செவ்வாய், ஜூன் 04, 2019

‘அந்நியன்’ பட பாணியில் வரலாற்றுப் பாடங்கள்!

‘அந்நியன்’ பட பாணியில் வரலாற்றுப் பாடங்கள்!



மு.சிவகுருநாதன்




(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 06)





     எட்டாம் வகுப்பு முதல்பருவ வரலாற்றுப் பாடத்தில் ‘மக்களின் புரட்சி’ (அலகு:4) என்றொரு பாடம் உண்டு. இதுநாள் வரையில் ‘கலகம்’ என்று வரலாற்றில் களங்கப்படுத்திய நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று மகிழ்ச்சியடையப்போகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்!



    ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘அந்நியன்’ படத்தில் வரும் கதாநாயகனுக்கு ஏற்பட்டுள்ள ‘Dissociative Identity Disorder’ (முன்னதாக ‘Multiple Personality Disorder’ எனப்பட்டது.) நிலைபோல் பாடநூல் இருக்கிறது.


     ‘தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகளில்’ ‘பாளையக்காரர்களின் புரட்சி’யில் (பக்.186) தொடங்குகிறது. பூலித்தேவன், கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் எனப்போகும் பாடம் ‘தென்னிந்திய கிளர்ச்சி (1800-1801) என மாறி தீரன் சின்னமலையுடன் முடிகிறது.


     பாடநூல் பூலித்தேவர் என்றே குறிக்கிறது. இது மரியாதையா அல்லது சாதியா என்பது எழுதியவருக்கே வெளிச்சம். பிறரது சாதிப்பட்டங்களைத் தவிர்த்து பாடநூல் எழுதிவிட்டு விதிவிலக்குகளை உருவாக்குவது நல்லதல்ல. (ஏழாம் வகுப்புத் தமிழ் – முத்துராமலிங்கத்தேவர்) பூலித்தேவன் எனும்போது அது சாதியடையாளாகமாக இருப்பதில்லை; அவரை சாதிக்குள்ளுள் அடைக்க முடியாது.


     பிறகு, ‘வேலூர் கலகம்’ (1806) கலகத்திற்கான காரணங்கள், கலகத்தின் போக்கு, கலகம் அடக்கப்படுதல், வேலூர் கலகத்தின் விளைவுகள், கலகத்தின் தோல்விக்கான காரணங்கள் என்று முடிகிறது.


     பிறகுதான் புரட்சியே தொடங்குகிறது. அதாவது ‘பெரும்புரட்சி’ (1857) எனச் சொல்லப்பட்டு உடனடியாக ‘கலகத்தின் தோற்றம்’ (பக்.194) என்று தடம் மாறுகிறது. அடுத்த தலைப்பே, ‘புரட்சியின் போக்கு’ என்பதாக திசைமாறி, வழக்கம்போல் கலகம் அடக்கப்படுதல், கலகத்தின் தோல்விக்கான காரணங்கள், கலகம் நடைபெற்ற இடங்கள், கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகள், கலகத்தின் விளைவுகள் என்று பாடம் உரைக்கிறது.


    பயிற்சி வினாக்களில் ‘வேலூர் கலகம்’ தவிர்த்த பிற ‘புரட்சிகள்’ என்றே விளிக்கப்படுகின்றன.


      தலைப்பில் மட்டுமல்லாது இடையே கலகம், புரட்சி என ‘பெருங்கலக்கமே’ நடக்கிறது!


எடுத்துக்காட்டாக சில.


    “சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுவானதிட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை, நவீன் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடம் இல்லை”, என்று சொல்லிவிட்டு அடுத்த வரியே, “கலகத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை”, என்கிறது பாடநூல். (பக்.195)


     “இந்தியாவின் மாபெரும் தேசபக்தர்களுள் அவரும் (ஜான்சி ராணி லட்சுமிபாய்) ஒருவர்”. “ஆங்கில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி 1857 புரட்சியில் கலந்துகொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் இராணி லட்சுமிபாய் ஆவார்”. (பக்.194)


    ஆனால், “திப்பு சுல்தான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக போரிட்டார்”. (பக்.196) என்னே அருமையான கண்டுபிடிப்பு!


    “ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டிற்கு சென்ற பிறகு இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ வேண்டுமென எண்ணி முஸ்லீம் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் புரட்சியில் கலந்துகொண்டனர்”. (பக்.195)


     மேற்கண்ட வரிகள் உணர்த்துவது என்ன? “முஸ்லீகள் தேசபக்தர்களாக இருக்க முடியாது” என்பதுதான். 1850 களில் தேசம், தேசபக்தி என்பதன் பொருள் என்னவாக இருந்திருக்கும்? இந்திய தேசியமெல்லாம் உருக்கொள்ளாத காலமது.


     ஜான்சி ராணி லட்சுமிபாய் தேசத்திற்காக ஆங்கிலப்படைகளை எதிர்த்துப் போரிட்டார். அது யாருடைய ஆட்சியுரிமைக்கானது? திப்பு சுல்தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகத்தான் போரிட்டார். 1857 வரை கம்பெனி ஆட்சிதானே இருந்தது. ஆனால் முஸ்லீம்கள் தங்களது ஆட்சிக்காகப் போராடினார்களாம்! போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மதத்தினரும் சேர்ந்தல்லவா இரண்டாம் பகதூர்ஷாவை டெல்லி மன்னராகப் பிரகடனப்படுத்தினர்? பாடநூல் எவ்வளவு வெறுப்பரசியலை விதைக்கிறது பாருங்கள்!


    “1806ல் நடந்த வேலூர் கலகத்தை, 1857ல் நடைபெற்ற ‘முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி’ என வி.டி.சவார்க்கர் குறிப்பிடுகிறார்”. (பக்.192)


    “வி.டி.சவார்க்கர் ‘முதல் இந்திய சுதந்திர போர்’ என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப்போர்’ என விவரிக்கிறார்”. (பக்.196)


    வி.டி.சவார்க்கர்தான் முதலில் அவ்வாறு சொன்னதான் தொனி இப்பகுதியில் கிடைக்கிறது. அதை உறுதிசெய்யும் விதமாக, ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’, பயிற்சியில் “1857 புரட்சியை ------------ என்பவர் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்” (பக்.197) என்ற வினாவும் கேட்கப்படுகிறது.


    “பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்”.


    “பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்”. 
 

    “மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்”, என்றெல்லாம் அந்தமான் சிறையிலிருந்து கருணை மனுக்கள், மன்னிப்புக் கடிதங்கள் பல எழுதி விடுதலையான வி.டி.சவார்க்கர் (நல்ல வேளை வீர சவார்க்கர் என்று எழுதவில்லை!) எழுத்துகளைக் கொண்டு வேலூர் புரட்சி மற்றும் பெரும் புரட்சிக்கான மதிப்பீடுகளை எழுதுவது மிக மோசமானது. 
 
    அலகு 3: ‘கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்’ என்ற பாடத்திலும் ‘விவசாயிகள் புரட்சி’ எனும் தைப்பில் சந்தால் கலகம், இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி), பாப்னா கலகம், தக்காண கலகம், மாப்ளா கிளர்ச்சி ஆகியன உண்டு. ‘இண்டிகோ கலகம்’ எப்படி ‘அவுரி புரட்சி’யானது? சம்பரான், கேடா (கைரா), பர்தோலி ஆகியன தப்பித்தது. இவை சத்தியகிரகங்களாகப் பட்டியலிடப்படுகிறது.


    7, 8 வகுப்புப் பாடநூல்கள் போதிய கவனமோ, சிரத்தையோயின்றி கடமைக்குத் தயாரிக்கப்படுள்ளன. இதே நிலை சமச்சீர் பாடநூலிலும் நிகழ்ந்தது. தலைப்புகளை மற்றும் மாற்றிவிட்டு உள்ளடக்கத்தை முந்தைய பாடநூல்களிலிருந்தே எடுத்துள்ளனர். பாடத்திட்டம் அமைத்தவர்கள் புரட்சி என்று தலைப்பிட்டுள்ளார்கள். பாடம் எழுதியவர்கள் அதன் கீழே பழைய கதையை எழுதியுள்ளனர்.


     சமச்சீர் பாடநூல் குறித்த டிச. 18. 2016 ஆம் தேதியிட்ட எனது பதிவொன்றை இங்கு மீளவும் வெளியிடுகிறேன். 
 

                    09. வேலூர் கலகமும் மாபெரும் புரட்சியும்




     ‘ஆரியர்கள் வருகை’, ‘முகலாயர்கள் படையெடுப்பு’ என்கிற தலைப்புகளில் ஒரு சார்புக் கண்ணோட்டத்துடன் பாடநூல்கள் எழுதப்பட்டு வந்தன. இவற்றை மாற்ற கல்விப் புலத்தில் பெரும் போராட்டமே தேவைப்பட்டது. இந்துத்துவ அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காவிப் பாடங்கள் இது போன்று இருப்பது இயல்பான ஒன்று. திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழகத்தில் இந்நிலை என்பது விந்தையானது. 
 

      கல்வி – கருத்தியல் குறித்து மனித உரிமைப் போராளி மறைந்த டாக்டர் பாலகோபால் கூறுவதை கொஞ்சம் கவனிப்போம். 
 

       “மாணவர்களுக்கு வழங்கப்படும் எந்த வகைக் கல்வி ஜனநாயகமானதாக இருக்கும்? சில பிரத்தியேக பள்ளிகளில் படிக்க வைப்பது ஜனநாயகமா? கல்வி ஒரு உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கல்வியை ஞானமாக மட்டும் வழங்குவதில்லை. இந்த ஞானத்தை சில அபிப்பிராயங்களுடன் வழங்குகிறோம். நல்லது, கெட்டது – உயர்வு, தாழ்வு – பின்பற்றவேண்டியது, தடுக்கப்படவேண்டியது – நாகரிகம், அநாகரிகம் எனும் அபிப்பிராயங்களுடன் வழங்குகிறோம். அதாவது கல்வியை ஒரு உலகக் கண்ணோட்டத்துடன் கூறுகிறோம். கணக்கு நன்றாக வந்தால் மாணவனுக்குப் புத்திக்கூர்மை இருப்பதாகக் கூறுவது ஒருவகை கருத்தியல். இது உண்மையல்ல. ஞானத்தை பெருமதிகளுடன் இணைத்து வழங்கவேண்டும்”. (கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர்கொள்ள…, பாலகோபால், சிந்தன் புக்ஸ் வெளியீடு, டிச. 2015) 
 

      அவர் மேலும் கூறுவதிலிருந்து இன்னும் கொஞ்சம் கூடுதல் தெளிவு கிடைக்கும். இதைத் தமிழ்ச் சூழலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். 
 

      “பாடப்புத்தகங்களில் உலகின் ஞானம் அனைத்தும் இருப்பதில்லை. பாடப்புத்தகங்களின் தேர்வுக்குப் பின்னால் ஒரு கருத்தியல் இருக்கிறது. ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கிறது. தெலுகில் நன்னயா எழுத்துகள் இருப்பதற்கு ஒரு கருத்தியல் இருக்கிறது. கிராமிய இலக்கியம் தேர்வு செய்யப்படாமைக்கு ஒரு கருத்தியல் இருக்கிறது. மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள்? எவ்வாறு சொத்து சேர்த்தனர்? எவ்வாறு ராஜ்யத்தை இழந்தார்கள்? என்பதைக் கூற விரும்பினார்கள். ஆகவே, வரலாற்றில் அசோகர் பற்றிய பாடங்கள் உள்ளன. மக்கள் தனது வாழ்க்கை வழிகளை எவ்வாறு தயாரித்துக் கொண்டனர்? தமது திறமையை எவ்வாறு வளர்த்துக் கொண்டனர்? எவ்வாறு அழித்தனர் என்பது வரலாறு எனக்கொண்டால் , அதனை மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டுமென்றால் பாடப்புத்தக பாடங்கள் வேறுவகையாக இருக்கும். ஆகவே பாடப்பொருள் தேர்வில் தெளிவான கருத்தியல் இருக்கிறது”. (பக். 186, மேலே குறிப்பிட்ட நூல்) 
 

     “இந்திய வரலாற்றில் 1857 ஆம் ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. இவ்வாண்டில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு, இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியை அதிர்ச்சியடையச் செய்தது. இப்புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் ‘படைவீரர்கள் கிளர்ச்சி’ என்றும், இந்திய வரலாற்று அறிஞர்கள் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என்றும் வர்ணிக்கின்றனர். (பக். 55, சமூக அறிவியல், பத்தாம் வகுப்பு) 
 

       இங்கு நமக்கு ஒரு அய்யம். அது என்ன ஆங்கில வரலாற்று அறிஞர்கள்? பிரிட்டனைச் சேர்ந்தவர்களா அல்லது இங்கிலீஷில் எழுதுபவர்களா? உலகம் முழுவதிலும் இங்கிலீஷில் எழுதும் வரலாற்று அறிஞர்கள் உண்டுதானே! அவர்கள் அனைவரும் ‘சிப்பாய் கலகம்’ என்று சொன்னார்களா என்ன? 
 

      காரல் மார்க்ஸ் 1853 – 1857 காலகட்டம் குறித்து நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் ஏட்டில் எழுதிய கட்டுரைகள், இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள் ஆகியவற்றில் இந்தியப் புரட்சி என்றே குறிக்கிறார். இவர் என்ன ஆங்கில வரலாற்று ஆசிரியரா? 
 

     காரல் மார்க்ஸின் ‘இந்தியா பற்றி…’ என்ற மொழிபெயர்ப்பு நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சிலவரிகள் இங்கு தரப்படுகிறது. 
 

    “போகப்போக, மேலும் பல செய்திகள் வெளிவரும். இது இராணுவ கலகமல்ல, மாறாக தேசியப் புரட்சியாகும் என்பதை இச்செய்திகள் அனைவருக்கும் தெளிவாக்கும்”, (பக். 162, இந்தியா பற்றி.. , காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பக வெளியீடு:அக். 2012) 
 

     “இந்தியப் புரட்சி, ஐரோப்பியப் புரட்சியின் சிறப்பியல்புகளையே மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது வினோதமானதாகும்”, (பக். 171, மேலே குறிப்பிட்ட நூல்) 
 

      அன்றைய வரலாற்று ஆய்வுகள் காலனிய, தேசிய மற்றும் மார்க்சிய நோக்கில் இருந்தன. இன்று வரலாறு அவ்வாய்வுகளைத் தாண்டி பல்வேறு நோக்குநிலைகளைக் கொண்டு அகலித்துள்ளன. காலனிய வரலாற்று ஆய்வுக்கு எதிரான இந்திய தேசிய வரலாற்று எழுதிகள் ‘சிப்பாய் கலகத்தை’ முதல் இந்திய சுதந்திரப் போராக திருத்தி எழுதினர். ஆனாலும் இவற்றில் ஊடாடும் மதச்சார்பு நிலைகள் கூர்ந்து அவதானிக்க வேண்டியன. 
 

      இதே பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 100 வது பக்கத்தில் ‘வேலூர் கலகம் 1806’ என்ற தலைப்பில் உள்ள பத்தி கீழ்க்கண்டவாறு உள்ளது. 
 

     “ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் புகுத்திய சில கட்டுபாடுகள் வேலூர் கலகத்திற்கு வழிவகுத்தது. இந்து வீரர்கள் தங்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடாது என்றும், முஸ்லீம் வீரர்கள் தங்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இது ராணுவ வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திப்புவின் பிள்ளைகள் இவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினர்”. 
 

      மறுபுறத்தில் வேலூர் புரட்சியை ‘வேலூர் கலகம்’ என்று தீர்மானிக்கும் முடிவு, இந்திய தேசியத்துடன் கூடிய இந்துத்துவ பெருமித மற்றும் காலனித்துவ வரலாற்றில் கடன் பெற்ற பார்வையை அப்படியே பிரதிபளிக்கவேண்டிய அவசியம் ஆராயப்பட வேண்டியது. இதன் பின்புலத்தில் திப்பு மீதான வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பரசியல், வடக்கு-தெற்குப் பாகுபாடு எல்லாம் கவனம் குவிக்க வேண்டிய பிற காரணங்கள். 
 

     இதுகுறித்து காரல் மார்க்ஸ் ‘இந்திய வரலாறு பற்றிய குறிப்புகளில்’ பின்வருமாறு எழுதுகிறார். 
 

      “ஜூலை 1807: வேலூரில் (சென்னை ராஜதானி) சிப்பாய்கள் கலகம்; அவ்வூரின் கோட்டையில் தான் திப்புவின் புதல்வர்கள் கைதிகளாக (வைக்கப்பட்டிருந்தனர்) அவர்களின் சார்பில் அவர்களது மைசூர்க்கார ஊழியர்கள் கலகம்; அவர்கள் திப்புவின் போர்க்கொடியை உயர்த்தினர்; கர்னல் கில்ஸ்பீ, ஆர்க்காட்டின் துப்பாக்கி ஏந்திய குதிரைப்படையுடன் சென்று, கலகக்காரர்களில் பலரைக் கொன்று, அவர்களை ஒடுக்க்கினார் – ஆயினும் மிண்டோ பிரபு அவர்களைக் ‘கௌரவமாக’ நடத்தினார். (பக். 469,470, இந்தியா வரலாற்றுக் குறிப்புகள்: 664 – 1858, காரல் மார்க்ஸ், நூல்: இந்தியாவைப் பற்றி…, விடியல் பதிப்பக வெளியீடு, அக். 2012, விலை: ரூ. 390) 
 

இதன் இங்கிலீஷ் வடிவம் கீழ்க்கண்டவாறு அமைகிறது. 
 

          “Mutiny at vellore (Madras Presidency) in fort of which Tipu’s sons (were held) captive; mutiny in their behalf by their Mysorean suite; They hoisted Tipu’s Standard; colonal Gillespie, with dragoon regiment of Arcot, Quelled them, Killing many – Lord Minto, however, gave them ‘genteel’ treatment”. (Notes on Indian History – K.Marx, தமிழர் வரலாறு – சில கேள்விகளும் தேடல்களும் – பக். 143, என்னும் தேவ.பேரின்பன் நூலின் மேற்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.) 
 

       திப்புவின் பிள்ளைகள் ‘தூண்டிவிட்ட’ இப்புரட்சியைப் பற்றிக் குறிப்பிடாமல் வேறொரு சந்தர்ப்பத்தில் மார்க்ஸ் பின்வருமாறு எழுதுவது, இத்தகைய அரசியல் பின்னணிகளை அரிந்து கொள்ள உதவும். 
 

     ."குஜராத்திலும், சத்தாராவிலுள்ள பண்டரிபுரத்திலும், நாகபுரிப் பிரதேசத்தில் ஹைதராபாத்திலும், கடைசியில் தென்புலத்து மைசூர் வரையிலும், பொது ஜனப் புரட்சி செய்வதற்கான முயற்சிகள் முன்பே நடைபெற்றன. எனவே பம்பாய், சென்னை ராஜதானிகளது அமைதி முற்றிலும் உறுதியான ஒன்று என்று எவ்வகையிலும் கொள்ள முடியாது,” (பக். 195, இந்தியா பற்றி.. , காரல் மார்க்ஸ், விடியல் பதிப்பக வெளியீடு:அக். 2012) 
 

      பல்லாண்டுகளாக வேலூர் புரட்சியை ‘வேலூர் கலகம்’ என்று சொல்லிக் கொடுக்கும் அபத்தம் கண்டிக்கத்தக்கது. வரலாறு பற்றிய பார்வைகள் விரிவான நிலையில் தமிழக பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளின் ‘நோட்ஸ்களை’ ஆதார நூற்களாகக் கொண்டு பாடநூற்களை எழுதவது மிக மோசமானது மட்டுமல்ல; வருங்கால சமூகத்தின் வாழ்வியலைக் குலைப்பதாகும்.



(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக