வியாழன், ஜூலை 21, 2011

சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!

சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!   
 
                                                        -மு.சிவகுருநாதன்


            சமச்சீர் கல்வியை  அமல்செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைகோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று (21.07.2011) விசாரித்த  ஜே.எம். பாஞ்சால் தலைமையிலான  உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு சமச்சீர்கல்விக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. அத்துடன்  ஆகஸ்டு 02 ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சமச்சீர்கல்வி புத்தகங்களை வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கில் இறுதிகட்ட  விசாரணை ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
         2,3,4,5,7,8,9,10 ஆகிய  வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும்  ஜூலை 22 ஆம் தேதிக்குள் சமச்சீர்கல்விப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தின் காலக்கெடுவை ஆகஸ்டு 02  வரை உச்சநீதிமன்றம் மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்திருப்பது ஒருவகையில் அநியாயமானதுதான்.  இறுதிகட்ட  விசாரணை நடைபெறும் ஜூலை 26 ஆம் தேதி முழுமையான நீதி கிடைக்குமென நம்புவோம்.


      உச்சநீதிமன்றம்  தடை விதிக்க மறுத்திருப்பது மிக முக்கியமான நிகழ்வு. சமச்சீர்கல்வி வழக்கில் ஏற்கனவே தமிழக அரசிற்கு சில சலுகைகளை வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த முறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இறுதி உத்தரவிலும் இந்த மகிழ்ச்சி  நீடிக்கவேண்டும்.



          மூன்று பேர் அடங்கிய அமர்வு என்பதால் முன்பிருந்த சொதப்பல் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதவேண்டியுள்ளது. சமச்சீர்கல்வியின் அமலாக்கம் கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும்போது அதனை அமல் செய்யமட்டும்  ஏன் இவ்வளவு காலத்தை கடத்தவேண்டுமென்பதுதான் நமக்கு விளங்கவில்லை.




      உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு தமிழக அரசுக்கு உறைக்கக்கூடிய அளவிற்கு கடுமையானதாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிபார்ப்பாகும். 95 விழுக்காடு மாணவர்களையும்  அவர்கள் சார்ந்த 
சமூகத்தையும் அவமதித்துள்ள தமிழக அரசு அவர்களை பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கு உச்சநீதிமன்றம் தமிழக அரசிற்கு என்ன தண்டனை தரப்போகிறது?
 


    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழக அரசு இனிமேல் இதுபோன்ற அத்துமீறல்கள் செய்யாமலிருக்க ஒரு பாடமாக அமையவேண்டும். அரசுகள் தவறு செய்யும்போது அவற்றை சரிசெய்து உடனடி நிவாரணமளிப்பதுதான் நீதிமன்றங்களின் கடமையாக இருக்கவேண்டும். அந்தவகையில் சமச்சீர்கல்வி வழக்கு ஒரு முன்மாதிரியாக அமைவதுடன்  கடைக்கோடி மக்களுக்கும் நீதிமன்றங்களின்பால்  உள்ள நம்பிக்கை மேலும் வலுப்படுத்தவும்  வரப்போகும் தீர்ப்பு பயன்படட்டும்.

அருந்ததிய மக்களின் குரலாக வெளிவரும் ஓர் இதழ்

அருந்ததிய மக்களின்  குரலாக வெளிவரும் ஓர் இதழ் 

(சிற்றிதழ் அறிமுகம்:- வெள்ளைக்குதிரை - இருமாத இதழ்)

                                                                                      - மு. சிவகுருநாதன்

           


            ஒடுக்கப்பட்ட மக்களில் கல்வி வேலை வாய்ப்புகளில் முறையான பங்கின்றி இதுவரையில் இருந்து வந்த அருந்ததிய மக்கள் தற்போதுதான் உள் ஒதுக்கீடு பெற்று சிறிது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட, நலிவுற்ற இம்மக்களின் குரலாக தமிழ்நாடு சாக்கிய அருந்ததி சங்கத்தின் சார்பில் மதுரை வீரனின் வாகனப் பெயரைத் தாங்கி, இருமாத இதழாக பிப்.-மார்ச் 2011 முதல் ‘வெள்ளைக்குதிரை’  வெளிவந்துள்ளது.  இதுவரை இரு இதழ்கள் வெளியாகியுள்ளன.



            கண்ணன், காளிங்கராயன், ம. மதிவண்ணன் ஆகியோரை ஆசிரியர் குழுவிலும் நீலகண்டன் -ஐ நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் ‘வெள்ளைக்குதிரை’ இரு இதழ்களிலும் அருந்ததியச்சுடர் ராவ்சாகிப் எல்.சி. குருசாமி அவர்களின் சட்டமன்ற உரை வெளியாகியுள்ளது.  தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக நிதியை மேலும் அதிகரிக்க வேண்டுதல், தாழ்த்தப்பட்டவர்களின் ஆலோசனைக்குழுவில் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களைவிட சாதி இந்துக்கள் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதை எதிர்த்தல், சென்னை நகர சேரிகளின் மேம்பாட்டிற்கு பணிபுரியும் ஊழியர்கள் தலித்களாக இருக்க வலியுறுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அடித்தட்டு தலித் மக்களுக்காக அந்நாளில் எழுப்பியதை நம் முன் பதிவு செய்கிறது.



            அருந்ததிய இனத்தில் பிறந்த மதுரை வீரனை ஒரு மேல் சாதித்தன்மையோடு கட்டமைத்த தமிழ் சினிமா வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டுவதன் அவசியம் பற்றிப் பேசுகிறது ‘வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை’ என்ற குமரன் தாஸ் கட்டுரை.  தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த ஒரு மாவீரனை கடவுள் தன்மையிலிருந்து மீட்டு ஒரு வரலாற்றுத் தலைவனாக மாற்றுவதே இன்றையத் தேவையென இக்கட்டுரை வலியுறுத்துகிறது.   மதுரை வீரனை அருந்ததிய வீரனாக முன்னிறுத்தி திரைப்படம் எடுப்பதன் மூலம்தான் இவ்வரலாற்றுப் பிழையைக் களைய முடியும் என்பது உண்மையானது.  ஆனால் அதற்கான களம் தமிழ் சினிமாவில் இல்லையென்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.



            இரண்டாவது இதழில் முன்னாள்  இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரின் திரைப்படங்களை முன் வைத்து வட்டாரத் தமிழ்ச்சினிமாவில் வெளிப்படும் சாதிய வன்மங்களையும், வக்கிரங்களையும் குமரன் தாஸ் வெளிப்படுத்துகிறார்.  இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தற்போதைய தமிழ்ப்பட உலகில் இல்லையென்றாலும் அவருக்கு நிறைய வாரிசுகள் இருப்பதை இக்கட்டுரை குறிப்பிடத் தவறவில்லை.



            தமிழ் சினிமா தலித் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.  கிராமியப் படம் என்றால் அங்குள்ள உயர்த்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு சேவகம் செய்வதே தமிழ் சினிமாவின் வேலையாக உள்ளது.  நகரம் சார்ந்த மசாலாப் படங்கள் எதுவாகயிருப்பினும் அதில் தீவிரவாதியாகக் காட்டப்படுவது இசுலாமியர்கள் மட்டுமே.  ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருப்பினும் மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தச் சீரழிவின் பிடியில்தான் இருக்கிறது.  இதன் தொடர்ச்சியாக சுப்ரமணியபுரம், பருத்திவீரன் போன்ற வெகுவாக பேசப்படும் தமிழ்ப் படங்களில் தோய்ந்துள்ள சாதியத்தை கட்டவிழ்ப்பது இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமுடையதாக இருக்கும்.



            தலித் சாதிகளுக்கிடையே மிகவும் நலிவுற்ற சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம், தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டுக்கு மேலெழும்பும் எதிரப்புக் குரல், வேறு மாநிலங்களில் எழுப்பப்படும் உள் ஒதுக்கீட்டுக் குரல் போன்றவற்றை ‘தீர்ப்புகளின் சுருக்குகளோடு உள் ஒதுக்கீட்டை துரத்தி வரும் சாதியத்தின் வரலாறு’ என்ற ம.மதிவண்ணன் கட்டுரை விளக்குகிறது.



            “தமிழ்நாட்டிலுள்ள அருந்ததியர்களைப் பொறுத்தமட்டிலும் அவர்களது பிரச்சினை ஏனைய தலித்துகளின் பிரச்சினைகளைவிட தீவிரமானது.  உடனடியான தலையீட்டைக் கோருவதாக இருப்பது.  அவற்றில் தலையானது அவர்களது பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும் என்பதேயாகும்” என்ற வரிகள் உண்மையானதும், ஏற்றுக் கொள்ள வேண்டியதுமாகும்.



            ‘வெள்ளை அறிவுஜீவி அடியாட்களும் அருந்ததிய வரலாறும்’  என்ற மதிவண்ணனின் கட்டுரை, காலனிய வெள்ளை அறிவுஜீவிகள் சக்கிலியர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை ஜேம்ஸ் ஹென்றி நெல்சன், எட்கர் தர்ஸ்டன் உள்ளிட்ட சில உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்.



            அறிஞர் கால்டுவெல், 1931இல் சென்சஸ் கமி­னராக இருந்த ஜெ. ஜெ. ஹட்டன் போன்றோர் பறையர்களுக்கு காட்டிய ஆதரவுக்குரலை சக்கிலியர்கள் மீது காட்டவில்லை என்பதையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது.  தலித் என்பதிலும் மொழி போன்ற உட்கூறுகள் சில செயல்பட்டிருப்பதை இங்கு அவதானிக்கலாம்.  தமிழகத்தில் தற்போது இருக்கும் பிறமொழியாரை வெளியேற்றவேண்டும் என்ற பாசிச குரலுக்குக் கூட இதுவும் முன்னோடியாக இருந்திருக்கக்கூடும்.



            வட கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டச் சிற்றூரான சாவனூரில் அருந்ததியர் தங்களது உடலில் மலத்தை பூசிக் கொண்டு நடத்திய போராட்டம் குறித்த ஆனந்த் டெல்டும்டேயின்  கருத்தை கண்ணனின் கட்டுரை மறுதளிக்கிறது.  இதில் சில நியாயப்பாடுகள் இருந்த போதிலும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒரிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தலித்களை காவிமயமாக்கி இசுலாமிய, கிருத்தவ சிறுபான்மையினர் மீது மோத  ஒரு  கருவியாகப் பயன்படுத்தும் போக்கினை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டுள்ளது.   இதை முறியடிக்க ஒரு வானவில் கூட்டணிக்க தயாராக வேண்டிய அவசியம் அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் உள்ளது.  ஆனந்த் டெல்டும்டே சொல்வது போல் வர்க்கமாகத் திரளுவதோ, காஞ்ச அயலைய்யா போன்றோர் முன் வைக்கும் பகுஜன் கருத்தாக்கம் போன்றவைகளையும் பரிசீலிக்க வேண்டிய தேவை இப்பொழுது இருக்கிறது.  ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்ட தேவையான உத்திகளை புறந்தள்ளுவது நலமாக இருக்காது.  இதிலுள்ள குறைபாடுகளையும் சிக்கல்களையும் களைந்து அடுத்த கட்ட நகர்வைச் சாத்தியமாக்குவதே தலித் இயக்கங்களின் உடனடித் தேவையாகும். 



            அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய வெளிச்சத்தில் அருந்ததிய மக்களுடைய அரசியலையும் படைப்புக்களையும் தாங்கி இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்பதை எமது விருப்பம்.   தமிழக தலித் இலக்கியத்திற்கு அருந்ததியர்களின் பங்களிப்பை மேலும் கூர்மைப்படுத்த இவ்விதழ் உதவுவதோடு அம்மக்களின் வாழ்வுரிமைக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரலாகவும் ‘வெள்ளைக்குதிரை’  விரைந்து செல்ல வேண்டும். 



            விலை: ரூ. 15/-                      ஆண்டு சந்தா ரூ. 150/-



சந்தா தொடர்புக்கு:-

            லலிதா,
            34, சக்தி நிலையம்,
            தில்லை நகர், செல்வபுரம்,
            கோவை - 641 026.
            பேசி: 94434 16904

 படைப்புகளுக்கு:

          வெள்ளைக்குதிரை,
            66 - சானிடோரியம் குடியிருப்பு,
            பெருந்துறை சானிடோரியம்,
            ஈரோடு மாவட்டம் - 638 053. 

குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்

குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்

                                                                                                                  - மு. சிவகுருநாதன்

 
(‘ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து’ என்கிற அ. மார்க்ஸ்-இன் குறுநூலின் ஊடாக ஒரு பயணம்.)  
 
 
  
  
        இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை மகாராஷ்டிராவில் ரஜ்னா சோனாவானே என்ற பழங்குடிப் பெண்ணுக்கு வழங்கியிருப்பதை பெருமை பொங்க குறிப்பிடும் தினமணி, இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் (NIDAI) ஏற்கனவே சொன்னது போல் முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011க்குள் வழங்கப்பட்டு விடும் என்று சொன்னதைச் செய்தவர்கள் 2014க்குள் இந்தியாவில் 60 கோடி மக்களுக்கும் அளித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் வைக்கிறது.  (தினமணி தலையங்கம் - செப்டம்பர் 30, 2010). 
 
 
        வீடற்றவர்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுப்பது போலவும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு உணவு தானியம், பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்தையும் பொது விநியோகத்திட்டத்தின் (PDS) கீழ் இலவசமாக விநியோகிப்பதைப் போலவும் வெறும் அடையாள அட்டைக்கு ஏனிந்த பில்டப்?

          

            பனிரெண்டு இலக்கங்கள் கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டையைக் கொண்டு (UID) நீங்கள் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க முடியும், இதைக் கொண்டு செல்போன் இணைப்பைப் பெறலாம். 12  இலக்க ஆதார் எண்ணும் செல்போன் எண்ணும்கூட ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு.  அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதாக மக்களைச் சென்றடையும் என்றெல்லாம் நீட்டி முழங்குகிறார்கள்.



            செப்டம்பர் 29, 2010 அன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார், தேம்பிலி கிராமங்களில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முன்னணி கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் 5 பெண்கள், 3 குழந்தைகள் என 10 பழங்குடியினருக்கு ‘ஆதார்’ அடையாள அட்டைகளை (UID) வழங்கியதைத்தான் இந்த ஊடகங்கள் இவ்வாறு பெருமை பொங்க விவரிக்கின்றன.



            சராசரி இந்தியனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர் ஆகியவற்றை இன்னமும் உறுதி செய்ய முடியாத இந்த அரசுகள் ‘ஆதார்’ அடையாள அட்டை மூலம் மட்டும் மாய சக்தியை காட்டப் போவது எப்படியென ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும்.



            இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம் (The Unique Identification Authority of India - UIDAI)ஏப்ரல் 26, 2010 அன்று    UID   என்பது குழப்பமானதாக இருப்பதால் புதிய பெயராக ‘ஆதார்’  என்பதையும்  அதற்கான இலச்சினையையும் இதன் தலைவர் நந்தன் நீய்ல்கெனி வெளியிட்டார். 



            ஒவ்வொரு நபருக்கும் 10 கை விரல் ரேகைகள், விழித்திரைப் பதிவு மற்றும் புகைப்படம் ஆகியன அங்கக அளவீட்டிற்காக (Bio-metric) பெறப்படுமாம்.  ஒவ்வொரு நபரையும் பதிவு செய்ய அரசுக்கு ரூ. 31/- செலவாகிறதாம்.

          

            மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு சேவைகள் இத்துடன் இணைக்கப்பட்டு 100 நாள் வேலைக்கான கூலியையும் ‘ஆதார்’  எண்ணுக்குப் பதிவு செய்ய வருபவர்களுக்கு அளிக்கும் ஊக்கத் தொகையையும் வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறதாகச் சொல்கிறார்கள்.  பணவிடை (Money Order) மூலமாக அனுப்பப்படும் முதியோர் ஓய்வூதியம் (OAP) முழுவதுமாக அவர்களைச் சென்றடைகிறதா என்ன?



            பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை, இடைநிற்றல், வேறு பள்ளிக்குச் செல்லுதல், மதிய உணவுத் திட்டம், உயர்கல்வி படிப்போர் என அனைத்து விவரங்களையும் அடையாள எண் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.  மாணவர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க கைரேகை படிக்கும் சாதனத்தை (Scanner) நிறுவ ரூ. 5000/- செலவாகும்.  எனவே எளிதில் இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்றும் சொல்கிறார்கள்.



            1.5 லட்சம் கோடி செலவாகும் இத்திட்டத்தின் மூலம் உண்மையில் பயனடையப் போவது கணினித் தொழில் கார்ப்பரேட்டுகளும் உளவுத் துறையும் மட்டுமே என்பதை இக் குறுநூல் ஆதாரங்களுடன் அலசி ஆராய்கிறது.  பொது விநியோகத்திட்டத்தை (PDS) படிப்படியாக நிறுத்தி விட்டு அதற்கு மாற்றாக நிபந்தனைக்குரிய பண மாற்றீடுத் திட்டங்கள் மூலம் நியாய விலைக்கடைகள், இலவசங்கள், மானியங்கள் போன்றவற்றை நிறுத்தி, குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரும் அரசியல் சட்ட கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்குவதற்கான முயற்சி இது என்பதை நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.



            குடிமக்களை தீவிரவாதிகளாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் போது தனி மனித அந்தரங்கங்கள் முழுவதும் வெளிப்படையானதாக மாறும்.  இது குடிமக்களின் அடிப்படை அந்தரங்க உரிமையில் தலையீடு செய்வதாகும்.



            பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) யின்  அந்நியர்களையும் குடிமக்கள் அல்லாதவர்களையும் களையெடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘பல்நோக்கு தேசிய அடையாள அட்டைத்திட்டத்துடன்’ அங்கக அடையாளங்களை இணைத்து ‘ஆதார்’ அடையாள அட்டைத் திட்டமாக மன்மோகன் சிங்கின் அரசு முந்தைய அரசைப்போல் ‘பாதுகாப்பு’ என்று சொல்லாமல் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் குடிமக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதை அ. மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.



            பல்வேறு புலனாய்வு அமைப்புக்களை ஒருங்கிணைத்து ரயில் மற்றும் விமானப்பயணங்கள், வருமான வரி, தொலைபேசி அழைப்புகள், வங்கிப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள், விசா இமிக்ரே­ஷன், சொத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிமங்கள் போன்ற 21 வகைத் தகவல்களை அனைத்திற்கும் கிடைக்கச் செய்யும் ‘நாட்க்ரிட்’ (National Intelligence Grid - Natgrid) வலையமைப்புடன் ‘ஆதார்’ அடையாள எண்ணும் இணைக்கப்படும் போது அந்தரங்கங்கள் அம்பலமாகும் அபாயம் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.



            பொது விநியோக முறையிலுள்ள மானியங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இந்த அட்டை துணை செய்யப்போகிறது.  ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும், உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.   கார்ப்பரேட்டுக்களுக்கு மானியத்தில் வெட்டு செய்யாத அரசு பாமர மக்களுக்கு மானியம் இல்லை என்கிறது.  இதிலிருந்து இது யாருக்கான அரசு என்பதை சொல்லவும் வேண்டுமா?


            குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் மூலம் சாதிக்க முடியாத வளர்ச்சியை இந்த ஆதார் அடையாள அட்டை மட்டும் எப்படி செய்யுமெனத் தெரியவில்லை?   அங்கக அடையாளங்கள் மூலம் போலிகளைத் தவிர்க்கலாம் என்று சொல்லி தனிநபர் அந்தரங்க உரிமைகளில் இந்த அரசு தலையிடுகிறது.  கிரடிட் கார்டு, ATM   கார்டுகளில் கூட முறைகேடு செய்யும் போது இது மட்டும் எப்படித் துல்லியமாக இருக்கும் என்பதை அரசாலும் NIDAI-வாலும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை.



            ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பொது விநியோக முறை ஆகிய எந்தத் திட்டமாகினும் ஆதார் அடையாள அட்டையே முன் நிபந்தனையாக்கி விட்டு இதற்குப் பதிவு செய்து கொள்வது கட்டாயமில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை?



            லோக்பால் மசோதாவில் வரம்பிற்குள் பிரதமர் உள்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதத்தில் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக லோக்பால் அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது.  ஆனால் குடிமக்களின் அந்தரங்கம், சுயமரியாதை, கல்வி, உணவு போன்ற அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை தேசிய அடையாள அட்டை ஆணையத்திடம் (NIDAI)அளிப்பது பற்றியும் அதன் அதிகாரங்கள் குறித்தும் எந்த அரசியல் கட்சியும் கவலைப்படாதது வேதனைக்குரிய ஒன்றாகும்.



            சமூக, மனித உரிமை ஆர்வலர்களால் மட்டும் எதிர்க்கப்படும் ஆதார் அடையாள அட்டைத் திட்டத்தின் பாதிப்புக்களை உணர்ந்து அனைவரும் இதை எதிர்க்க முன்வருவதற்கு இக்குறுநூல் பேரளவில் உதவி செய்யும் என்பதில் அய்யமில்லை.



ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து - அ. மார்க்ஸ்
பக். 20.  விலை ரூ. 10/-


வெளியீடு:

இந்தியச் சமூகச் செயல்பாட்டுப் பேரவை,
புதுவைக் கிளை, 
15 - அன்னை தெராசா வீதி,
புதுச்சேரி - 605 013.
மின்னஞ்சல்: psdfmohan@yahoo.co.in
பேச:    0413 - 2200396
              94434 33927

நூல் வடிவம், கிடைக்குமிடம்:

புலம்,
332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005,
பேசி: 98406 03499
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

திங்கள், ஜூலை 18, 2011

சமச்சீர் கல்வி :- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு




சமச்சீர் கல்வி :- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு
                                                                                           -மு. சிவகுருநாதன்






        நாம் எதிர்பார்த்ததுபோல   சமச்சீர் கல்வி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இன்று (18.07.2011) வழங்கியுள்ளது. இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு  தனது சிறப்பு மிகுந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதன்மூலம் சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்க நினைத்த ஜெயலலிதாவின் அரசுக்கு பெருத்த அடி கிடைத்துள்ளது.
  
      தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குடிமக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க உதவி செய்வதாக இருக்கிறது. இந்நிலை அனைத்து வழக்குகளிலும் தொடரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

       1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும்   சமச்சீர் கல்வித் திட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் நடப்புக்கல்வி ஆண்டிலும்  சமச்சீர் கல்வி பாடத்திட்டந்தான்  தொடர வேண்டும்.தரம் என்ற போலியான காரணத்தைக் காட்டி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தம் ரத்தாகிறது. 

      நீதிமன்ற ஆணையை மீறி தமிழகத்தில் அவசரமாக  அச்சாகிக்கொண்டிருக்கும்   பழையப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத்  தடை விதிக்கப்படுகிறது.தமிழக அரசு சமச்சீர்க்கல்வித் திட்டத்தில் குறைகள் இருப்பதாக  கருதினால் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் அதைக் களைய நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு செய்யப்படும் திருத்தம்,சேர்க்கை  மற்றும் நீக்கங்களை துணை நூலாக அச்சிட்டு வழங்கவும் அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


      உச்சநீதிமன்றத்தால்  வழங்கப்பட்ட சலுகையை தவறாக பயன்படுத்திய தமிழக அரசு  மாமிகளும்,கல்வி வியாபாரிகளும் அடங்கிய நிபுணர் குழு என்ற பெயரில் செய்யப்பட்ட 700 பக்க அயோக்கியத்தனங்கள் தற்போது முடிவை எட்டியிருக்கிறது .

    ஜெ.ஜெயலலிதா போன்ற ஒரு நபரிடம் பெருந்தன்மையை எதிர்பார்த்து பலன் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் தன் கடந்த காலத்தில் கற்ற, பெற்ற படிப்பினைகள் எதுவும் இருப்பதாகவும் 
அதன்மூலம் நல்லது நடக்கும் என்றும் இனி நம்பவேண்டியதில்லை.


     இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக   தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். உச்சநீதிமன்றம் இந்த முறையாவது சென்ற தடவை நிகழ்த்திய அநீதியைச் செய்யாமல் உருப்படியாக விசாரித்து எதிர்மனுதாரர்களின் கருத்துகளை செவிமேடுக்கவேண்டும்.

          சமச்சீர் கல்வியை அமல் செய்யக் காரணமாக இருந்த உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புகளில்  இருந்து ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கவேண்டும்.

      தவணை முறையில் வழங்க சமச்சீர்கல்வி ஒன்றும் கடைச்சரக்கல்ல. சமூகநீதியை தவணை முறையில்  வழங்க எத்தனிப்பது சமூக அமைதியைக் குலைக்கும் செயலாகவே இருக்கமுடியும்.

     இந்தக் கல்வியாண்டின்   50 நாட்கள்  முடிந்துவிட்ட நிலையிலும் கல்வியில் தொடரும் குளறுபடிகளை சமூகம் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது வேதனையளிக்ககூடியது. தெருவில் இறங்கிப் போராடாமல் இதற்குத்  தீர்வு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.

     எகிப்து போன்ற நாடுகளில் மக்கள் கிளர்ந்தெழுந்து வீதியில் இறங்கிப் போராடும்போது நமது பெரும்பான்மையான சமூகம்  தனக்கு பாதிப்பு வந்தால் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னசொல்ல?

       இந்தத் தீர்ப்பைப் பாராட்டும் அதே நேரத்தில்    நீதிமன்றங்கள் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும்  சர்வரோக நிவாரணியாக இருக்கமுடியாது என்ற எச்சரிக்கையுணர்வு மிகவும் அவசியமானது. இந்திய    நீதிமன்றங்கள் சமூக நீதியின் பக்கமும் பெரும் எண்ணிக்கையிலான அடித்தட்டு மக்கள் பக்கமும் பலமுறை நின்றதில்லை என்பதே கடந்த காலவரலாறு.

சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!

சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!



சமச்சீர் கல்வி - நாடகம்


      சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு அம்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் பேராதரவுடன் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தமும் செல்லத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகப்பதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

     தீர்ப்பின் முழு விவரம் இன்று மாலைதான் கிடைக்கும்.

     தமிழகத்தின் காவல் தெய்வம், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்து, முதல் முறையாக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.
அம்மா உச்சநீதிமன்றம் போகிறார். ஒரு தலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவு எதையும் கொடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்வதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் உச்ச நீதிமன்றம் போகிறது.

         உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதி கிருஷ்ணனும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவும் முன்வைத்த வாதங்கள் உப்புசப்பற்றவை. அவர்கள் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உள்ள இறையாண்மை மிக்க அதிகாரம் குறித்துத்தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள். தமிழ் மாணவர்களின் முடியைத் திருத்தி குடுமி வைப்பதற்கோ, அல்லது மொட்டை அடிப்பதற்கோ அம்மாவுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதெனினும், ஒரு கோடி மாணவர்களுக்கும் இந்த ஆண்டே, இந்தக் கணமே மொட்டை அடித்தாக வேண்டும் என்ற சட்டத் திருத்தத்துக்கான நியாயத்தை விளக்கவில்லை.

      அம்மா வின் கோபம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை நோக்கித் திரும்புமே தவிர, பத்மா ஸேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி ஒய்.ஜி.பார்த்தஸாரதி, டி.ஏ.வி ஸ்கூல் என்று அறியப்படும் தயானந்தா ஆங்கிலோ வேதிக் ஸ்கூலின் தாளாளர், ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அம்மையார் ஆகியோரை நோக்கித் திரும்பாது. அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

     வாதங்களின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று கொண்டால், தற்போதைய உயர்நீதி மன்றத் தீர்ப்பினை “நாம் எதிர்பார்த்த்துதான்’ என்று சொல்ல்லாம். நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று.
இந்த வழக்குக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் பலர் உழைத்திருக்கின்றனர். வழக்குரைஞர் மோகன், புருஷோத்தமன் ஆகியோர் வாதிட்டிருக்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டக் குழவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்தது.

     பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் சார்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத், திருமதி மனோன்மணி அவர்கள் சார்பில் வழக்குரைஞர் விடுதலை ஆகியோர் இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மார்க்சிஸ்டு கட்சியின் சார்பாளர் என்ற போதிலும் அக்கட்சியின் நெறியற்ற, சந்தரப்பவாத நடைமுறையை நிராகரித்து இறுதிவரை உறுதியாக நின்று போராடியிருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது.

         சமச்சீர் கல்விக்காக இவரும், இந்திய மாணவர் சங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்டு, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைமைகள் அம்மாவின் குலக்கல்வித் திட்டத்துக்கு “ஓ” போட்டுக் கொண்டிருக்கின்றனர். சொரணையுள்ளவர்கள் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்களா அல்லது அன்புச் சகோதரி அவர்கள், இவர்களையெல்லாம் “நமது எம்ஜிஆர்” நாளேட்டில் கட்டம் கட்டி வெளியேற்றும் காலம் வரை காத்திருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

       சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு தமிழகத்தில் ஜெ அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வல்லுநர் குழுவின் அறிக்கை எரிப்பு, அம்மா வின் கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் போராடியதும் சிறை சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். மக்களின் வரவேற்பையும், அதிமுகவினருடனான மோதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு கடந்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன இந்த பிரச்சாரங்கள்.

        இப்போராட்டத்துக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடைக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. மெட்ரிக் மோகத்துக்கு ஆட்பட்ட பெற்றோரை, அந்தக் கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடுவதுடன், அவர்களை சமச்சீர் கல்வியை ஆதரித்தும், கல்வி தனியார்மயத்தை எதிர்த்தும் போராட வைத்திருக்கிறோம்.

000000000000000000000000000000000

போன வாரம் பேருந்து ஒன்றில் ஜெ அரசின் சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு ம.க.இ.க தோழர். “டேய்.. அம்மா ஆட்சியைப் பத்தி பேசாதே” என்று வெயிட்டாக வந்த்து ஒரு குரல். அதைக் காதில் வாங்காமல் அந்த தோழர் தனது பேச்சைத் தொடர்ந்தார். “டேய் பேசாதேங்கிறேன்ல” என்று குரலுக்கு ஏற்ற வெயிட்டுடன் எழுந்து நின்றது ஒரு கரை வேட்டி. “நான் என் கருத்தை சொல்றேன். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எது சரின்னு சனங்க முடிவு பண்ணட்டும்” என்று அந்தத் தோழர் மிகவும் நாகரீகமாகப் பதிலளித்தார்.

    “டேய்.. நிறுத்துடான்னா…” என்று சொல்லி கையை ஓங்கிய கரை வேட்டியின் கை ஓங்கியபடி நின்றது. “னா..” என்ற குரல் முடியாமல் “ஆ” என்று தொடர்ந்தது. கரை வேட்டியின் கண்ணாடி தெறித்து கீழே விழுந்திருந்தது. “யோவ், இறங்கிப் போய்யா” “தம்பி தொலையிறான் விடுங்க” என்று தலையிட்டார்கள் பயணிகள். கரை வேட்டி தப்பித்த்து.

    என்ன இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்று செயித்த கட்சியல்லவா? கேப் இல்லாம ரெண்டாவது அடிய அடிக்கப்படாது.


நன்றி:- வினவு

ஞாயிறு, ஜூலை 17, 2011

திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம் - மு.சிவகுருநாதன்

திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம்     - மு.சிவகுருநாதன்

   


     அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) 16.07.2011 சனி மாலை 6 மணிக்கு திருவாரூர்  நேதாஜி சாலை காமராஜர் திருமண மண்டபத்தில் சமச்சீர்கல்வி-ஒரு பார்வை என்றொரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.இவ்வரங்கில் பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
        ஜி 8 போன்ற வளர்ந்த,மற்றும் ஏனைய வளரும் நாடுகளில் பொதுப்பள்ளி முறை அமலில் உள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அ.மார்க்ஸ், சமச்சீர்கல்வி என்பது வெறும் பாடநூற்களை பொறுத்து அமைவதில்லை என்பதை தகுந்த உதாரணங்களுடன் விளக்கிப்பேசினார்.
          கல்வி உரிமைச் சட்டம் குறித்துப் பேசியதுடன் இதில் அரசுகளின்  அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தினார்.சமச்சீர்கல்வி பாடநூற்களில் குறைகள் இருப்பது குறித்துப் பேசிய அவர் குறைகள் இல்லாத ஒரு பாடத்திட்டத்தை எந்த ஒரு அரசும் தயாரித்துவிட வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்தினர்.
         வெகு சொற்பமான உதாரணங்களைத்தவிர ஆசிரியர் இயக்கங்கள், ஆசிரியர்கள் சமச்சீர்கல்வி குறித்து சிந்திப்பதில்லை என்று சொன்ன அ.மார்க்ஸ் சமூக அக்கறை கொண்ட அனைவரும் பொதுப்பள்ளி முறையின் அவசியத்தை வலியுறுத்தவேண்டும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வின் சில காட்சிகளை கீழே காணலாம்.










நாகை மாவட்ட கடலோர மக்களின் வாழ்வை அழிக்கும் தனியார் அனல் மின்நிலையங்களும், துறைமுகங்களும்

நாகை மாவட்ட கடலோர மக்களின் வாழ்வை அழிக்கும்
தனியார் அனல் மின்நிலையங்களும், துறைமுகங்களும்


                    உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                                                  மயிலாடுதுறை
                                                                                                                  ஜுலை 16. 2011

       சமய ஒற்றுமை, மீன்வளம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றிக்குப் பெயர்போன மாவட்டம் நாகப்பட்டினம், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள சுமார் 220 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை ஒட்டி 61 கிராமங்கள் மீன்பிடித்தொழிலை நம்பியுள்ளன. 16 நதிகள் கடலில் கலக்கும் கடைமடை விவசாய நிலங்களை நம்பி  ஏராளமான விவசாயிகளும், தலித் மக்களும் வாழ்கின்றனர்.  வேளாங்கன்னி, நாகூர், திருக்கடையூர் முதலான புகழ்மிக்க சமயத்தலங்களில்   சுற்றுலாத்தொழில்களை  நம்பிப் பல சிறு வணிகர்கள்  வாழ்கின்றனர்.

        வரலாற்று முக்கியத்துவமிக்க இம்மாவட்டத்தில் வாழ்கிற மக்கள் மத்தியில்  இன்று  தம் எதிர்காலம் குறித்த மிகப் பொரிய அச்சம் உருவாகியுள்ளது.  ஏற்கனவே கடந்த  15 ஆண்டுகளாகத் திருக்கடையூரில்  செயல்பட்டுக்கொண்டிருக்கும்  பிள்ளை 'பெருமாள்நல்லூர் பவர் லிமிடெட்'-ன் (PPN)  அனல்மின் நிலையம் தவிர மேலும்  ஒன்பது அனல்மின் நிலையங்கள் இங்கு வரப்போகின்றன. ஏற்கனவே  காரைக்காலில்  செயல்பட்டு கொண்டுள்ள 'மார்க்' தனியார் துறைமுகம் தவிர மேலும் மு்ன்று துறைமுகங்களும் அனல்மின்நிலையங்களுக்கான  நிலக்கரியை ஏற்றிவரும்  கப்பல்களிலிருந்து கரியை இறக்கும் பல ஜெட்டிகளும் கட்டப்பட உள்ளன.  இதை ஒட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும்  இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  விவசாய  மற்றும் கடலோர நிலங்களை வாங்கிக்குவிக்கின்றனர்.  பல கிராமங்களிலிருந்து  மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர். விவசாயமும்  மீன்பிடித் தொழிலும்  பெரிய அளவில்  பாதிக்கப்பட்டுள்ளன.

       வர உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை எதிர்த்து இன்று மீனவர்கள்,தலித்கள்,விவசாயிகள், முஸ்லிம்கள் எனப் பல தரப்பினரும் கிராம மக்களும் சுற்றுசூழல் ஆர்வலர்களும் போராடுகிற செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.   இன்னொரு சிங்கூர், நந்திகிராமம்  அல்லது நவிமும்பை எனச் சொல்லத்தக்க அளவு நாகை மாவட்டமும் தரங்கம்பாடியும் மாறி வருகின்றன. 

       தமிழகத்தில் இன்று  நிலவுகிற மின்சாரப் பபற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசும் கார்ப்பரேட்டுகளும் தமது செயல்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலும், விவசாயமும் அழிந்தாலும்கூட புதிய மின் நிலையங்களில்  வேலை வாய்ப்பளிக்கப்படும் என மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். 

       இந்நிலையில்  இங்குள்ள உண்மை நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் நோக்குடன் மனித  உரிமைகளிலும் மக்கள் பிரச்சனைகளிலும்  அக்கறையுள்ள ஆர்வலர்கள் நிரம்பிய உண்மை அறிவும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) சென்னை.
பேராசிரியர் அரசமுருகுபாண்டியன், டி.பி.எம்.எல். கல்லூரி, பொறையார்.                     
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டு பேரவை, திருத்துறைப்பூண்டி.
சமூக ஆய்வாளர் எழுத்தாளர் கா.இளம்பரிதி, மதுரை. 
பொறியாளர்   மு.ஹாஸ்முகம்மது,  மனித உரிமை அமைப்புகளின்  கூட்டமைப்பு (NCHRO.
சமூக ஆர்வலர் செ. முகம்மது மரைக்காயர்(NCHRO)  நாகை.

    இக்குழுவினர்  சென்ற 12, 13, 14.07.2011 ஆகிய மூன்று நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டம், வாணகிரி, தோசைக்குளம், மருதம்பள்ளம்,திருக்கடையூர், வெள்ளக்கோயில், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, எருக்கட்டா ஞ்சோரி. புதுப்பேட்டை. வாஞ்சியூர், நாகூர் கீழப்பிடாகை, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரன்பட்டி முதலான கிராமங்களுக்கும். கடற்கரைகளுக்கும் சென்று பலதரப்பட்டமக்களையும். பஞ்சாயத்தார்களையும். கிராம நாட்டாண்மை களையும் மீனவர்கள், முஸ்லிம்கள், தலித்கள், பெண்கள் எல்லோரையும் சந்தித்துப் பேசினர். அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும்  ஒளி-ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டன.  இவர்கள் தவிர அனல்மின் நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் சுந்தர்,  அமைப்பாளர் குணசேகரன், தலித் விடுதலைக்கான மாற்று முன்னணியைச் சேர்ந்த யு.ராஜுஆகியோரையும் சந்தித்துப்பேசினர்.   ஸ்நேகா நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் குமாரவேல், தரங்கம்பாடியைச் சேர்ந்த  சமூக ஊழியர் நட்சத்திரராஜ், இயற்கை விஞ்ஞானி விழுந்தமாவடி ராஜசேகரன், புதுப்பள்ளி மருத்துவர் ராமமு்ர்த்தி நாகை ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச்சேர்ந்த  ரா. தனவேந்திரன். கிழக்கு கடற்கரை மக்கள்  பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் வழக்குரைஞர் ஜெ. சங்கர் ஆகியோருடனும்  உரையாடினர்.

      மாவட்ட ஆட்சியராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு.முனுசாமி அவர்களையும் சந்தித்து அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுறைகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினர். மீன்வளத்தையும், விவசாயத்தையும் பாதிக்கக் கூடிய எந்தத்திட்டத்தையும்  அனுமதிப்பது தவறுதான் என அவர் ஒப்புக் கொண்டார்.  நாகை மாவட்டத்தில் வரவுள்ள அனல்மின் நிலையங்கள் தொடர்பான இணையத்தளத்தகவல்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டங்களின் நிகழ்வுக் குறிப்புகள், தகவல் அறியும் சட்டத்தின் மு்லம் திரட்டப்பட்ட தகவல்கள், நாகையிலிருந்து இயங்கும் 'ஸ்நேகா' நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கைகள,  PEL  நிறுவனம் அமைக்க உள்ள அனல்மின் நிலையம் குறித்து தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல்ஆராய்ச்சி  நிறுவனம் (NEERI) வெளியிட்டுள்ள அறிக்கை முதலான முக்கிய ஆவணங்களையும் பரிசீலித்தனர்.

      'செட்டிநாடு பவர் கார்ப்பரேஷன்' பொறுப்பாளர் திரு.கோபால் என்பவரைத்  தொடர்பு கொண்டு மக்கள் எழுப்பிய ஐயங்கள் குறித்த விளக்கங்களைக் கேட்டனர். திருக்கடையூர் PPN நிறுவனத்தின் மேலாளரிடம் பேசி அவர்கள் தரப்புக் கருத்துக்களைக் கேட்க அனுமதி கோரினோம்.  தகவல் அனுப்புகிறோம்  எனச்சொன்ன அவர்கள் கடைசிவரை எம்மை சந்திக்க மறுத்துவிட்டனர். எனினும் 'செட்டிநாடு பவர் கார்ப்பரேஷன்' கைப்பற்றி உள்ள நிலங்களைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பும்  ஒப்பந்தக்காரர் திரு. எம்.ஆர். கண்ணன் விரிவாக எங்களிடம் பேசினார்.

       நாகை, காரைக்கால் மாவட்ட ங்களில் அமைந்துள்ள, அமைய உள்ள அனல் மின்நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்.

     1.   திருக்கடையூரில் 'பிள்ளைபெருமாள் நல்லூர் பவர் லிமிடெட்' - கடந்த 1998-முதல் செயல்பாட்டில் உள்ளது.  இது 350 மெகாவாட் (மெ.வா.) அனல்மின் நிலையம். நாப்தலினை அடிப்படையாகக் கொண்ட இந்நிலையம் தற்போது பங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 75கி.மீ.  கடல் ஊடாகக் குழாய் மு்லம் கொண்டு வரப்படும் திரவ எரிவாயுவைக் கொண்டு இயங்குகிறது. தற்போது மேலும் 1410 மெ.வா. திறன் உள்ள மின் நிலைய விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

    2.    காரைக்காலில் இன்று அமைக்கப்பட்டு இயங்கி வரும் 'மார்க்(MARG) துறைமுகம்' 980 மீட்டர் கடலை விரிவு படுத்தி 12 மீட்டர் ஆழம் உள்ள  ஒவ்வொன்றும்  பத்துக் கப்பல்கள் நிற்கக்கூடிய மூன்று பெர்த்கள் உள்ள துறைமுகம். மேலும் மு்ன்று பெர்த்துகள் விரிவாக்கப்பட உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். யூரியா முதலான வேதியியல் பொருட்கள், டெக்ஸ்டைல்  பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கான  துறைமுகம் எனக் கூறப்பட்டு தற்பொழுது பெரிய அளவில் இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

    3.    திருக்குவளை ஆழ்கடல் துறைமுகம் மற்றும்  அனல்மின் திட்டம்,  டிரைடெம் போர்ட் அன்ட் பவர் கம்பெனி பிரைவேட் நிறுவனம்.கீழ்வேளு்ர் வட்டத்தை சேர்ந்த கீழப்பிடாகை, காரப்பிடாகை,விழுந்தமாவடி கிராமங் களைச் சேர்ந்த 627 ஏக்கர் நிலத்தில் இந்த 1820 மெ.வா. அனல்மின் நிலையத்தை அமைக்க உள்ளது (ரூ.9100 கோடி). இதற்கென இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய 242 ஹெக்டேர் நிலத்தில் ஆழ்கடல் துறைமுகமும் 64.7 ஹெக்டேர் பரப்பில் எரிசாம்பல் குட்டையும் அமைக்கப்பட உள்ளது.

    4.    கீழப்பெரும்பள்ளம், வாணகிரி, மருதம்பள்ளம் ஆகிய கிராமங்களில் இரண்டு 500 மெகாவாட் அனல் மின் நிலையங்களை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 'படேல் இன்ஜினியரிங் லிட்.' (P.E.L) கட்ட உள்ளது. இதற்கென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  சுடுநீர் மற்றும் கழிவுகள்  சின்னமேடு கிராமத்தை சேர்ந்த சேவனாறு வழியாக கடலுக்குக் கொண்டு செல்லப்படும்.

    5.   தலைச்சங்காடு, கீழப்பெரும்பள்ளம், வாணகிரி கிராமங்களில் 1300 ஏக்கர் விவசாய நிலத்தில் 660 மெ.கா திறனுள்ள இரு அனல் மின் நிலையங்களை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 'நுசிவீடு சீட்ஸ் லிட்.' (NSL)  அமைக்க உள்ளது (ரூ.5490 கோடி), ஆண்டுக்கு 55 இலட்சம் மெகா டன் நிலக்கரி கடல்  மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 17196 கன மீட்டர் கடல் நீர் உறிஞ்சிப் பயன்படுத்தப்படும்.

    6.    ஓக்கூர்,வெங்கிடங்கால், வேலங்குடி,பெரிய கண்ணமங்கலம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் இரண்டு 750 மெ.வா. அனல்மின் நிலையங்களை ஆந்திராவைச் சேர்ந்த 'கே.வி.கே. எனர்ஜி நிறுவனம்' அமைக்க உள்ளது (ரூ.1440 கோடி).  250 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 3480 டன் நிலக்கரிரிக்கப்படும். ஒரு நாளைக்கு 420 டன் எரிசாம்பல் கழிவு உற்பத்தியாகும். இவை 45 குட்டைகளில் சேகரிக்கப்படும்.

    7.    மாணிக்கப்பங்கு, காளியப்பநல்லூர், எடுக்காட்டாஞ்சேரி, சாத்தங்குடி கிராமங்களைச் சேர்ந்த 850 ஏக்கர் விவசாய மற்றும் கடலோர நிலத்தில் 660 மெ.வா. திறனுள்ள இரு அனல்மின் நிலையங்களை 'செட்டிநாடு பவர் கன்ஸ்ட்ரக்ன்' அமைக்க உள்ளது (ரூ.7216 கோடி). ஒரு மணி நேரத்திற்கு 13.218 கன மீட்டர் கடல்நீர் கடலிலிருந்து உறிஞ்சப்படும். கைப்பற்றப்பட்ட நிலங்களைச் சுற்றி கான்கிரிட் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

     இவற்றைத்தவிர நாகையில் அமைய உள்ள 'யு.டி.ஐ. இன்ப்ராஸ்ட்ரக்சர் சிறப்புப் பொருளாதார மண்டலம்' 2500 ஏக்கரில் 660 மெகாவாட் திறனுள்ள மூன்று அனல்மின் நிலையங்களை 2012 முதல் செயல்படுத்த உள்ளது எனவும் இதற்கென ஆண்டுக்கு 6 மில்லியன் டன் நிலக்கரி   இறக்குமதி செய்யக்கூடிய துறைமுகம் ஒன்றை அமைக்க உள்ளது எனவும் அறிகிறோம். 'மக்னமாரா இன்டர்நேனல் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் நாகை மாவட்டத்தில் 2000 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையம் ஒன்றை அமைக்க உள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

தற்பொழுது திருக்கடையூரில் செயல்பட்டு வரும் P.P.N.மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்:

    1998 முதல் பிள்ளைப்பெருமாள் நல்லூரிலிருந்து செயல்பட்டு வருகிற இம்மின்நிலையத்தில் 330 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாப்தலின் மற்றும் திரவ எரிவாயுவால் இது இயக்கப்படுகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து கடல் ஊடாகச் சுமார் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ள குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரப்படுகிறது. மின் நிலைய இயக்கத்திற்கென கடலில் இருந்து குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுச் சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுகிறது.

    கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிற இம்மின்நிலையம் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக வெள்ளக்கோயில் குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை முதலான ஊர்களைச் சேர்ந்த மீனவ மக்கள் எங்களிடம் கூறினர். இந்த ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் கூடியிருந்த மீனவ மக்களின்  பிரதிநிதிகள் கோ. சரவணன்,  த.குமார், ஆ.பாஸ்கர், நா. தவமணி, ந. தங்கப்பொண்ணு, சு. தங்கவேலு, க.சித்தரவேலு, ர. பரசுராமன், சே.சிவகுமார். கு.விஜயேந்திரன். கி.குணசேகரன் ஆகியோர் கூறியவற்றிலிருந்தது...

1.     கடல் உள்ளே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சிக்கி வலைகள் கிழிந்து விடுகின்றன. டிராய்லர் படகுகள் குழாய்களைச் சுற்றித்தான் செல்லவேண்டியுள்ளது. நாப்தா கொண்டு வரும் கப்பல்களில் மாட்டியும் வலைகள் கிழிகின்றன. இதுகுறித்துப் புகார் செய்தால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் சமரசத்தில் ஒரு சிலருக்கு மட்டும் சிறிய இழப்பீடு தரப்படுகிறது. ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை கிழிந்தால் ரூ.10000  என்ற அளவிலேயே அதுவும் கூட ஒருசிலருக்கு மட்டும் இத்தகைய இழப்பீடுகள் தரப்பட்டுள்ளன. 'ஸ்நேகா' என்கிற தொண்டுநிறுவனம் செய்துள்ள ஆய்வு ஒன்றின்படி  இந்த 13 ஆண்டுகளில் தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு 5.14 கோடி ரூபாய் இழப்பு இவ்வகையில் ஏற்பட்டுள்ளது.

2.    சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலில் கலக்கப்பட்டு வருவதால் பெரிய அளவில் மீன் வளம் குறைந்துள்ளது. தண்ணீர் கலக்கின்ற இடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மீன்களே கிடையாது. மீன்களின் கருவளத்தையும் இது பாதிக்கிறது.  இறால் மற்றும் காணாங்கெழுத்தி, கட்லா முதலான  மீன்கள் மிகவும் குறைந்துவிட்டன.

3.    கடல் அரிப்பும் அதிகரித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் 100 வீடுகளாவது இடம்பெயர்ந்து செல்லவேண்டியுள்ளது.

4.     மழை அளவும் கூட இப்பகுதியில் குறைந்துள்ளது. 8அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் தற்போது 20அடி ஆழத்திற்கு இறங்கி உள்ளது. நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் அதிகரித்துள்ளது.

  5.     மின் நிலையத்திலிருந்து வெளிவரும் புகை மற்றும் ஆவியினால் சுற்றி வசிக்கும் மக்களுக்குச்  சுவாசம் தொடர்பான வியாதிகள் வருகின்றன.  கர்ப்ப காலத்தில் சுகாதாரமான காற்று கிடைக்காததால் உடல் மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. இப்படி உடற்குறையுடன் பிறந்த மூன்று குழந்தைகள் பற்றிய விபரங்களையும் மக்கள் கூறினர்.

செயல்பட்டு வரும் 'மார்க்'(MARG) துறைமுகம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள்:

    கடந்த மூன்று ஆண்டுகளாகக்  காரைக்காலில் செயல்பட்டு வருகிற மார்க் துறைமுகம் கட்டப்படும்போது நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.  இன்று இந்தோனேசியாவிலிருந்து பெரிய அளவில்  நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பெல்ட் முதலான கருவிகள் பயன்படுத்தப்படாமல் மனித உழைப்பின் மூலமாகவே கரைக்குக் கொண்டு வந்து வெட்ட வெளியில் கொட்டப்படுகின்றது.  காற்று வீசும் திசையில் நிலக்கரி தூசு பறந்து இயற்கை வளங்களையும், உப்பனாற்று மீன் வளத்தையும் பாதித்து உள்ளது. வாஞ்சூர், நாகூர், பட்டணம், நிரவி, பட்டினஞ்சேரிஆகிய ஊர்மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு குறை வளர்ச்சியுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், மரம், செடி, கொடிகள் அழிவதாகவும். இப்பகுதியில் விளையும் வாழை இலையில் உணவு உண்ண இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாங்கள் சந்தித்த ஜா.சாதிக்,அ.கப்பாபா ஆகியோர் கூறினர். எதிர்ப்புகளைக் காட்டும்போது உடனடியாக அழைத்துப் பேசி சில சலுகைகளைச் செய்வதை நிர்வாகம் தந்திரமாக மேற்கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாகூர் தர்கா நிலக்கரித்தூளால் பாழ்படுவதைப் பற்றி தர்கா நிர்வாகம் கவலை தெரிவித்தபோது அக்கட்டிடத்திற்கு வெள்ளை அடித்துத் தந்து நிர்வாகம் சமாதானம் செய்தது ஒரு எடுத்துக்காட்டு.




தற்போது அமைக்கப்படவுள்ள அனல்மின்நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள்:

    மேற்குறித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பி.பி.என். மின் நிலையம் 330 மெகாவாட்  திறனுடையது. நாப்தா மற்றும் திரவு எரிவாயுவால் இயங்குவது. ஆனால் தற்போது அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியால் இயங்கக்கூடியவை. ஒவ்வொன்றும் சுமார் 1000 மெ.வா. வரை திறனுடையவை.

      நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல்மின்நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மிக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவதன் சுருக்கம்:

1.    ஓசோன் படலம் துளையாதல், பூமி வெப்பமாதல் ஆகியவற்றிற்குக்  காரணமான வாயுக்கள் பெரிய அளவில் உருவாகும். ஒவ்வொரு 500 மெ.வா. திறனுள்ள அனல் மின்நிலையமும் நாள் ஒன்றுக்கு 105 டன்கள் சல்ஃபர்-டை-ஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்யும். இது சுவாச மற்றும் இருதய நோயை  மக்களுக்கு ஏற்படுத்தும். மேகங்களில் கலந்து அமில மழையை உருவாக்கி மரம்,செடி, கொடிகளையும் விவசாயத்தையும் அழிக்கும்.

    2.   ஒவ்வொரு 500 மெ.வா. திறனுள்ள அனல்மின் நிலையமும் தினமும் 24 டன் நைட்ரஜன்-டை-ஆக்சைடு வாயுவை உருவாக்கும். சுவாச நோய்கள் தவிர ஆறு, குளங்கள் அமிலத்தன்மை அடைந்து விவசாயத்தை மட்டுமின்றி துணிகள், உலோகங்கள் ஆகியவற்றையும் பாதிக்கும்.

    3.   ஒவ்வொரு 500 மெ.வா. திறனுள்ள அனல்மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன் தூசுகளை உருவாக்கும். உலோகத்தன்மையுடைய இத்தூசுகள் நுரையீரலைப் பாதிக்கும். இருதயத் துடிப்பையும் மாற்றி அமைக்கும். காற்றில் கலந்து நீர்நிலைகளை மாசுபடுத்தும். மண்ணின் சத்துக்களை அழிக்கும்.மரம், செடி, கொடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    4.   இதுதவிர உடலில் மிகப் பெரிய தீங்குகளை விளைவிக்கக்கூடிய பாதரசம் வெளிப்படும். ஓராண்டில் நீரில் ஒரு கிராம் அளவு பாதரசம் கலந்தால் பத்து ஹெக்டேர் பரப்பில் உள்ள மீன்கள் வித்தன்மை அடையும். ஒவ்வொரு 100 மெகா வாட் அனல் மின் நிலையமும் ஆண்டொன்றுக்கு 11 கிராம் பாதரசத்தை வெளித்தள்ளும் என்றால் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். மிகக் கொடுமையான உடல் பாதிப்புகளுக்கு இது காரணமாகும்.

    5.    ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையமும் நாளொன்றிற்கு 3000 முதல் 3500 டன் வரை எரிசாம்பலை உற்பத்தி செய்யும். இது சுமார் 16கிலோ மீட்டர் சுற்றளவு வரை காற்றின் மு்லம் பரவி விவசாயத்தை அழிக்கும். மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இச்சாம்பலை குழிகளில் நிரப்பித் தண்ணீர் ஊற்றி பரவுவதைத் தடுப்பதெல்லாம் உரிய பயன்களைத் தராது. மழைக்காலங்களில் இந்த எரிசாம்பல் கரைந்து  மக்கள் வசிக்கும் பகுதிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும். இந்த எரிசாம்பலில் கலந்துள்ள ஆர்சனிக், கேட்மியம், குரோமியம் முதலான கன உலோகங்கள் புற்று நோய் உட்பட பலவகையான நோய்களை உருவாக்கக்கூடியவை.

   6.   ஒரு மணி நேரத்திற்கு 80,000 லிட்டர் அளவு தண்ணீர் செலவழியும்.

    7.    வெப்ப மாசு  எரியும் நிலக்கரியின் 30 முதல் 35 சத வெப்பமே மின் உற்பத்திக்குப் பயன்படும். மீதமுள்ள வெப்பம் குளிர்விக்கும் நீரால் கடத்தப்பட்டது போக காற்றில் கலக்கும். சுமார் 20 முதல் 30 டிகிரி  அதிக வெப்பநிலையுள்ள நீர் மீண்டும் கடலில் கலக்கும் போது மீன் வளத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை ஊகித்துக் கொள்ளலாம். நாகை மாவட்டத்தைச் சுற்றி நரிமணம், குற்றாலம், பரங்கிப்பேட்டை முதலான ஊர்களில்  எரிவாயு எடுக்கப்படுகிறது. தொடர்ந்து இவை எரிந்து கொண்டுள்ளதை யாரும் பார்க்கலாம். இத்துடன் இந்த அனல்மின் நிலையங்கள் காற்றில் வெளிப்படுத்தும் வெப்பமும் சேர்வது பெரும் சுற்றுச்சூழல் தீங்கை விளைவிப்பதோடு   தீ விபத்துக்களுக்கும் காரணமாகலாம்.


புதிய அனல்மின் நிலையங்களுக்காக மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள்:

    உருவாகி வரும் ஒன்பது புதிய அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்காகத் தற்போது மிகப்பெரிய அளவில் நிலப்பறிப்பு மேற்கொள்ளப் படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், கடலோர நிலங்களும், அளங்களும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கடலோரத்தில் சுனாமி அழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்காக நடப்பட்ட சவுக்குத்தோப்புகள் நிறைந்த அரசு நிலங்களும் தற்போது வனத்துறையால் இந்தத் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. பல்வேறு பொய்,ஏமாற்றுதல் மூலம் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றில் சில:

    1.    செட்டி நாடு பி.இ.எல்., என்.எஸ். எல். முதலான கார்ப்பரேட்டுகள் இடைத்தரகர்கள் மு்லமாக   பயோ டீசல்  தயாரிப்பதற்காக காட்டாமணக்கு பயிரிடப்போகிறோம் என்று சொல்லி குறைந்த விலையில் நிலங்களை கைப்பற்றி உள்ளன. அனல்மின் நிலையங்கள் அமைப்பததென்றால் மக்கள் தரமாட்டார்கள் என்பதாலும் கூடுதலான விலை கோருவார்கள் என்பதாலும் இவ்வாறு காட்டாமணக்கு விவசாயத்திற்கு எனப் பொய் சொல்லி  ஏக்கர் 60,000 ரூபாயிலிருந்து 90,000 ரு்பாய் வரையில் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த மனோகர் என்கிற இடைத்தரகர் ஒருவர் மு்லமாகவே செட்டிநாடு நிறுவனத்திற்கான நிலத்தின் பெரும்பகுதி காட்டாமணக்கு விவசாயம் என சொல்லி வாங்கப்பட்டதை இந்நிறுவன ஒப்பந்தக்காரர் எம்.ஆர். கண்ணன் ஒத்துக்கொண்டார். சில முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இத்தகைய இடைத்தரகு வேலையைக் கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்து கொடுத்துப் பெரும்பயன் பெற்றுள்ளனர். கிராம அதிகாரிகள், இதர ரெவினியூ அதிகாரிகள், பஞ்சாயத்துத் தலைவர்கள் முதலியோரும் இதற்கு ஒத்துழைத்துள்ளனர்.

    2.   தற்போது இதே நிலங்கள் ஏக்கர் 6 இலட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய்  வரை விற்கின்றன, வெளியூர்களில் வாழ்ந்து கொண்டு இங்கே நிலம் வைத்திருந்த பண்ணைகள். நிலபிரப்புக்கள் முதலானவர்களிடம் இந்த அளவு விலை கொடுத்து இதே நிறுவனங்கள் வாங்கியுள்ளன. மருதம்பள்ளம், வாணகிரி, பெருந்தோட்டம் முதலான இடங்களில் இவ்வாறு நடந்துள்ளன. குறைவான விலைக்கு விற்றுள்ள விவசாயிகள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்போதைய விலையைத் தருவது அல்லது நிலத்தைத்  திருப்பித் தருவது எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

    3.    மருதம்பள்ளம் கிராமத்தின் பண்ணை ஒன்றில் பலப்பல ஆண்டுகளாகக்  குத்தகை விவசாயம் செய்து வந்த தலித்துகளின் நிலங்களும் பண்ணையாரிடமிருந்து  வாங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவுத் தொகையைக் கொடுத்து (ஏக்கருக்கு 1.7 லட்ச ரூபாய்) குத்தகைதாரர்களிடமிருந்து நிலத்தைக்  கைப்பற்றிய பி.இ.எல். நிறுவனம். அந்த நிலத்தைச் சுற்றி தற்போது வேலி கட்டியுள்ளது. அம்மக்கள் இப்பொழுது பிற ஊர்களுக்குச் சென்று கூலி வேலை செய்கின்றனர், சுற்றிலும் வேலியால்  சூழப்பட்ட குடியிருப்புப் பகுதியிலிருந்து அவர்களை விரட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனம் முயற்சிக்கிறது. அடுத்த கிராமத்தில் வீடுகட்டித் தருவதாகச் சொல்லி அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறது.

    4.    கீழ் வாணகிரியில் உள்ள தோசைகுளம் கிராமத்தில் தலித்துகள் வசிக்கின்றனர், அரசின் பட்டியல் சாதியினர் மேம்பாட்டு நிதி நிறுவன (N.S.F.D.C.) உதவியுடன் னு DAPSI  அமைப்பு தலித் மக்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள வழிவகுத்து வருவதை அறிவோம். அந்த வகையில் 119 ஏக்கர் நிலம் இந்தக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, தற்போது DAPSI அமைப்பைச் சேர்ந்தவர்களின் உதவியோடு பி.இ.எல். நிறுவனம் இந்த நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளது. தலித்துகளுக்கு இவ்வாறு வழங்கப்படும் நிலத்தை வேறு யாரும் வாங்க முடியாது என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கிய நிலத்திற்கு உரிய விலையும் பயனாளிகளுக்குத் தரப்படவில்லை.அவர்கள் இதுவரை கட்டி வந்த பணம் வட்டிக்குக் கழிக்கப்பட்டு விட்டதெனச் சொல்லி வெறும் ரூ.10.000 அல்லது ரூ.20.000 ரூபாய் கொடுத்து DAPSI-ன் மூலம் இந்நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தலித் மக்கள், தங்கள் நிலங்களில் உளுந்து விதைத்தபோது முளைத்து வந்த செடிகளை பி.இ.எல். நிறுவனம் புல்டோசர் வைத்து அழித்துள்ளது. தமது நிலங்களைத் திருப்பித் தர வேண்டும் என இம்மக்கள் இன்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

    5.    கீழப்பிடாகை, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, காரப்பிடாகை கிராமங்களை ஒட்டியுள்ள மணற்திட்டு பூமி செழிப்பு மிகுந்த பகுதி. முந்திரி, மா, தென்னை முதலான பலவகை மரங்கள் செழித்து வளரும் வனப்பகுதி இது. இதை ஒட்டியுள்ள கடற்கரையும், உப்பனாறும். வனமும் "கை முதற்படா கவின் பெரு அழகு்" எனத் தமிழிலக்கியங்கள் சொல்லும் இயற்கை அழகுமிக்க வனப்பகுதி. மயில், கவுதாரி முலான பல்வேறு பறவைகள், முயல், நரி முதலான மிருகங்கள் ஏராளமாக  வசிப்பதை நேரில் பார்த்தோம்.  அழிந்து வரும் இனங்களில் ஒன்றான கடல்ஆமைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பகுதியாகவும் இது உள்ளது.  இன்று அங்கு அனல்மின் நிலையம் ஒன்றையும் நிலக்கரி இறக்குமதி செய்யத் துறைமுகம் ஒன்றையும்  'ட்ரைடென்ட்' என்கிற கார்ப்பரேட் நிறுவனம் அமைக்க உள்ளது. கடற்கரை ஓரமாக வளர்க்கப்பட்ட சவுக்குக்காடுகள் அடர்ந்த நிலத்தை வனத்துறை இந்நிறுவனத்திற்கு வாரி வழங்கியுள்ளது. ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தையும் 99 ஆண்டு குத்தகையில் அந்நிறுவனத்திற்கு அளிப்பதற்கு ஒப்புதல் கொடுக்கச் சொல்லி கிராம மக்களை ஆர்.டி.ஓ. முதலான ரெவின்யூ அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். கிராம மக்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். தங்கள் கிராம நிலத்தைத் தரமுடியாது எனத் தீர்மானங்களை இயற்றி அனுப்பியும் உள்ளனர். தற்போது நிலம் கையகப்படுத்தும் முயற்சி நிறுத்தப்பட்டாலும் கடலுக்குள் துளையிடும் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளதை நாங்கள் பார்த்தோம்.

    6.    காரப்பிடாகையை ஒட்டிய அளத்தில் உள்ளக மீனவர்கள் (Inland Fishermen) மீன் பிடித்து வந்தனர். வெளிநாட்டுப் பறவைகள் எல்லாம் வந்து குடியிருக்கும் சரணாலயமாகவும் விளங்கிய அப்பகுதி இப்போது அழிக்கப்படுகிறது. துறைமுகத்திற்கென கடலைத் தோண்டியள்ளும் மணலைப் போட்டு அந்த அளம் தூர்க்கப்படுகிறது.  உள்ளக மீன்பிடிப்பை நம்பி வாழும் 2500 குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இதன் மூலம் இழந்துள்ளன.

தடுப்புப் சுவரெழுப்பும் செட்டிநாடு நிறுவனம்:

      காட்டாமணக்கு விவசாயம் என்றெல்லாம் பொய் சொல்லி இடைத்தரர்கள் மூலம்  ஏராளமான நிலத்தைக் கைப்பற்றியுள்ள 'செட்டிநாடு நிறுவனம்' தான் கைப்பற்றிய நிலங்களைச் சுற்றி கான்கீரிட் சுவர்களைக் கட்டுகிறது. இது மீனவ மக்களின் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் பட்சத்தில் மக்கள் இனி மேற்கு நோக்கி ஓடித் தப்பிக்க இயலாது.சுவர்கள் கட்டுவதன் மு்லம் ஊர்மக்களின் பொது நிலங்களான சுடுகாடு, குளங்கள் முதலியவையும் செட்டிநாடு நிறுவனத்தால் வளைத்துப் போடப்படுகின்றன. எருக்காட்டாஞ்சேரி  கிராமத்தை ஒட்டி குளம், சுடுகாடு முதலியன அவ்வாறு வளைக்கப்பட்டு உள்ளதையும். காத்தான்சாவடி அருகில் ஒருகோயில் வளைக்கப்பட்டுள்ளதையும் கண்டோம். சுடுகாடு போன்றவற்றை தாம் வளைத்துப் போடவில்லை என ஒப்பந்தக்காரர் எம்.ஆர்.கண்ணனும், செட்டிநாடு நிறுவன மேலாளர் கோபாலும் மறுத்தனர். வளைக்கப்பட்ட குளங்கள் பட்டா குளங்கள் எனவும் அந்தக் கோயில் தன்னுடைய சொந்தச்சொத்து எனவும் கண்ணன் கூறினார். எனினும் கிராம மக்கள் இதனை மறுத்தனர். புறம்போக்கு நிலங்களைக் கூட வளைத்துப் போடுவதாகக் கூறினர்.  சுற்றுச்சுவர் கட்டப்படுவதால் நீர்வரத்துத் தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் வற்றுதல், விவசாயம் பாதிக்கப்படுதல் ஆகியன ஏற்படுவதாகவும் கூறினர்.

 எல்லாவற்றுக்கும் மேலாக இச்சுவர்கள் வேறு இரு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அவை: 

   1.   பிடித்த மீன்களை மீனவப்பெண்கள் கூடையில் சுமந்து அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று விற்று வாழ்ந்து வருகின்றனர்.   செட்டிநாடு நிறுவனம் கட்டியுள்ள சுவர் இந்த மீன் விற்பனைத் தொழிலை அழிக்கிறது.
    2.    கழிப்பிட வசதி இல்லாத மக்கள். குறிப்பாகப் பெண்கள்  ஒதுங்குவதற்கு இருந்த  வாய்ப்புகள்  அழிக்கப்படுகிறது.  கண்ணீர் மல்கப் பெண்கள் தங்கள் இயலாமையை எங்களிடம் விளக்கினர். 

கார்ப்பரேட்களின் எடுபிடிகளாகச்  செயல்படும் காவல்துறை:

     ரெவின்யூ துறை பல்வேறு பிரச்சனைகளிலும் கார்ப்பரேட்டுகளுக்கு இடைத்தரகர்களாகப்  பயன்படுகிறது என்றால்  காவல்துறை எதிர்ப்புகளை மிரட்டி ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 'மார்க் துறைமுகம்' அதை ஒட்டி வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கு எதிராக அவர்கள் கோரிக்கை வைத்த போது, உளவுத்துறை வந்து அவர்களை மிரட்டி உள்ளதை நாகூரில் வாழ்க்கிற முஸ்லிம் மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். முஸ்லிம்களை உளவுத்துறைவைத்து மிரட்டுவதன் பொருளை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.

     அனல்மின் நிலையத்திற்கு எதிராக மக்கள்  போராடும் சூழல்ஏற்படும் போதெல்லாம் பெரிய அளவில் போலிஸ் படை குவிக்கப்பட்டு, தரங்கம்பாடி முதலான இடங்களில் அணிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.  பேராடும் மக்களை மிரட்டவே இது செய்யப்படுகிறது.   எருக்கட்டாஞ்சேரியை ஒட்டி சுவற்றைக் கட்டியதால் ஆத்திரமுற்ற சில இளைர்கள்  சுவற்றை  உதைத்து ஓரிடத்தில் சிறிய உடைப்பை ஏற்படுத்தியுள்ளனர். சீர்காழிகாவல் நிலைய துணைக்கண்காணிப்பாளர்  சாமிநாதன் இக்கிராமத்தைச் சேர்ந்த  14 இளைர்களைக் கைது செய்து கொண்டு சென்று, ஆடைகளை அவிழ்த்து,  அடித்து, கடுமையாக சித்ரவதை செய்துள்ளார். விசாரிக்கப்போன நாட்டாண்மை செல்வம் என்பவரையும் அடித்துள்ளார்.  இந்த 14 பேர்கள் மீதும்  இந்தியத் தண்டனைச்சட்டப் பிரிவுகள் 147, 284(பி), 341, 506(1) மற்றும் பொதுச் சொத்து சேதம் விளைவிப்பு (PPD Act) தொடர்பான சட்டப்பிரிவு 3(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு (குற்ற எண்:154/2011)  சிறையிலடைக்கப்பட்டனர். அவர்கள்   ரூ. 50.000   பிணைத்தொகை கட்டி  வெளியில் வந்துள்ளனர்.

    ஆதிக்கசாதி ஒன்றைச் சேர்ந்த  துணைக்கண்காணிப்பாளர் சாமிநாதன் கார்பரேட் எடுபிடியாக மாறியது மட்டுமின்றி, சாதி வெறியராகவும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட 14 பேர்களில்  தனது சாதியைச் சேர்ந்த ஒருவரை மட்டும் விட்டுவிட்டு,  பிறரை நிர்வாணப்படுத்தி அடித்துள்ளார். இவ்வாறு தாக்கப்பட்டவர்கள் அனைவரும் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வு என்னும் கண்துடைப்பு:

     எந்தவொரு திட்டமும் செயல்படுத்தபடுவதற்கு  முன்னால்  மக்களைக் கூட்டி அதன் அத்தனை அம்சங்களையும்   வெளிப்படையாக மக்கள் முன் வைத்துப்பேசி அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் கேட்புரை  என அழைக்கப்படும் இந்நிகழ்வை மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்னின்று செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்குத் தலைமை ஏற்க வேண்டும். இன்று உருவாக்கப்பட உள்ள இந்த அனல்மின் நிலையங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட இத்தகைய கேட்புரைகளில் பாதிப்பிற்கு உள்ளாகிற கிராம மக்கள் இந்தத் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.  சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஆதரித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாகச் சென்ற மே 21,2010அன்று:

    இது தொடர்பாகத் தற்பொழுது இந்தத் திட்டத்தில் ஒப்பந்தக்காரராகச் செயல்படும் திரு.எம்.ஆர். கண்ணன் எங்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தக் கலந்தாய்வின் போது திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இவர் முன்நிற்கிறார். இங்கே நடத்துகிற கலந்தாய்வு எல்லாம் வெறும் கண்துடைப்பு. 99 சதவீதத்தினர் திட்டம் வேண்டாம் எனச் சொல்கிறhர்கள். ஒருவர் தான் திட்டத்தை ஆதரிக்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக மக்கள் பல்வேறு ஐயங்களை இந்தக் கலந்தாய்வு களில்  முன்வைக்கிறார்கள். நிறுவனத்தின் சார்பாகத் திருப்திகரமான பதில்கள் ஏதுமில்லை.  இருந்த போதிலும் அடுத்த சிலவாரம் அல்லது மாதங்களில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து (MOEF) ஒப்புதல் வந்து விடுகிறது. அரசுத் தரப்பிலிருந்து எல்லாவிதமான ஒப்புதல்களையும் பெற்று விடுகின்றனர். இந்தக் கலந்தாய்வு எல்லாம் வெறும் கண்துடைப்பு.  இவர்களை எதிர்த்து எந்தப்  பயனும் இல்லை எனத் தான் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கு விளக்கம் அளித்தார். 

    அவர் கூறுவது முற்றிலும் உண்மையே.  செட்டிநாடு நிறுவனம் சார்பாக எம்மிடம் பேசிய கோபால், தற்போது அனல்மின் நிலையத்திற்கும்  நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக அமைக்க உள்ள ஜெட்டிக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாகக் கூறினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்தும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்றார்.

     வரவுள்ள திட்டங்கள் தொடர்பாக மக்கள் அளித்த எதிர்ப்புகளுக்குப் பதிலாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் பெறப்பட்டு  இவை முறைப்படி  ஒப்புதல்கள் பெற்றே நடை பெறுவதாக  கண்ணனும் குறிப்பிட்டார்.  சுற்றுச் சூழலுக்குச் பெரிய ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய இத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளிப்பது வியப்பாக உள்ளது. அரசின் பல்வேறு துறைகளும் மக்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளது நாகையில் மிகவும் தெரிவாகத் தெரிகிறது. கலந்தாய்வுக்கூட்டங்களுக்கு மக்களைச்  செல்லவிடாமல்  தடுப்பது. அடியாட்களை அழைத்து வந்துமிரட்டுவது முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும். மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  'செட்டிநாடு நிறுவனம்' தனது கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வந்து மிரட்டியதாகக் கலந்தாய்வுக் கூட்டத்தின் போது 'ஸ்நேகா' அமைப்பின் தலைவர் திருமதி. ஜேசுரத்தினம் கூறியுள்ளது மினிட்ஸில்  பதிவாகி உள்ளது,  போலிசைக் கொண்டு கலந்தாய்வுக்  கூட்டத்தில் தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.  எதிர்ப்பு அதிகமாக இருந்ததால்  ஒரு கலந்தாய்வுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் மக்கள் கூறினர்.

    மக்களில் ஒருசிலரைப் பிரித்தெடுத்து அவர்களைப் பொதுக்கருத்துக்கு எதிராகவும். திட்டங்களுக்கு ஆதரவாகவும் நிறுத்துகிற செயலையும் கார்ப்பரேட்டுகள் செய்கின்றன. வாணகிரியில் இப்படி ஊர்மக்களையே ஒருவருக்கொருவர் பகையான இரு குழுக்களாக மாற்றி அமைப்பதில் கார்ப்பரேட் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 

வேலைவாய்ப்பு முதலான பொய் வாக்குறுதிகள்:

    வாணகிரியில் திட்டத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிற திருவாளர்கள் ரவி, மாணிக்கவேலு, வேலுக்கண்ணு முதலானோர் எம்மிடம்  வேலை கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.  செட்டிநாடு நிறுவனம்  சார்பாகப் பேசிய கோபாலும் அப்படியான திட்டங்கள் உண்டு எனவும் கார்ப்பரேட் சமு்கப் பொறுப்பு் அடிப்படையில்  30கோடி ரு்பாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை செய்யப்போவதாகவும் கூறினார்.  எத்தகைய வேலைவாய்ப்புகள் என்பதற்கு அவரால் தெளிவாகப் பதிலளிக்க முடியவில்லை.  ஏற்கனவே இங்கு செயல்பட்டு வருகிற PPN நிறுவனம் அப்படியான வேலை வாய்ப்புகள் எதையும் உள்ளு்ர் மக்களுக்கு வழங்கிவிடவில்லை என்பதை நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் குறிப்பிட்டனர். ஊர்மக்கள் எதிர்ப்புகளைக் காட்டும் போது அவர்களைச் சமாதானப்படுத்துவற்காக மூட்டை தூக்குவது, கூட்டுவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது முதலான கீழ்நிலைப் பணிகள் மட்டுமே PPN மற்றும் 'மார்க்' துறைமுக நிர்வாகங்களால் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் எதுவும் தமது திட்ட வரைவுகள், வேலைவாய்ப்புகள் முதலியவற்றை வெளிப்படையாக அறிவிப்பதோ, எழுத்து மு்லம் மக்களிடம் ஒப்பந்தங்கள் செய்வதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



எமது பார்வைகள்:

    1.    நாகை,காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த பலதரப்பு மக்களையும் சந்தித்துப் பேசினோம். மிகப்பெரிய அளவில் தமது எதிர்காலம் குறித்த அச்சமும் பீதியும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. தமது எதிர்காலம் குறித்த கவலையை அம்மக்கள் கண்ணீர் மல்க எம்மிடம் தெரிவித்தனர்.

    2.   கீழப்பெரும்பள்ளம், மருதம்பள்ளம் முதலான கடைமடைப்பகுதிகளில் நன்கு விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிகள் திட்டமிட்டு தரிசுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மருதம்பள்ளம், தோசைகுளம் முதலான பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அடுத்த ஊர்களுக்குக் கூலிவேலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    3.    செயல்பட்டு வருகிற 'மார்க் நிறுவனம்'. PPN மின் நிலையம் ஆகியவற்றின் தீய விளைவுகளால் ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளம் குறைந்துள்ளது, பெரிய அளவில் மீன்பிடி வலைகள் கிழிவது முதலான வற்றhல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றி வாழும் மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    4.    எருக்கட்டாஞ்சேரியில் துணைக்காணிப்பாளர் சாமிநாதன் தலைமையில்  தலித் மக்கள் மீது போலிஸ் நடத்திய கடும் தாக்குதலும்  போடப்பட்டுள்ள பொய் வழக்குகளும்  அவ்வூர் மக்கள் மத்தியில் மட்டுமின்றி, இப்பகுதி முழுவதிலுமே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    5.    'செட்டிநாடு நிறுவனம்' தரங்கம்பாடியை ஒட்டிய கிராமங்களில் எழுப்பி வரும் காம்பவுண்ட் சுவர்கள் மீனவர்கள். விவசாயிகள், தலித்துகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  சுவர்கட்டி முடிக்கப்படும் போது மக்களின் இயக்கம். மீன் விற்பனை முதலியன வெகுவாகப் பாதிக்கப்படும். விவசாயம் அழியும். ஏற்கனவே இந்தப் பாதிப்புகள் தொடங்கிவிட்டதை நாங்கள் பார்த்தோம். சுனாமி முதலான பேரிடர்கள் உருவாகும்போது கடலோரமக்கள் உயிரோடு சமாதியாவது உறுதி.

    6.    கீழப்பிடாகை, விழுந்தமாவடி, காரப்பிடாகை முதலான பகுதிகளை ஒட்டிய இயற்கை வளமிக்க புவியியல் சூழல்  அழியக்கூடிய ஆபத்து மிகப் பெரிய சுற்றுசூழல் அழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

    7.    மாவட்ட ரெவின்யூ நிர்வாகம்,காவல்துறை,வனத்துறை, மத்திய அரசு சுற்றுசூழல் துறை முதலியன கார்ப்பரேட்டுகளின் ஏஜென்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன.  PEL  நிறுவனத்தின்  கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு சென்று கடலில் கலக்க அனுமதி அளிக்கும் முகமாக,  தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) அளித்துள்ள அறிக்கையில்  இதனால் பாதிக்கக்கூடிய சிதம்பரம்பாக்கம்  என்கிற கிராமமே மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் இல்லையெனக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.  அரசு வெளியிட்டுள்ள  டோபோ் வரைபடத்தில் இக்கிராமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,  கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக அரசு நிறுவனங்கள்  எந்த அளவிற்கு மக்களுக்கு எதிராகச் செயல்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    8.    கடல் அரிப்பு பெரிய அளவில் உள்ளது. அரசு தரப்பில் இதைத் தடுப்பதற்கான முயற்சிகள் ஏதுமில்லை. வாணகிரியை ஒட்டியுள்ள பூம்புகார் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் ஏற்கனவே இருந்த ஒரு கோயிலே இன்று காணாமல் போய் உள்ளது.  பெரிய அளவில் கடற்கரையோர  மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். 

    9.    நிலபறிப்பில் கார்ப்பரேட்டுகள் எல்லாவிதமான பொய்களையும், ஏமாற்றுதல்களையும், மிரட்டுதல்களையும், தகிடுதத்தங்களையும் அரசு உதவியுடன் நிறைவேற்றியுள்ளனர். பல விதிமீறல்களும் நடந்துள்ளன. புறம்போக்குகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு நிலங்கள் வளைக்கப்பட்டுள்ளன.   இழப்பீடுகள் தொடர்பான தற்போது உலக அளவில் உருவாகி வருகிற நிலத்தை இழப்பவர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குத்தகைதாரர்கள் மற்றும் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த பலர் முழுமையாக இழப்பீடு ஏதுமின்றி ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    10.    இந்நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை இப்பகுதியில் இயங்கும் ஊடகங்கள் உரிய முறையில் வெளிப்படுத்துவதில்லை எனவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதராகவே இவர்கள் செயல்படுகின்றனர் எனவும் மக்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.

    11.    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் சில முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இடைத்தரகு வேலை செய்வது  மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.  தொடர்புடைய அரசியல் கட்சிகளின் பெயர்களை நாங்கள் குறிப்பிட விரும்பவில்லை. இக்கட்சித் தலைமைகள் இவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பது அவசியம்.

பரிந்துரைகள்:

   1.    அறிவிக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுகத்  திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  இத்திட்டங்கள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும்.

    2.    இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பறிப்பு. அவற்றால் ஏற்பட்டுள்ள மக்கள் பாதிப்பு, வரப்போகும் திட்டங்களால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மீன்வளப்பாதிப்பு ஆகியவை குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும். நிலப்பறிப்பில் விதிகளை மீறி கார்ப்பரேட்டுகளுக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊராட்சித்தலைவர்கள் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும். அதிகாரிகள் மீது துறை சார் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சிதம்பரம்பாக்கம் என்கிற கிராமமே இல்லை எனச் சொன்ன' நீரி'(NEERI)  நிறுவனத்தின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    3.    செட்டிநாடு நிறுவனத்தின் சுவர் கட்டும் வேலைகளை உடனடியாக நிறுத்தி,கட்டப்பட்டுள்ள சுவர்களை இடிக்க வேண்டும்.

    4.    ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டுள்ள PPN , 'மார்க் துறைமுகம்' ஆகியவை ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழலியர்கள் அடங்கிய குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும். அதுவரை மார்க் துறைமுகம் மற்றும் PPN நிறுவன விரிவாக்கப்பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.  மார்க் துறைமுகத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்து பாதுகாப்பு இல்லாமல் கொட்டி வைத்திருப்பது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நிலக்கரியை இவ்வாறு கொட்டி வைத்து பாதிப்புகளை ஏற்படுத்தியதற்காக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.    கீழப்பிடாகை, விழுந்தமாவடி முதலான கிராமங்களைச்  சுற்றியுள்ள சுற்றுசூழல் இயற்கை வள அமைப்பைச் சீர்குலைக்கும் திருக்குவளை அனல்மின் மற்றும் துறைமுகத்திட்டம் கைவிடப்பட்டதாக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

6.    சாதி வெறியுடன் தலித் மக்களைத் தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு தொடரவேண்டும். எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த 14பேர்கள் மீதும்  போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப்  பெறவேண்டும். அவ்வூர் மக்களுக்கும் ஊர்த் தலைவர் செல்வத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

7.    விவசாயத்திற்கு எனப் பொய்கூறி அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் மற்றும் மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள் நிபந்தனையின்றி, அவற்றின் முந்தைய பயன்பாட்டாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.



தொலை நோக்கில்:

    தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதும் தொடர்ந்து மின்தேவை அதிகரித்து வருவதும் எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு நிலையே. இதற்கு உடனடிப்பரிகாரம் அவசியம் என்பதும் உண்மையே. நம்முடைய தற்போதைய மின்தேவை சுமார் 11 ஆயிரம் மெகாவாட் எனக்கூறப்படுகிறது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள மின் நிலையங்களின் உற்பத்திதிறன் 15,800 மெகா வாட். இந்த மின் நிலையங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பணிகளை ஒழுங்காகச் செய்தல், மின் சிக்கனம், விநியோகம் முதலியவற்றின் திறன் சார்ந்த மேலாண்மை முறைகளைக் கையாளுதல் ஆகியவற்றின் மு்லம் உடனடி மின்பற்றாக்குறையைக் களைய முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும். கார்ப்பரேட்டுகளுக்கும் நமது தற்போதைய மின் பற்றாக்குறையைக் கணக்கில் கொள்ளாமல் ஏராளமாக மின்சாரத்தை அளிக்க ஒப்புதல் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்.

    அதிகரித்து வரும் மின் தேவையைச் சரிகட்ட அரசு அணு உலை தவிர்த்த மாற்று வழிமுறைகளை முயற்சிக்க வேண்டும், இதற்கான ஆய்வுகளுக்கு இன்று அரசு ஒதுக்கும் நிதி மிகக் குறைவு.  இந்நிலை மாற்றி அமைக்கப்படவேண்டும்.

    மக்களுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அனல் மின் நிலைய விரிவாக்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மிகவும் அவசியமான தருணங்களில் மக்கள் அதிகம் வசிக்காத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பகுதிகளில் மட்டுமே அவை அனுமதிக்கப்பட வேண்டும்.

      நிலம் கையகப்படுத்துதல், இடப்பெயர்வு, மறுவாழ்வு் தொடர்பான தேசியக் கொள்கை வகுத்தல், சட்டத் திருத்தம் செய்தல் என்கிற அரசின் அறிவிப்புகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது. நாடெங்கிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள நிலையில் இதற்கு உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும். நிலத்தைக் கொடுக்க மறுக்கும் உரிமை ஏற்கப்படுதல்  வேண்டும். இழப்பீடு அளித்தல் தொடர்பாகப் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுதலும், நிலத்தைச் சார்ந்திருந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் நிலையும் மேற்கொள்ளப்படவேண்டும். ஒரு திட்டம் நடைமுறைப்படுத்திய பின்னர் நிலத்தின் விலை அதிகரிக்கும்போது அதன் பயன் தொடர்ந்து நிலத்தை இழந்தவர்களுக்குக் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.


தொடர்பு :-     அ. மார்க்ஸ், 
                          315 முதல் குறுக்குத்தெரு, 
                          சாஸ்திரி நகர்,
                          அடையாறு, 
                          சென்னை 600 020.
                          செல் :- 94441 20582