புதன், ஜூன் 08, 2011

நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்

நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்




சமச்சீர் கல்வி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி.
சென்னை, ஜூன் 6: 
 
                 நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.சமச்சீர் கல்விக்கான கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை லாயிட்ஸ் சாலையில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 
           இதில் கல்வியாளர் வசந்தி தேவி பேசியது:பலப்பல காலமாக போராடிப் பெறப்பட்டது இந்தப் பொதுப்பாடத்திட்டம். இதை சென்ற அரசின் சாதனை என்று தவறாக நினைத்துவிட வேண்டாம்.பொதுப்பாடத்தில் இருந்து சமச்சீர் கல்வியை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். 6 ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி பின்னால் செல்லக்கூடாது என்றார் அவர்.
 
         இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமரன் பேசும்போது, "அரசுக்கு ரூ.200 கோடி இழப்பைத் தடுக்கும் வகையில், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு முதலே அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்' என்றார்.
 
          எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜூ உள்ளிட்ட பலர் பேசினர். 
 
கல்வியாளர்களால் முன்மொழியப்பட்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
 
         தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் நடைபெறும் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம், பத்தாம் வகுப்பில் ஒரே தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. 
 
           தமிழ்நாட்டில் மட்டும் மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநிலக் கல்வி பாடத்திட்டம் என 4 வகையான பாடத்திட்டமும், 4 வகையான தனித்தனி பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் உள்ளன.நாம் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் கோட்பாட்டுக்கு எதிராக ஒரு பாடத்திட்டத்தைப் படிப்பவன் உயர்ந்தவன், மற்றொரு பாடத்திட்டத்தைப் படிப்பவன் தாழ்ந்தவன் என்ற கருத்தை உருவாக்குவது சமூக நீதிக்கு எதிரானது.
 
         நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்டது.தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் உழைப்பைச் செலுத்தி பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கினர். 
 
          இந்த வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.இவ்வாறு பெறப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலித்தப் பிறகு பாடத்திட்டம் இறுதிசெய்யப்பட்டது. 
 
         பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுக்கல்வி வாரியம் இறுதிசெய்யப்பட்ட பொதுப்பாடத்திட்டத்துக்கு ஏற்பும் அளித்தது. 
 
         இதனடிப்படையில், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழுவால் பாடநூல்களும் எழுதப்பட்டன.தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் 1 முதல் 10 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடங்குகளிலும், பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ளன. 
 
       பொதுப்பாடத்திட்டமே சமச்சீர் கல்வி ஆகாது. ஆனால், பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல், பத்தாம் வகுப்பு இறுதியில் பொதுத் தேர்வு என்பது சமச்சீர் கல்வி முறையை நோக்கிய பயணத்தின் முதற்படி ஆகும். 
 
       மீண்டும் பழையபடியே நான்கு வகை பாடத்திட்டத்துக்குச் செல்வது என்பது கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இது வணிக நோக்கத்துடன் பள்ளி நடத்தும் தனியார் பள்ளி நிர்வாகிகளை மகிழ்விக்கும். இந்தச் சூழலில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, கிடங்குகளில் இருக்கும் பாடநூல்களை மாணவர்களுக்கு அளித்து, பத்தாம் வகுப்பு இறுதியில் ஒரே பொதுத்தேர்வு என்ற நடைமுறையைக் கொண்டுவரக் கோருகிறோம். 
 
       அதேபோல், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், தனியார் பள்ளியில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தல், கட்டணக் கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளல், போதுமான ஆசிரியர் நியமித்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி தரமான கல்வி சமச்சீராக அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
        தனியார் பள்ளிகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக மாற்றவும், புதிய பள்ளிகளை அரசு தொடங்குவதும் மட்டுமே பொதுப்பள்ளி என்ற பதம் நோக்கி சமச்சீர் கல்வி  செல்லும். 
 
        பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை பெறவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு பள்ளிக் கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் முதல் மாநிலமாகத் திகழச் செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
 
நன்றி:- தினமணி 07 Jun 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக