வியாழன், ஜூன் 23, 2011

நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் ?

நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் ?

                                                                                      -மு.சிவகுருநாதன் 


         சமச்சீர் கல்விப் பிரச்சினையில்  தற்போதைய ஜெயலலிதா அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க வெளிப்படையாக ஒரு கும்பல் கிளம்பியுள்ளது. இக்கும்பல் தனியார் பள்ளிக் கல்விக்கொள்ளையர்களுக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. ஜெயமோகன், பா.ராகவன், துக்ளக் சோ.ராமசாமி போன்றவர்களுடன் கல்வியாளர்கள் என்ற போர்வை யிலுள்ள  தனியார் பள்ளி ஆட்களும் இக்கும்பலில் அடக்கம். ஜனநாயக நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு என்றவகையில் இவற்றை  வரவேற்போம்.

          சமச்சீர் கல்வியை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைபோல இக்கல்வித்திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட பெரும்கூட்டம் கிளம்பியிருப்பதை  நாம் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் பா.ஜ.க., தினமணி, கிழக்கு பத்ரி  போன்ற சங் பரிவாரக்கும்பல்  தினமும் அரசுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் ஆதரவான கருத்துக்களை பரப்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளது. இவர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

                தினமணி இன்றைய (23 .06 .2011) தலையங்கத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கெதிரான நச்சு விதைகளை தூவியுள்ளது. நிபுணர் குழு அறிக்கை, உயர்நீதிமன்ற விசாரணை, தமிழக அரசின் உச்சநீதிமன்ற மேல்முறையீடு என ஒருமாத காலதாமதம் ஆகுமென்பதால் இக்குழு இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடவேண்டுமென தினமணி எதிர்பார்க்கிறது. இந்த அறிக்கையில் காலாண்டுத்தேர்வு வரையிலான பாடப்பகுதிகளை வரையறை செய்யவேண்டுமாம்.

    
          மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் எதோ மாணவர் நலன் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் இதற்குப் பின்னால் இருப்பது தனியார் பள்ளி முதலாளிகளின்  வர்க்க நலன்களே. பாடத்திட்டம் தரமாக இல்லை, பாடநூற்களில் தி.மு.க. சார்பான கருத்துகள் உள்ளன போன்ற தமிழக அரசின் ஆட்சேபம் நியாயமானதுதான் என்றும் சமச்சீர் கல்வி என்பது அரசுப்பள்ளிகளின் தரத்தை மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளின்  பாடத்திட்டத்தின் தரத்திற்கு உயர்த்தவேண்டுமே தவிர தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தை குறைக்கும் வகையில் அமைந்து விடக்கூடாதென  தமிழக அரசுக்கு தினமணி ஆலோசனை கூறுகிறது.

        மொத்தத்தில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இன்று தமிழக அரசும் தனியார் பள்ளிக் கல்விக் கொள்ளையர்களும் இதைத்தானே சொல்கின்றனர். இதில் எங்கிருந்து வந்தது மாணவர் நலன்? 11 மற்றும்  12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் அரசு பாடத்திட்டம்,பாடநூற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளி கல்விக் கொள்ளையர்கள் 1 முதல் 10 வகுப்பு வரை   உள்ள பாடங்கள் மட்டும் தரமற்றவை என்று சொல்வதேன்?  இங்கு மட்டும் இவர்களுடைய தர அளவுகோல்கள் எங்கே போயின? 

        மத்திய ஆட்சிப்பணித்தேர்வுகளில்  நமது மாணவர்கள் தேர்ச்சி பெற ஏதுவாக பாடத்திட்டம் உயர்வாக இருக்கவேண்டுமென்றும் சிலர் சொல்கிறார்கள். பத்தாம்வகுப்பைத் தாண்டியவுடன்  எவரும் இந்தத் தேர்வுகளை எழுதுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.மத்திய  ஆட்சிப்பணித்தேர்வுகள் எழுதும் வெகு சிலருக்காக ஏன் அனைவரும் பாரம்  சுமக்கவேண்டும்?

         சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடநூற்கள் ஆகியவற்றை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தமிழக அரசால் நேரடியாக அமைக்கப்பட்டதல்ல. உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க அமைக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கை உடன் நடைமுறைக்கு வந்துவிடப்போவதில்லை. இந்த அறிக்கையையொட்டி ஒருவாரம் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தித்தான் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இதில் இரு தரப்பும் மேல்முறையீடு  செய்ய வாய்ப்புண்டு. எனவே இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றந்தான் வழங்கமுடியும். 


            உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட இவ்வல்லுநர் குழுவிற்கான எல்லைகள் நீதிமன்றத்தால் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளன . இக்குழு என்னமோ சர்வ வல்லமை படைத்த இறுதி முடிவெடுக்ககூடிய அமைப்பு என்கிற தொனியில் இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. சிகப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பதுபோல் அவாள்கள் முடிவு செய்தால் அது அகில உலகிற்கும் பொருந்தும் என்ற சாதீய மனோபாவத்தால்தான் இவ்வாறெல்லாம் எழுதமுடிகிறது. 


         இந்த வல்லுநர் குழு அறிக்கை அளிக்க இரண்டு வாரம்தான் காலக்கெடு. இதில் இடைக்கால அறிக்கை எங்கே வந்தது? பிறகு உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க ஒரு வாரம் கால அவகாசம் என உச்சநீதிமன்றம் கெடு விதித்திருக்கும்போது  இவர்கள் இடைக்கால அறிக்கை கேட்பது  உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.


       இந்த வல்லுநர் குழுவின்  தகுதி குறித்து இன்று பல்வேறு தரப்பிலிருந்து  விமர்சனம் எழுந்துள்ளது. இக்குழுவின் மூலம் சமச்சீர்கல்வி பிரச்சினைக்கு நேர்மையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துபோயுள்ளது. இதெல்லாம் தினமணியின் கண்களுக்கு ஏன் தெரியாமல் போனது? 
 
      தற்போது நீதிமன்ற  விவகாரத்தால்  10 ஆம் வகுப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று  தமிழின் ஒரு முன்னணி நாளிதழில் எப்படி மடத்தனமாக  தலையங்கம் எழுதமுடிகிறது?  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாடநூற்களில் 10 ஆம் வகுப்பும்  அடக்கம் என்பதுகூடத் தெரியாமல் தலையங்கம் எழுதுபவர்களிடம் என்ன நேர்மையை எதிபார்க்கமுடியும்?

        மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது பற்றிய கவலையின்றி  தினமணி  உயர்சாதி மனோபாவத்துடன்  செயல்படுவது   மிகுந்த கண்டனத்திற்குரியது.  
  
    பா.ஜ.க. தன் பங்கிற்கு தமிழகத்தில்  சமச்சீர் கல்வியை அமல் செய்யவேண்டுமென்பதுதான் எங்கள் நிலைப்பாடு எனவும்  மூன்று மாத காலத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அரசை விமர்சிக்கமாட்டோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர்.  இவர்களுடைய முகமுடிகள் கழன்று விழுவது குறித்து யாரும் அதிர்ச்சியடைய தேவையில்லை.
  
        தினமணி, நமது எம்.ஜி.ஆர். போல  உள்ளதென எனக்கு நண்பரொருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரின் கருத்தோடு நான் ஒத்திசைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக