வியாழன், மே 24, 2012

பெட்ரோல் விலை உயர்வு அநியாயமானது

 பெட்ரோல் விலை உயர்வு   அநியாயமானது         -மு.சிவகுருநாதன்

      பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ 7.50 உயர்த்தியுள்ள மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கை மிகவும் அபாயகரமானது. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு  காரணமாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான பின்னணி அதுவல்ல. இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவிற்கு மன்மோகன் சிங் கும்பல்தான் காரணம்.

   அமெரிக்காவின் மிரட்டலுக்கு அல்லது அவர்களுக்கு சேவகம் செய்ய ஈரானிலிருந்து எண்ணைய், எரிவாயு இறக்குமதிக்கு முட்டுக்கட்டை போடும் இக்கும்பல் நமது நாட்டை இன்று சீரழிவுப் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

      நமது நாட்டுக் கொள்கை முடிவுகளை நாம் எடுக்காமல் அமெரிக்கா  போன்ற வல்லாதிக்கத்தின் பிடியில் ஒப்படைக்கும்  மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் (?!)  கூட்டணியின் தவறான கொள்கைகளின் விளைவு  இது. இவை மட்டுமல்ல; இன்னும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கப்போகின்றன.

      பெட்ரோல் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு முதல் காரணம் அதன் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் எண்ணற்ற வரிகள். நம்மை விட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, வல்லரசுக் கனவில்லாத பல நாடுகள் இத்தகைய வரிகள் இல்லாத காரணத்தால் குறைவான விலையில் பெட்ரோலை மக்களுக்கு வழங்குகிறன.

    எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக எப்போதும்போல் பழைய பல்லவி பாடப்படுகிறது. இதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இந்த இழப்புகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்யவேண்டியது அரசின் கடமையே தவிர   அந்த சுமையை மக்கள் மீது வைப்பதல்ல.

   எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்பதும் பம்மாத்து வேலை. அப்படியென்றால் எண்ணெய் நிறுவனங்கள்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும்வரை ஏன் காத்திருக்கவேண்டும்?

    ஐக்கிய முற்போக்குக்   கூட்டணியில் (UPA) அங்கம் வகிக்கும் மு.கருணாநிதியின் தி.மு.க., மமதா பானர்ஜியின் திர்ணமூல் காங்கிரஸ் போன்றவை ஒவ்வொரு முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்படும் போதும் சம்பிரதாயமான எதிர்ப்பறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு  தூங்கப் போய்விடுகின்றன. பாமர மக்களின் கஷ்டங்கள் பற்றிப் பேசுவதாக பொய்வேடம்  இவைகள்  தங்களுக்கு நல்ல பசையுள்ள துறைகள் இருக்கும் வரையில் அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறப் போவதில்லை.

    பேருந்து கட்டணம், மின்கட்டணம், பால் விலை என்று பல்வேறு விலை உயர்வுகளை இடைத்தேர்தல் பரிசாக தமிழக மக்களுக்கு வழங்கிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெட்ரோல் விலை உயர்வு பற்றி பேசும் தார்மீகத் தகுதி இல்லாதபோதும் மக்கள் பாசம் பொங்க கண்டன அறிக்கை வெளியிடுகிறார்.நல்ல காமெடி போங்கள்!

   பெட்ரோல் விலை உயர்வு எதோ நடுத்தர வர்க்கச் சமாச்சாரம் என்று நினைத்து கண்டும் காணததுபோல் இருந்தோமேயானால் விரைவில் வரப்போகிறது  மண்ணெண்ணைய், சமையல் எரிவாயு, டீசல் விலைகளில் கணிசமாக உயர்வு.

   அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களைத் தூண்டிவிட்டும், பின்னணியில் இருந்தும் 2014 பொதுத்தேர்தலில் ஆதாயம் அடைய பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் கும்பல் முயற்சி செய்கிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுப் பிரச்சினையிலும் அவர்கள் பலனடையவே குரல் எழுப்புகிறார்கள். மக்கள் படும் துயரங்களில் பங்கெடுக்க அல்ல. எனவே மக்கள் எச்சரிக்கையோடிருக்கவேண்டும்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக