வெள்ளி, நவம்பர் 18, 2016

54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள்

                               54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 
 
 
 
 

   (புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள என்.மாதவன் எழுதிய ‘குழந்தைமையைக் கொண்டாடுவோம்’ என்ற நூல் குறித்த பதிவு.)

   “உங்களிடமிருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால் நீங்கள் பார்க்கும் பொருட்கள் எல்லாம் ஆணியாகவே இருக்கும்”, (ஆப்ரஹாம் எச்.மாஸ்லோ)

      என்று பல தேர்தெடுத்த மேற்கோள்கள் இச்சிறு நூலெங்கும் விரவி இருப்பது சிறப்பாக உள்ளது. இவை குழந்தை நேசிப்பின் அவசியத்தை நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

     ஆசிரியர், அறிவியல் இயக்க ஆர்வலர், துளிர் ஆசிரியர் குழு உறுப்பினர் என்ற பல பரிமாணங்கள் கொண்ட என்.மாதவன் 10 சிறிய தலைப்புகளில் குழந்தைமையைக் கொண்டாட வேண்டிய தேவை மற்றும் கட்டாயத்தை எளிமையாக உணர்த்துகிறார். இதற்கு அவருடைய அனுபவங்கள் கைகொடுக்கின்றன.

    வளர்ந்தவர்களின் பார்வையும் குழந்தைகளின் பார்வையும் ஒன்றாக இருப்பது சாத்தியமில்லை. இது அறிவு முதிர்ச்சி என்ற பொருள் கொள்வதல்ல. வயதுக்கும் அறிவுக்குமான தொடர்பு கேள்விக்குரியது. குழந்தைகளின் அறிவினை அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ள முயற்சிப்பது நமக்குப் புதிய அனுபவங்களைச் சாத்தியமாக்கும் என்று ஓரிடத்தில் சொல்கிறார்.

    “நம்முடைய பார்வையில் தென்படும் பொருள் ஒன்று குழந்தைக்கு வேறு விதமாகத் தெரிகிறது. நம் கையில் எலுமிச்சம்பழம் பையன் கையில் பந்தாகிறது. கண்ணாடி உடைந்துவிடும் என்ற நமது பதட்டம் குழந்தைக்குச் சுலபமில்லை”, (பக். 04) என்று அணிந்துரையில் பேரா. ஆர்.இராமானுஜம் குறிப்பிடுகிறார்.

    வெற்றி என்னும் வெறியூட்டுதலுக்கு கல்வியில் இன்று முதன்மை இடம் கிடைத்துவிட்டது. இதை அகற்ற, குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களைத் தோற்கப் பழக்குவதுதானே சரியாக இருக்கமுடியும்?

    சுயமரியாதை என்பது எதோ பெரியவர்களுக்கானது என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். இது மாபெரும் தவறல்லவா! சுயமரியாதையையும் அடுத்தவர்களை மரியாதையாக நடத்தும் மாண்பினையும் உணர்த்தவேண்டும்; மதிக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

     யாருடன் குழந்தை போட்டி போட வேண்டும்? ஒரு குழந்தையை அடுத்தவருடன் போட்டி போடுவதைவிட, தன்னுடைய சாதனையை தானே முறியடிக்கச் சொல்லச் செய்யலாம் என்ற ஒரு ஆலோசனையையும் வழங்குகிறார். போட்டி போடுவது வேறு; கற்றுக்கொள்வது வேறு. கற்றுக்கொளவதால் பொறுமை கூடும்; நாம் தவறவிடுபவை நமக்குப் புலப்படும் என்பதும் விளக்கப்படுகிறது.

     விளையாட்டு கல்விக்கு எதிரானது என்ற கருத்து பலரிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதைத் தகர்க்கவேண்டும். வீட்டுக்குள் முடங்கும் குழந்தைக்கு சுவாசிக்க தூய்மையான ஆக்சிஜன் கிடைக்குமா என்ன? கணினி போன்ற எந்திரங்களுக்கே புத்துணர்ச்சி (refresh) தேவைப்படும்போது மனிதனுக்கு அது அவசியமில்லையா என்று வினா எழுப்புகிறார். .

     நாம் நினைப்பதுபோல குழந்தைகள் உலகம் சிறியதல்ல. அவர்களுடைய உலகில் நம்முடைய பல சிந்தனைகளுக்கு இடமிருப்பதில்லை. நாளை குறித்த கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே காலம் நிகழ்காலம்தான் என்றும் சொல்கிறார் (பக். 65).

     குழந்தைகளுக்குத் தேவை போதனைகள் அல்ல; முன்மாதிரி நடத்தைகள்தான் தேவை என்று வலியுறுத்துவதோடு, குழந்தைமை சமூகமயமாகப் பரிந்துரை செய்கிறார்.

     “குழந்தைமையினைக் கொண்டாடுவது என்பது குழந்தைகளின் பிறந்த நாள்களைக் கொண்டாடுவது போன்று ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடுவது அல்ல. மாறாக குழந்தைகளின் இயல்பை உணர்ந்து குழந்தைமையின் மாண்பினை மதித்து நடக்கும் தொடர்ச் செயல்பாடாகும். இதனைத் தொடர்ச்சியாகக் கையாள்வதன் மூலம் நாம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கும் பெருமையை மட்டும் பெறுவதில்லை. மாறாக ஒரு மனிதனாக நாம் அடையவேண்டிய மாண்புகளையும் அடைகிறோம்” (பக். 78,79) என்று குறிப்பிடுகிறார். இதனால் நமக்கும் இனிமைதானே!

     சிக்கலான் உளவியல் விதிகளைக் கூறிப் பயம் காட்டாமல் எளிமையான அனுபவக் கீற்றுகளைக் கொண்டு குழந்தைமையைக் கொண்டாட வலியுறுத்துவது இந்நூலின் சிறப்பாகும்.



குழந்தைமையைக் கொண்டாடுவோம்

என்.மாதவன்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..



முதல்பதிப்பு: டிசம்பர் 2013

பக்கம்: 80

விலை: ரூ. 50



தொடர்பு முகவரி:



பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.



தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக