சனி, நவம்பர் 26, 2016

எங்கும் பாசிசமயம்!

எங்கும் பாசிசமயம்!

மு.சிவகுருநாதன்

       பாசிஸ்ட்களின் கூச்சல்கள் நாஜிகளின் வெறித்தனத்திற்கு ஈடாக உள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக இவர்கள் சொல்லும் அபத்தங்களுக்கு அளவில்லை.

     எஸ்.பி.அய். வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா எளிய மக்களை இழிவு செய்யும் கருத்தொன்றை திமிருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

     100 ரூபாய் நோட்டுக்களை யாரும் செலவு செய்யாமல் பத்திரப்படுத்துவதால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுகிறதாம்!

      பார்த்தீர்களா! மோடியின் ஆட்சியில் எல்லாரும் மோடியைப் போல் சில்லறைத் தனமாகவே பேசுவார்கள் போலும்!

     எளிய மக்கள், பெண்கள் படும் இன்னல்களை அருந்ததி போன்ற உயர்த்தப்பட்ட வர்க்கத்தினர் எப்படிப் புரிந்து கொள்வார்கள் அல்லது புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

      1000 ரூபாய் நோட்டுக்கு 2000 ரூபாய் நோட்டு மாற்றல்ல என்பதை அருந்ததிக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலாம்.

     15 நாட்கள் ஆனபிறகும் 500 நோட்டை விநியோகிக்க வக்கற்ற அரசு எளிய மக்கள் மீது பழி போடும் ஈனத்தனத்தை முதலில் விட்டொழிக்கட்டும்.
500 ரூபாய் நோட்டுக்களை எதோ கருமாதி பத்தரிக்கைப் போல அவசரகதியில் அச்சடித்து குழப்பத்தை ஏற்படுத்துவது, விநியோகிக்க மறுப்பது போன்ற அநியாயங்களை நிறுத்திவிட்டு அப்புறம் எங்கள் மீது குறை சொல்லுங்கள்.

     இந்த பாசிச உலகில் நேற்று (24.11.2016) ஒருவர் ஆறுதல் அளித்திருக்கிறார்.அவர் மன்மோகன் சிங். மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட சூறையாடல்; சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

      மன்மோகன் சிங் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதிலும் இந்த நிலைப்பாடு நேர்மையானது.

    மக்கள் தங்கள் பணத்தைச் சொந்தக் கணக்கில் செலுத்திவிட்டுத் திரும்பப் பெற முடியாத சூழல் வேறு எந்த நாட்டிலும் உண்டா? இது ஒன்றே இதைக் கண்டிக்கப் போதுமானது என்கிறார்.

     நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்ற கோட்பாட்டை சொல்பவர்களுக்கு காலப்போக்கில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

      மொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும் என்றும் இந்தக் குளறுபடிக்குக் காரணமான ரிசர்வ் வங்கி மீது வைக்கும் விமர்சனம் நியாயமே என்றும் பேசியுள்ளார்.

     50 நாட்கள் அவகாசம் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மிக மோசமான அவலத்தை உண்டாக்கிவிடும் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரின் அதிகார வரம்பை மீறி அறிவிப்பு செய்த மோடி, இன்று மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல மறுப்பது ஏன்?

    இப்போது மட்டும் பதிலளிக்க நிதியமைச்சர், நிதித்துறைச் செயலரை நாடுவது ஏன்?

      உலகில் பாசிசம் நீண்ட காலம் வென்றதில்லை. எவ்வளவு காலம் இந்தப் பாசிசத்தைப் பொறுத்திருப்போம்?

     கார்ப்பரேட் களுக்கும், பணக்காரர்களுக்குமான அரசு ஜனநாயக அரசாக எப்படி விளங்க முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக