செவ்வாய், நவம்பர் 15, 2016

53. ஆ. குழந்தைகளிடம் கற்பதும் கற்பிப்பதும்

53. ஆ. குழந்தைகளிடம் கற்பதும் கற்பிப்பதும்

(இரண்டாம் பகுதி. நேற்றைய பதிவின் தொடர்ச்சி.)

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 
 

(இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து, புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட, அப்பணசாமி மொழிபெயர்ப்பில் ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?’ என்ற ஜான் ஹோல்ட் நூல் குறித்த பதிவு.)

       ஒரு குழந்தை எவ்வாறு கற்கிறது? ஜான் ஹோல்ட் ஒரு வயலின் கலைஞர். குழந்தைகள் வயலின் கற்பதை வைத்து தனது ஆய்வினைச் செய்கிறார். இதற்கு குழந்தைகள் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதில்லை.

     “மிகச்சிறிய தரவுகளிலிருந்து கூட தெளிவான முடிவுகளைப் பெறுவதில் வயது வந்தோரைவிட, மிகத்துரிதமாக ஒரு குழந்தை கிரகித்துக் கொள்கிறது அல்லது ஒரு தரவு தமக்கு ஆதரவாக இல்லை என்றால் அதனைத் துரிதமாக நிராகரித்து ஒதுக்குகிறது. ஆனால், அக்குழந்தைகளுக்குக் ‘கற்றுத்தரும்’ நமது ஆர்வக் கோளாறுகளால், இவற்றையெல்லாம் மிகவும் துரிதமாக மோதி அழித்துவிடுகிறோம்”, என்று தமது ஆய்வில் கண்டடைகிறார் (பக். 89).

        காரெத் மாத்யூஸ் எழுதிய ‘தத்துவமும் குழந்தையும்’ என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார். “குழந்தைகளின் ஆச்சரியமும், கோபமும் கொண்ட பல கேள்விகள், பொதுவாக இவை முட்டாள்தனமானவை என்று நம்மால் புறக்கணிக்கப்படும் இக்கேள்விகள், தத்துவம் தோன்றிய நாளில் இருந்து, மாபெரும் சிந்தனையாளர்களும், ஞானிகளும் விடை காண முடியாமல் போராடிவரும் கேள்விகளாக உள்ளன”, (பக். 117). என்று சொல்லும்போது இந்தியத் தத்துவமரபில் புத்தர் வலியுறுத்திய பரிநிப்பாண சிந்தனா முறை குழந்தைகளுக்கு மட்டும் சாத்தியப்படுவதை உணரமுடிகிறது. குழந்தைகள் மட்டுமே தர்க்கங்களுக்குள் செல்வதும் பெரியவர்கள் அதிலிருந்து விலகுவதும் குழந்தைமையின் தனித்தன்மையாக கருதலாம்.

      “நவீன கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ள வகுப்பறைகளில் கூட பேச்சு முறை பழைய மாதிரியிலேயே உள்ளது. ஆசிரியர்கள்தான் பெரும்பாலான நேரமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு குழந்தைகளிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அதுவும் தமது வகுப்பில் குழந்தைகள் கவனமாக இருந்தார்கள், தாம் கூறியவற்றைப் புரிந்து கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மட்டும்”, (பக். 142). இதுதான் தற்போது மேற்கொள்ளப்படும் கல்விப்புரட்சியாக உள்ளது. சுதந்திரமாகப் படிக்கவும், சிந்திக்கவும், பேசவும் கூட ஒரு இடத்திற்க்கு இந்த சுதந்திர வகுப்புகளை மாற்றுவது போன்ற வழிகளை ஆராய வலியுறுத்துகிறார்.

      வீட்டில் மூத்த குழந்தைகள் இருந்தால் இளைய குழந்தைகள் எளிமையாகக் கற்றுக்கொள்ளும் என்பது நாமறிந்த ஒன்றல்லவா! குழந்தைகளுக்குப் நிரம்பத் தெரிந்த பெரியவர்களைவிட குறைவாகத் தெரிந்த இவர்களையே அதிகம் விரும்புகின்றன. “எனது வகுப்பறைகளில், எனது புல்லாங்குழலைவிட எனது கொம்பு மீதே பெரும்பாலான குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டியது ஏன் என்பது எனக்கு இப்போது புரிகிறது. புல்லாங்குழல் வாசிப்பதில் நான் ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் என்பதும், கொம்பு ஊதுவதில் நான் தொடக்க கட்டத்திலேயே இருந்தேன். அதாவது ஒரு குழந்தை முயற்சிக்கும் அளவிலேயே எனது திறன் இருந்தது என்பதும்தான் காரணம்”, (பக். 148) என்று சொல்வது இங்கு நோக்கத்தக்கது.

      குழந்தைகள் நம்மிடம் விளையாடுவதற்கான இயல்பான சூழல்கள் எப்போது அமையும்? அக்குழந்தையுடைய சுதந்திரம், நமது மேதமைத்தனம் ஆகியவற்றின் எல்லைக்கோடு இங்கு முதன்மையானது. “இந்த விளையாட்டில், நான் எல்லாம் அறிந்தவன், அவளுக்கு ஒன்றும் தெரியாது என்ற உண்மையை நான் மறைத்துவிட முடியாது. அவள் விலகுவதற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதற்கும் இது ஒன்றே போதுமானது”, (பக். 150) என்று சொல்வதையும் அவதானிக்கலாம்.

      குழந்தைகளிடம் விளையாட்டுக் கற்பித்தல் சாதனங்களை அளித்துவிட்டு, நாம் சற்று ஒதுங்கியிருப்பது நலம். வேறு எந்தக் கேள்விகளையும் கட்டளைகளையும் திணிக்காமல், குழந்தைகள் சுதந்திரமாக அவற்றைக் கையாளவும், சோதிக்கவும், கட்டமைக்கவும் அனுமதிக்கவேண்டும். ஆனால் இது நடைபெறுவதேயில்லை.

     சுய மதிப்பீட்டு முறையை சிலவகையான கற்றல் கருவிகளுடன் அறிமுகமாகியுள்ள மாண்டிசோரி முறை கூட மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, குழந்தைகளின் சுதந்திரம், விருப்பார்வத்தைத் தடைசெய்யும் வகையில் ஆசிரியர்களின் தலையீடு இருப்பதும் இங்கு விவாதிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்குக் கற்பிப்பவர்கள், அக்குழந்தைகளிடம் கற்றுக்கொள்பவராகவும், சக குழந்தையாகவும் இருப்பதே போதுமானது.

      இங்கு அனைத்துவிதமான தேர்வுகள், சோதனைகள் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் மிக மோசமாக சிதைப்பதை எடுத்துக்காட்டுகிறார். நான் வைக்கும் ஒவ்வொரு சோதனையும் குழந்தைகள் மீது கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் . இது குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கிறது.

     சீனக் குழந்தைகளின் ஓவியக் காலண்டர் ஒன்றைக் குறிப்பிட்டு குழந்தைக் கலைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கிறார். மேலும், “ தம்மைச் சுற்றியுள்ள உலகைக் கண்டுணரவும் அதுகுறித்து தான் உணரந்தவற்றை வெளிப்படுத்தவும் ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்த, தேவையான வழிமுறை என்பதை மீண்டும் ஒருமுறை முன்பைவிட அதிகமாக”, (பக். 218) வலியுறுத்துகிறார்.

      குழந்தைகளின் அகவுலகம் புனைவுத்தன்மை மிக்கது. இவர்களது அதீத புனைவாற்றல் மிகவும் இயல்பான ஒன்று. இவற்றைப் பெரியவர்களால் ஈடு செய்யமுடியாது என்பதில் அய்யமில்லை. “யதார்த்த உலகில் இருந்து விலகுவதற்காக அல்ல; அந்த உலகில் நுழைவதற்காகக் குழந்தைகள் அதீத புனைவுகளைப் (Fantasies) பயன்படுத்துகிறார்கள்”, (பக். 240) என்றும் சொல்கிறார்.

     தமிழ் இலக்கியச் சூழலில் குழந்தைகள் சார்ந்து இயங்கும் சிலர் இத்தகைய அதீத புனைவுகளைத் திறம்பட பயன்படுத்துவதைக் காணலாம். கதைகளைவிட நாடகம் இதற்கேற்ற நவீன வடிவம். வேலு சரவணன், ச.முருகபூபதி போன்றோர் அதீத புனைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இந்தியச் சூழலில் இவை புராணக்குப்பைகளில் சிக்கிக்கொள்வது மிக ஆபத்தானது. தொலைக்காட்சிகள் உற்பத்தி செய்யும் இன்னொரு ஆபத்தையும் ஜான் ஹோல்ட் சுட்டுகிறார். “இந்தப் போலிப்புனைவுகள் தொலைக்காட்சிகளில் தயாரிக்கப்படும் ஆயத்தநிலை புனைவுகளைப் போல, இந்த உலகில் தமது சொந்த அனுபவங்களிலிருந்தும், அதன் சொந்த உணர்வுகளைப் பெறும் தேவையிலிருந்தும் உருவாகும் உண்மையான புனைவுகளை குழந்தையிடமிருந்து விரட்டியடித்து விடும்”, (பக். 253) என்று ஜான் ஹோல்ட் எச்சரிக்கிறார்.

      குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் பெரும்பாலான அறிவினைப் பெற்றுவிடுகிறார்கள். இதனைக் ‘கற்பித்தல் இல்லாத கற்றல்’ என்று அழைக்கும் பெபர்ட் –ன் மேற்கோள், பள்ளிகளில் கற்பிக்கப்படும் பயனற்ற, அர்த்தமற்ற கணிதத்தை விளாசுகிறது. (பக். 264).

     “பல் சக்கரங்கள், துரும்புகள், இலைகள், குழந்தைகளின் உலகை நேசிக்கின்றன. இதனால் அதைப்பற்றி, அந்த உலகைப் பற்றி கற்றுக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். அது அன்பாக, நேசமாக இருப்பதால், அதில் தந்திரங்களோ, புதிய தொழில்நுட்பச் சிந்தனைகளோ இல்லை. எல்லா கற்றல்களும் இதயத்தில் பதிந்துள்ளன”, (பக். 272) என்று சொல்லும் ஜான் ஹோல்ட் ஒரு குழந்தையாகவே உருவெடுக்கிறார்.

     “குழந்தைகள் குறித்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அவர்களை நெருக்கமாகப் பார்ப்பதற்கும், அவர்கள் மீது மேலும் நேசம் செலுத்தி, அவர்களிடம் நம்பிக்கையும், உறுதிப்பாடும் கொண்டு, அவர்களுடன் கூடுதலான மகிழ்ச்சி செலுத்துவதை ஊக்கப்படுத்தவே இப்புத்தகம்”, (பக். 268). என்று சொல்கிறார். இதன் நோக்கம் நல்லபடியாக நிறைவேறியிருக்கிறது. இத்தகைய முயற்சிகளை ஆசிரியர்கள், பள்ளிகள், அரசுகள் முன்னெடுப்பதில்தான் இதன் விளைவுகள் தெரியும். அடிப்படைகள் மாற்றமடையாத வரையில் இதுவும் கானல் நீரே!



எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

ஜான் ஹோல்ட்

தமிழில்: அப்பணசாமி

வெளியீடு:

இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து

புக் ஃபார் சில்ரன்

(பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..)



முதல்பதிப்பு: டிசம்பர் 2007,

மூன்றாம் பதிப்பு: நவம்பர் 2014

பக்கம்: 272

விலை: ரூ. 170



தொடர்பு முகவரி:



பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.



தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக