வெள்ளி, ஜூலை 01, 2011

தொடரும் சாருவின் உளறல்கள்...

தொடரும் சாருவின் உளறல்கள்...

                                                                                      - மு. சிவகுருநாதன்




           சாரு நிவேதிதா தன்னுடைய எழுத்துகள் புனைவு, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாக கருதுகிறார்.   ( த சன்டே இந்தியன் - பேட்டி:- ஜுன் 27 - ஜுலை 10, 2011) சாருவின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் புனைவு கட்டுரையாகவும் கட்டுரை புனைவாக வும் இருப்பதையே அவதானிக்க முடிகிறது.  புனைவுகளுக்கு கற்பனை அவசியந்தானே! எனவே தான் சாரு கட்டுரைகளில் நிறைய பொய்களை கூசாமல் சொல்ல முடிகிறது.


            என்னுடைய நெடுநாளைய நண்பர் கனிமொழி என்றும் தொலைபேசியில் தன்னுடைய காமராஜர் அரங்க நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததும் உடன் ஒப்புக் கொண்டார் என்று அப்போது எழுதிய சாரு, இப்போது புத்தக வெளியீட்டாளர் மனுஷ்ய புத்திரனின் விருப்பத்தின் பேரில்தான் கனிமொழி அழைக்கப்பட்டார் என்றும் கனிமொழி என்னுடைய தெரிவல்ல என்று சொல்ல சாருவால் மட்டுமே முடியும்.  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட காலத்தில்தான் இந்த கூத்து நடந்தது.  இந்தக் கூத்தில் கனிமொழி பங்கேற்று நேர்மை பற்றி வகுப்பெடுத்தது அனைவரும் அறிந்ததே.


            சாரு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி கடுமையான மொழியில் எழுதி யிருப்பது உண்மைதான்.  அதில் அவர் ஆ. ராசாவை மட்டுமே குறிப்பிடுகிறாரே தவிர மருந்துக்குக் கூட கனிமொழியைப் பற்றி எழுதவில்லை என்பதே ஊரறிந்த உண்மை.  இதில்தான் சாருவின் தனிப்பட்ட சுயலாபங்கள் அடங்கியிருக்கிறது.


            கனிமொழியின் ‘கருவறை வாசனை’ கவிதைத் தொகுப்பைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர் சாரு.  அதற்கான பிரதியியல் காரணத்தை சாரு இதுவரை முன் வைக்கவில்லை.  அதனால் அவர் அடைந்த பிரதி பலன்கள் அந்தப் பிரதிக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம்.  அதனால்தான் என்னவோ வேறு எந்த பெண்ணியக் கவிஞருடன் கனிமொழி வேறுபட்டு தனித்துவம் மிக்கவராக இருக்கிறார் என்பதை அவரால் இன்றுவரை விளக்க முடியவில்லை.


            பாலியல் சாமியார் நித்தியானந்தாவிற்கு அடிப்பொடியாக இருப்பதையும் துக்ளக்கில் எழுதுவதற்காக சோ புராணம் பாடுவதையும் சாரு பெருமையாக நினைக்கிறார்.  பிறகேன் ஜெயமோகனுடன் கருத்து முரண்பாடு?  இவர்கள் இருவருக்கிடையே என்ன வகையான கொள்கை வேறுபாடு இருக்கிறது.  இன்று துக்ளக்கில் எழுதும் சாருவால் நாளை விஜயபாரதத்தில் எழுத முடியாதா என்ன?


            சாருவின் லேட்டஸ்ட் உளறல் ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று துக்ளக்கில் எழுதியதுதான்.  அதை சாரு த சன்டே இந்தியன் பேட்டியில் (த சன்டே இந்தியன் - ஜுன் 29 - ஜுலை 10, 2011) நியாயப்படுத்துகிறார்.  “ஜெயலலிதாவிற்கு குடும்பம் கிடையாது.  எனவே உலகில் தனித்து வாழும் மனிதர்கள் சுயநலம் கருத வேண்டிய அவசியமில்லை” என்று சாரு கோட்பாட்டு விளக்கமளிக்கிறார்.


            ஜெயலலிதா திருமணம் செய்யாமல் தனி ஆளாக இருப்பதால்
கு. காமராஜ் ரேஞ்சுக்கு ஜெயலலிதாவை உயர்த்துவதுதான் சாருவின் புனைவு.   இது அவரது கட்டுரைகளில் வெளிப்படுவதுதான் சிறந்த நகைச்சுவை.  ஜெயலலிதாவிற்கு நெருக்கமாகவுள்ள சசிகலா நடராஜன் குடும்பங்களைப் பற்றியயல்லாம் சாரு தெரியாதவரல்ல. பிறகு ஏனிப்படி ‘தியரி’ வகுக்க முடிகிறது? எல்லாம் அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் தன்னல சுகமன்றி வேறில்லை.


            தமிழில் சாரு நிவேதிதாவுக்கு தீவிர இலக்கியவாதி, பெண் பித்தர், ஆபாச எழுத்தாளர், சினிமா விமர்சகர், நாவலாசிரியர், சிறுகதையாளர் மேலும் அவரே சொல்லிக் கொள்வது போல தமிழின் முதல் ‘Auto Fixction’ எழுத்தாளர் போன்ற பல்வேறு அவதாரங்கள் உண்டு.  ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சாரு சமீபத்தில் எடுத்துள்ள அவதாரம் மனித உரிமைப் போராளி.  கேரளாவில் நடைபெற்ற பல மனித உரிமைப் போராட்டங்களில் பங்கேற்ற சாரு முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திறந்த மடல் கூட எழுதினார்.


            தமிழகத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து எவ்வித கவலையும் கொண்டதில்லை.   கோவை பள்ளி மாணவி பாலியல் வன்கொலைக்குள்ளாக்கப்பட்ட போது மட்டும் மரண தண்டனையை பரிந்துரை செய்திருந்ததாக நினைவு.  கருணாநிதியின் குடும்பத்தை அவ்வப்போது விமர்சித்து எழுதினாலும் கனிமொழியூடான அவரது உறவு - நட்பு எள்ளளவும் பாதிக்கப்பட்டதில்லை.   இது சாருவே எழுதியது.  விமர்சனத்தின் தன்மை, அளவு குறித்ததாக இருக்கலாமோ என்னவோ! இதிலிருந்தே அவருடைய விமர்சனம் எந்தளவிற்கு இருந்ததென்பதை நாம் ஊகிக்கலாம்.  கேரளாவில் மட்டும் மனித உரிமைப் போராளிப் பட்டம் சூடிக் கொள்ள ஆசைப்படும் சாரு தமிழகத்தில் மட்டும் இரட்டை நிலையை ஏன் கடைபிடிக்க வேண்டும்?


            துக்ளக்கில் தொடர்ந்து எழுதுவதற்காகவும் சோவைத் திருப்திப்படுத்தவும் ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று எழுதும் சாரு சுயநலத்திற்காக எதையும் செய்யத் தயாரென மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார்.  இன்று தமிழகம் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் சமச்சீர் கல்வி போன்ற பிரச்சினைகளில் சாரு மவுனம் காப்பதை வேறு எப்படித்தான் விளங்கிக் கொள்வது?


            சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் நான் முன்பே எழுதியதுபோல இந்த மாதிரியான தத்துப் பித்து உளறல்களை விட்டு விட்டு தங்களது படைப்பாக்கத்தில் கவனம் செலுத்தி ஏதேனும் உருப்படியாகச் செய்ய முயற்சிக்கலாம்.  அரசியல் வெளியைப் பற்றிப் பேச அவருக்கு உரிமை உண்டு என்ற போதிலும் அதில் ஒரு நேர்மையைக் கடைபிடிப்பதுதான் அழகு.  எழுத்தாளர்கள் எப்படியயல்லாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கனிமொழியிடம் பாடம் கற்றவர்களின் ‘நேர்மை’ இவ்வாறாகத்தான் இருக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

****உளறல்களை விட்டு விட்டு தங்களது படைப்பாக்கத்தில் கவனம் செலுத்தி ஏதேனும் உருப்படியாகச் செய்ய முயற்சிக்கலாம்****

படைப்பாக்கத்தில்?????????

அதான் வராதுன்னு சொல்றேன்லயா.......அப்புறம் ஏன்யா அத எதிர்பார்க்குறீங்க.......

கருத்துரையிடுக