புதன், ஜூன் 29, 2011

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி - ஊழல்

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி - ஊழல்

                                                                                         - மு. சிவகுருநாதன்


      
     இன்று ஊழல் அனைவராலும் பேசப்படுகிற வி­ஷயமாக மாறி விட்டதைத் தவிர வேறெந்த மாற்றமும் நடைபெறவில்லை.  லோக்பால் மசோதாவை அன்னா ஹசாரே குழு முடிவு செய்யக் கூடாது; நாடாளுமன்றந்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் பிரபல வழக்குரைஞருமான கபில்சிபல் கூறுகிறார்.  

       இது ஒரு வகையில் மிகவும் பொருத்தமானதுதான்!  ஏனெனில் ஊழலின் தொடக்கமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே இருக்கிறது என்பதுதான் உண்மை.   பிறகெப்படி அவர்கள் லோக்பால் போன்ற ஊழல் தடுப்புச் சட்டங்களை இயற்றுவார்கள் அல்லது ஆதரிப்பார்கள்?   எனவே கபில்சிபல் அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.


            நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும் ஊழல்கள் நடைபெறுவதாக தணிக்கைத் துறை சுட்டிக் காட்டுகிறது.  ஆனால் இவை பற்றியும் முறையான தணிக்கை மற்றும் ஆய்வுமின்றி ஆண்டுதோறும் நிதியின் அளவு அதிகரிக்கப்படுகிறது.  பீகாரில் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சரான நிதீஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து உத்தரவிட்டார்.  இத்தகைய துணிச்சல் பிரதமருக்கோ வேறு முதல்வர்களுக்கோ இல்லை.


            ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குட்பட்ட ஒரு திட்டத்திற்கு எதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கிறார், அந்தப் பணி ஒழுங்காக நடைபெறுகிறதா என்றெல்லாம் கண்காணிக்கும் அமைப்புகள் இங்கு இல்லை.  உறுப்பினர்களின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்படும் இப்பணிகள் பல்வேறு மட்டங்களில் ஊழலுக்குக் காரணமாக அமைகின்றன.


            இந்த மேம்பாட்டு நிதிகளில் அதிகப்படியாக பேருந்து நிழற்குடைகள், பள்ளிக் கட்டிடங்கள், சிறு பாலங்கள் போன்றவை கட்டப்படுகின்றன.  இந்தியாவில் மிகவும் மோசமான நிலையில் - தரத்தில் கட்டப்படுபவை பள்ளிக் கட்டிடங்கள் என்றால் மிகையில்லை.  பேருந்து நிழற்குடைகள் அந்த இடத்திற்குத் தேவையா என்று கூட பார்க்காமல் நிறைய இடங்களில் அமைக்கப்படுகின்றன.  இவைகள் கால்நடைகள் மற்றும் சமூக விரோதிகளின் செயல்பாட்டிற்கு மட்டும் பயன்படுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது.


            முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் சுடுகாட்டுக் கூரை ஊழல் மிகவும் பிரசித்தம்.  ஆனால் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.  இது அவர்கள் கட்சி மாறியதற்கு கொடுக்கப்பட்ட பரிசாகக் கூட இருக்கலாம்.  வெறும் நான்கு தூண்களைக் கொண்டு ஒரு ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரை அமைப்பதற்கு ரூ. 40000/- வரை கணக்கு காட்டினார்கள் என்பதே மேற்கண்ட வழக்கின் சாரம்.


            தி.மு.க. ஆட்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீடு கட்ட பயனாளிகளுக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 75,000/- மட்டுமே.  தற்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பசுமை வீடு கட்டும் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 1,80,000/-.  ஆனால் சுமார் 300 சதுர அடிகளுக்குட்பட்ட நிழற் குடை அமைக்க 3 இலட்சத்திலிருந்து 7 இலட்சம் வரை கணக்கு காட்டப்படுகிறது.  இந்தத் தொகையில் ஒரு புறம் 3 வகுப்பறைப் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  செலவுத் தொகை, டெண்டர் போன்றவை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.


            ஒரு  உதாரணத்தை மட்டும் பார்ப்போம்.  திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நால்ரோட்டில்       (திருநெல்லிக்காவல் சாலை) ஒரு நிழற்குடை ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வேதரெத்தினம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.  இது அங்குள்ள வாய்க்காலில் தூண் எழுப்பி அதன் மீது கட்டப்பட்டுள்ளது.  குப்பைகள் அடைத்துக்கொண்டு நீர் வழிப்பாதையை அடைக்கும் என்பது இதை அமைத்தவர்கள் உணரவில்லை.




            இதை அமைத்ததற்கு முக்கியமான காரணம் இந்த நால்ரோட்டில் பிரியும் ஒரு சாலை மு.கருணாநிதி பிறந்த திருக்குவளைக்குச் செல்கிறது.  அடிக்கடி சொந்த ஊருக்கு கருணாநிதி செல்லும் போது கண்ணில் படும் என்பதற்காக வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் செய்ய வேண்டிய எவ்வளவோ பணிகளிருக்க அதையெல்லாம் விட்டு விட்டு திருவாரூர் தொகுதியில் வந்து நிழற்குடை அமைத்திருக்கிறார்.   திருவாரூர் - திருத்துறைப் பூண்டி சாலையில் இந்த நால்ரோடு வரை மட்டும் சாலைகள் அழகாகப் போடப்பட்டு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பான்கள் சாலை யோரங்களில்  மிளிரும் வண்ணம் அமைக்கப்படும்.  இவையும் கருணாநிதிக்காகத் தான்.

       
 



   திருவாரூர் நகரத்தின் மேலவீதி - மேலக்கோபுர வாசலருகே திருவாரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான உ. மதிவாணன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7 இலட்ச ரூபாய் செலவில் சுமார் 300 சதுர அடியில் ஒரு பயணிகள் நிழலகமும் சிறு மின்விசைப் பம்பும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

           இதற்கு எப்படி ரூ. 7 இலட்சம் செலவானது என்பதை யாரும் கேட்கப் போவதில்லை.  ரூ. 3 இலட்சம் நிழற்குடைக்கு என்று வைத்துக் கொண்டாலும் ரூ. 4 இலட்சம் சிறு மின் விசைப் பம்பு அமைக்க செலவானதா என்ற கேள்வி முக்கியமானது.  தமிழகமெங்கும் ஏன் நாடெங்கும் தொகுதி மேம்பாட்டு நிதி இவ்வாறே வீணாக்கப்படுகின்றன.   இவற்றையயல்லாம் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்க லோக்பாலை மட்டும் நம்பிப் பயனில்லை.


            இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.  இந்த மாதிரியான பயணியர் நிழலகங்கள் மூன்று, நான்கு சாலைகள் கூடுமிடத்தில் அமைக்கப் படுகின்றன.  பேருந்துகள் இந்த முச்சந்திகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதால் பின்னால் வரும் வாகனங்கள் எந்த சாலையிலும் செல்ல முடியாமல் தேங்கி நிற்கக் கூடிய செயற்கையான ‘டிராபிக் ஜாம்’ ஏற்படுத்தப்படுகிறது.  
          இந்த மாதிரியான நிலைமையை இவ்விரண்டு பயணியர் நிழலகங்களில் மட்டுமல்லாது தேரோடும் நான்கு வீதி முனைகள், தெப்பக்குளத்தின் (கமலாலயம்) நான்கு முனைகள், மயிலாடுதுறை சாலை சந்திப்பு, விளமல் தஞ்சை - மன்னார்குடி சாலை சந்திப்பு, வாளவாய்க்கால் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலை சந்திப்பு என அனைத்து இடங்களிலும் காண முடியும்.  திருவாரூர் போன்ற வெகு சொற்ப மக்கள் தொகை கொண்ட இச்சிறு நகரத்தில் இந்த மாதிரியான முறைகேடுகளால் சாலையில் செல்லும் அனைத்துத் தரப்பினரும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது.


            தஞ்சாவூர், திருச்சி போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்ட நிழற்குடைகள் இடித்துத் தள்ளப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.  அந்த விழிப்பு திருவாரூருக்கு வர பல ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக