செவ்வாய், நவம்பர் 08, 2016

தேவை புறவயமான அணுகுமுறை.

தேவை புறவயமான அணுகுமுறை.

- மு.சிவகுருநாதன் 
 

(நவம்பர் 08, 2016 இன்றைய ‘தி இந்து’ வில் வெளியான குடவாயில் பாலசுப்ரமணியன் கட்டுரை குறித்த விமர்சனப்பதிவு.)


      புத்தர், அசோகருக்கு அடுத்தப்படியாக ராஜராஜன் போருக்கு எதிரான மனநிலைகொண்டவன் என்று ஆய்வாளர் கண்டடைகிறார். அதற்கு அவர் முன்வைக்கும் வாதங்கள் அவற்றிற்கு வலு சேர்ப்ப்பதாக இருக்கவேண்டாமா?

       “எதிர்த்தவர்களை வென்று அவர்களால் மீண்டும் போர் தொடராமல் செய்தான். 10 மனைவியரைக் கொண்டது அண்டை நாடுகளின் நட்புறவை மேம்படுத்தவே”, என்கிறார்.

      போரைத் தடுப்பதற்கே ஆயுதங்களையும் அணு ஆயுதங்களையும் குவிக்கிறோம் என்று இந்தியா போன்ற வல்லாதிக்கங்களை இன்று சொல்வதை ஒத்துள்ளது இது.

      கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் கே.கே.பிள்ளை. டாக்டர் மா.இராசமாணிக்கனார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் போன்ற அக்கால ஆய்வாளர்களும் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற இக்கால ஆய்வாளர்களும் பெருமிதப் பார்வையிலிருந்து சோழர் வரலாற்றை அணுகுவதை நோக்கமாகக் கொண்டவர்கள்.

     மதம், மொழி, இனம், சாதி, பாலினம், தேசம் என்கிற அடையாளத்தின் அடிப்படையில் அணுகாமல் புறவயமாக அணுகத் தடையாக இருப்பது எது? வரலாற்றில் ஆய்வுக் கண்ணோட்டம் தேவையில்லையா? வரலாறு என்பது தேங்கிய குட்டையா?

      அடையாளங்களைத் தவிர்த்து புத்தர் வலியுறுத்திய நிர்வாண சிந்தனையை ஆய்வுகளில் முயற்சித்துப் பார்க்கலாமே. வரலாறு என்பது இலக்கியமல்லவே! ஏன் இங்கு இவ்வளவு மிகைப்படுத்தல்கள்?

      மிஉக உயரமான கோபுரம் என்று சொல்லிவிட்டுப் போங்களேன்! “வானுயர உயர்ந்து நிற்கிறது”, என்று கூறுவது வரலாற்று ஆய்வில் அடங்குமா?

     தனது தமையன் ஆதித்ய கரிகாலனைக் கொலை செய்தவர்கள் மீது மாமன்னன் ராஜராஜனால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாமற்போனது? தஞ்சை கோயில் உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கில் தேவதாசிகள் ஏன் குவிக்கப்பட்டனர்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் எந்தப் பதிலும் சொல்வதில்லை.

      புறவயமான அணுகுமுறை இல்லாது தமிழில் வரலாற்று ஆய்வுகளுக்கு வாய்ப்பில்லை; தரமான ஆய்வுகள் வெளிவரவும் இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக