செவ்வாய், பிப்ரவரி 18, 2020

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்

 
மு.சிவகுருநாதன்




         எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம் உண்டு.

       இப்பாடத்திலும் நமது பாடமெழுதிகள் இந்துத்துவச் சொல்லாடல்களையும் இஸ்லாம் வெறுப்பையும் எப்படியெல்லாம் உற்பத்தி செய்கின்றனர் என்று பாருங்கள்.

    "ரிக்வேத காலத்தில்  மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக
இருந்தது. குறிப்பாக மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது
ஏற்றுக்கொள்ளப்பட்டன". (பக்.157)

        இவ்வாறாக உச்சத்தில் இருந்த இந்தியச் சமூகம் இடைக்கால இஸ்லாமியப் படையெடுப்புகளில் மிக மோசமான நிலையை அடைவதாக 'பாடநூல் இந்துத்துவவாதிகள்' கதையாடல்களை நிகழ்த்துகின்றனர்.

"இடைக்காலம்

     இடைக்கால சமூகத்தில் பெண்களின்  நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தை திருமணங்கள், பெண்சிசுக்கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற பல  சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்". (பக்.157)

இதன் தொடர்ச்சியாக,

       "முஸ்ஸீம் படையெடுப்பின் விளைவாக  பர்தா முறை பிரபலமானது. இடைக்காலத்தில்  விதவையின் நிலை பரிதாபமாக மாறியது", (பக்.157) என்கின்றனர். ஆனால் 'சதி'யில் தாங்களாகவே விரும்பித் தீவைத்துக் கொண்டனராம்!

     "இடைக்காலத்தில் கல்விமுறை ஆரம்ப  கட்டத்தில்தான் இருந்தது". (பக்.157)

       ஆனால் வேதகாலத்தில் கல்வி உச்சத்தில் இருந்தது போலும்!

     "குழந்தைத் திருமணம் பழங்குடியினரிடையே வழக்கத்தில் இருந்தது". (பக்.158)

      இந்தியச் சமூகத்தில் அன்று லட்சக் கணக்கில் ஒரு வயதுப் பெண் விதவைகள் பிராமணர்களில் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

       பிராமணர்கள் எப்பொழுது பழங்குடிகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்? இவ்வாறு தமிழகப் பாடநூல்கள் உருவாக்கும் புனைவுகள் எண்ணற்றவை.

'சதி' யைப் பற்றிய இவர்களது பார்வை:

    "இந்திய சமூகத்தில் நிலவிய  மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக
ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம்  காணப்பட்டது. அப்போதிருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சதி எனும் சடங்கை ஆதரித்தது. இதன்  பொருள் 'கணவனின் சிதையில் தானாக  முன்வந்து விதவைகள் எரித்துக்கொள்ளுதல்'
ஆகும். ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டனர் ஆனால்
பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால்  சிதையில் அமர்ந்தனர்". (பக்.159)

       பெண்களது விருப்பத்தை ஏன் ஆங்கிலேய அரசு தடை செய்ய வேண்டும்? ராஜாராம் மோகன் ராய் ஏன் ஒழிக்க முயற்சித்தார்?

     'தேவதாசி முறை' குறித்தும் இவர்களது ஆய்வின் வெளிப்பாட்டையும் காணுங்கள்.

    "தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் “கடவுளின் சேவகர்” என்பதாகும். பெண் குழந்தையை கோவிலுக்கு நேர்த்தி கடனாக  அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் கோயிலைக் கவனித்துக்கொள்வதோடு  மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்திய கலைகளையும் கற்றுக் கொண்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையையும் அனுபவித்தனர். பிற்காலங்களில் அவர்கள் மோசமாக  நடத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர்". (பக்.159)

      தேவதாசிகள் பெற்ற சமூக உயர்நிலைகள் எவை? அத்தகைய நல்லப் பழக்கத்தை ஏன் சட்டம் மூலம் தடுக்க வேண்டும்?

     இச்சட்டம் கொண்டுவர பெரியாருடன் சேர்ந்து ராஜாஜி தார்மீக ஆதரவு கொடுத்தாராமே! (பக்.160)

     தீரர் சத்தியமூர்த்தி அய்யர் கொடுத்த வெளிப்படையான ஆதரவை ஏன் பாடநூல் இருட்டடிப்பு செய்கிறது?

இன்னும் விரிவாக...

பின்னர் காண்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக