வெள்ளி, பிப்ரவரி 28, 2020

சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?


சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 64) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: 


      ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவப் பாடத்தில் குடிமையியல் பகுதியில் அலகு 3 ‘சாலைப் பாதுகாப்பு’ என்ற பாடம் இருக்கிறது. இப்படத்தின் தொடக்கத்தில் கற்றல் நோக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.  அவைகள்  பின்வருமாறு:


  • “சாலைப்  பாதுகாப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல்.
  • சாலை விபத்திற்கான காரணங்களை  ஆராய்தல்.
  • சாலைப்  பாதுகாப்பு  முறைகளைப் பட்டியலிடுதல்.
  • அரசாங்கம் மற்றும் தனிமனிதனின்  சாலைப் பாதுகாப்பு அங்கீகரித்தல்.
  • சாலைப்  பாதுகாப்பு  வாரம் போக்குவரத்துக் குறியீடுகள் முதலியவற்றை  அறிந்து கொள்ளுதல்”. (பக்.241)

  ஆங்கில வழியில், (Unit -3 Road Safety Learning Objectives)


  • “Understand the need for road safety 
  • Analyze the causes for road accidents 
  • List out the safety measures
  •  Recognize the roles and responsibilities of government and  individuals 
  • Know about safety week and traffic signals (Page: 198)


   “அரசாங்கம் மற்றும் தனிமனிதனின்  சாலைப் பாதுகாப்பு அங்கீகரித்தல்”, என்றால் என்ன? இதென்ன புதுக் குழப்பம்? அரசின் பாதுகாப்பை யார் அங்கீகரிப்பது?  “Recognize the roles and responsibilities of government and  individuals”, என்கிற வரிதான் மொழிபெயர்ப்பில் இவ்வாறாகத் திரிகிறது.

    அது போகட்டும்; விட்டுத் தொலைப்போம். பாடநூல்களில் வரிக்குவரி இச்சிக்கல் தொடர்கிறதே!  மேற்கண்ட நோக்கம் நிறைவேறியதா என்பதை மதிப்பீடுகளால் அளவிட வேண்டும். இந்நோக்கங்களை ஒட்டி மதிப்பீடு செய்வதே உகந்தது. பொருத்தமில்லாத வினாக்களைக்  கேட்பது  எதற்காக?

     காட்டாக, ஒரு மதிப்பீட்டு வினாவைப் பாருங்கள்:

“V. பொருத்தமில்லாத ஒன்றைக்  கண்டுபிடி.

அ) கார் ஆ) டிரக் இ) டெம்போ ஈ) ஏரோப்ளேன்”,   (பக்.250)

“2. Find the odd one 
a) car b) trucks c) tempos d) aero planes”,  (Page: 205)

     இங்கு எவ்வகையான திறன் அளவிடப்படுகிறது? இப்பாடம் வாகனங்களைப் பற்றியதா, அல்லது சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பிற்கானதா?
 
    ‘Road Safety education’, (Page: 202&203)  என்ற சொற்றொடரை எப்படி மொழிபெயர்ப்பது? பாடநூல்  ‘போக்குவரத்துக் கல்வி’ என்றே சொல்கிறது. ‘போக்குவரத்துக் கல்வி’ (Transport Education)  என்றால் என்ன? இக்கல்வியை கலைத்திட்டத்தில்  இணைப்பது குறித்தெல்லாம் பேசப்படுகிறது. ‘சாலைப் பாதுகாப்புக் கல்வி’யை மாணவர்களுக்கு முறையாக அளிக்க வேண்டும் என்று துளியும் நினைக்கவில்லை. இது குழந்தைகளுக்கு எழுதும் பாடம் என்பதையே மறந்துவிடும் போக்கு நீடிக்கிறது.

     ஏற்கனவே ஒரு வகுப்பில்  சாலை விபத்துகளுக்கு கல்வியறிவின்மை காரணம் என்றனர். தேசிய அளவில் கல்வியில் இரண்டாமிடம் பெறும் தமிழ்நாடு விபத்து மற்றும் உயிரிழப்புகளில் முதலிடம் வகிக்கக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டாமா?

 ‘பாதசாரிகளின் பொறுமை இன்மை’ எனும் தலைப்பில்,

     “சாலையில் நடந்துசெல்லும் பாதசாரிகளின் பொறுமையின்மையும், சாலைவிதிகளைப்  புறக்கணித்தலுமே விபத்துகளை  ஏற்படுத்துகின்றன”. (பக்.243)

    இங்கு பாதசாரிகளின் (pedestrians) பொறுமையின்மை, சாலை விதிகளைப் புறக்கணித்தல் ஆகியன காரணமாகச் சுட்டப்படுகிறது (பக். 243). பாதசாரிகளுக்கு என்ன விதிகள் என எந்தப் பாடநூலும் விளக்குவதில்லை. 

    நடைபாதை அல்லது நடைமேடையில் நடக்க வேண்டும். வெள்ளைக் கோடுகள் அமைக்கப்பட்ட இடத்தில் சாலையைக் கடக்கவேண்டும் என்று  நகரத்தை மையமாகக் கொண்டு  குறிப்பிடுவது ஏன்?

   நகரங்களில் கூட நடைமேடைகளை நடப்பதற்குப் பயன்படுத்த முடியாத  நிலைதான் உள்ளது.  சாலைகளில் எங்கும் நடைமேடையும் வரிக்கோடுகளும் இருக்காது அல்லவா!

  வாகனங்கள் இடப்புறமாகச் செல்லவேண்டும் என்பதைப் பாதசாரிகளுக்குமான சாலை விதியாகக் கற்பிதம் செய்துகொள்ளும்  நிலையை மாற்ற அந்த விதியை உறுதியாகச் சொல்ல வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என நீட்டி முழக்கும் பாடம் சாலைவிதிகளைத் தெளிவாக உணர்த்த முன்வரவில்லை.

   பாதசாரிகள் (pedestrians) நடைமேடை இல்லாத இடங்களில் சாலையின் வலது புறம் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்தவாறு நடக்க வேண்டும் என்பதே விதி. இதை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை; எனவே யாரும் கடைபிடிப்பதில்லை. பின்னால் வரும் வாகனங்கள் மோதாமலிருக்க இந்த ஏற்பாடு. வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எப்படி ஒரே விதி இருக்க முடியும்?
   
    சச்சின் டெண்டுல்கர் மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு பரப்புரைக்குக் கொடுக்கும் முதன்மையில் Car Pooling, Raksha Safety ஆகிய புதிய மற்றும் ஆசிரியர்களுக்கேத் தெரியாத செய்திகளுக்கு  ஒரு சிறு துளிகூட தருவதில்லை.

     “Carpooling is the sharing of car  journeys so that more than one person  travels in car, and prevents the need for more cars to the same location”.

   “Raksha safe drive. It is a  device capable of automatic  crash detection, two – way call  connectivity, GPS tracking, engine  health monitoring and smart  panic button”. (Page: 202)

    கார்பூலிங் என்று அப்படியே ஒலி பெயர்த்து அடைப்புக்குறிக்குள் கூட ஆங்கிலத்தில் தராமல் பாடம் எழுதுவதை என்ன சொல்ல? மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் ‘பயணப் பகிர்வு’ செய்வதை எளிமையாக விளக்க முடியாதா? ஏதோ விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவதைப்போல “ஓரிடத்தை நோக்கி வாகனங்கள் செலுத்தப்படுகின்றன”, என்கிறார்கள்.

   “The Government of India observes 'Road  Safety Week' awareness during January, every  year”. (Page: 204)

    மத்திய அரசு ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வாரத்தைக் கொண்டாடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜனவரி 1 முதல் 7 வரையிலான முதல் வாரத்தில் இவ்வார விழா கொண்டாடப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக எந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒப்புக்குக் கொண்டாடிவிட்டு  நகர்கிறது. இதுதான் மனித உயிர்களின் மீதான மாநில அரசின் பெரிய அக்கறை!

    ‘Zebra crossing’ என்பதை  ‘வரிக்குதிரை கடப்பு’ (பக்.250) என்றெல்லாம் மொழிபெயர்ப்பது அபத்தம்.  கடப்பு என்பதற்கு வேறு பொருள்கள் உண்டு. பாதசாரிகள் கடக்குமிடத்தை இப்படி குழப்ப வேண்டாம்!

    ‘seat belt’ ஐ ‘இருக்கை வார் பட்டை’ என நீட்டி முழக்காமல் ‘இருக்கைப் பட்டை’ என்றே சொல்லலாம். 'வார்' என்பதும் ‘பட்டை’யைக் குறிக்கும் சொல்லே. ‘நடுசென்டர், கேட்வாசல், ஷாப்கடை’ என்பதைப் போல வேண்டாமே! ‘தலைக்கவசம்’ என்றுதானே சொல்கிறோம்? ‘தலைமேல் தொப்பிக் கவசம்’ என்று சொல்ல வேண்டுமோ! எளிய சிக்கலற்ற மொழியாக்கங்கள் வேண்டும்.

        “Drunken driving, jumping red light over  speeding and unmanned railway crossings  cause great damage to valuable lives. Due to  this, many families lose their breadwinners”. (Page: 200)

    “மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், போக்குவரத்து குறியீடுகளை மதிக்காமல் இருத்தல், அதிவேகமாக இயக்குதல், ஆளில்லாத இருப்புப் பாதை பகுதிகளில் கவனமில்லாது கடப்பது போன்ற செயல்களால் உயிர்ச்சேதம் அதிகரிக்கிறது. இதனால், பல  குடும்பங்கள் வருமானம் ஈட்டும் தம் நபரை இழந்து வாடுகின்றன”, (பக்.244)

  இப்பகுதிக்கான வினாக்கள்,


“4. ________________ is the monetary  supporter of a family”. (Page: 205)

“4. ___________________ குடும்பத்திற்கு  வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்”, (பக்.250)

      Breadwinner – குடும்பத்திற்காக சம்பாதிப்பவர் (பக்.249) என்று சொற்களஞ்சியம் விளக்குகிறது.

     "Breadwinner  is the monetary  supporter of a family", என்று ஆங்கில வழியில் எழுதிட முடியும்.

   
      "குடும்பத்திற்காக சம்பாதிப்பவர்  குடும்பத்திற்கு  வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்”,  என்று தமிழில் எழுதும்போது அபத்தமாகத் தோன்றும். இவற்றெல்லாம் சிந்தித்து வினா எடுப்பது அழகு!


      “தனிமனிதன்  ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர், தற்கான  ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பயிற்சியும்  அதற்கான தேர்வுகளில  தேர்ச்சியும்  பெற்றிருக்க வேண்டும்”. (பக்.245&246)

“3. அனுமதி என்பது

அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்த சான்றிதழ்

4. ரக்‌ஷா பாதுகாப்பு

அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள்
இ) கார் இயக்குபவர்கள்
 ஈ) பயணிகள்”,  (பக்.250)

2. Permit refers to 
a) permission for driving b) permission for carrying goods c) certificate for drivers  d) registration of vehicles 

4. Raksha safe drive is a device useful for 
a) pedestrians b) motorists c) car drivers d) passengers

     இப்படிப் பொத்தாம் பொதுவாக 'அனுமதி  (Permit)  என்றால்' என்று வினவுவதை எப்படி விளங்கிக் கொள்வது?  மோட்டார் வாகனச் சட்டம் அல்லது சாலை விதிகளில் அனுமதி என்றால் ... ? என்று வினவலாம். ஆனால் இரண்டிற்கும் ஒரே விடை சாத்தியமில்லை.

      'ரக்‌ஷா பாதுகாப்பு இயக்கம்' என்று ஒரு இயக்கம் இல்லை. அது ஒரு வாகன ஒட்டிகளுக்குப் பயன்படும் மின்னணுப் பாதுகாப்புக் கருவியாகும். அதை சாலைப் பாதுகாப்பு என்பதைப் போல 'ரக்‌ஷா பாதுகாப்பு’ அல்லது 'ரக்‌ஷா பாதுகாப்பு இயக்கம்' (Raksha safe drive)  என்று குறிப்பிடுவது தவறு. ஒரு பாதுகாப்புக் கருவியை நேரடி மொழிபெயர்ப்பில் இயக்கமாக்கிய கொடுமையை என்னவென்பது?

     இந்த ரக்‌ஷா பாதுகாப்புக் கருவி மோட்டார் வாகன ஓட்டிகள், கார் இயக்குபவர்கள், பயணிகள் ஆகியோருக்கும் பயன்படக்கூடியது தானே! ஒரு விடைகளை எப்படித் தேர்ந்தெடுக்க இயலும்?  இதையும் 'எப்படியும் கேட்போம்' உத்தியில் சேர்க்கலாம் போலும்!

    பிரசாத் பிள்ளை தனது நண்பர் ஜெயந்த் ஜெகதீஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்த மின்னணுக் கருவியை   eLsys Intelligence Devices Pvt. Ltd. என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இம்மாதிரி ஒரு கருவியை வடிவமைக்கும் எண்ணம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் விபத்துகளில் சிக்கிய அனுபவத்தில் கிடைத்தது. இதன் மூலம் ‘Golden Hour’ எனப்படும் குறித்த காலத்தில் விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களைக் காக்க முடியும். இதில் பல்வேறு வசதிகள் உள்ளன.  


  • மேம்பட்ட செயலிழப்பு உணரிகள்
  • ஜி.பி.எஸ். கண்காணிப்பான்
  • ஓட்டுநர் செயல்திறன்
  • தாக்கம் கண்டறிதல்
  • அவசரச் சேவைகள்
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி தெரிவித்தல்
  • ஸ்மார்ட் எச்சரிக்கை பொத்தான்
  • நேரலை வரைபடம் மற்றும் பயண விவரங்கள்
  • பிரேக் டவுன் உதவி


    சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள இக்கருவியை நாம் வாகனங்களில் வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும். இவற்றை வாகனங்களுடன் கட்டாயமாகப் பொருத்தித் தர இந்தியச் சட்டங்களில் இடமில்லை. காற்றுப்பைகள் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாத வாகனங்கள் விற்குமிடம் இந்தியா என்றால் அது மிகையில்லை. இங்கிருந்து ஏற்றுமதியாகும் வாகனங்களில் அவ்வசதிகள் இருக்கின்றன. இந்நிலையில் போலியாக நடக்கும் விழிப்புணர்வுப் பரப்புரைப் பெருமைகளில் மூழ்கிவிட வேண்டியதுதான்!

   
(அபத்தங்கள் தொடரும்…)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக