வியாழன், ஜூலை 07, 2011

சமச்சீர் கல்வி வழக்கு : ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது!

சமச்சீர் கல்வி வழக்கு : ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது!




சென்னை: 

        சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் பி.பி.ராவ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் கே.பாலு, பிரசாத் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும்  வக்கீல் ஆர்.நடராஜன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் வக்கீல் வில்சன் ஆஜராகக்கூடாது. அவர் கடந்த ஆட்சியில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்தார். சமச்சீர் கல்வி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர் படித்து பார்த்துள்ளார். இந்த வழக்கில் அவர் வாதாடுவது நியாயமாக இருக்காது. அவருக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

          அப்போது கோர்ட்டில் இருந்த வக்கீல் பி.வில்சன், ‘கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன்’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம். தொடர்ந்து வருவது சரியல்ல’ என்றார். 

      பி.வில்சன் குறுக்கிட்டு, ‘கோர்ட்டுக்கு உதவியாக இருங்கள் என கடந்த முறை கூறியதால் வந்தேன்’ என கூறினார். தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல்கள் பிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகியோர் எழுந்து, ‘‘வக்கீல்கள் எந்த வழக்கில் வேண்டுமானாலும் ஆஜராகலாம். அதற்கு நீங்கள் தடை விதிக்கக் கூடாது. அரசு வக்கீலாக இருந்த காரணத்தால் அரசுக்கு எதிரான வழக்கில் ஆஜராகக்கூடாது என எப்படி கூறமுடியும். இது நியாயமற்றது. கட்சிக்காரருக்கு கடமையை செய்ய வேண்டியது வக்கீல்களின் பணியாகும். இதை தடுக்கக் கூடாது’’ என்றனர்.

        ‘வில்சன் ஆஜராகக் கூடாது என எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கட்டுமா?’ என தலைமை நீதிபதி கேட்டார். இதையடுத்து, ‘உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம், நானே வெளியேறுகிறேன்’ என கூறிவிட்டு வில்சன் வெளியே சென்றார். தொடர்ந்து வழக்கில் வாதம் நடந்தது. 

மனுதாரர் வக்கீல் எஸ்.பிரபாகரன்: 

            சமச்சீர் கல்வி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்கக் கூடாது. கல்வியாளர்கள் சார்பாக குழுவில் இடம் பெற்ற ராஜலட்சுமி பார்த்தசாரதி உள்பட 2 பேரும் உண்மையில் கல்வியாளர்கள் அல்ல. அவர்களை கமிட்டியில் போட்டதே தவறு. எனவே, இந்த கமிட்டி அறிக்கையை ஏற்கக் கூடாது. இது குறித்து விரிவாக வாதாட உள்ளேன். 

          தலைமை நீதிபதி: தமிழக அரசு தரப்பு வாதத்தை கூறுங்கள்.
         மூத்த வக்கீல் பி.பி.ராவ்: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் அறிக்கை சரியானதுதான். இதை ரத்து செய்யக்கூடாது. மாணவர்களுக்கு தரமான கல்வி தருவதற்காகத்தான் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களது நலன் கருதி இந்த துரித நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பி.பி.ராவ் கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்தது.

நன்றி:- தினகரன்,  07.07.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக