புதன், ஜூன் 12, 2019

‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வராதா?


‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வராதா? 


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 12)




நான்கு: இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி!?


     ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில்  ‘இந்தி மொழிகள்’,  எனும் தலைப்பில், (பாடம்: மக்கள் தொகையும் குடியிருப்புகளும்)

Languages of India

     “India has many languages and culture. Each state has its own language though the National language is Hindi, 22 major language were spoken by about 97 percent population of the country. India follows Kashmiri, Urdu, Punjabi, Hindi, Rajesthani, Gujarati, Bengali and Assames etc., these language are followed by North India. The main languages of the Dravidian family are Tamil, Telugu, Kannada, Malayalam etc. These languages are mainly spoken in Southern India”. (page:178)

3. “The official language of India is .....................”

(a) Marathi (b) Tamil
(c) English (d) Hindi
(page:183)

     இதன் தமிழ் வடிவத்தைப் பாருங்கள்.

     “இந்தியா பல வகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பலமொழிகள் பயன்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் முக்கியமான மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகிறது”. (பக்.210)


3. “இந்தியாவின் ஆட்சி மொழி …………………………………………. ஆகும்.
(அ) மராத்தி       (ஆ)   தமிழ்
(இ) ஆங்கிலம்     (ஈ)   இந்தி
 (பக்.217)

       சென்ற சமச்சீர் பாடநூலில் பாடத்திற்குள் “இந்தி அலுவல் மொழி” என்று சொல்லிவிட்டு பயிற்சியில், “இந்தியாவின் தேசியமொழி எது” எனக்கேட்டனர். இங்கு ‘the National language’ இந்தி என்று சொல்லி, “The official language of India is .....................” எனக் கேள்வி கேட்கின்றனர். (ஆங்கில வழி)

      மொழியின் பெயர் காஷ்மீர் அல்ல; காஷ்மீரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மட்டுமே திராவிட மொழிகள் இல்லை. 

    ‘the National language’ தமிழில் ஆட்சிமொழியாக மாறுகிறது. ஆட்சிமொழி என்றால் என்ன? அலுவல் மொழியை (official language)  ஆட்சி மொழி என்று எப்படிச் சொல்லலாம்? அப்படியேச்  சொல்லித் தொலைத்தாலும்  இந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும் இந்திய அலுவல் (official language) மொழிதானே! இந்தியை மட்டும் சொல்வானேன்? பல்விடைத்தேர்வில் ஆங்கிலம், இந்தி என இரு விடைகளும் சரிதான். நமது இந்திப் பிரியர்களுக்கு ஏதோ ஓரிடத்தில் தவறாகவாவது இந்தி தேசியமொழி என்று பிதற்றாவிட்டால் தூக்கம் வராது போலும்! இது கடந்த 30 ஆண்டுகளாக உள்ள கள நிலவரம். 

   “Each state has its own language though the National language is Hindi, 22 major language were spoken by about 97 percent population of the country. India follows Kashmiri, Urdu, Punjabi, Hindi, Rajesthani, Gujarati, Bengali and Assames etc., these language are followed by North India”. (page:178) என்ற வரிகளில் 22 major language were spoken’ என்ற தொடர்  ‘22 major languages are spoken’ என்றும் ‘these language are followed’ என்ற தொடர் ‘these languages are followed’ என்றும் இருக்க வேண்டும். ஆங்கிலத்திலும் ஒருமை-பன்மை மயக்கம்; காலக் குழப்பமும் கூட.
 
   இந்தி மொழியை தேசிய மொழியாக்குவதில் சிலருக்கு ஏனிந்த ஆர்வம் என்று தெரியவில்லை. பாடநூல்களிலாவது தேசிய மொழியாக்கிப் பார்க்க சிலர் துடிப்பது ஏன்? குஜாராத் உயர்நீதிமன்றம் கூட 2009 இல் இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

     குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சோடியா என்பவர் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது அவற்றின் விலை, உள்ளடக்கம், தரம் குறித்த விவரங்களை இந்தி மொழியில் மட்டுமே அச்சிட வேண்டும் குஜராத் தலைமை நீதிபதி முகோபாத்தியாயா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 


ஐந்து: மொழிபெயர்ப்புகள் / வல்லினம் மிகும், மிகா குளறுபடிகள். 


    மேற்கண்ட பாடத்தில் சில முக்கிய தினங்கள் அட்டவணையிடப்படுகின்றன. அதில் ‘The world cultural diversity day’ இடம்பெறுகிறது. அது ‘உலக கலாச்சார பல்வகை நாள்’ என மொழிபெயர்க்கப்படுகிறது. (பக்.211) இத்தகைய மொழிபெயர்ப்புகளை பாடநூலின் பக்கத்திற்குப் பக்கம் கண்டு களிக்கலாம். மேலும் ‘மின்னணு’ என்றால் ஆகாது; ‘மின்னனு’ தான்! “வல்லினம் மிகும் இடங்களில் மிகாது; மிகாது என்றால் மிகும்”, எனப் புதுவிதி உண்டாக்கியுள்ளனர். (எ.கா.) கருப்பு பணம்

    
ஆறு: தனியார் துறையும் பொதுத்துத்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுவது எப்படி? 

  
     ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் 'உங்களுக்குத் தெரியுமா?' பகுதி கீழ்க்கண்டவாறு உள்ளது. 

    "நம் இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதாவது பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன”. (பக்.240) 

    உலகமயமக்கலில் கலப்புப் பொருளாதாரத்தின் நிலை என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவை இரண்டும் எப்படி இணைந்து செயல்படும்? ஒரே சேவையை ஆரோக்கியமான போட்டியுடன் எதிர்கொள்வது கலப்புப் பொருளாதாரமா? அல்லது இணைந்து செயல்படுவதா? 

     பொதுத்துறை நிறுவனமான BSNL க்கு 4ஜி உரிமம் இல்லை, ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற 4ஜி உரிமம் வைத்திருக்கும் நிறுவனங்களுடன் எப்படி ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடமுடியும்? ஒன்றாக இணைந்து செயல்படுவது என்ன? இணைத்துறையா? பொதுத்துறை நிறுவன பங்குகளைத் தனியாருக்கு விற்றுவிடுவதா? 

  
ஏழு: பருத்தி புடவையாக காய்த்த மாதிரி கோதுமை மாவாக விளைந்தால் நல்லதுதானே! 


     முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உற்பத்தி எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கோதுமைமாவு (முதன்மைத்துறை) - ரொட்டித் தொழிற்சாலை = உணவு உற்பத்தி (இரண்டாம் நிலை உற்பத்தி) (பக். 241) 

    கோதுமை மாவு முதன்மைத்துறை என்றால் கோதுமை என்ன துறை? மாவாக விளைந்தால் ரொட்டி சுட வசதிதானே! பருத்தி ஆடையாக காய்த்தாலும் கரும்பு சர்க்கரையாக விளைவது எவ்வளவு சிறப்பு? இப்படியெல்லாம் மரபணு மாற்றம் செய்தாலென்ன? பத்தாம் வகுப்பு அறிவியலில் மரபணு மாற்றப் பெருமை அளவில்லாமல் பேசப்படுகிறது. அதைப் பிறகு பார்ப்போம். 

  
எட்டு: வெண்கலம் (Bronze) உலோகமல்ல (Metal); உலோகக்கலவை (Alloy)


     எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியலில் முதல் பாடம் 'பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்'. இதில் உலோக பணத்தின் வரலாறு சொல்லப்படுகிறது. (உலாகப் பணம்)

    “தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற விலை மதிப்பற்ற உலோகங்கள் உலோக பணமாக பயன்படுத்தப்பட்டன”. (பக்.249)

      வெண்கலம் உலோகமல்ல; உலோகக்கலவை. பொதுவாக  உலோகக்கலவைகளைக் கொண்டே நாணயங்கள் செய்யப்படுகின்றன. வெண்கலம் என்பது தாமிரம், வெள்ளீயம் ஆகிய உலோகங்களின் கலவையாகும். மாங்கனீஸ், அலுமினியம் ஆகியவற்றையிம் இதில் கலப்பதுண்டு. 

  
ஒன்பது: கருப்புப்பணம் என்றால் என்ன? 

     “கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும். நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும். கருப்பு பண வருவாய்கள் வழக்கமான மறைமுக பொருளாதார நடவடிக்கை மூலம் பணமாக பெறப்படுவதால் அதற்கு வரியில்லை”. (பக்.255) 

    அரசிடம் கணக்கு காட்டாத வருவாய் கருப்புப்பணம் என்று எளிமையாகச் சொன்னால்  புலமைக்கு வழியின்றி போகுமோ! ஊழல், கையூட்டு மூலம் சம்பாதிக்கும் பணம் கருப்புப்பணம் என்று கடைசி வரையில் சொல்லவேயில்லை. 


    ரூ.500, ரூ. 1000 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்ட நடவடிக்கை கருப்புப் பணத்திற்கு எதிரானதாம்! 99% பணம் திரும்பி வந்துவிட்டதே! 1% தான் கருப்புப் பணம் போலும்! 



பத்து: 0 இருப்பு வங்கிக்கணக்குகள் எனும் மாயை!



      மாணவர்களுக்கு பூஜ்ஜிய இருப்புத் தொகை கண்ட வங்கி சேமிப்புக் கணக்குகள் தொடங்குகிறார்களாம்! 0% வட்டிக்கு கடன் என்பதுபோல 0 இருப்பு வங்கிக் கணக்கும் மாயைதான். மாணவர்களுக்குத் தொடங்கும் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகை செலுத்தவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் கணக்கு உறைநிலைக்குச் (இறப்பிற்கு) செல்லாமலிருக்க குறிப்பிட்ட தொகை இருப்பு இருக்க வேண்டும் என்றும் கணக்கில் வரவு செலவு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். பாரத ஸ்டேட் வங்கி போன்று ஐசிஐசிஐ வங்கியைக் காப்பியடிக்கும் பொதுத்துறை வங்கிகள் பல இவ்வாறே செய்கின்றன. 


 பதினொன்று: மதம் பிடித்தால் பன்மைத்துவம் பேண  முடியுமா?


    Religion
       “Religion means a particular system of faith and worship, which brings human beings with human society. Religion is a symbol of the group identity and cultural rallying point”. (page:178)


மதம் 

     “மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறியும் கொண்டதாகும். இது மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டுவரும். மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது”. (பக்.209) 


   மதம் மனிதனை மனித சமுதாயத்திற்கு கொண்டுவருகிறதாம்! மத நம்பிக்கையற்றவர்கள், மதமில்லாதவர்கள் இந்த சமூகத்தில் இல்லையா? மதப் பேரடையாளம் யாருக்கு புத்துணர்வு அளிக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 


   மதம் மற்றும் வழிப்பாட்டிடங்கள் அட்டவணையில் சீக்கிய குருத்வாராவுக்கு (Gurdwara) இடமில்லை. (பக்.210) பவுத்த வழிபாட்டுத்தலத்தை ‘விஹாரா’ என்பதைவிட தமிழில் விகாரை புழங்கு சொல்லைப் பயன்படுத்தலாம். ஜூடோயிசம், ஜூடாய்ஸம் – இதில் எது சரி? பேசாமல் யூத மதம் என்று சொல்லிவிட்டால் என்ன? ஜொராஸ்டிரியம் (பார்சி மதம்) அகியாரி (தீக்கோயில்) என்று அடைப்புக்குறிக்குள் இருப்பது நலம். பழைய பாடத்தில் பார்சிகள் பற்றிய எவ்வித குறிப்பும் இன்றி ஜொராஸ்டிரியம் சொல்லப்பட்டது. ஆசிரியர்களும் அவற்றை எப்போதும்போல் படித்துக்காட்டி பாடம் முடித்தனர்.  

பன்னிரண்டு: காயல் அல்லது உப்பங்கழிகளில் சதுப்புநிலமே இருக்காதோ?

   “கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்த்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும். எகா. ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி, கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி”. (பக்.202) 

   இம்மாதிரி வகுப்பிற்கு ஒவ்வொரு விதமாக விளக்கம் அளித்தாயிற்று. இவற்றில் சதுப்புநிலம் இருக்குமா, இல்லையா என்ற குழப்பமும் உண்டாகும். எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஏரியாக இருப்பது இன்னும் மோசம். முத்துப்பேட்டை, பிச்சாவரம்  அலையத்திக்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் இதனுள் அடங்கும் என்றும் சொல்லிக் கொடுப்பது நல்லது.   


                        (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக