புதன், மே 23, 2012

இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி


இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி                  
                            
                                  -மு.சிவகுருநாதன்
  


   மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது மூன்றாண்டு காலத்தையும் மாநிலத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு ஓராண்டு காலத்தையும் நிறைவு செய்தது மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்துடன்  இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் 60 ஆண்டுகள் நிறைவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கென அரசுகள் பல கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கின்றன. இவையெல்லாம் ஆளும்கட்சிக்கு விலையில்லா விளம்பரங்களாக உதவுகின்றன.

     இந்த பல கோடி விளம்பரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது. அத்துடன் கூடவே பல பத்தரிக்கை முதலாளிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசு எந்திரத்தின் குறைகள் மூடி மறைக்கப்படுகின்றன.

   ஆளும் கட்சிப் பத்திக்கைகளுக்கு அரசு விளம்பரங்கள் அளிப்பது ஒருவகை. இதில் தமிழகத்தைப் பொருத்தவரையில் மக்கள் குரல், நமது எம்.ஜி.ஆர்., முரசொலி, தினகரன் ஆகியன அடங்கும். ஆட்சி மாறியவுடன் தனது குரலையும் மாற்றிக்கொண்டு ஜால்ரா அடிக்கும் இதழ்கள் ஓர் வகை. இதற்கு தினத்தந்தி ஒரு நல்ல உதாரணம். அரசு விளம்பரங்கள் அளிப்பதன் மூலமாக அரசின் எடுபிடிகளாக மாறும் பத்தரிக்கைகள் மூன்றாவது ரகம். இதில் தற்போது தினமணி – எக்ஸ்பிரஸ் குழுமம் முன்னணியில் நிற்கிறது. கூடவே தனது பார்ப்பனத் தந்திரங்களை விடாமல் கடைபிடிக்கும் தினமலர்களும் இருக்கத்தான் செய்கின்றன.

   புதுக்கோட்டை இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகள் நாளிதழ்களில் பக்கம்பக்கமாக மிளிர்கின்றன. தேர்தல் ஆணைய தன் முனைப்பு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டுள்ளது. தி.மு.க. தனது முந்தைய செய்கைகள் தன்னைத் திருப்பித் தாக்குவதை நினைத்து ஒடுங்கிக் கிடக்கிறது. குடும்பச் சண்டைகள் இன்னும் கொஞ்ச காலத்தில் கட்சியையே இல்லாமல் செய்துவிடக்கூடும். 

   இங்கு பத்தரிக்கை தர்மம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. பணம் பெற்றுக்கொண்டு சாதகமான செய்தி வெளியிடுவது பலமுறை அம்பலத்திற்கு வந்துள்ளது. அரசின் விளம்பரங்களுக்காக அரசுக்கு ஜால்ரா அடிப்பதும் ஒரு வகையான ஊழலே. பிரபலங்களைப் பற்றி மோசமான செய்திகளை வெளியிடாதிருக்க பணம் கேட்டு மிரட்டும் புலனாய்வு இதழ்கள் தமிழகத்தில் வெகு பிரசித்தி பெற்றிருக்கின்றன.

     நடிகை ரோஜாவிற்கு எய்ட்ஸ் என்று புலனாய்வுச் செய்தி வெளியிட்ட நக்கீரனுக்கு இதுவரை எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டதாக நக்கீரன் எழுதிய விவகாரம் ஜெ.ஜெயலலிதாவைவிட மாட்டுக்கறி உண்ணும் கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களையே இழிவுபடுத்தியது என்பதுதான் உண்மை.

    முடியாட்சியில் மன்னர் அசோகன் செய்த மக்கள் நல அரசை இந்த போலி ஜனநாயகவாதிகளால் தர முடியாதது விசித்திரமான உண்மை. இங்கு ஜனநாயகம் என்ற பெயரில் நாடாளுமன்ற, சட்டமன்ற எண்ணிக்கை அடிப்படையிலான போலி ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. துளியளவு வாக்கு சதவீத வித்தியாசமும் பேரளவு  உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபாடும் உள்ள இன்றைய ஜனநாயக முறையை மாற்ற சம்மந்தப்பட்ட கட்சிகள் முன்வராததுதான் வேடிக்கை.

   60 ஆண்டு ஜனநாயகம் என்று பெருமை பேசும் அதிகார வர்க்கங்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை ஓரளவு பலன் தரும். இதன் மூலம் இப்போதிருக்கக்கூடிய பெருமளவு முறைகேடுகள் குறைய வாய்ப்புண்டு. கூட்டணி அரசியல் பேரம், குதிரை பேரம் போன்றவற்றின் பலன்களை அடைய முடியாமற் போய்விடும் என்ற பயம் இதற்குக் காரணமாக இருக்கும்.

   எடுத்துக்காட்டாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் அடிக்கும் சட்டத்திற்குப் புறம்பான கூத்துகள் முடிவுக்கு வரும். இத்தகைய முறைகேடுகளை தி.மு.க. செய்யும்போது அ.இ.அ.தி.மு.க. வெளியிலிருந்து கூச்சல் போடும். அ.இ.அ.தி.மு.க. ஆளும்கட்சியான பிறகு மீண்டும் தி.மு.க. செய்ததையே அட்சரம் பிசகாமல் தானும் செய்யும்.

  இந்த 60 ஆண்டுகளில் ஜனநாயகம் யாருக்குச் சேவை புரிந்திருக்கிறது? ஆளும் வர்க்கம் தங்களுக்கு சேவை செய்ய ஏதுவாக ஜனநாயகம் வளைக்கப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தால் சாமான்ய மக்கள் அடைந்த பலன்களைவிட அதிகாரவர்க்கங்கள் பெற்றவை ஏராளம். 

   2 ஜி அலைக்கற்றை மட்டுமல்ல; இந்தியாவின் இயற்கை வளங்கள்  யாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன? 2 ஜி அலைக்கற்றைக்கு சமமாக நிலக்கரி சுரங்க முறைகேடுகள் இப்போது அம்பலமாகியுள்ளன. இதிலிருந்தே ஜனநாயகத்தின் பலன்களை யார் அனுபவிக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

  இன்னும் பழம்பெருமை பேசுவதில் பயனில்லை. உரிய முன் முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் 60 ஆண்டுகளென்ன? 100 ஆண்டுகள் ஆயினும் இந்த அவலங்கள் நீடிக்கவே செய்யும். இது இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வி மட்டுமல்ல; இதன் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் கோடானுகோடி சாமான்ய இந்திய மக்களுக்குத்தான் உண்மையான தோல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக