று வருகிறது. பேட்டி எடுப்பவர்கள் அவரது சிஷ்யர்களாக இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் சுராவின் சிஷ்யர்கள். அப்படியானால் நீங்கள் அமாவின் சிஷ்யர்கள் என்று எதிர்நிலை கட்டமைப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள்.

    தலைமை வழிபாடும் தங்களிடம்தான் இருக்கிறதே தவிர எங்களீடம் இல்லை. எங்களது கருத்துகளில் பெரும்பாலும் உடன்பாடுள்ள ஒரு சிறிய வட்டத்தைத்தான் என்று அமா கூறியுள்ளதை கவனிக்கவும்.

  அமைப்பியல், பின்-அமைப்பியல் சிந்தனைகள் எவ்வளவோ தோன்றிவிட்டபிறகு எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் சிஷ்யனாக இருக்கவேண்டிய அவசியமெதற்கு? இந்த நிலைக்கு ஆட்பட்டிருக்கும் மூன்று இளைஞர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

  சுரா ஆசிரியராக இருந்து வெளியான காலச்சுவடு இதழ்களுக்கும் வெகுஜன வணிக நடவடிக்கைகள் நம் வாழ்வு, சிந்தனை மற்றும் ரசனையால் புல்வெளிகளையும் நீர் நிலைகளையும் நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் அறிவுஜீவிகளுக்கு இது திருப்தி தராது. இளம் வாசகனை தீவிர எழுத்தைப் படிக்கத் தூண்டும் ஆவலே நோக்கம் என்று கூச்சல் போட்டு வெளியான சமீபத்திய இதழ்களையும் பார்க்கும்போது ஒன்று புலப்படுகிறது.

  மொழிபெயர்ப்பாக இருக்கட்டும் அல்லது வேறு எதுவாகினும் தாங்கள் செய்தால் அது சீரியஸ் எழுத்து மற்றவகள் செய்தால் அது ஐரோப்பிய கல்லறைகளிருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்றும் அவதூறு செய்வதன் அரசியல் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.

  இதேபோல் தலித் இலக்கியம் – இயக்கம் பற்றிய இவர்களது சொல்லாடல்கள் அனைத்தும் அதற்கு எதிராகவே இருப்பதை கூர்ந்து கவனிப்பவர்கள் அறிந்துகொள்ளமுடியும். ஊடகத்தின் சவாலை ஏற்று விவாதங்களில் பங்கு பெற்றால் நன்றாக இருக்கும்.

   சுபமங்களா வாசகர் வட்டம் என்பது சுபமங்களாவில் என்ன மாதிரியான விஷயங்கள் விஷயங்கள் வெளிவரும் என்பதையும் குறிக்கும். வன்முறை சூழலில்தான் இருக்கிறது, எங்களது எழுத்துக்களில் இல்லை என்ற நேர்காணல் தலைப்பை இன்றைய இலக்கியச்சூழலில் என்று மாற்றிவிட்டார்கள். இன்றைய சூழலில் இலக்கியம் – அரசியல் என்ற வேறுபாடுகள் முற்றிலும் நீங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

  காலச்சுவடு-10 இல் கண்ணன் தலையங்கம் எழுதியிருக்கிறார். அதைப் படித்த அழகிய சிங்கர் நீங்கள் எழுதிய தலையங்கம் உங்கள் தந்தை எழுதும் தலையங்கம் போல் உள்ளது. உண்மையா? என்று கேட்கிறார். பதிலில்லை.

இறுதியாக சில குறிப்புகள்:

01.சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். இப்பொழுது மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் என்ற பல்வெறு பெயர்களில் எழுதிவருகிறார் என்றும் தெரிகிறது.

02.சுராவின் காலச்சுவட்டில் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அவருடைய சிஷ்யனாகித் தீரவேண்டிய இந்த மும்மூர்த்திகளுக்கு இருப்பதுபோல் எங்களுக்குக் கிடையாது.

03.அமா சூறாவளி வீசினார், ஞானி தென்றலாகத் தவழ்ந்தார் என்று கூறுவதைத் தவிர்த்து விவாதங்களை நேர்மையாக எதிர்கொண்டால் நன்றாகயிருக்கும்.

04.இலக்கியமும் அரசியலும் வேறு வேறல்ல. எங்கும் தலைமை வழிபாடும் குரு பீடமும் சிஷ்யக்கூட்டங்களும் இருப்பதில் எங்களுக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. அது சுரா, அமா யாராக இருந்தாலும் சரி. இதை நீங்களும் உணர்ந்துகொண்டால் நல்லது.
        
 மு.சிவகுருநாதன்   அண்ணாபேட்டை - 614714   10.10.1995

 
எழுதியது எப்படி பற்றிய குறிப்பு

     அ.மார்க்ஸ் சுபமங்களா நேர்காணலில் சுந்தர ராமசாமியின் தலித் இலக்கியக்கோட்பாடு பற்றி சொல்லியிருந்ததற்கு சுந்தரராமசாமி மறுப்புக்கு மார்க்ஸ் எழுதிய பதிலுரைக்குப் பதிலுரையாக காலச்சுவடு ஆசிரியர் குழுவினர் மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன், கண்ணன் மூவரும் சேர்ந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளனர்.

    நமது குழப்பமெல்லாம் மூவரும் சேர்ந்து ஒரு கடிதத்தை எழுதுவது 
 எப்படி என்பதே. ஒருவர் பேனாவில் மையூற்ற, அடுத்தவர் எழுத, மூன்றாமவர் கவரில் அடைப்பாரா... அல்லது ஒருவர் சொல்ல, அடுத்தவர் எழுத, மூன்றாமவர் திருத்தங்கள் போடுவாரா... அல்லது ஒருவர் எழுத, அடுத்தவர் வேண்டாதவற்றை அடிக்க, மூன்றாமவர் நகலெடுப்பாரா... அல்லது சில வார இதழ்களில் ஒரே தொடர்கதையை வாரம் ஒருவர் என்று மாறி மாறி எழுதுவது போல் ஆளுக்கொரு பத்தி வீதம் எழுதுவார்களா... அல்லது ஒரே பேனாவை மூவரும் பிடித்துக்கொண்டு எழுதுவார்களா... புரியலயே.
                                                   - மோகன் 
 நன்றி :- கேப்பியார் (ஜனவரி – பிப்ரவரி 1996)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக